(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, July 31, 2010

முஸ்லிம்களும் - கல்வி விழிப்புணர்வும் - அதன் அவசியமும்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர். S.ஆபிதீன் தனது பேராசிரியர் பணியுடன் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இஸ்லாமிய பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே கல்வி விழிப்பு உணர்வு, மேற்படிப்பு குறித்த கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். மாணவர் களுக்காக பல ஊர்களுக்கு சென்று நிகழ்ச்சி நடத்தி வரும் இவர் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.


கல்வி வழிகாட்டும் முகாம், மேற்படிப்பு குறித்த ஆலோசனை முகாம், பெண் கல்வியின் அவசியம், வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் என்ற தலைப்புகளில் தமிழகத்தின் நகரங்களில் மட்டுமன்றி பல்வேறு சிற்றூர்களிலும் முஸ்லிம் அமைப்புகளின் முயற்சியில் கல்விக் கருத்தரங்கங்கள் தொடர்ந்து நடத்தப்படுவது உண்மையிலேயே ஓர் உற்சாகமான விஷயம் தான்.


அதிக பண செலவு, உடல் உழைப்புடன் சமுதாயத்தில் கல்வி விழிப்பு உணர்வை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்படும் கல்வி கருத்தரங்குகளில் பாதிக்கும் மேல் போதுமான மாணவர்கள் வருகையின்றி ஓரு சடங்காகவே முடிந்து வருகிறது.


இது மாதிரியான நிகழ்ச்சிகள் சில ஊர்களில் தோல்வியடைவதும் அல்லது அவைகள் வெறும் சடங்குகளாகவே நடந்து முடிந்து விடுவதன் காரணத்தை ஆராயும் போது சில உண்மைகள் நாம் அறிய வந்தது. அந்த வகையில் …


கல்வி கருத்தரங்குகள் ஏற்பாடு செய்கின்ற அமைப்புகள், தங்களின் அமைப்பு சார்ந்த விளம்பரங்களில் காட்டுகின்ற ஆர்வத்தினை மாணவர்களை அழைத்து வருவதில் காட்டுவதில் மிகுந்த குறைபாடு தெரிகிறது. இதுபோன்ற கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எங்கு நடைபெறுகிறது என்பதனைத் தேடி அலைந்து கலந்து கொள்கின்ற மாற்று சமுதாய மாணவர்களுக்கு மத்தியில் தங்களின் இல்லங்களுக்கு நேரடியாக வந்து அழைப்பிதழ் வைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து முடங்கிக் கிடக்கிறது நமது இஸ்லாமிய மாணவச் சமுதாயம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சமுதாய விழிப்புணர்விற்காக இதையும் செய்யத் தயாராகிக் கொள்ள வேண்டும்.


நிகழ்ச்சி மாணவர்களுக்குத் தானே …! தமக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற அறியாமையில் ஒதுங்கி நிற்கும் பெற்றோர்களிடம் இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு சரி நிகராக பெற்றோர்களுக்கும் உண்டு என்பதை ஏற்பாட்டாளர்கள் பெற்றோர்களுக்கு உணர வைக்க வேண்டும்.



அடுத்த கொடுமை. இன்றும் சில ஊர்களில் மிக அதிக பொருள் செலவில் ஏற்பாடு செய்து அதீத முயற்சியின் காரணமாக “கல்வி விழிப்பு உணர்வு மற்றும் மேற்படிப்பு வழிகாட்டும் முகாம்” என்ற பெயரில் மாணவர்களை அழைத்து வந்து முகாம்கள் நடத்துகின்றனர்.

மூன்று மணிநேர நிகழ்ச்சியில் உள்ளூர் பிரமுகர்களின் முகஸ்துதி வார்த்தைகள், வாழ்த்துரைகள், ஒருவருக்கொருவர் பொன்னாடை போர்த்திக்கொள்ளுதல் என்று இரண்டே முக்கால் மணிநேரத்தை விரயம் செய்துவிட்டு இறுதியாக சிறப்பு அழைப்பாளர்களிடம் பளீஸ் 10 -15 நிமிடத்திற்குள் முடித்துக் கொள்ளுங்கள், லுகருக்கு நேரமாச்சு…! என்று அன்புக் கட்டளையிடும் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் 21/2 மணி நேரம் மாணவர்களுக்கு கூற வேண்டிய அறிவுரைகள் வெறும் 15 நிமிடங்களில் எந்த வகையிலும் எடுத்துக் கூற முடியவே முடியாது என்பதை புரிந்து கொண்டு நிகழ்ச்சி நிரலை சரி வர அமைத்துக் கொள்ள முயற்சி செய்யலாமே !


இதுபோன்று மாற்றிக் கொள்ளவேண்டிய, ஆதங்கப்பட வைக்கின்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்தாலும் பல ஊர்களில் மிகவும் போற்றத்தக்க வகையில் கல்வி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதை மறுக்க முடியாது. உதாரணமாக, கடந்த 09.05.2010 அன்று கள்ளக்குறிச்சியில் இஸ்லாமிய கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் சார்பாக ஏற்பாடு செய்திருந்த கூட்டம் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியது.

காரணம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் சிதறிக்கிடக்கும் சுமார் 1500 இஸ்லாமிய மாணவர்கள், கள்ளக்குறிச்சியின் மிகப்பெரிய மண்டபத்தில் காலை 9.00 மணிமுதல் 2.30 மணிவரை நடத்திய கருத்தரங்கில் (இஸ்லாமிய மாணவர்கள் மட்டும்) மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டது மிகவும் எழுச்சியாக இருந்தது. இது போன்ற வெற்றிகரமான நிகழ்ச்சிகள் ஏற்பாட்டாளர்களின் தியாகத்திற்கு கிடைத்த வெற்றி. அதற்கு அல்லாஹ்விற்கு நன்றி கூறிக் கொள்வோமாக !


பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் – மே மாதங்களில் தான் இது போன்ற மேற்படிப்பு வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால், இனிவரும் ஆண்டுகளில் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதத்திற்குள் மாணவர்களுக்கான மேற்படிப்பு குறித்த விவரங்களை தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்து விடவேண்டும். காரணம், பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்கள் மார்ச் மாதத்திலேயே மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுகின்றன. +2 மற்றும் பட்டப்படிப்பு மாணவர்களின் மேற்படிப்பிற்கான இலக்கினை மார்ச் மாத இறுதியிலேயே அவர்களின் மனதில் விதைத்து விடவேண்டும்.


இன்னும், உயர் கல்விக்கு முஸ்லிம் மாணவர்களை வழி காட்டுகின்ற அதே வேளையில் உயர்கல்வி நிறுவனங்களில் தகுதியோடு சேர்வதற்கான அதிக மதிப்பெண்களைப் பெறுவது எப்படி என்ற சூட்சுமத்தையும் கற்றுத்தர வேண்டும். மாணவர்களின் மனதில் புதைந்து கிடக்கும் தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிந்து அவர்களின் உயர் கல்வி இலக்கை இலகுவாக அடையும் “தன்னம்பிக்கை மேம்பாட்டுப் பயிற்சியையும் ஒவ்வொரு கல்வியாண்டின் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் இஸ்லாமிய அமைப்புகள் அந்தந்த ஊர்களில் நடத்த முற்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் கண்டிப்பாக இஸ்லாமிய மாணவ சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.


ஆக, கல்வியின் மாண்பை உணராமல் பலகாலம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த இந்த சமுதாயம் தூக்கம் கலைந்து புரண்டு படுத்து இப்பொழுதுதான் எழுந்து உட்கார முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இனி உட்கார்ந்து எழுந்து நின்று மற்றவர்களுக்கு நிகராக ஓட ஆரம்பிப்பதற்கு சில காலங்கள் கண்டிப்பாக அவசியம். அதற்காக சமுதாயத்தின் கல்வி விழிப்புணர்வு முயற்சிகளில் வல்ல இறைவன் நம்மை சோர்ந்து விடவோ அல்லது பின்வாங்கச் செய்துவிடவோ மாட்டான் என்ற உறுதியான நம்பிக்கை நமக்கு இருக்கிறது.

பேராசிரியர் ஆபிதீனைத் தொடர்பு கொள்ள : +91 99658 92706
E-mail : abideen222270@yahoo.com



Thanks : Samarasam Tamil Fortnightly ,May 16-31,2010


தகவல்: முதுவை ஹிதாயத்

மாவட்ட வக்ப் அலுவலகங்களின் முகவரிகள்


சென்னை:


வக்ப் ஆய்வாளர்
822 அண்ணா சாலை
மக்கா மஸ்ஜித் வளாகம்
மவுண்ட் ரோடு
சென்னை 600002
தொலைபேசி:044 -28520477

காஞ்சிபுரம் & திருவள்ளூர்:

வக்ப் ஆய்வாளர்
பெரிய பள்ளிவாசல் வளாகம்
பூவிருந்தவல்லி
சென்னை 600056
தொலைபேசி: 044 - 26494523

கடலூர் & விழுப்புரம்:

வக்ப் ஆய்வாளர்
(நூர் முஹம்மது ஷா அவுலியா தர்கா)
512 காந்தி ரோடு
பண்ருட்டி
கடலூர் மாவட்டம்
தொலைபேசி: 04142 - 242660

வேலூர் & திருவண்ணாமலை:

வக்ப் ஆய்வாளர்
12 / 16 காந்தி ரோடு
வேலூர் - 632004
தொலைபேசி: 0416 - 2225770

சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி & தர்மபுரி:

வக்ப் ஆய்வாளர்
எண் 4 A & 5 A , முதல் மாடி
திப்பு சுல்தான் மார்கெட்
முதலாவது அக்ரகாரம்
சேலம் - 636001
தொலைபேசி - 0427 - 2263126

கோயம்புத்தூர், ஈரோடு & நீலகிரி:

வக்ப் ஆய்வாளர்
எண்: 14 - 15 பள்ளிவாசல் வளாகம்
அவினாசி சாலை
உப்பிபாளையம்
கோயம்புத்தூர் - 641018
தொலைபேசி - 0422 - 2380685

திருச்சி, புதுகோட்டை, கரூர் & பெரம்பலூர்:

வக்ப் ஆய்வாளர்
எண்: 12 கிலேடர் தெரு
திருச்சி - 2
தொலைபேசி - 0431 - 2703407

மதுரை, திண்டுக்கல் & தேனீ:
வக்ப் ஆய்வாளர்
எண்: 1 டவுன் ஹால் ரோடு பள்ளிவாசல்
டவுன் ஹால் ரோடு
மதுரை - 625001
தொலைபேசி - 0452 - 2346053

ராமநாதபுரம், விருதுநகர் & சிவகங்கை:
வக்ப் ஆய்வாளர்
தர்பம்சயனம் சாலை
வெளிப்பட்டினம்
ராமநாதபுரம் - 623 504
தொலைபேசி: 04567 - 220053


தஞ்சை, திருவாரூர் & நாகப்பட்டினம்:
வக்ப் ஆய்வாளர்
27 நீதி நகர்,
ஜும்மா பள்ளிவாசல்
கோர்ட் ரோடு
தஞ்சாவூர் - 613 001
தொலைபேசி: 04362 273077

திருநெல்வேலி, தூத்துக்குடி & கன்னியாகுமரி:
வக்ப் ஆய்வாளர்
54 ஹை ரோடு
திருநெல்வேலி - 627001
தொலைபேசி: 0462 - 2334062

(இரண்டு அல்லது மூன்று மாவட்டத்திற்கு ஒரு அலுவலர் இருபதாலோ என்னவோ வக்ப் சொத்துக்கள் சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன )

Wednesday, July 28, 2010

காவல் துறையில் ஃபாசிசம் தோலுரிக்கும் புதிய நூல்!

இராணுவம், உளவுத்துறை, போலீஸ், உள்துறை, பாதுகாப்புத் துறைகள் என்று அத்தனை துறைகளின் கிடுக்கிப் பிடியும் ஹிந்துத்துவ ஃபாசிகக் கும்பல்களிடம் உள்ளது என்று அதிர்ச்சிகரமான ஆதாரங்களுடன் புதிய தகவல்களைப் புதுப்பித்து ஒரு புதிய நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவந்துள்ளது.


நூலின் பெயர்:(Khaki and Ethnic Violence in India)- இந்தியாவில் காக்கியும் இன வன்முறையும்
ஆசிரியர்: உமர் காலிதி

S.M.முஷ்ரிஃப் எழுதிய (Who Killed Karkare?) "கார்கரேயை கொன்றது யார்?" நூலின் வரிசையில் இந்த நூல் இப்பொழுது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஐ.பி யை முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவ ஃபாசிஸ்டுகள், என்று ஆதாரப்பூர்வமாக, தெள்ளத் தெளிவாகக் கூறினார் S.M.முஷ்ரிஃப் அந்த நூலில்.
அதே வரிசையில் ஐ.பி. யில் மட்டுமல்ல, அரசு பாதுகாப்பு இயந்திரங்கள் அனைத்தையும் ஆக்கிரமித்துள்ளார்கள் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவ ஃபாசிஸக் கும்பல்கள் என்று கூறுகிறது இந்த ஆங்கில நூல்.


இராணுவத்தின் பிரிவுகள், மத்திய ரிசர்வ் படை, RAF என்னும் துரித நடவடிக்கைப் படை (Rapid Action Force) போன்ற துறைகளிலெல்லாம் இப்பொழுது நிலவிலுள்ள முஸ்லிம் விரோதப் போக்குகளை வெவ்வேறு துறைகளில் பதவி வகிக்கும் உயர்ந்த அதிகாரிகளின் வாக்குமூலங்கள் மூலமே விவரிக்கிறார் நூலாசிரியர் உமர் காலிதி.


