(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Tuesday, December 8, 2009

இந்திய அரசியல் இஸ்லாத்தை நோக்கி! - இறுதிப் பகுதி

சுதந்திரத்திற்குப் பின்னர் முஸ்லிம்களின் ஆதிக்கம் இந்தியாவில் இருந்தால் தாங்கள் நினைப்பது போன்ற ஹிந்துத்துவ அஜண்டாவை நடைமுறைப்படுத்த இயலாது என்பதை ஆர்.எஸ்.எஸ் நன்றாகப் புரிந்து வைத்திருந்தது. எனவே, நேரு, வல்லபாய் பட்டேல் போன்றோரின் துணையுடன் பாகிஸ்தான் பிரிவினைக்கு நன்றாக விதை தூவி வளர்த்து, மவுண்ட் பேட்டனின் துணையுடன் விடுதலையின்போது பாகிஸ்தானைப் பிரித்து ஜின்னாவின் கையில் கொடுத்து இந்தியாவிலிருந்து அனுப்பி வைத்து விட்டனர்.

ஒரு காலகட்டம்வரை தீவிர ஹிந்துத்துவ நிலைபாடுகளுக்கு எதிராகவே கருத்துகளைத் தெரிவித்து வந்த காந்தியடிகள், காங்கிரஸில் தன் பிடி கைவிட்டுப் போய் விட்டதை உணர்ந்தபோது பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்து விடுவதுதான் உத்தமம் என்ற முடிவுக்கு வந்தார். பிரிவினையின்போது பாகிஸ்தான் மக்களுக்குக் கொடுக்க வேண்டிய இழப்பீட்டுப் பங்கைச் சரியாக கொடுக்க வலியுறுத்திய காரணத்திற்காக ஆர்.எஸ்.எஸ்ஸால் காந்திஜி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

இவ்வறான இந்திய விடுதலை வரலாற்றில் பாகிஸ்தான் பிரிவினை தொடர்பான பல உண்மைகள் மூடி மறைக்கப்பட்டு, "விடுதலைக்குப்பின் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானைத் துண்டாடியது ஜின்னா என்ற முஸ்லிம்தான்" என்ற எண்ணம் இந்திய முஸ்லிம்களின் மனதில்கூட உறுதியாகப் பதியும் விதத்தில் பிரச்சாரம் அவிழ்த்து விடப்பட்டது. இது, "இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு இந்தியா சொந்தமானதல்ல" என்ற எண்ணைத்தையும் "இந்தியா இந்துக்களுக்குத்தான்" என்ற எண்ணத்தையும் இந்திய மக்களிடையே உருவாக்குவதற்கு ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான ஹிந்துத்துவவாதிகளுக்குப் பெரிதும் பயன்பட்டது.

விடுதலைக்குப்பின் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே இந்தியாவில் காங்கிரஸ் தலைமையில் ஹிந்துத்துவ ஆட்சியைக் கொண்டு வந்து விடலாம் எனக் காய் நகர்த்திய ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு, காங்கிரஸை நம்பிக் கொண்டிருப்பதால் பலனேதும் இல்லை என்ற எண்ணம் 70 களிலிருந்து உருவாக ஆரம்பித்து விட்டது. பதவி வெறி, ஊழல், கோஷ்டி சண்டை இவற்றிலேயே திளைத்துக் கிடந்த காங்கிரஸில் பூரண ஹிந்துத்துவ சிந்தனையை முழுமையாகக் கொண்டு வருவது இயலாத காரியம் என்று உணர்ந்து கொண்ட ஆர்எஸ்எஸ், காங்கிரஸுக்கு மாற்றாக மற்றொரு சக்தியை உருவாக்குவதே "இந்துஸ்தான் இந்துக்களுக்கே" எனும் கனவுக்குத் தீர்வு என்ற எண்ணத்தோடு வகுப்புவாதத்தை இரகசியக் கொள்கையாகக் கொண்ட பாஜக எனும் கட்சி தேசிய அரசியலுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

துவங்கிய 20 ஆண்டு காலகட்டத்திலேயே பாஜகவின் முகமூடி கிழிக்கப் பாட்டு, அதன் நிஜமுகம் மக்கள் முன்னிலையில் அவமானப்பட்டு நிற்கின்றது. "கருத்துச் சுதந்திரம் இல்லாத, நிர்வாகத் திறமையும் சகிப்புத் தன்மையும் அற்ற அரசியல் கட்சியாக, ஊழல், பதவி வெறி, காட்டுமிராண்டித்தனம்" ஆகிய அனைத்துக்கும் மொத்தக் குத்தகைக் கட்சியாக, அரிதாரம் கலைந்துபோன ஜோக்கர் போன்று இந்திய தேசிய அரசியலில் பாஜக இன்று சிறுமைப்பட்டு நிற்கின்றது.