இன்னொரு அதிர்ச்சிகரமான தவல். 1969 முதல் இன்று வரை ஒரு முஸ்லிமைக் கூட சேர்க்காமல் கவனமாக இருக்கிறது "ரா" (RAW) உளவு அமைப்பு. இதெல்லாம் எதேச்சையாக நடந்ததல்ல. திட்டமிட்டு, கவனமாகச் செயல்படுத்தப்படுவது என்று கூறுகிறார் ஆசிரியர்.


இரகசிய விசாரணை துறைகளில் முஸ்லிம்களை எடுப்பதற்கு எழுதப்படாத விலக்கு முன்பிருந்தே இருப்பதாக முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் விஜய் கரணின் வாக்குமூலங்களை இந்நூலில் படிக்கும் எவரும் அதிர்ச்சியடையாமல் இருக்க முடியாது.


நாடு முழுவதும் நடந்த அனைத்து கலவரங்களிலும் முஸ்லிம்களுக்கெதிராக போலீஸ் நடந்துக் கொண்டுள்ள வரலாற்றை வரிவரியாய் விளக்குகிறார் ஆசிரியர்.

பேஸ்புக்‌கில் மலர்ந்த நட்பு கற்பழிப்பில் முடிந்த கொடுமை

மும்பை,ஜுலை28:பேஸ்புக்கில் புகுந்து விளையாடுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பேஸ்புக் பற்றிய அதிர்ச்சித் தகவல்களும் சம அளவில் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன.

பலர் தங்கள் பணிகளை மறந்து கூட பேஸ்புக்கில் மூழ்கி விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது.

மும்பையில் கல்லூரி மாணவி ஒருவர் பேஸ்புக்கில் விரிக்கப்பட்ட வலையில் சிக்கி கற்பிழந்து கண்ணீருடன் தவித்து நிற்கிறாள்.

மும்பை கிழக்கு செம்பூர் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி, சும்மா பேஸ்புக்கில் நட்பு வளர்த்துள்ளார். எதிரே வலை விரித்த இளைஞனுக்கோ எண்ணம் வேறாக இருந்தது. தினமும் பேஸ்புக்கில் சாட் செய்த இருவரும், ஒரு நாள் பாட விஷயமாக கருத்துக்களை பறிமாறிக்கொள்ள நேரில் சந்தித்தனர். அதன் விளைவு, ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அந்த இளைஞன், இளம் பெண்ணை கற்பழித்தான்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெற்றோரும், உற்றாரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த இளைஞர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்டெர்நெட் வசதிகளை தவறாக பயன்படுத்துவதால் இன்றைய இளசுகள் இடம் தெரியாமல் போகிறார்கள்.

Source : http://paalaivanathoothu.blogspot.com

Tuesday, July 27, 2010

MTS போன்களால் ஏற்படும் விபரீதங்கள்.

MTS போன்கள் இன்று நம் மக்களிடையே பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதற்க்கு மிக முக்கிய காரணம் MTS TO MTS இலவசம் என்ற சலுகை தான்.

ஒரு தடவை குறிப்பிட்ட AMOUNT (RS.195) RECHARGE செய்தால் போதும் அதில் இருந்து ஒரு வருடதிற்கு UNLIMITED FREE.


விளைவு இன்று நாகூரில் கிட்ட தட்ட பெரும்பாலானவர்களின் கைகளில் MTS PHONE. AIRTEL,AIRCEL என எத்துன இணைப்பு வைத்து இருந்தாலும் MTS தவறாமல் இடம் பிடிக்கிறது அனைவரிடம் ...

அதற்க்கு என்ன என்கிறீர்களா ?

காசு கொடுத்து பேசுனாவே லேசுல வைக்கிறது கஷ்டம். இதுல FREE என்றால் சொல்லவே தேவை இல்லை ..


தற்போது நம் ஊர் பெண்களுக்கு வர பிரசாதமாகிவிட்டது MTS PHONE. மணிக்கணக்கில் பேசிக்கொண்டு இருகிறார்கள்.., என்ன பேசுகிறார்கள் , எது பேசுகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியுமா என்பது சந்தேகமே ...

எதையும் தேவைக்கு பயன்படுத்தினால் பிரச்சனை இல்லை அளவிற்கு மீறினால் அது தீங்கை விளைவிக்கும் அந்த வகையில் சாதாரணமாக உயர்ந்த ரக செல்போன் பயன்படுத்தினாலே பல உடல் நல குறைவுகள் ஏற்படுகின்றன என்ற செய்தி வந்து கொண்டிருக்க இது போன்று மட்டமான தயாரிப்புகளை பயன்படுத்துவதால் பிரச்சனைகள் சுலபமாக ஏற்படுகின்றன .

இதை வீணாக சொல்லவில்லை பலருக்கு இதனால் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன ஆனால் பலருக்கு இது பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை .


MTS MOBILE (CDMA) லை பொருத்தவரை இணைப்பு செல்போனுடன் இணைந்தே வருகிறது. .

ஆதலால் இந்த இணைப்பை விடுத்து வேறு செல்போனுக்கும் இந்த இணைப்பை மாற்ற முடியாது.


MTS மொபைல் தனது இணைப்பை ZTE , LG மற்றும் SAMSUNG போன்ற கம்பெனி செல்போன் மாடலில் தருகிறது . இதில் ZTE என்ற மாடல் கொண்ட செல்போன் மிக மட்டகரமான செயல்திறன் கொண்டது .

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்த மாடலில் MIKE & SPEAKER மிக மோசமாக செயல்படுகிறது

பலர் தலைவலி,எரிச்சல் அடைதல்,தேவைஅற்ற கோபம் ஆகியவற்றால் அவதிபடுவதற்கு இவை முக்கிய காரணங்களாகும்.

ஆகையால் பொதுவாக செல்போன் பயன்படுத்துவதை தேவைக்கு வைத்துக்கொள்ள வேண்டும் அதை விடுத்து..

அந்த ஊட்டு கத,இந்த ஊட்டு கத என போன-வந்த கதையெல்லாம் பேசிக்கொண்டு நேரத்தையும் ,உடலையும் வீணடித்து கொண்டு இருக்காமல் பாத்துகொள்ளவேண்டும் வேண்டும்.

முடிந்த வரை MTS MOBILEலில் பேசுவதை தவிர்ப்பது நல்லது மிக முக்கியமாக குழந்தைகளிடம் பேசுவதற்கோ , விளையாடுவதற்கோ கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

Sunday, July 25, 2010

ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும்,குழந்தைகளையும் பாதுகாக்க!!

இணையதளத்தில் கூகுளில் எதை தேடினாலும் சில சமயங்களில் பல
ஆபாச இணையதளங்களை கொடுக்கிறது இந்த ஆபாச இணையதளங்கள்
நம் கணினியில் தெரியாமல் இருக்கவும் இதிலிருந்து நம் குழந்தைகளை
பாதுக்காகவும் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகன் கணினியில் புகுந்து
விளையாடுகிறான் என்று சொல்லும் பெற்றோர்கள் முதலில் புரிந்து
கொள்ள வேண்டியது உங்கள் குழ்ந்தைகளின் அறிவை மட்டும்
வளர்க்க கூடிய இடம் இணையதளம் அல்ல, அவர்களின்
எதிர்காலத்தையும் நிர்ணயம் செய்யும் ஒரு இடம் தான் இணையதளம்.

இணையதளத்தில் உங்கள் குழந்தை செய்யும் அனைத்தையும்
நேரடியாக பாருங்கள் அப்போது தான் உங்களுக்கு சில உண்மை
புரியும் உங்கள் குழந்தை கூகுளில் சென்று ஏதாவது பாடம்
அல்லது விளையாட்டு சம்பந்தமாக தேடினாலும் வரும் முடிவில்
சில ஆபாச இணையதளங்களும் இருக்கும் இது தான் நிதர்சனமான
உண்மை. இதிலிருந்து உங்கள் கணினியை மட்டுமல்ல நம்
குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய நிலையில் தான் நாம்
இப்போது இருக்கிறோம்.


எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் எளிதாக நாமாகவே
ஆபாசதளங்களை நம் கணினியில் வராமல் தடை செய்யலாம்
இதை எப்படி உருவாக்க வேண்டும் என்பதைப் பற்றிய
விடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம். கண்டிப்பாக
இந்தப் பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாகவும்
பாதுகாப்பாகவும் இருக்கும்.

http://winmani.wordpress.com/

இந்து தீவிரவாதம் - வெளிவரும் உண்மைகள் !!

“இந்து தீவிரவாதம்” என்பது இன்று நாடு முழுவதும் மெல்ல பரவிவரும் உண்மை. 2006ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஏழு சம்பவங்கள் இந்துத்துவ அமைப்பினரால் நடத்தப்பட்டது என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விளக்கமான கட்டுரை ஒன்றினை, ஜூலை 19 2010 தேதியிட்ட அவுட்லுக் ஆங்கில வார இதழ் கவர் ஸ்டோரியாக வெளியிட்டுள்ளது. கட்டுரையின் முக்கியத்துவம் கருதி தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம்.


2007 அக்டோபர் 11 அன்று அஜ்மீரில் க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில் நடந்த குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் என்று தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் படிதர் என்ற மூன்று பேரை இராஜஸ்தான் காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. இதில் தேவேந்திர குப்தா ஒரு ஆர்.எஸ்.எஸ் காரன். இவன் வாங்கிய செல்பேசியையும் அதன் சிம் கார்டையும் பயன்படுத்திதான் குண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம்(2010) ஏப்ரல் 30ஆம் தேதி இந்த மூவரும் கைது செய்யப்படும் வரை, இந்த குண்டுவெடிப்பு, ஜிகாதி தீவிரவாதிகளின் செயல் என்று வழக்கை விசாரித்துவந்த காவல்துறையும், ஊடகங்களும் பிரச்சாரம் செய்துவந்தன.
முஸ்லிம்களின் புனிதத்தளமான தர்காவில் ஜிகாதி அமைப்பினர் குண்டு வைப்பார்களா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆனால் இந்தியாவில் இத்தகைய கேள்விகள் கேட்பதற்குத் தகுதியற்றவை.

தேவேந்திர குப்தா கைதுசெய்யப்பட்டு, இந்து அடிப்படைவாத இயக்கங்கள் மீது கைக்காட்டும் வரை, சந்தேகத்தின் கண்கள் அணைத்தும் முஸ்லிம் அமைப்புகள் மீதே இருந்தன. பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல்களுக்கு ஆளானார்கள். ஆனால் இப்போது “இந்து மதத்தைச் சேர்ந்த சிலரை இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நாங்கள் கைது செய்துள்ளோம். சரியான திசையிலேயே எங்களுடைய வழக்கு விசாரனை போய்க்கொண்டிருக்கிறது” – என்று இராஜஸ்தான் மாநிலத்தின் தீவிரவாத ஒழிப்பு படையின் (Anti Terrorist Squad - ATS) தலைவர் கபில் கார்க் என்பவர் சொல்கிறார்.


2007ஆம் ஆண்டு மே மாதம் ஹைதிராபாத் மெக்கா மசூதி வளாகத்தில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில், 14 பேர் கொல்லப்பட்டனர்; 50க்கும் மேலானவர்கள் காயமடைந்தனர். சம்பவம் நடந்தவுடனேயே, ஹர்கட்-உல்-ஜிகாதி-இஸ்லாம் (Harkat-ul-Jehad-e-Islami - HuJI) என்ற அமைப்பே இந்த குண்டுவெடிப்பிற்குக் காரணம் என்று ஹைதிராபாத் போலீஸ் அறிவித்தது. அப்படி அறிவித்ததோடு மட்டும் அல்லாமல் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 26 பேரைக் கைது செய்து, கட்டாயப்படுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ளவைத்து ஆறு மாதங்கள் காவலில் வைத்திருந்தது. ஆனால் இந்த வருடம் (2010) மே மாதம் இந்து அடிப்படைவாத இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேரை இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று சிபிஐ கைது செய்தது.


அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட, உலோகக் குழாய்களில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு செல்போனும் சிம் கார்டும் கொண்டு இயக்கப்பட்ட அதேவகையான வெடிகுண்டுதான் ஹைதிராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதை சி.பி.ஐ கண்டுபிடித்தது. இதுதான் இந்த வழக்கின் திருப்புமுணை. அதுமட்டுமல்லாமல், இந்த இரண்டு சம்பவங்களிலும் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளின் கலவை இந்திய இராணுவம் பொதுவாக பயன்படுத்தும் கலவை விகிதத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

அஸ்வனி குமார் என்ற சி.பி.ஐ இயக்குனர் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கும் தகவல் ஒன்று முக்கியமானது. அஜ்மீர் குண்டு வெடிப்பு சதியில் சுனில் ஜோஷி என்பவன் முக்கிய பங்காற்றியிருப்பதாகவும், மெக்கா மசூதியில் குண்டை வெடிக்கவைக்க பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள் அஜ்மீர் குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ கண்டுபிடிக்கும்வரை ஹைதிராபாத் போலீஸின் கட்டுக்கதையே தொடர்ந்தது.

அதே காலகட்டத்தில், கோவா குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக இந்து தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவுடன் தொடர்புடைய நால்வர் உள்பட 11 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி (National Investigating Agency - NIA) குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்துள்ளது. 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

இந்த ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த பூனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு விசாரணையும் வழக்கம் போல முதலில் முஸ்லிம்கள் மீது பழிசுமத்தியது. சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரிக்கப்பட்டவர்கள் இந்தியன் முஜாகிதீன் அல்லது ஜிகாதி அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்பட்டனர்.