காங்கிரஸில் சிதறியிருக்கும் மதவாத இந்துக்களின் ஓட்டுகளை எப்பாடு பட்டாவது ஒன்று திரட்டினால் மட்டுமே மத்தியில் நாற்காலியைப் பிடிக்க முடியும் என்ற ஒற்றைக் காரணத்திற்காக, ராமனின் பெயர் கூறி, மக்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தி, இந்துக்களுக்கு மதவெறியூட்டி, உடன்பிறப்புகளாக வசித்து வந்த இந்நாட்டு மக்களின் இரத்தத்தை ஓட்டி, பதவிக்கு வந்த பாஜக, 5 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த போதிலும்கூட, தங்களின் முழு முதற் இலட்சியம் என்று இந்து மக்களின் முன்வைத்த பொய்க் காரணமான ராமனுக்கான கோயிலை அயோத்தியில் கட்டாதது அதன் அயோக்கியத்தனத்தை மக்களுக்குக் காட்டி விட்டது.

நாட்டு மக்களுக்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கான சவப்பெட்டி வாங்கியதிலேயே செய்த பாஜக ஆட்சியின் ஊழலிலிருந்து நாட்டு மக்களுக்காக நாடாளுமன்ற அவையில் கேள்வி கேட்க இருக்கும் உரிமையைக் காசுக்காக விற்ற அயோக்கிய அர்ப்பர்களின் கூடாரம்தான் பாஜக என்பதை நாட்டு மக்கள் கண்டு கொண்டனர்.

தொடர்ந்து, நாடாளுமன்ற அவையிலேயே கோடிகளைக் கொட்டிக் காட்டி, உலக அரங்கில் இந்தியாவைத் தலைகுனிய வைத்ததில் இந்நாட்டின் மீதான பற்று என்பது பாஜகவுக்குக் கிஞ்சிற்றும் இல்லை என்பதை நாட்டு மக்கள் தெளிவாக அறிந்து கொண்டனர். இறுதியாக, இதுநாள் வரை கூறி வந்த பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம்கள் காரணமல்ல என்ற உண்மையை அக்கட்சியின் மூத்தத் தலைவர்களே கூறியதும் அதனைப் பொறுக்க முடியாமல் என்ன எழுதினார் என்றே படித்துப் பார்க்காமலேயே அவசரம் அவசரமாக ஜஸ்வந்த் சிங்கைக் கட்சியை விட்டுத் தூக்கியடித்ததோடு அவரைப் பின்பற்றி பாஜக கூடாரமே கலகலத்துப் போய் நிற்பதும் மக்கள் மத்தியில் பாஜகவின் தகனம் நெருங்கி விட்டதை அறுதியிட்டுக் காட்டி விட்டது. இதில் ஒரு மகாக் கேவலமான விஷயம் என்னவெனில், ஜஸ்வந்த் சிங்காவது இந்தியாவில் இருந்து கொண்டுதான் "பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜின்னா காரணமல்ல" (பெட்டிச் செய்தியில்).

ஜின்னா, இந்தியராக இருந்தார். இந்திய மண்தான் அவரைப் பெரும் தலைவராக உருவாக்கியது. ஒருங்கிணைந்த இந்தியாவின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டுள்ளார்.

அவருடன் நான் பலமுறை உரையாடியதில் அவர் இந்துக்களுக்கு எதிராகவோ இந்து மதத்திற்கு எதிராகவோ பேசியதில்லை.

இப்படிப்பட்ட பலகட்டங்களில் மதம் என்பது ஒரு பொருளாகவே இருந்ததில்லை. அவர் தன்னை மதவாதி என்று காட்டிக் கொண்டதே இல்லை. பிரிவினைக்குப்பின், அவருக்கு அப்படிப்பட்ட தோற்றத்தை பாகிஸ்தான் தந்தது. பாகிஸ்தான், தனிநாடு ஆவதற்கு ஜின்னா தேவைப்பட்டார். அதுபோல, ஜின்னாவின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பாகிஸ்தான் தேவைப்பட்டது என்பதே உண்மை.