சம்பவம் நடந்த இரவு பேக்கரியின் கண்காணிப்பு கேமராவில் பதிவான படத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அப்துல் சமது என்பவரும் உள்ளார் என்ற பிரச்சாரத்தை மகாராஸ்ட்ரத்தின் தீவிரவாத ஒழிப்பு படைப்பிரிவு தீவிரமாக ஆதரித்தது. ஆனால் அப்துல் சமது மீது இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை, அதுமட்டுமல்லாமல் மற்ற வழக்குகள் சிலவற்றிலிருந்தும் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மலேகான் குண்டுவெடிப்பு விசாரணைக்கு பிறகு இந்தியாவில் தீவிரவாத சம்பவங்கள் குறித்தான விசாரணைகள் முற்றிலுமாக புதிய கோணத்தில் அலசப்படுகின்றன. 2008 நவம்பர் 26ஆம் தேதி மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரே, மகாராஸ்ட்ராவில் தீவிரவாத ஒழிப்பு படைப்பிரிவின் தலைவராக இருந்தபோது நடந்த விசாரணையில்தான் மலேகான் குண்டுவெடிப்பினை நடத்தியது அபிநவ் பாரத் (Abhinav Bharat-AB) என்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பு என்பதனைக் கண்டுபிடித்தது. கைகாட்டியது. கர்கரேவும் அவரது அணியும் வெளிக்கொண்டுவந்தது சமீபத்திய வரலாற்றின் ஒரு பகுதியைதான். இந்துத்துவ தீவிரவாதத்தின் இந்த புதிய வடிவத்தை கண்காணிப்பதற்கு இவர்களது விசாரணை ஒரு துவக்கமாக அமைந்திருக்கவேண்டும்.

ஹைதிராபாத் மெக்கா மசூதி, அஜ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் நடந்த குண்டுவெடிப்பிற்கும் இந்துத்துவ அமைப்பிற்கும் உள்ள தொடர்புகள் கடந்த இரண்டு வருடங்களாகவே வெளிவந்தவண்ணம் உள்ளன.

2002-03வாக்கில் போபால் இரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் தொடர்பாக இராம்நாராயன் கல்சங்கர, சுனில் ஜோஷி என்ற இந்துத்துவ இயக்கவாதிகள் மீது சந்தேகம் எழுந்தபோதே இதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. அவர்கள் விசாரிக்கப்பட்டனர் ஆனால் ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் இதைவைத்தே காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் அந்த வெடிகுண்டுகளுக்கு பின்னணியில் பஜ்ரங்தள் அமைப்பு உள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

2006 ஆம் ஆண்டு இறுதியில் நண்டெட், கான்பூர் ஆகிய ஊர்களில் இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்த சிலரது வீடுகளில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும்போது சிற்சில வெடிவிபத்துகள் நிகழ்ந்தன. அதே ஆண்டில் மகாராஸ்ட்ராவில் உள்ள புர்னா, பர்பானி, ஜல்னா ஆகிய ஊர்களில் உள்ள மசூதிகளில்ள் சிறிய குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. நண்டெட்டில் வெடிவிபத்து நடந்த வீட்டில் தயாரிக்கப்பட்டுவந்த வெடிகுண்டு அவுரங்கபாத்தில் உள்ள ஒரு மசூதிக்காக செய்யப்பட்டு வந்துள்ளது. அந்த வீட்டில் அவுரங்கபாத் நகரத்தின் வரைபடமும், சில ஒட்டு தாடிகளும், முஸ்லிம் ஆண்கள் அணியக்கூடிய உடைகளும் கண்டெடுக்கப்பட்டன.
இவைகளைக் கொண்டே இந்து தீவிரவாதம் குறித்து நாம் எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டும். ஆனால் இந்து தீவிரவாதம் குறித்து இந்த வருட மே-ஜூன் வரையில் யாரும் எந்த கவலையும் பட்டதாகத் தெரியவில்லை. வேண்டுமானால் இடையில் ஒரு இரண்டு மாதங்கள் 2008ஆம் ஆண்டு கர்கரே தலைமையில் மலேகான் குண்டுவெடிப்பு விசாரணை நடந்தபோது சிலர் இந்து தீவிரவாதம் குறித்து ஆங்காங்கே பேசிக்கொண்டிருந்திருக்கலாம். இப்போதும் நாம் அதனை கவனிக்காது இருக்க முடியாது.

”கடந்த 10 ஆண்டுகளாகவே வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளின் வன்முறைகள் குறித்த செய்திகள் நம்மிடையே உலவியவன்னம் உள்ளன. தொடர்ந்து நடந்துவரும் இந்த வன்முறை சம்பவங்களின் பின்னணி குறித்த முறையான விசாரணை எதுவும் செய்யப்படவில்லை. அங்கங்கே நடக்கும் சம்பவங்களை மட்டும் விசாரிப்பதுடன் அவை நின்றுவிடுகின்றன. இன்னும் பெரிய பெரிய கதைகளெல்லாம் விசாரிக்கப்படமலேயே இருக்கின்றன” – என்கிறார் மும்பையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான மிகிர் தேசாய்.

மெக்கா மசூதி, மலேகான் உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதாக எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், மேற்கொண்டு விசாரணையை எவ்வாறு தொடர்வது என்று மத்திய உள்துறை அமைச்சிடம் சி.பி.ஐ இப்போதுதான் ஆலோசித்தி வருகிறது.

2008 செப்டம்பர் 29இல் மலேகான் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்பில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், இன்னும் அதிகமானோர் காயமடைந்தனர். தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் புலனாய்வில், சத்வி ப்ரக்யா சிங் தாக்கூர் என்பவருடைய மோட்டார் பைக்கை பயன்படுத்திதான் குண்டு வெடிக்கவைக்கபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து தயானந்த் பாண்டே என்ற சாமியார், பிரசாத் ஸ்ரீகாந்த் புரோகித் என்ற இராணுவ அதிகாரி உட்பட 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராணுவ பணியில் இருக்கும்போதே தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெருமை லெஃப்டினட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோகித்திற்கு மட்டுமே உண்டு. தீவிரவாத ஒழிப்பு பிரிவு (ATS) புரோகித்தை விசாரித்தபோது மெக்கா மசூதி குண்டுவெடிப்பிற்கும் ஆர்.டி.எக்ஸ் (RDX) வெடிமருந்தை விநியோகித்ததும் தான்தான் என்று ஒப்புக்கொண்டுள்ளான்.

ஹைதிராபாத் போலீஸ் ஏற்கனவே ஹர்கட்-உல்-ஜிகாதி-இஸ்லாம் என்ற அமைப்புதான் மெக்கா மசூதி குண்டுவெடிப்பினை நடத்தியது என்று அறிவித்துவிட்டதனால், புரோகித் வெடிமருந்து விநியோகித்த உண்மை வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்று ATS அதிகாரிகள் அறிவுறத்தப்பட்டனர்.

அஜ்மீர் சம்பவத்திலும் மெக்கா மசூதி சம்பவத்திலும் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து கலவை ஒன்றுபோலவே இருந்தது என்று மேலே குறிப்பிட்டதை நினைவில்கொள்ளவும்.

4,528 பக்கங்களை கொண்ட மலேகான் வழக்கின் குற்றப்பத்திரிகையில் அபிநவ் பாரத் அமைப்பின் பிரமாண்டமான முழுவடிவமும் அதனோடு சம்பந்தப்பட்டவர்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. “இந்து புனிதத்தளங்களில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு பழிக்குப் பழி வாங்கவேண்டும்” என்றும் “தனி இந்து தேசத்தை” உருவாக்கவேண்டும் என்றும் தொடர் குண்டுவெடிப்பிற்கு திட்டமிட்ட புரோகித்தும், சத்வியும் மற்றவர்களும் தங்களுக்குள் பேசியுள்ளனர்.

அபிநவ் பாரத் என்ற பெயரில் ஒரு அமைப்பு வீர் சாவர்கரால் ஆரம்பிக்கப்பட்டு பின்னாளில் அது கலைக்கப்பட்டது . ஹிமானி சாவர்கர் என்பவனால் 2005-06 ஆண்டுவாக்கில் புனேவில் தற்போதைய அபிநவ் பாரத் என்ற தீவிரவாத அமைப்பு, “தனி இந்து தேசம்” அமைப்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு அரம்பிக்கப்பட்டுள்ளது.

மலேகான் குண்டுவெடிப்புக்கு பின்னணியில் இருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வருவார் என்று நம்பப்பட்ட ஹேமந்த் கர்கரே நினைவாக மலேகானில் ஒரு இடத்திற்கு “கர்கரே சந்திப்பு” என்று பெயரிட்டுள்ளனர். செப்டம்பர் 8, 2006 இல் மலேகானில் நடந்த முதல் குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர், 100க்கும் அதிகமானோர் காயமடந்தனர். வழக்கம் போலவே முஸ்லிம் இளைஞர்கள் (சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ) கைது செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டனர். ஆனால் சமர்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருந்தன.

முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்ட முகமது ஜாஹித், சிமி இயக்கத்தை சேர்ந்தவர்தான் என்றாலும், சம்பவம் நடந்த அன்று மலேகானில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றை தலைமையேற்று நடத்தியிருக்கிறார். சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி சதியில் ஈடுபட்டவர்கள் எவரும் தாடி வைத்திருக்கவில்லை. ஆனால் போலீஸால் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டிருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் பல ஆண்டுகள் வளர்ந்த தாடியுடன் இருந்தனர். அவர்களில் சபீர் மசியுல்லா என்பவர் சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதம் முன்புவரை போலீஸ் காவலில்தான் இருந்துள்ளார்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு சதியில் சம்பந்தப்பட்ட தேவேந்திர குப்தா, ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகன் சுனில் ஜோசி மூலமாக அபிநவ் பாரத் உறுப்பினர்களோடு தொடர்பில் இருந்திருக்கிறான் என்று இராஜஸ்தான் தீவிரவாத ஒழிப்பு படை நம்புகிறது. 2007 செப்டம்பரில் சிமி இயக்கத்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களால் சுனில் ஜோஷி கொல்லப்பட்டபோது ஆத்திரமடைந்த சத்வி, அதற்கு பழிவாங்குவதற்காக 2008 மலேகான் குண்டுவெடிப்பை நடத்தியதாக சொல்கிறது மகாராஷ்ட்ரா ATS.

68 பாகிஸ்தானியர்கள் கொலைசெய்யப்பட்ட சம்ஜாவுதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பில் சுனில் ஜோஷிக்கு தொடர்பிருப்பதாக பெயர் வெளியிடப்படாத சாட்சி ஒருவர் புரோகித்துடன் நடத்திய தொலைபேசி உரையாடலை ஆதாரமாகக் காட்டுகிறது ATS.

இந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது. இன்னும் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் உள்ளன. முக்கியமாக தேடப்பட்டுவரும் இராம்நாராயன் கல்சங்ரா, சுவாமி அசீமானந்த் உட்பட இன்னும் சிலர் சிக்கினால், மேலும் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரலாம். மகாராஸ்ட்ரா , இராஜஸ்தான் விசாரணை அதிகாரிகளின் கூற்றுபடி சத்வியின் மூலம் தேவேந்திர குப்தாவிற்கு அறிமுகமான கல்சங்கரா என்பவன் வெடிகுண்டு தயாரிப்பதில் கில்லாடி என்று சொல்லப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள அனைவரும் சொல்லும் ஒரு பெயர் “கல்சங்கரா” என்பதால், அவனைக் கண்டுபிடிப்பது மிக முக்கியமானது.

அஜ்மீர், மெக்கா மசூதி, மலேகான், சம்ஜாவுதா எக்ஸ்ப்ரஸ் மற்றும் பல குண்டுவெடிப்புகளும் ஒரு பெரிய சதிதிட்டத்தின் சிறு சிறு பகுதிகளே. இந்த சம்பவங்களையெல்லாம் ஒன்று சேர்த்து இதற்குப் பின்னால் இருக்கும் வலைப்பின்னலை சிபிஐ வெளிகொண்டுவந்தால் மட்டுமே, இந்து தீவிரவாதத்தின் முழு உருவமும் நமக்குத் தெரியவரும்.

(Source : Article titled ‘Hindu Terror - Conspiracy of silence’ by Smruti Koppikar, published in ‘The Outlook “, a weekly news magazine, dated July 19, 2010.)
http://www.outlookindia.com/article.aspx?266145
தமிழாக்கம்: பிரபாகரன் prabaharan@keetru.com

Tuesday, July 20, 2010

மனைவியை மகிழ்விப்பது எப்படி ? -இஸ்லாமிய குடும்பம்

(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில்,ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை)

அழகிய வரவேற்பு
வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.


மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி 'முஸாபஹா' செய்யலாம்.

வெளியில் சந்தித்த நல்ல செய்திகளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காகத் தள்ளி வையுங்கள்.

இனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும்
நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.

உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.
தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.
மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்.


நட்பும் இனிய நிகழ்வுகளை மீட்டுதலும்
மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.

நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நீங்களிருவரும் ஆனந்தமாகக் கழித்த அனுபவங்களை இருவரும் தனித்து இருக்கும்பொழுது மீட்டிப் பாருங்களேன்.

விளையாட்டும் கவன ஈர்ப்பும்
நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.

ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, பந்தயஙகளில் ஈடுபடுங்கள். அது விளையாட்டாகவோ, குர்ஆன், நபிமொழி, பொதுஅறிவு போன்ற கல்விகளைக் கற்பதிலோ அல்லது வேலை செய்வதிலோ இருக்கலாம்.

இஸ்லாம் அனுமதித்த விஷயங்களை (விளையாட்டுப் போட்டிகள் போன்றவை...) பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.

இஸ்லாம் அனுமதிக்காத 'பொழுது போக்கு" விஷயங்களில் (சினிமா, ஸீரியல்கள் போன்றவற்றில்) உள்ள தீங்குகளை எடுத்துச் சொல்லி அவற்றை மறக்கடியுங்கள்.