ஜின்னா இந்துக்களையோ, இந்து மதத்தையோ எதிர்க்கவில்லை; காங்கிரஸ் கட்சியைத்தான் எதிர்த்தார். அதுதான் முஸ்லிம் லீகின் உண்மையான எதிரியாகத் திகழ்ந்தது. பீகார் உட்பட சில மாநிலங்களில் இந்து-முஸ்லிம் கலவரங்கள் உருவானபோது, முஸ்லிம்களைக் காக்க காங்கிரஸ் அரசு தவறிவிட்டது என்பதை நிரூபித்தார் ஜின்னா. அப்போதுதான், இந்தியா என்பது இந்து ராஜ்யமாக உருவாக்கப்படுமோ என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டது.

இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களின் விழிகளை உற்றுப் பாருங்கள். மனதில் வலிகளைச் சுமந்து வாழ்வது அவர்களது விழிகளில் தெரியும். அவர்களது சொந்த மண் எது? அவர்களை நாம் அந்நியர்களைப் போலத்தானே நடத்தி வருகிறோம்? தேசப் பிரிவினைக்கு முஸ்லிம்கள் கொடுத்த விலை மிகமிகக் கூடுதல்தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தேசம் பிரிவு படாமல் ஒன்று பட்டிருந்திருந்தால் முஸ்லிம்கள் இங்கு அசைக்க முடியாத வலிமையுடன் இருந்திருப்பார்கள் - ஜஸ்வந்த் சிங்.

ஆனால், பாஜகவின் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவரும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருந்தவருமான அத்வானி பாகிஸ்தானுக்கே சென்று ஜின்னாவைப் பாராட்டி விட்டு வந்தார். ஆனால், அவரைக் கட்சியிலிருந்து நீக்குவதைக் குறித்த பேச்சுக்கூட எழவில்லை. பாஜகவின் இத்தகைய இரட்டை அயோக்கியத்தனத்தை ஜஸ்வந்த் சிங்கின் டிஸ்மிஸ் விஷயத்தின்போது நாட்டு மக்கள் நன்றாக புரிந்து கொண்டு விட்டனர்.

இந்திய வரலாற்றில் கையாலாகாத பிரதமர் எனப் பெயரெடுத்த நரசிம்ம ராவ் ஆட்சியின்போதுதான் பாபர் மஸ்ஜித் இடிக்கப் பட்டது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறுவதுபோல் பாபரி மஸ்ஜித் இடிப்பில் காங்கிரசுக்கும் நிச்சயமாகப் பங்குண்டு. நரசிம்ம ராவைப் பற்றி, "ராவ் ஒரு ஜனசங்கி. அவரது வேஷ்டியைப் பிடித்து இழுத்து விட்டால் அதனுள் மறைந்திருக்கும் காக்கி அரை டவுசரைக் காணலாம். ஜனசங்கத்துடனான அவரது தொடர்புக்கு அது சாட்சி கூறும்.

பாபரி மஸ்ஜித் தகர்ப்பின் போது, உபி ஆட்சியில் இருந்த கல்யாண் சிங்கின் அரசைக் கலைத்து விட்டு உபியின் கட்டுப்பாட்டை ராவ் ஏன் கையில் எடுத்துக் கொள்ளவில்லை? பாஜகவினர் கூறிய மஸ்ஜித் தகர்க்கப்படாது என்ற உறுதிமொழியை ராவ் எப்படி நம்பினார்? உபியின் கல்யாண்சிங் அரசை மீறி மத்தியப் படையினரை ஓப்பன் ஃபைர் செய்வதற்கு ராவ் ஏன் உத்தரவிடவில்லை? இவை அனைத்தும் பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் ராவுக்கும் விருப்பம் இருந்தது என்பதைத் தெளிவுபடுத்தும்" என்று இந்தியன் எக்ஸ்ப்ரஸில் சேகர் குப்தா குறிப்பிடுகிறார்.