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவ
வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் நோயுற்றோ களைப்படைந்தோ இருந்தால்.

கடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப் படுத்துங்கள்.

இனியவளின் ஆலோசனை
குடும்ப விஷயங்களில் உங்கள் மனைவியுடன் கூடிஆலோசனை செய்யுங்கள்.


அவளிடம் ஆலோசனை செய்யப்பட வேண்டும் என அவள் எதிர்பார்க்கும் சிறப்புத் தருணங்களில் அவளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் (பிள்ளைகளின் திருமண விஷயங்கள் போன்றவை)

மனைவியின் கருத்துக்களை துச்சமாக நினைக்காமல் கவனமாகப் பரிசோதியுங்கள்.

மனைவின் கருத்து சிறந்ததாக இருந்தால் (உங்கள் கருத்தை புறந்தள்ளிவிட்டு) அவளின் கருத்தைத் தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டாதீர்கள்.
ஆலோசனை தந்து உதவியதற்காக அவளுக்கு நன்றி கூறலாம்.


பிறரைக் காணச் செல்லும்பொழுதுமார்க்கத்தில்/பழக்கத்தில் உயர்ந்த பெண்களுடன் தோழமை வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும் உறவினர்களைப் பார்க்கச் செல்வதால் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துங்கள் (பார்க்கச் சென்றவர்களிடம் வீணான பேச்சுக்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்கினால் கண்டியுங்கள்).

அங்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பேணப்படுகின்றனவா என கவனித்துக் கொள்ளுங்கள்.

அவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்துவது நல்லதல்ல.

உங்களின் வெளியூர் பயணத்தின்பொழுது
மனைவிக்குத் தேவையான நல்ல அறிவுரைகளைக் கூறிவிட்டு அழகான முறையில் விடைபெறுங்கள்.
உங்களுக்காக இறைவனிடம் துஆ செய்யச் சொல்லுங்கள்.

நீங்கள் வீட்டில் இல்லாதபொழுது இரத்தபந்த உறவினர்களிடம் அவளுக்குத் தேவையான அவசியமான உதவிகளைச் செய்து தரும்படி கேட்டுக்கொள்ளலாம்.

குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்துச் செல்லுங்கள்.

நீங்கள் வெளியூரில் இருக்கும் நாட்களில் டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக மனைவியுடன் தொடர்பு கொள்ளுங்கள் (பிரிவின்பொழுதுதான் இருவருக்குமே ஒவ்வொருவரின் அருமையும் முழுமையாகப் புரியும். அப்பொழுது இவற்றின் மூலமாக நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வு, உங்களின் பரஸ்பர அன்பை வளர்க்கும்).

முடிந்தவரை சீக்கிரம் ஊர் திரும்ப முயற்சி செய்யுங்கள்.

திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பரிசுப் பொருள்களை வாங்கி வரலாம்.

எதிர்பாராத நேரத்திலோ இரவு நேரத்திலோ வீடு திரும்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (உங்களுக்காக அலங்கரித்துக் கொள்ளாமல் இருப்பது அவளுக்கு சங்டத்தை ஏற்படுத்தும்).

பிரச்சினைகள் எதுவும் வராது என எண்ணினால் மனைவியையும் உடன் அழைத்துச் செல்லலாம்.


பொருளாதார உதவி

கணவன் என்பவன் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்பவனாக இருத்தல் வேண்டும்; மாறாக, கஞ்சத்தனம் செய்யக் கூடாது. (வீண் விரயமும் செய்யக் கூடாது).

அவளுக்கு ஊட்டிவிடும் உணவு முதல் அவளுக்காகச் செய்யும் அவசியச் செலவுகள்வரை அனைத்திற்கும் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

அவசியத் தேவைக்கான பணத்தை உங்களிடம் கேட்பதற்கு முன்னரே கொடுப்பதுதான் சிறந்தது.

அழகும் நறுமணமும்
நபிவழியின்படி அக்குள்முடி மற்றும் மறைவான பகுதியில் உள்ள முடிகளை நீக்கிவிடுவது.

எப்பொழுதும் நேர்த்தியாக அழகுபடுத்திக் கொண்டு சுத்தமாக இருப்பது.

அவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள்.

தாம்பத்யம்
மனைவிக்கு தாம்பத்ய சுகம் கொடுக்க வேண்டியது கணவனின் கடமை என்பதை நினைவில் வையுங்கள் (இருவரில் ஒருவரின் உடல்நலக்குறைவு காரணமாகத் தள்ளிப் போட்டுக் கொள்ளலாம்).

பிஸ்மில்லாஹ் (இறைவனின் திருநாமத்தால்) என்று சொல்லி ஆதாரப்பூர்வமான பிரார்த்தனையைச் (ஷைத்தானின் தீங்கைவிட்டு இறைவனிடம் பிரார்த்தனை) செய்தவாறு ஆரம்பியுங்கள்.

இறைவன் படைத்திருக்கும் இன உறுப்பைத் தவிர்த்து வேறு வகைகளில் இல்லறச் சுகம் அனுபவிக்கக் கூடாது (மலப்பாதையின் வழியாக ஈடுபடுவது ஹராம்).

காதல் வார்த்தைகளுடன் முன்விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.

அவளை திருப்திப்படுத்தும் வரை தொடருங்கள்.

அமைதிக்குப் பிறகு நகைச்சுவையால் அவ்விடத்தைக் கலகலப்பாக்குங்கள்.

மாதவிடாய்க் காலத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடுவது ஹராம் (தடுக்கப்பட்டது).

பெண் என்பவள் அதிகம் வெட்கப்படுபவள். எனவே அவளின் கூச்சத்தை நீக்குவதில் எல்லை கடந்துவிடாதீர்கள்.

மனைவிக்கு விருப்பமற்ற, கஷ்டமான கோணங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.

அவளின் நோய் மற்றும் களைப்படைந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுங்கள்.

இரகசியங்களைப் பாதுகாத்தல்
படுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சினைகள் போன்றவற்றை பிறரிடம் எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தாதீர்கள்.

இறைவனுக்கு கட்டுப்படும் விஷயங்களில் உதவியாக இருப்பது
தஹஜ்ஜத் (இரவு) தொழுகைக்காக இரவின் கடைசிப்பகுதியில் எழுப்புங்கள்.

உங்களுக்குத் தெரிந்த திருக்குர்ஆன் அறிவை அவளுக்கும் போதியுங்கள்.


காலை-மாலை நேரங்களில் ஓதக்கூடிய திக்ரு (இறைநினைவுகளை - நபியவர்கள் காட்டித் தந்தவைகளை மட்டும்) அவளுக்கு போதியுங்கள்.

இறைவனின் பாதையில் செலவு செய்வதற்கு ஆர்வமூட்டுங்கள்.


ஹஜ்/உம்ராவிற்கு (பணம் மற்றும் உடல்) சக்தி பெற்றிருந்தால் அழைத்துச் செல்லுங்கள்.

மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மரியாதை செய்யுங்கள்.

அவளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க அழைத்துச் செல்லுங்கள்.


உங்களின் வீட்டுக்குவர அவர்களுக்கு அழைப்புக் கொடுங்கள். அப்படி வரும்பொழுது அன்புடன் வரவேற்று உபசரியுங்கள்.

அவசியமான தருணங்களில் அவர்களுக்கு ஒத்தாசையாக இருங்கள்.

பொருளாதாரம் மற்றும் உங்களின் சக்திக்குட்பட்ட உதவிகளைச் செய்யுங்கள்.


உங்களுக்கு முன் மனைவி மரணித்துவிட்டால் நபியவர்களின் வழிமுறையைப் பேணி மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மனைவி (உயிருடன் இருக்கும்பொழுது) உதவி செய்ததுபோல் செய்து அன்பு பாராட்டுங்கள்.


இஸ்லாமியப் பயிற்சி
கீழே கொடுக்கப்பட்டவைகளை அறிந்து கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது :

இஸ்லாத்தின் அடிப்படை
அவளின் பணிகள் மற்றும் உரிமைகள்
படித்தல் மற்றும் எழுதுதல்
இஸ்லாமியப் பாடங்களை மற்றும் அதன் நுணுக்கங்களை படிப்பதற்காக ஆர்வமூட்டுவது
பெண்கள் சம்பந்தமான இஸ்லாமிய சட்டங்கள்
வீட்டின் இஸ்லாமிய நூலகத்திற்காக புத்தகங்கள் மற்றும் கேஸட்டுகள் வாங்குவது.

மேன்மையான அக்கறை
வெளியில் போகும்பொழுது இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிந்திருக்கின்றாளா எனக் கவனித்துக் கொள்வது.


மஹரம் அல்லாத ஆண்களின் மத்தியில் கலந்திருப்பதைக் கண்டிப்பது. (அவளின் சிறிய மற்றும் பெரிய தந்தை மகன்களாக இருந்தாலும் சின்னம்மா பெரியம்மா மகன்களாக இருந்தாலும் உங்களின் தம்பியாக இருந்தாலும் தவறுதான்).

அதிகப்படியாகத் துருவி ஆராய்தலைத் தவிர்ந்து கொள்வது
உதாரணமாக, அவளின் ஒவ்வொரு பேச்சிலும் குற்றங்குறைகளை ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள். மனப்பூர்வமாக இல்லாமல் வாய் தவறிக்கூட பிழையாகப் பேசியிருக்கலாம்.

அவசர விஷயத்திற்காக அண்மையில் உள்ள இடங்களுக்குப் போவதைத் தடுக்காதீர்கள். (ஆனால் ஹிஜாப் பேணப்பட வேண்டும்)

தொலைப்பேசிக்கு (நீங்கள் அருகில் இல்லையென்றால்) பதில் அளிப்பதைக் கண்டிக்காதீர்கள். (குழைந்து பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்யுங்கள்)


பொறுமையும் சாந்தமும்

மணவாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் வருவது சாதாரண விஷயம்தான் (வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதுபோல ஒவ்வொரு வீட்டிலும் இவை ஒவ்வொரு உருவத்தில் உலாவருகின்றன). அதிகப்படியான பொறுப்புகளில் உட்படுத்துவதும் சிறிய விஷயங்களைப் பெரிதாக்குவதும் போன்றவைதாம் திருமண பந்தத்தை முறித்துவிடும் அளவுக்குச் சென்று விடுகிறது.

இறைவன் விதித்த வரம்புகளை மீறும்போது கோபம் காட்டப்பட வேண்டும். உதாரணமாக தொழுகையைத் தாமதப்படுத்துதல், புறம் பேசுதல், தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களை டி.வியில் பார்த்தல் இது போன்றவை.

உங்களின் விஷயங்களில் செய்த தவறுகளை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடுங்கள்.

தவறுகளைத் திருத்துதல்
முதலில் (முழுமனதோடு) நல்லுபதேசம் செய்யுங்கள்.


அதிலும் திருந்தாவிட்டால், தாம்பத்யத்தில் ஈடுபடாது கட்டிலில் திரும்பிப் படுத்துக் கொள்ளுங்கள். (உங்களின் கோப உணர்வை இவ்வாறு வெளிப்படுத்துவது) அதற்காக, படுக்கையறையை விட்டு வெளியேறுவதோ, வீட்டைவிட்டு வெளியில் சென்றுவிடுவதோ அல்லது அவளிடம் பேசாமல் இருப்பதோ அல்ல.


அதிலும் திருந்தாவிட்டால், கடைசி முயற்சியாக காயம் ஏற்படாமல் இலேசாக அடிக்கலாம் (அதற்கு அவள் தகுதியானவளாக இருந்தால் மட்டும்).


மனைவியை அடிப்பது நபிவழியில் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்றும் நபியவர்கள் மனைவியை அடிப்பவர்களாக இருக்கவில்லை என்பதையும் ஒவ்வொரு கணவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மனைவி (எந்தக் காரணமும் இன்றி தாம்பத்தியத்திற்கு மறுத்தல், தொடர்ந்து தொழுகையை அதன் நேரத்தில் தொழாமல் இருத்தல், கணவனின் அனுமதியின்றி வீட்டைவிட்டு அதிக நேரத்திற்கு வெளியில் செல்லுதல் அல்லது எங்கே சென்றிருந்தாள் என்பதைக் கணவனுக்குச் சொல்ல மறுத்தல் இது போன்ற விஷயங்களில்) கட்டுப்பட மறுத்தால் கணவர் இந்த அனுமதியைப் பயன்படுத்தலாம்.

குர்ஆனில் (4வது அத்தியாயம் 34-ம் வசனத்தில்) கூறப்பட்டதுபோல் அவளுக்கு நல்லுபதேசம் செய்து படுக்கையிலிருந்து விலக்கி அதில் திருந்தாவிட்டால்தான் அடிக்கும் அனுமதியை கணவர் பயன்படுத்தலாம்.

காயம் உண்டாகும்படியோ முகத்திலோ மற்றும் மென்மையான பகுதியிலோ அடிக்கக் கூடாது.


செருப்பினால் அடிப்பது போன்ற மானபங்கப்படுத்தும் செயல்களில் ஒருக்காலும் ஈடுபடக் கூடாது.

மன்னிப்பும் கண்டிப்பும்
பெரிய தவறுகளை மட்டும் கணக்கில் எடுங்கள்.

உங்களின் விஷயத்தில் தவறு செய்தால் மன்னித்துவிடுங்கள். இறைவனின் விஷயங்களில் தவறு செய்தால் கண்டிக்கத் தவறாதீர்கள்.

தவறு செய்யக்கூடிய நேரங்களில் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மற்றும் அவளின் நற்பண்புகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் (உங்களின் கோபம் குறையலாம்).