நரசிம்ம ராவுக்கும் வாஜ்பாயிக்கும் இருந்த உறவு என்பது ஊரறிந்த ரகசியம். வாஜ்பாய் எனும் முகமூடி மிதவாதி, வகுப்புவாத அமைப்பான ஆர் எஸ் எஸ்ஸின் தயாரிப்பு என்பது அனைவரும் அறிந்ததாகும். அதை லிபரான் கமிஷன் அறிக்கை தெள்ளெனக் கூறுகிறது.

இந்தியாவில் ஹிந்துத்துவ ஆட்சியைக் கொண்டு வர, காங்கிரஸையும் பாஜகவையும் நம்பி இரண்டு முறை ஆர்.எஸ்.எஸ் சூடு பட்டு நிற்கிறது. இனி பாஜகவை நம்பி ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எவ்விதப் பயனும் இல்லை. இந்தியாவில் ஹிந்துத்துவ ஆட்சியை இனிமேல் பாஜகவின் மூலம் கொண்டு வந்து விடலாம் எனக் கனவிலும் நினைத்துப் பார்க்க வேண்டாம்.

இது 1947 அல்ல என்பதை ஆர்.எஸ்.எஸ்ஸும் காங்கிரசும் உணர்ந்து கொண்டதோ இல்லையோ மக்கள் நன்றாகவே உணர்வு பெற்று விட்டார்கள். இனிமேலும், பொய்களின் மீது சவாரி செய்து இந்நாட்டு மக்களை ஏய்ப்பது நடவாத காரியம். அதனைக் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாட்டு மக்கள் நன்றாக ஆர்.எஸ்.எஸ்ஸிற்குப் பாடம் புகட்டியுள்ளார்கள். தீவிர ஹிந்துத்துவ நிலைபாடுகளுக்கு எதிராக நாட்டு மக்கள் பாஜவுக்குக் கொடுத்த அடியைத் தங்களுக்கு நாட்டு மக்கள் கொடுத்த அங்கீகாரமாகவே கருதி காங்கிரஸ் இறுமாப்பில் இருந்து வருகிறது.

ஆனால் உண்மை அதுவல்ல. இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிர நிற்கவைத்திருப்பது, "அணி சேரா கொள்கை" என்ற நடுநிலைக் கொள்கையாகும். உலகில் அநீதி எங்கு இழைக்கப்பட்டாலும் அதனைச் செய்தவன் எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் அதற்கு எதிரான நிலைபாடு எடுப்பதும் அக்கிரமம் இழைக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான நிலைபாடு கொள்வதும் உலக அரங்கில் இந்தியாவைத் தலைநிமிர்ந்து நிற்க வைக்கக் கூடியதாகும்.

ஆனால், சோனியா தலைமையிலான மன்மோகன் சிங்கின் ஆட்சி, இந்தியாவின் அற்புதமான "அணி சேராக் கொள்கை" தத்துவத்தைக் காற்றில் பறக்க விட்டுக் கொண்டு, இன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு கூடிக் குலாவிக் கொண்டிருக்கின்றது. தன் வளர்ப்பு நாய்க்கு "இந்தியா" எனப் பெயரிட்ட அதிபரின் நாட்டுக்குத் தன்மானம் உள்ள எவனும் விருந்தாளியாகச் செல்ல மாட்டான். ஆனால், 110 கோடி இந்தியர்களின் மானத்தை அடகு வைக்கும் பெருமை மன்மோகன் சிங்கையே சாரும்.

இதனை நாட்டு மக்கள் உணராமலில்லை. ஆனால், நாட்டைப் பிளவுபடுத்தும் தீயசக்தியான ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் முகமான பாஜகவுக்கு எதிராக வலுவான ஒரு சக்தியைத் தேர்வு செய்ய இன்று நாட்டு மக்களுக்குக் காங்கிரஸை விட்டால் வேறு வழியில்லை என்பதே உண்மை. "ஆலையில்லாத ஊரில் இலுப்பைப்பூ" தேர்வாகத்தான் நாம் ஆட்சியில் இருக்கிறோம் என்பதைக் காங்கிரஸ் உணர்ந்து கொள்கின்றதோ இல்லையோ, "நடுநிலை தவறா சமநிலைச் சமுதாயமான முஸ்லிம் சமுதாயம்" உணர்ந்து வைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

இனியும் நீண்ட காலத்திற்கு நாட்டைப் பிளவுபடுத்தும் "ஹிந்துத்துவ வெறி" இந்நாட்டில் விலை போகப் போவதில்லை. இதனை ஆர்.எஸ்.எஸ்ஸும் உணர்ந்திருக்கின்றது என்பதன் உதாரணமே, "60 ஆண்டுகால அரை டவுசர் சட்டத்திற்கு ஐட்டி சேவக்குகளுக்கு மட்டும் விதிவிலக்கு" கொடுத்ததாகும். படித்தவர்கள், சிந்திக்கத் தலைப்பட்டு விட்டனர் என்பதும் அவர்களை இனியும் நீண்டகாலத்துக்குக் காட்டுமிராண்டி யுகத்திலேயே வைத்துக் காலத்தை ஓட்ட முடியாது என்பதையும் ஆர்.எஸ்.எஸ் உணர்ந்து கொண்டுள்ளது என்பதற்கும் ஆதாரமாகும் இது. இன்று அரை டவுசர் கலாச்சாரத்திற்கு விடை கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு வந்துள்ள ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு நாளை, மக்களை மாக்களாக உருவாக்கும் ஹிந்துத்துவ கொள்கைக்கே விடை கொடுக்க வேண்டிய கட்டாயம் வரலாம்.

இன்று நாட்டிலுள்ள பெரும்பாலான இந்து மக்களின் சிந்தனை அவ்வாறான திசையை நோக்கியே பயணிக்கிறது. இன்று இந்த நாட்டு மக்களுக்குத் தேவையானது மற்றொரு பிரிவினையல்ல! மற்றொரு கொலைக் களமல்ல! நிம்மதியற்ற வாழ்வல்ல!

மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்க்கையையே மக்கள் விரும்புகின்றனர். அதற்கு மத்தியிலும் மாநிலத்திலும் நிலையான, திறமையான, ஊழலற்ற, நடுநிலையான, அனைவரையும் சமமாக பாவிக்கும், அநீதிக்கு எதிராகக் குரலெழுப்பி, நியாயத்தை நிலைநாட்டும் ஆட்சியையே மக்கள் விரும்புகின்றனர். அத்தகையதோர் ஆட்சியை 60 ஆண்டு காலமாக மக்களை ஏமாற்றிப் பதவியை அனுபவித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸாலோ 20 ஆண்டுகளிலேயே கல்லறைக்குச் செல்ல வழி தேடும் காட்டுமிராண்டி கொள்கை கொண்ட பாஜகவாலோ கண்டிப்பாகத் தர முடியாது!

அத்தகையதோர் ஆட்சியை, படைத்த இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு, அவனுக்கு மட்டுமே அஞ்சி, உண்மை-நீதியின் பாதுகாவலர்களாக வாழ்பவர்களால் மட்டுமே தர முடியும். ஒரு சுயநலமற்ற, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு எனச் சேவை புரியும் ஒரு தக்வாதாரியால் மட்டுமே - உமர்(ரலி) அவர்களதைப் போன்ற ஆட்சியைத் தர இயலும். ஆம், அது முஸ்லிம்களால் மட்டுமே முடியும்!

இன்று இந்திய அரசியலில் தோன்றியுள்ள வெற்றிடம், இஸ்லாத்தை இரு கரம் நீட்டி வரவேற்கிறது. அன்று காந்தி கண்ட உமரின் ஆட்சியை இந்தியாவுக்குத்தர, இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்ட முஸ்லிம்களால் மட்டுமே இயலும். இதனை முஸ்லிம்கள் உணர்ந்து செயல்பட வேண்டிய காலம் வந்து விட்டது!

நாட்டை ஏகாதிபத்தியத்துக்கு அடிமைப்படுத்தும் காங்கிரஸின் ஒற்றை ஆதிக்கத்தை இந்தியாவிலிருந்து துரத்தியடித்து, நாட்டு மக்கள் விரும்பும் சுபிட்சமான, நிம்மதியான, ஊழலற்ற, திறமையான, நிலையான, நீதிபூர்வமான ஆட்சியைத் தர இந்திய முஸ்லிம்கள் திட்டமிட்டுக் களமிறங்க வேண்டியது இக்காலத்தின் கட்டாயம் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்து செயல்படத் துவங்கட்டும்!

சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது! ஆம், அசத்தியம் அழிந்தே தீரும்!

-முற்றும்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...