எல்லா மனிதர்களும் தவறு செய்யக்கூடியவர்கள்தாம். எனவே மன்னிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். (மனச்சோர்வு, களைப்பு, மாதவிடாய் போன்றவற்றின் மன-உடல் உளைச்சல்களினால் தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு).

சமையல் சரியில்லை என்ற காரணத்திற்காக மனைவியைக் கடிந்து கொள்ளாதீர்கள். நபியவர்கள் சமையல் விஷயத்திற்காக மனைவியைக் கண்டித்ததே இல்லை. பிடித்தால் சாப்பிடுவார்கள், பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் இருந்துவிடுவார்கள்; தவிர எந்த விமர்சனமும் செய்ய மாட்டார்கள்.

தவறுகளை நேரிடையாக அவளிடம் வெளிப்படுத்துவதற்குமுன் வேறுவழியில் நயமாகச் சுட்டிக்காட்டுங்கள். ஏனென்றால் சில நேரத்தில் இது பயனுள்ளதாக இருக்கும்.

அவமரியாதை செய்யக்கூடிய வகையில் மனைவியைத் திட்டுவதைத் தவிர்ந்துக் கொள்ளுங்கள்.

பிரச்சினை பேசி தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்தால், தனிமை கிடைக்கும்வரை பொருத்திருங்கள்.

மனைவிமீது கோபம் ஏற்பட்டால், உங்களை சரியான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவற்காக கோபம் குறையும்வரை சற்றுப் பொறுமை கொள்ளுங்கள்.

உங்கள் இல்லறம் இனிமையாத் தொடர நல்வாழ்த்துகள்!


நன்றி :சகோதரி புதைனா.

Sunday, July 18, 2010

ஆக்டோபஸ் குறியும் கூத்தாட்டமும்? நவீன முட்டாள்கள்தனம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

2010ம் ஆண்டு ஜுன்-ஜுலை மாதங்களின் இடையே நடைபெற்ற உலக கால்பந்தாட்ட போட்டிகளில் பல்வேறு நாட்டு அணிகள் கலந்துக்கொண்டன இந்த போட்டிகளை உலகத்தில் பல கோடி மக்களும் கண்டு களித்தனர் ஆனால் இந்த உலகக் கோப்பை போட்டிகளை மையமாக வைத்து ஆன்லைன் சூதாட்டக்காரர்களும், குறி சொல்லும் சோதிடர்களும் தங்கள் பிழைப்பை ஓட்டிக்கொண்டனர் அவர்களின் வரிசையில் ஆக்டோபஸ் சோதிடம் மிகவும் பேசப்பட்டது உண்மையில் ஆக்டோபஸ் குறி சொல்லுமா? ஆக்டோபஸ்களை வைத்து குறி பார்க்கும் நவீன சோதிடக்காரர்களுக்கு இதோ சவுக்கடி!

ஆக்டோபஸ் என்றால் என்ன?

எட்டு கால்களும் அதன் நடுவில் வட்ட வடிவமான தலையை கொண்ட ஒருவகை நீர்வாழ் உயிரினத்திற்கு ஆக்டோபஸ் என்று பெயர். இந்த ஆக்டோபஸ் குறைந்தபட்சம் 2 அடி முதல் அதிகபட்சமாக 18 அடி நீளம் வரை வளரும். பொதுவாக நடுத்தர வகை ஆக்டோபஸ்கள் மத்திய தரைக்கடல் பகுதியிலும் பசுபிக் பெருங்கடலிலும் வாழ்கின்றன.

ஆக்டோபஸ் எவ்வாறு உணவு உட்கொள்கிறது?

இந்த ஆக்டோபஸ்-ன் ஒவ்வொரு காலிலும் ஊறிஞ்சு குழாய்கள் காணப்படுகின்றன மொத்தமாக ஒவ்வொரு ஆக்டோபஸின் உடலிலும் 240 ஊறிஞ்சும் குழாய்கள் ஆங்காங்கே பரவி காணப்படுகின்றன. இந்த உறிஞ்சு குழாய்கள் இறையை இலாவகமாக பிடித்து வாய்ப்பகுதிக்குள் தள்ளுவதற்கு பயன்படுகிறது.

ஆக்டோபஸ் எவ்வாறு இடம் பெயர்ந்து செல்கிறது?

ஆக்டோபஸ் என்ற உயிரினத்தின் 8 கால்களிலும் ஒருவகையான உறிஞ்சு குழாய்கள் இருப்பதை மேலே படித்தீர்கள் இந்த உறிஞ்சு குழாய்கள் உணவை கவ்வி பிடிப்பதற்கு மட்டுமல்லாது கடலுக்கு அடியில் காணப்படும் பெரிய பாறைகளை கவ்வி பிடித்து இலாவகமாக நகர்வதற்கும் பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இது கடலின் மணல் திட்டுக்களை உறிஞ்சு குழாய்கள் உதவியால் பிடித்துக்கொண்டு நகர்ந்தும் செல்கிறது.


ஆக்டோபஸ்-ன் தற்காப்பு கலை:

ஆக்டோபஸ் என்ற உயிரினம் அதிபுத்திசாலி உயிரினங்களின் வரிசையில் இடம்பெறுகிறது அதற்கான காரணம் இது தன்னை பிற உயிரினங்களின் தற்காத்துக்கொள்ளும் விதத்தை வைத்து அறிந்துக கொள்ளலாம்.

இந்த ஆக்டோபஸ்கள் மணல் திட்டுக்களில் காணப்படும் சிறு பாறைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கியோ அல்லது மணல் குகைகளை அமைத்தோ அதற்குள் பதுங்கிக்கொண்டு எந்த விலங்கினமும் தன்னை நெருங்காத வண்ணம் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்கிறது.


மேலும் இதன் வயிறுகளிலிருந்து ஒருவகையான கருமை நிறமுடைய திரவம் வெளிப்படுகிறது அது தன்னை தாக்க வரும் உயிரினத்தின் எதிரில் எச்சரிகை விடுத்து அந்த உயிரினத்தை தன்னிடமிருந்து விரட்டியடிக்க பயன்படுத்துகிறது.


அதுமட்டுமின்றி இந்த ஆக்டோபஸ் உயிரினங்கள் பச்சோந்திகளைப் போன்று அவ்வப்போது தங்கள் நிறங்களை மாற்றிக் கொள்கிறது. இந்த நிகழ்வு அந்த ஆக்டோபஸ்-ன் உள்ளுணர்வு மாற்றங்கள், சுற்றுப்புற சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் நிகழ்கிறது. மேலும் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள இந்த ஆக்டோபஸ்கள் நாடினால் அருகிலுள்ள கடல் பாறைகளின் நிறத்தை சில நிமிடங்களில் தேர்ந்தேடுத்துக் கொண்டு எதிரியை திக்குமுக்காட வைத்துவிடுகிறதாம்.


ஆக்டோபஸும் அதன் இனப் பெருக்கமும்

ஆக்டோபஸ் இடும் முட்டைகள்

ஆக்டோபஸ் என்ற உயிரினத்திலும் ஆண் பெண் என்ற இரண்டு வகை உண்டு இந்த இரண்டுமே தன் இனப்பெருக்கத்திற்கான உணர்வுகளை கொண்டிருக்கும். ஒவ்வொரு ஆக்டோபஸும் பிறந்த 5வது மாதத்திலேயே இனப்பெருக்கத்திற்கு தயாராகி விடுகின்றன என்று ஆராய்ச்சியானர்கள் கூறுகின்றனர்.

ஆண் ஆக்டோபஸின் உடலில் உள்ள ஒரு கால் பகுதியில் SPERM எனப்படும் ஒருவகை விந்து அணுக்களுகளை பெற்றுள்ளன இதை SPERMATOPHORES என்று வல்லுநர்கள் அழைக்கின்றனர். இந்த விந்து அணுக்கள் பெண் ஆக்டோபஸின் MANTLE CAVITY என்ற பகுதிக்குள் செலுத்தப்பட்டு அதை சூளுரச் செய்கிறது. பெண் ஆக்டோபஸ் சூள் கொண்ட பின் 1/8 இஞ்ச் கொண்ட முட்டைகளை இடுகிறது. இந்த பெண் ஆக்டோபஸ்கள் சுமார் 100,000 முட்டைகளை இடும் திறன் கொண்டவைகளாக திகழ்கின்றன. இறுதியாக 4 முதல் 8 வாரங்கள் இந்த பெண் ஆக்டோபஸ் கோழிகளை போன்று அடைகாக்கின்றன பின்னர் ஆக்டோபஸ் குஞ்சுகள் முட்டைகளிலிருந்து வெளிவரத்து துவங்குகின்றன.

ஆக்டோபஸ்களின் வாழ்நாள் எவ்வளவு?

இன்றைய நவீன உலகத்தில் உலா வரும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆக்டோபஸ்களின் வாழக்கை முறையை உண்ணிப்பாக கவனித்த வந்தாலும் அதன் வாழ்நாளை பொருத்தவரை இன்னும் ஆராய்ச்சியின் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளனர் காரணம் அதுபற்றிய உண்மைகளை இன்னும் அவர்களால் முழுவதுமாக ஆராய முடியவில்லை.

இந்த ஆக்டோபஸ்கள் உத்தேசமாக பிறந்து ஒருவருடம் வாழ்ந்து மரணித்துவிடும் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள் இதற்கு இவர்கள் முன்வைக்கும் வாதம் ஆக்டோபஸ்கள் பிறந்த 5 மாதத்தில் தங்கள் இனப்பெருக்க உணர்வுகளை எட்டுவதுதான். அதே சமயம் ஆக்டோபஸ்கள் விகாரணமான உடல் அமைப்பை கொண்டுள்ளதால் அதன் மரணம் அதன் உடலமைப்பை கொண்டு அமையலாம் என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர்.

ஆக்டோபஸ்- குறி கேட்பது பாவமான காரியமாகும்

ஆழ்கடல் நீரோட்டங்களில் அழகாக தன் ஜோடியுடன் சுந்திரமாக உலவிக்கொண்டு திரியும் ஆக்டோபஸ்களை பிடித்து அவைகளை கண்ணாடி நீர்த்தொட்டிகளில் வைத்து காட்சிப் பொருளாக பார்த்து ரசிப்பது அசிங்கமான செயலாகும். ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை பற்றி குரள் எழுப்பும் நாம் அழகான விலங்கினங்களையும் பறவை, நீர் வாழ் மற்றும் இன்ன பிற உயிரினங்களின் உரிமையையும் பரிக்க முற்படலாமா?

மேலும் கால்பந்தாட்டத்தில் இந்த அணி வெல்லுமா? அந்த அணி வெல்லுமா என்று என்று சோதிடம் பார்ப்பதற்காக இரண்டு தொட்டிகளில் ஆக்டோபஸ்களின் உணவை வைத்துவிட்டு அந்த கண்ணாடி தொட்டிகளுக்கு வெளியே இரண்டு அணிகளின் தேசிய கொடியை ஒட்டி ஆக்டோபஸ் எந்த தொட்டியின் உணவை சாப்பிடுகிறதோ அந்த அணி வெற்றி பெரும் என்று சோதிடம் கணிக்கிறார்களே இது கேவலமான காரியமாக தென்பட வில்லையா?

பகுத்தறிவை கொண்டுள்ள மனிதன் போயும் போயும் ஆக்டோபஸ்கள், கிளிகள், பறவைகளிடம் மற்றும் வாண்மண்டல கோள்கள் ஆகியவற்றிடம் குறி கேட்பது மனித இனத்திற்கே அசிங்கமான செயலாகும்! இந்த செயல் எவ்வாறு உள்ளதென்றால் அதற்கான உதாரணம் இதோ

துள்ளிக்குதிக்கும் மான்கள் நிறைந்த சோலையில் நான்கு சிங்கங்கள் அமர்ந்துக்கொண்டு இப்போது மான்களை வேட்டையாடினால் வெற்றி கிடைக்குமா? வெற்றி கிடைக்காதா? என்று பேசிக்கொள்ளுமாம் அதற்கு ஒரு முட்டாள் சிங்கம் அருகில் ஊர்ந்துக்கொண்டு செல்லும் நத்தையை பிடித்து மரக்கிளையில் வைக்குமாம் பிறகு அந்த முட்டாள் சிங்கம் கூறுமாம் நத்தை மரத்திலிருந்து கீழே விழுந்தால் நம்முடைய மான் வேட்டையில் வெற்றி கிடைக்கும் நத்தை மரத்திலிருந்து கீழே விழாமல் இருந்தால் நமக்கு தோல்வி நிச்சயம் என்று குறி கூறுமாம். இந்த முட்டாள் சிங்கத்தின் வார்த்தைக்கு மயங்கி மற்ற 3 சிங்கங்களும் மான் வேட்டைக்காக நத்தையை உற்று நோக்கிக்கொண்டே மான்களை தொலைத்துவிடுமாம்!


ஆக்டோபஸ்களை வைத்து குறி பார்க்கும் மடையர்களே!


ஆக்டோபஸ் சோதிடம்

கால்பந்தாட்டத்திற்காக ஆக்டோபஸ்களை நீங்கள் பயன் படுத்தினீர்கள் இதோ இந்தவகை குறி பார்க்கும் ஒரு சுவாரஸ்யமான போட்டியை நடத்த உங்களால் இயலுமா? இதோ அந்த போட்டி

இரண்டு அணிகளை தேர்ந்தேடுங்கள் ஒரு அணி வீரர்களிடம் பழைய ரக துப்பாக்கிகளை கொடுத்துவிடுங்கள் மற்றொரு அணி வீரர்களிடம் நவீன ரக துப்பாக்கிகளை கொடுத்து விடுங்கள் பிறகு இரண்டு நீர்த்தொட்டிகளில் ஆக்டோபஸ் உணவை வைத்துவிட்டு அந்த தொட்டிகளின் வெளியே இரு அணிகளின் சின்னங்களை ஒட்டிவிடுங்கள் இப்போது ஆக்டோபஸ் உயிரினத்தை அந்த தொட்டிக்கு அருகே வைத்துவிடுங்கள் அணி 1-ல் உள்ள தொட்டியின் உணவை ஆக்டோபஸ் சாப்பிட்டால் உங்களை அணி 1 பழைய ரக துப்பாக்கியால் சுடும் அல்லது அணி 2-ல் உள்ள தொட்டியின் உணவை ஆக்டோபஸ் உண்டுவிட்டால் உங்களை அந்த அணியினர் நவீன ரக துப்பாக்கியால் சுடுவார்கள்! ஆக்டோபஸ் உயிரினத்திடம் குறி கேட்கும் மடையர்களே இது உதாரணத்திற்காகத்தான் கூறப்பட்டது இதற்கும் துணிந்துவிடாதீர்கள்!


ஆக்டோபஸ் குறியின் மூலம் குறிப்பிட்ட அணிக்கு வெற்றி எவ்வாறு கிடைத்தது!

இதோ அடுக்கான காரணங்கள்!
1.ஒவ்வொரு அணியின் சார்பாக விளையாடும் வீரர்கள் மனிதர்கள்தான்.
2.ஒவ்வொரு மனிதனும் பலவீனமானவன் எளிதில் நம்பிவிடுவான்
3.கால்பந்தாட்ட வீரர்கள் நிற்பது இலட்சம் பேர் கூடியுள்ள மைதானித்தில்
4.கால்பந்தாட்ட வீரர்களின் குறிக்கோள் நன்றாக விளையாட வேண்டும் என்பதே
தன் அணிக்காக கோள் அடிக்க தவறினால் தன்னுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்ற பதற்றமும், அணியின் கோச் கேவலமாக திட்டுவார் என்ற பயமும் ஒவ்வொரு அணி வீரனிடமும் இருக்கும்!

5.தன் ஆட்டத்திறன் எடுபடவில்லையென்றால் சொந்த நாட்டில் முகம் காட்ட இயலாது என்ற வெட்க உணர்வும் ஒவ்வொரு வீரனுக்கும் இருக்கும்!
தனது அணி தோற்றுவிட்டால் பணத்தை வாங்கிக்கொண்டார்களோ என்ற அவதூறு பட்டம் கிடைத்துவிடுமே என்ற பயமும் ஒரு பக்கம் இருக்கும்!

6.30 வருடங்களாக எடுத்த கடுமையான பயிற்சி தோல்வியில் முடிந்தால் தன்னுடைய முயற்சிகள் வீனாகிவிடுமே என்ற பதற்றம் நெஞ்சை பிளக்கும்
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆக்டோபஸ்களை வைத்து குறி சொல்லி விளையாட விருக்கும் இரு அணியில் ஒரு அணி நிச்சயம் தோற்று போய்விடும் என்று கூறினால் அவ்வாறு அடையாளம் காட்டப்பட்ட விளையாட்டு வீரர்களால் எவ்வாறு ஜீரணிக்க இயலும் இது விளையாட்டு துரோகமில்லையா? இதனால் மேற்கூறப்பட்ட பதற்றம் இன்னும் அதிகமாக கூடி அந்த விளையாட்டு வீரர்களின் மனநிலை பாதிக்கப்பட்டு கோல் அடிக்கும் எண்ணம் வருமா? அல்லது நம் அணி ஆக்டோபஸ் குறி போல் தோற்றுவிடுமா என்ற பயம் வருமா?


இதோ சுய பரிசோதனை செய்து பாருங்கள்


காலையில் உங்கள் நண்பர்களோடு வாக்கிங் செல்வீர்கள் அப்போது யார் முதலில் வருவார் என்று போட்டி கூட வரும் அப்போது உங்கள் பின்னால் ஒருவன் நின்றுக்கொண்டு நீங்கள் ஓட்டப்பந்தயத்தில் தோற்றுவிடுவீர்கள் என்று கூறினால் உங்களுக்கு எரிச்சல் வருமா? ஓட்டத்தில் கவனம் வருமா? அல்லது உங்கள் கவனம் சிதறுமா?

இதோ இஸ்லாம் கூறும் அறிவுரைகளை கேளுங்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்” என்று சொன்னார்கள். மக்கள், ”நற்குறி என்பதென்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ”அது நீங்கள் செவியுறும் நல்ல (இனிய) சொல்லாகும்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி). நூல்: புகாரி (5754)

பசியால் சாகும் வரை ஒரு பூனையை அடைத்து வைத்திருந்த பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டு நரகத்தினுள் நுழைந்தாள், நீ அந்த பூனையை அடைத்து வைத்திருந்த போது தண்ணீர் புகட்டவுமில்லை, உணவு கொடுக்கவுமில்லை, இன்னும் அதை விட்டுவிடவுமில்லை, (அப்படி அதை அவிழ்த்து) விட்டடிருந்தால் அது பூமியிலுள்ள புழுப்பூச்சிக்களை உண்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

முஃமின்களே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சி நடந்து கொள்வீர்களானால், உங்களுக்கு (நன்மை-தீமையைப்) பகுத்தறியும் தன்மையை அவன் அளித்து, உங்களுடைய தீமைகளை உங்களை விட்டும் அகற்றி, இன்னும் உங்க(ளுடைய பாவங்க)ளை மன்னிப்பான் (ஏனெனில்) அல்லாஹ் மகத்தான கருணை உடையவன். (குர்ஆன் 8:29)


அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டீனால் அவனால் அதைப் பார்க்க முடியாது எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை. (அல்குர்ஆன் 24:40)


அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

அல்ஹம்துலில்லாஹ்!

நன்றி :http://islamicparadise.wordpress.com/

Friday, July 16, 2010

அப்பாடா ....!!!??? கோழி - முட்டை கேள்விக்கு விடை கிடைத்தது !!!

அப்பாடா ....!!!???

கோழி வந்ததா? முதலில் முட்டை வந்ததா?என்ற கேள்வி, இது வரை யாராலுமே விஞ்ஞான பூர்வமாக பதில் அளிக்க முடியாதா ஒரு கேள்வியாக இருந்தது.

கோழியில் இருந்து தான் முட்டை வந்தது என்றால் கோழி எப்படி வந்தது என்பார்கள் ... இல்லை முட்டையில் இருந்து தான் கோழி வந்தது என்றால் முட்டை எப்படி வந்தது என்பார்கள் ..

ஆனால், தற்போது இந்தக் கேள்விக்கு விடை கிடைத்துள்ளதாம். இது குறித்து,
இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு இதற்கான விடையினை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் ஆய்வின் முடிவாக, கோழிலிருந்துதான் முட்டை வந்தது என்று உறுதி செய்துள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்டு, வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இது பற்றி ஆய்வு நடத்தினார்கள். விஞ்ஞானிகள், முட்டையின் செல்களை சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்தனர்.

அதில் முட்டையின் செல்கள் வோக்லெடின்-17 என்ற புரோட்டின் மூலம் உருவாகி இருந்தது. இந்த வோக்லெடின்-17 செல் கோழியின் உடலில் இருப்பதாகும். அதுதான் முட்டையாக மாறி இருக்கிறது. இந்த வோக்லெடின்-17 புரோட்டின், கிறிஸ்டல், நியூகிளீசாக மாறி தானாக வளர்ச்சி பெற்று முட்டை செல்களாக மாறுவது இதன் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது. எனவே, கோழியில் இருந்துதான் முட்டை வந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அவங்க என்ன சொன்னாலும் நாங்க அந்த முட்டை ,கோழி மேட்டரை விடமாடோம் என்று நீங்கள் சொல்வது புரிகிறது ...

Wednesday, July 14, 2010

ஒரு குத்துச்சண்டை வீரரின் அழுகை ! - உள்ளத்தை துளைத்த இஸ்லாம்

அமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உம்ரா பயணத்திற்காகக் கடந்த ஞாயிறன்று (04-07-2010) சவூதிக்குச் சென்றுள்ளார். இஸ்லாத்தை அவர் ஏற்றபின்பு தன் பெயரை, மாலிக் அப்துல் அஜீஸ் என்று மாற்றிக் கொண்டார்.

இதேபோன்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் மைக் டைசனின் முன்மாதிரி வீரராகத் திகழ்ந்த முஹம்மது அலீயும் இஸ்லாத்தை ஏற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. காஸியஸ் மார்ஸெலஸ் க்ளே என்ற பெயரை இஸ்லாத்தை ஏற்றவுடன் முஹம்மத் அலீ என்று மாற்றிக் கொண்டிருந்தார் அவர்.

உம்ரா பயணத்திற்கு வந்திருந்த மைக் டைஸன், மதீனாவில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கும் வருகை தந்தார். அவரது வருகையின்போது இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத் தலைவர் டாக்டர் முஹம்மத் அல் ஒக்லா மற்றும் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பயிலும் அமெரிக்க மாணவர்களைச் சந்தித்தார்.

நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசல் அருகில் மைக் டைசன் தங்கியிருந்த இடத்திலும் அவரைக் காண்பதற்குப் பெருங்கூட்டம் அலைமோதியது.


"என்னுடைய ரசிகர்கள் சவூதியில் இத்தனை பேர் இருப்பதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! என்றாலும், இறை இல்லத்தை தரிசிக்கவும் என்னுடைய இறைவழிபாடுகளை அமைதியான முறையில் நிறைவேற்றவும் இடையூறு செய்யாமல் என்னைத் தனித்து விடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார் டைசன்.

"இறை இல்லங்களை நேரில் தரிசிக்கையில் என்னால் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை" என்பதே அவரின் தொடர்ச்சியான கூற்றாக இருந்தது.

மைக் டைசனின் உம்ரா பயணத்திற்கான ஏற்பாடுகளை சவூதியில் உள்ள கனேடியன் தஃவா அஸோசியேஷன் அமைப்பின் தலைவரான ஷெஹஜாத் முஹம்மத் அவர்கள் செய்துள்ளார்கள்.


"ஓய்வு பெற்ற குத்துச் சண்டை வீரர் என்றாலும் இன்னும் பிரபலமான நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் மைக் டைசன், எவ்வித ஆரவாரமும் இன்றி மிக எளிமையாக, மக்காவில் மற்ற உம்ராப் பயணிகளுடன் இரண்டறக் கலந்து பலமணி நேரம் தொடர்ச்சியாக தொழுதும், குர்ஆன் ஓதியும், பிரார்த்தித்தவாறும் அவரது உம்ராவை அமைதியாக நிறைவேற்றினார்" என்றார் ஷெஹஜாத்.

"மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் அடங்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகில் நின்று தன் கைகளை உயர்த்தி இறைவனிடம் பிரார்த்தித்தவாறு டைசன் அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கதறி அழுது துஆ கேட்டுக் கொண்டிருந்தது எங்களுக்கெல்லாம் மிகுந்த நெகிழ்ச்சியைத் தந்தது" என்கிறார் ஷெஹஜாத்.

மைக் டைசன் என்ற மாலிக் அப்துல் அஸீஸின் வாழ்க்கை, இந்தப் புனிதப் பயணத்திற்குப் பின்னர் இறைவழியில் புத்துணர்ச்சியுடன் பயணிக்க நாம் பிரார்த்திப்போமாக !


நன்றி : சத்தியமார்க்கம்.காம்

Monday, July 12, 2010

இஸ்லாமியர்களின் இதழியல் பணி - தொகுப்பு

இஸ்லாமிய தமிழ் அறிஞர்களும் வியத்தகு முறையில் இதழியல் பணியாற்றி உள்ளனர். இஸ்லாமிய அறிஞர்கள் தமிழ் அறிஞர்களுக்கு இணையாக தமிழ் இதழியல் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர் என்பதை கீழ்க்கண்ட இதழ்கள் விவரம் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

1873 புதினாலங்காரி - நெயினார் மரைக்காயர்-வாப்பு மரைக்காயர் -கொழும்பு மாதஇதழ்.

1879 இஸ்லாம் மித்திரன் - எல்.எம். உதுமான் - இலங்கை.

1882 முஸ்லிம் நேசன் - சித்தி லெப்பை மரைக்காயர் இலங்கை வார இருமுறை.

1887-88 ஞானசூரியன் - ஷேகு மக்தூம் சாயபு.

1887-88 தங்கை நேசன் - ஷேகு மக்தூம் சாயபு.

1888 ஞானாசிரியன் - மலேசியா நாளிதழ்.

1888 உலக நேசன் - சித்தி லெப்பை மரைக்காயர் கொழும்பு வார இதழ்.

1888 வித்தியாவிசாரிணி - குலாம் காதிரு நாவலர் நாகூர் வார இதழ்.

1888 சிங்கை நேசன் - பினாங்கு மாதஇதழ்.

1888 விஜயகேதனன் - குலாம் காதிரு நாவலர் பினாங்கு மாதஇதழ்.

1888 சம்சுல் இஸ்லாம் - முஹம்மது யுஸுப் - சென்னை மாதஇதழ்.

1892 ஞான தீபம் - சித்தி லெப்பை மரைக்காயர் இலங்கை மாதஇதழ்.

1893 இஸ்லாம் மித்திரன் - இலங்கை.

நவயுகம் - இலங்கை.

இஸ்லாமியத் தாரகை - இலங்கை.

1900 அஸ்ஸபாப் - ஐ.எல்.எம். அப்துல் அஜீஸ் - இலங்கை.

1906 லிவாயுள் இஸ்லாம் - ரவண சமுத்திரம். முஹம்மது கௌஸ்
ஹாஜி. சுழனி பக்கிர் ஆலிம் - சென்னை நாளிதழ்.

1907 முஸ்லிம் நேசன் - சென்னை வார இதழ்.

1907 ஸைபுல் இஸ்லாம் - மௌலவி அஹ்மத் சயித் - பர்மா வார இதழ்.

1908 முஸ்லிம் தூதன் - ஹாஜி. சாகுல் ஹமிது - சென்னை வார இதழ்.

1909 இஸ்லாம் நேசன் - சுல்தான் சயீது அஹ்மத் - சென்னை ராவ்தர் மாத இதழ்.

1910 அஜாயிபுல் அலம் - ந. அ. மௌலி. முஹம்மது - வலுந்தூர் தாகிர் மாதஇதழ்.

1914 வஜிருல் இஸ்லாம் - முஹம்மது அப்துல்லா - பர்மா.

1916 ஸைபுல் இஸ்லாம் - மௌலவி அஹ்மத் சயீத் - வேலூர்.

1918 தொண்டன் - சென்னை வார இதழ்.

1919 முஸ்லிம் சங்க கமலா - ஹாஜி. பா. தாவூத் ஷா - நாச்சியார் கோவில் மாதஇதழ்.

1920 அல் கலாம் - ஹாஜி. பா. தாவூத் ஷா - நாச்சியார் கோவில் மாதஇதழ்.

1920 அல் கலாம் - ஹாஜி. பா. தாவூத் ஷா - சென்னை மாதஇதழ்.

1923 இஸ்லாம் - ஹாஜி. மௌலவி முஹம்மது லால்பேட்டை மாதஇதழ்.

1924 வஜிருல் இஸ்லாம் - முஹம்மது அப்துல்லா - கூத்தநல்லூர் மாதஇதழ்.

1925 அல் இஸ்லாம் அபுல் ஹுதா - திருச்சி மாதஇதழ்.

1926 முஹம்மது இஸ்மாயில் காயல்பட்டினம் மாதஇதழ்.

1926 முசல்மான் முஹம்மது அப்துல் காதர் - தென்காசி மாதஇதழ்.

1926 தூதன் - இலங்கை மாதஇதழ்.

1926 தாஜுல் இஸ்லாம் - மௌலவி. முஹம்மது - ஈரோடு - மாதஇதழ்.

1928 சம்சுல் இஸ்லாம் கா. பா. முஹம்மது இஸ்மாயில் - (பர்மா) - சென்னை மாதஇதழ்

1929 ஹிபாஜதுள் இஸ்லாம் - மௌலவி அப்துல் காதர்.

தப்லிகுள் இஸ்லாம் - மௌலவி மூசா - ஈரோடு-மாதஇதழ்.

அல் ஹிதாயா - முஹம்மது இஸ்மாயில் -ஈரோடு-மாதஇதழ்.

அல் ஹிதாயா - முஹம்மது இஸ்மாயில் -காயல்பட்டினம்-மாதஇதழ்.

1930 தினத்தபால் - க.அ. மீரான் மொய்தீன் - நாளிதழ் - இலங்கை.

1930 ஹக்குல் இஸ்லாம் - ஹாஜி ஹாபிஸ் முஹம்மது அப்துல் காதிர்

1931 சம்சுல் ஹுதா - யுஸுப் பாவலர் - மன்னார்குடி மாதஇதழ்

1932 தேசநேசன் - மலேசியா நாளிதழ்.

1932 முஸ்லிம் மித்திரன் - மாதஇதழ் - கொழும்பு - இலங்கை.

1932 முஸ்லிம் நண்பன் - இப்ராகிம் (பர்மா) வாரஇதழ்

1934 முஸ்லிம் பாதுகாவலன் - சாகுல் ஹமிட் - சென்னை மாதஇதழ்.

1934 தேகசேவகம் - தாவூத் ஷா - சென்னை வாரஇதழ்.

1934 முஸ்லிம் பாதுக்காவலன் - எம்.ஏ. சாகுல் ஹமிட் - சென்னை மாதஇதழ்.

1934 பத்ஹுல் இஸ்லாம் - எம்.ஏ. சாகுல் ஹமிட் - சென்னை மாதஇதழ்.

1935 சாந்தி - ஹாஜி. குலாம் - திருச்சி மாதஇதழ்.

1935 அரங்க வர்த்தமானி (பர்மா நாளிதழ்).

1936 இஸ்லாமிய பிரசங்கநேசன் - சென்னை மாதம் இருமுறை.

1936 முஸ்லிம் எம்.எஸ். அப்துல் மஜீத் - சென்னை மாதம் இருமுறை.

1936 இந்திய ஒளி - கே. ஏ. ஹமிது - திருச்சி வாரஇதழ்.

1936 உதய சூரியன் - அறிஞர் கரீம்கனி - பர்மா வாரஇதழ் மற்றும் 1942
இல மலேசியா பதிப்பு.

1938 லீடெர் கே.ஏ. ஹமிது - திருச்சி வாரஇதழ்.

1939 சமரசம் - மௌலவி அப்துல் ஹசனத் குத்புதீன்.

1939 தோழன் - கே. ஏ. ஹமிது - திருச்சி வாரஇதழ்.

1939 நூருல் இஸ்லாம் - மௌலவி ஹபிழ் - திருச்சி வாரஇதழ்.

ஏ. என்.முஹம்மது யுஸுப் -சென்னை மாதஇதழ்(பிறகு வாரஇதழ்).

1939 முஸ்லிம் லீக் - முஹம்மது இப்ராகிம் (பர்மா) சென்னை மாதஇதழ்.

1940 காம்ரடு - கே. ஏ. ஹமிது - திருச்சி மாதம் இருமுறை.

1940 தொண்டன் - எம்.கே.எம். இப்ராகிம் - பர்மா நாளிதழ்.

1940 மலேயா நண்பன் - அப்துல் அஜீஸ் - சிங்கப்பூர் சவுத்
முஸ்லிம் இந்தியன் பிரஸ் லிமிடெட்.

1944 பால்யன் - உ. அ. ஹனிபா - காரைக்கால் - வாரஇதழ்.

1945 வானொலி - உ. முகைதீன் அப்துல் காதர் - காரைக்கால் -மாதஇதழ்.

1945 அல் இல்ம் - மௌலவி. அப்துல் ரஜாக் ஜமாலி - இலங்கை.

1945-46 ஜிந்தாபாத் - சி.நெ.அ. முஹம்மது அன்வர் - அடியக்கமங்கலம்.

1946 இஸ்லாமியத் தாரகை - கே. எம்.எம் . ஸாலிஹ் - இலங்கை.

முஸ்லிம் லங்கா - எம்.எம். அப்துல் காதர் - இலங்கை.

தோழன் - எஸ். எம் . முகைதீன் - இலங்கை.

1947
எழுத்தாணி - பத்துபகாட்.

1949 சமுதாயம் - எஸ். எம். ஹனிபா (கல்ஹினை) - இலங்கை.

1950 தூதன்.

1950 களஞ்சியம்.

1954 முன்னேற்ற முழக்கம் - எச்.எஸ். பக்ருதீன் - இலங்கை.

1955 தமிழ் முழக்கம் - கவிஞர். கா.மு. ஷெரிப் - மாதம் இருமுறை.

1957 அபியுக்தன் - எச். எம். பி. முகைதீன் - இலங்கை.

இன்ஸான் எ.எ. லத்திப் - இலங்கை.

தாரகை - எச். எம். பி. முகைதீன் - இலங்கை.

உம்மத் - எச். எம். பி. முகைதீன் - இலங்கை.

1960 அல் இஸ்லாம் - எம்.எச்.எம். ஹம்சா - இலங்கை.

1965 புதுமைக் குரல் - மஜ்லிசே இஸ்லாமி மாதஇதழ் பின்னர்
மாதமிருமுறை - இலங்கை.

1967 அல் மதீனா - எம். பி.எம். மாஹிர் - இலங்கை.

மணிக்குரல் - எம். சி. எம். சுபைர் - தமிழ் இலக்கிய இதழ் - இலங்கை.

மரகதம் - எம். சி. எம். சுபைர் - தமிழ் இலக்கிய இதழ் - இலங்கை.

1968 இளம்பிறை - எம்.எ. ரஹ்மான் - இலங்கை.

1968 மக்கள் - மாத இதழ் - கலீல், காதர் - இலங்கை
.
1968 வான்சுடர் - டாக்டர். அப்துல். ரஹ்மான் - இலங்கை.

1968 சாதுளியா (தரிக்க ஏடு) - கொள்கை ஏடு - இலங்கை.

முஸ்லிம் - எஸ். எம் . ஹசன் - இலங்கை.

ஷிக்வா - எ. எச். ஜீ. அமீன் - மாதஇதழ் - இலங்கை.

சவ்துல்ஹக் - பிரசார இதழ் - இலங்கை.

ஸுஹினுல் இஸ்லாம் - அபு உபைதா, எஸ்.எம். ஸப்ரு - இலங்கை.

பாமிஸ் - மாதஇதழ் - இலங்கை.

உதயம் - முஸ்லிம் லீக் வாலிப முன்னணி - இலங்கை.

நிதாவுள் இஸ்லாம் - மௌலவி. புர்கானுதீன் - இலங்கை.

1970 கடமை - எஸ்.எ. கையூம் - இலங்கை.

அபேதவாதி - சுபைர் இளங்கீரன் - இலங்கை.

1972 மணி மஞ்சரி - கவிஞர். அப்துல் காதர் லெப்பை - இலங்கை.

1975 நல்வழி (தரிக்கா ஏடு) - இலங்கை.

அஷ்ஷபாப் - எம். எச். எம். நாளிர் - இலங்கை.

ஞான சுரங்கம் - அப்துல் ரவூப் - இலங்கை.

மிஸ்பாஹ் - இலங்கை.

இஸ்லாமிய சிந்தனை - இலங்கை.

அல் இஸ்லாஹ் - இலங்கை.

அஷ் ஸூரா - எம். எச். எம். சம்சு - செய்தி மடல்.

1976 அல் ஜன்னத் - மாத இதழ் - மௌலவி அப்துல் அஹ்மத் (வத்தலகுண்டு).

1979 விடிவு - புன்னியாமின் - இலங்கை.

1979 சுதந்திர பறவைகள் - கோவை இக்பால்.

1980 மதினா - இறையருள் கவிமணி. கே. அப்துல் கபூர் - மாதஇதழ் -
திருநெல்வேலி டவுன்.

1980-82 அல்ஹிலால் - புன்னியாமின் - மாதமிருமுறை - இலங்கை.

1985 எழுச்சிக் குரல் - மாத இதழ் பின்னர் வார இதழ் - இலங்கை.

நேசன் - இலங்கை.

1986 இலக்கியா - திருச்சி சயது - திருச்சி.

1987 மணிச்சுடர் - ஆ. கா.அ.அப்துல் சமது. - முஸ்லிம் லீக்

1987 ரசிகன் - திருச்சி சயது - திருச்சி.

1988 மல்லிகை - திருச்சி சயது - திருச்சி.

1988 ப்ரியநிலா - உவன்வத்த ரம்ஜான் - காலாண்டு இதழ் - இலங்கை.

1989 இளைய நிலா - திருச்சி சயது - திருச்சி.

1990 பார்வை - சித்திக் காரியப்பர் - இலங்கை.

1990 அல்ஹக் - இலங்கை.

1990 சூப்பர் சிப்பி - ஜலால் - திருச்சி.

1990 புதிய வீணை - ராம்ஜி காஜா - திருச்சி.

1990 அல் முஜாஹித் - பழனி பாபா.

புனித போராளி - பழனி பாபா.

மறுமலர்ச்சி - திருச்சி யுஸுப் - வாரஇதழ்.

1992 சமாதானம் - மருதூர் வாணன் - இலங்கை.

1992 சத்தியம் - மாத இதழ்.

மீள்ப் பார்வை - இலங்கை.

விருட்சம் - இலங்கை.

கலைமகள் - ஹிதாயா - இலங்கை.

தடாகம் - இலங்கை.

உண்மை உதயம் - மௌலவி. பாசில் முஸ்தபா மௌலானா -
மாதஇதழ் - இலங்கை.

1993 புள்ளி - ரபிக் - இலங்கை.

1993 தடம் - எம். பௌஸர் - இலங்கை.

1994 தினமதி - மௌலவி. முபாரக்.

1995 திங்கள்- ஹில்மி முஹம்மது - இலங்கை.

1995 சூரியன் - எம்.எச். எம். ஜவ்பர் - இலங்கை.

1996 உணர்வு - வாரஇதழ் - தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத்.

1996 நவமணி - அல்ஹாஜ். பி.எம். அஹ்ஸர் - நாளிதழ் - இலங்கை.

1996 புதிய வாணிகம் - (வணிகம் மற்றும் வேளாண்மை)
மாதஇதழ் - பேராசிரியர். புலவர். உசேன் - சென்னை.

1997 இனியவனின் நம்பிக்கை - இனியவன் ஹாஜி. முஹம்மது - ஐக்கிய அரபு அமிரகம்.

1998 நம்பிக்கை - இனியவன் ஹாஜி. முஹம்மது - ஐக்கிய அரபு அமிரகம்.


1998 தமிழன் குரல் - மறுமலர்ச்சி கமால் பாஷா - ஐக்கிய அரபு அமிரகம்.

2002 ஒற்றுமை - மாதம் இருமுறை - தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்.

2003 ப்ரவாகம் - ஆஸிப் புகாரி - இலங்கை.

2003 கீழக்கரை அஞ்சல் - அபுபக்கர் தம்பி - கீழக்கரை.

2003 முஸ்லிம் குரல் ௦- வாரஇதழ் - இலங்கை.

எங்கள் தேசம் - இலங்கை.

ஏகத்துவம் - மாதஇதழ் - தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத்.

முஸ்லிம் பெண்மணி - மாதஇதழ்.

தீன்குலப் பெண்மணி - மாதஇதழ் - தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத்.

விடியல் வெள்ளி - மாதஇதழ்

2004 மக்கள் உரிமை - தமிமுன் அன்சாரி - தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்.

2005 சத்தியப்பாதை - ஸெய்யது ஆபுதீன் - கீழக்கரை.

2005 புதியக் காற்று - ஹாமீம் முஸ்தபா -மாதஇதழ் - மதுரை.

2006 தமிழ் சுடர் - டாக்டர். உஸ்மான் பயாஸ் - நாளிதழ்.

2006 பிறை செய்தி மடல் - பரங்கிபேட்டை. கலீல் பாகவி - மாத இதழ் - குவைத்.

2006 உலக வெற்றி முரசு.

2006 பெருவெளி - இலங்கை.

2008 சமூகநீதி முரசு - C.M.Nசலீம் - மாதஇதழ்.

2008 நீதியின் குரல் - விழுப்புரம் சாஜி - குவைத் மாதஇதழ்.

2008 அடியற்கை மெயில் - மாதஇதழ் - அடியக்கமங்கலம்.

2009 மக்கள் ரிப்போர்ட் - இந்திய தவ்கீத் ஜமாஅத்.

2009 வைகறை வெளிச்சம் - குலாம் முஹம்மது - மாதஇதழ்.

2009 சத்திய பேரொளி - அப்துல் ஹமிது - கிருஷ்ணகிரி.

2009 தங்கம் - ஷேக் மைதீன் -மாத இதழ்.

சமரசம் - சிராஜுல் ஹசன் - ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் - மாதம் இருமுறை

சமநிலை சமுதாயம் - A.V.M ஜாபர்தீன் - மாதஇதழ்

அல் ஹசனாத் - இலங்கை - மாத இதழ்.

அல் ஜசிரா - இலங்கை.

குரானின் குரல் -முஹம்மது அஸ்ரப் அலி - மாதஇதழ் - மதுரை.

நர்கீஸ் - மாதஇதழ் - திருச்சி.

முஸ்லிம் முரசு - மாதஇதழ்.

இதய வாசல் - கவிஞர். இக்பால் ராஜா - அய்யம்பேட்டை - மாதஇதழ்.

இனிய திசைகள் - சே. மு. மு. முஹம்மது அலி - மாதஇதழ் -
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்.

வசந்தம் -அப்துல் முசாவிர் - குவைத் - மாதஇதழ்.

பசுங்கதிர் - மௌலா - கீழக்கரை - மாதஇதழ்.

நம்ம ஊரு செய்தி - மயிலாடுதுறை.

நமது முற்றம் வஸீலா

2009 சென்னை நண்பன் - நண்பன் அபுபக்கர்.

(தகவல்கள்: மூத்த பத்திரிகையாளர் ஹபீப் எழுதிய இதழியல் தகவல் தொழில் நுட்பங்கள், இலங்கை எழுத்தாளர் புன்னியாமின் அவர்களின் இலங்கை ஊடகவியளர்களின் விபரத் திரட்டு -

மற்றும் தகவல்களை அனுப்பி உதவிய சகோதரர்கள் திருச்சி சயது, இனியவன் ஹாஜி முஹம்மது, கீழை ஜமில், பிதாஉல்லாஹ் மற்றும் முதுவை ஹிதாயத் ஆகியோருக்கு எமது நன்றிகள்.....

ஆவணப்படுத்தளுக்கான சிறிய முயற்சி.

மறந்துபோகாமல் இருக்க வேண்டுமா ??

சற்று முன் கேட்ட டெலிபோன் நம்பரை உடனே திருப்பிச் சொல்ல முடிகிறது. ஒரு மணிநேரம் கழித்து அதே நம்பர் மறந்துவிடுகிறது. ஆனால் நமது சொந்த டெலிபோன் எண், பிறந்த தேதி போன்ற நம்பர்கள் என்றும் மறப்பதில்லை. ஏன் இப்படி?

நமக்கு இரண்டுவித ஞாபகசக்தி இருக்கிறது. தற்காலிக நினைவு மற்றது நிரந்தர நினைவு. நினைவுகள் யாவும் மூளையில் நரம்பு செல்களில் சேமிக்கப்படுகின்றன. ஒரு டெலிபோன் நம்பரைக் கேட்டதும் அதற்கான ஒரு நரம்புக்கூட்டம் உடனே அதைப் பதிவு செய்வதில் முனைகிறது. இந்த நரம்புக்கூட்டத்தை "ட்ரேஸ்' என்று (Trace)கூப்பிடுகிறார்கள். நமக்கு தற்காலிக நினைவுக்கென்று ஒரு ட்ரேஸும் அதே சமயம் நிரந்தர நினைவுக்கென்று இன்னொரு ட்ரேஸும் ஒரே சமயத்தில் மூளையில் உருவாகிறது. மூளையில், தற்காலிக ட்ரேஸானது காம்மா கதுப்பிலும் நிரந்தர ட்ரேஸ்கள் ஆல்ஃபா பீட்டா என்ற கதுப்பிலும் காணப்படுகின்றன. இதே அமைப்பு ஈக்களிலும் காணப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா?
ஒரு சம்பவத்தை அல்லது தகவலை முதல் முறையாக கேட்கும்போது அல்லது படிக்கும்போது அது இரண்டுவித டிரேஸிலும் பதிகிறது.

தற்காலிக டிரேஸ் வேகமாக உருவானாலும் அது உடனே கலைந்து விடுகிறது. நிரந்தர டிரேஸ் மெல்ல ஆசுவாசமாக உருவாகிறது. அது முடிவடையவேண்டுமானால் மீண்டும் அதே சம்பவத்தை அல்லது படித்ததை நாம் அனுபவிக்க வேண்டும். நிரந்தர டிரேஸ் நரம்புக்கூட்டம், இரண்டாம் முறை, மூன்றாம் முறை தூண்டப்படும்போது அதன் டிரேஸ் முற்றுப்பெறுகிறது. முற்றுப் பெற்றதும் அது நிரந்தர நினைவாகிவிடுகிறது.
தற்காலிக டிரேஸ் எத்தனை முறை தூண்டப்பட்டாலும், அது உடனே கலைந்துவிடுகிறது. ஈக்குக்கூட தற்காலிக, நிரந்தர நினைவுகள் இருக்கிறது என்று கோல்டு ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வுக்கூடத்தின் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஈயை சின்னக் குழாயில் வைத்து அதில் கெட்ட நாற்றமுடைய காற்றை அனுப்பும்போது கூடவே லேசாக மின்சார ஷாக் கொடுப்பார்கள். அதற்கப்புறம் ஈக்கு ஷாக் கொடுக்கும்போதெல்லாம் துர்நாற்றக் காற்றை அந்த ஈ எதிர்பார்க்கும். அல்லது துர்நாற்றக் காற்று வரும்போதெல்லாம் ஷாக் அடிக்குமோ என்று அஞ்சும். ஈயின் காம்மா கதுப்பிலும் ஆல்ஃபாபீட்டா கதுப்பிலும் இந்த அனுபவம் பதிகிறது என்று தெரிந்துகொண்டனர். நுட்பமான கத்தி மூலம் இந்த கதுப்புகளை ஒவ்வொன்றாக வெட்டி நீக்கும்போது அதற்கேற்ப தற்காலிக அல்லது நிரந்தர நினைவுகள் மறைவதைக் கவனித்தனர்.

ஒரு படி மேலே சென்று, நிரந்தர நினைவினை சேமிக்க உதவும் என்ஸைமினையும் அதற்கான ஜீனையும் கண்டுபிடித்தனர். என்ன ஆச்சரியம்! மனிதர்களுக்கும்கூட அதே ஜீனும் அதே என்ஸைமும் இருக்கிறது. நினைவினை சேமிக்கும் தந்திரம் ஈயில் தோன்றி பின் மனிதன் வரை வளர்ந்திருக்கிறது என்று தோன்றுகிறது.

மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்கும் ஒரு சேதி; எதை நீங்கள் நிரந்தரமாக நினைவில் பதித்துக்கொள்ள விரும்புகிறீர்களோ அதை முதலில் தற்காலிகமாக நினைத்துப் பாருங்கள் மீண்டும் அதை மறுபடி மறுபடி மூன்று முறையாவது கொஞ்ச நேரம் இடைவெளிவிட்டு நினைவுகூட்டிப் பாருங்கள் அப்புறம் அது மறக்கிறதா என்று பாருங்கள். மறக்க மாட்டீர்கள் அதற்கு நான் கியாரண்டி.

- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்
'நன்றி: www.keetru.com

சிலிர்க்கவைக்கும் இறை படைப்பு : மேலே செல்லச் செல்ல ...!!

கீழிருந்து மேலே செல்லச் செல்ல அல்லது மேலிருந்து கீழே செல்லச் செல்ல நாம் என்ன வெல்லாம் சந்திக்க நேரிடும் என்பதை அழகாக எடுத்துக்காட்டும் விளக்கப்படம் இது.
படத்தை சொடுக்கி மேலும் விவரங்கள் அறியலாம்.

உலகின் மிக உயரமான கட்டடமான பர்ஜ் கலீபா 2,717 அடி என்றால் அதை விட உயரமான இடத்தில் இருக்கின்றதாம் டென்வர் நகரம்.

கடல் மட்டத்திலிருந்து 5,000 அடி உயரத்திலிருக்கின்றது அது. நம் தலைக்கு மேலே மிதந்து செல்லும் மேகங்கள் 7,000 அடி உயரத்திலிருக்கின்றதாம். இன்னும் மேலேச் செல்லச் செல்ல 10,000 அடியையும் தாண்டி 11,450 அடி உயரத்தில் இருக்கின்றது திபெத்திய தலைநகரம் லாசா.

இன்னும் மேலே நாம் மூச்சு வாங்கச் சென்றால் 19,334 அடி உயரத்தில் இருக்கின்றது ஆப்ரிக்க கிளிமஞ்சாரோ சிகரமும், 20,320 அடி உயரத்தில் இருக்கின்றது வட அமெரிக்க மவுண்ட் மெக்கின்லே சிகரமும்.

23,000 அடி உயரத்தில் தான் நாம் தூரத்தில் கண்டு வியக்கும் உயர் மேகங்கள் நம்மை மூடிக்கொண்டிருக்கின்றன. தப்பித்தவறி 26,000 அடியையும் எட்டி விட்டால் அங்கே வாயு மண்டலத்தின் எல்லை போல “மரண மண்டலம்” தொடங்குகின்றது.

இங்கே நாம் உயிர்வாழ தேவையான பிராணவாயு கிடைப்பது குறையத்தொடங்குவதால், மலை ஏறுபவர்கள் சிலிண்டர்கள் தூக்கத் தொடங்க வேண்டும். 29,029 அடியில் எவரெஸ்ட் வந்துவிடும்.

அதற்கு மேலே நாம் நடக்க முடியாது. பறக்கத்தான் வேண்டும். 32,000 அடி உயரங்களில் விமானங்கள் பறக்கின்றன. சில வல்லூறுகளும் பறக்கின்றன. அதற்கு மேலே என்னவென இன்னும் மேலே அறிய ஆசை. என்ன அழகான பூமி இது.சிலிர்க்கவைக்கும் இறை படைப்பு

Go green எனச் சொல்லி பிளாஸ்டிக்கை குறை, காகிதத்தை தவிர் என ஜனங்களை உளுக்கெடுத்துவிட்டு அங்கே கடலில் எண்ணெயை கசிய விட்டு பூண்டோடு சுற்றுச் சூழலை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். சாண் ஏற முழம் சறுக்கின கதையாய் இயற்கையை மனிதன் காப்பாற்ற விழைய, அது கேலிக் கூத்தாகி, கடைசியில் இயற்கையை இயற்கைதான் காப்பாற்ற வேண்டுமோ?

அல்லாஹ் நம்மையும் , இவ்வுலகையும் படைத்தான்.
அவனே நமது பாதுகாவலன் ,இவ்வுலகிற்கும் அரசன் ...
அவன் அனுமதி இல்லாமல் யாரு தான் ஆட்டம் போட முடியும்...

இறை படைப்பை ஆராய்ந்து அல்லாஹ்வை முழுமையாக சார்ந்த மக்களாக நாம் வாழ்வோமாக !!

thanks 2 http://pkp.blogspot.com/2010/07/blog-post.html

Thursday, July 8, 2010

திட்டச்சேரி மாணவி சர்வதேச அளவில் முதலிடம் !!

நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்தவர் முஹம்மது ஃபாரூக். இவர் செசல்ஸ் தீவில் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் நிறுவன உரிமையாளராக உள்ளார். இவரின் மகள் சகோதரி சல்மா செசல்ஸ் தீவில் உள்ள சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார்.


சர்வதேச அளவில் 100 நாடுகளை சேர்ந்த 2,000 பள்ளிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்ற "இண்டர்நேசனல் ஜெனரல் சர்டிபிகேட் ஆப் செகண்டரி எஜிகேசன்ஸ்" என்ற தேர்வு கடந்த ஆண்டு (2009) அக்டோபர் மாதம் நடைபெற்றது.இதனுடைய சர்வதேச முடிவுகள் சில தினங்களுக்கு முன் வெளியானது.இதில் கலந்துக்கொண்ட சகோதரி சல்மா சர்வதேச அளவில் மூன்று பாடங்களில் முதல் பத்து இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துள்ளார்.

ஆங்கில இலக்கிய பாடப்பிரிவில் சல்மா ஃபாரூக் சர்வதேச அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.மேலும் உயிரியல் பாடத்தில் மூன்றாம் இடத்தையும், புவியியல் பாடத்தில் ஒன்பதாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

இன்பர்மேசன் கம்யூனிகேசன் மற்றும் புவியியல் பாடங்களில் செசல்ஸ் தீவில் சிறப்பிடத்தையும்,இயற்பியல் பாடத்தில் அதீத சாதனைக்கான விருதையும் பெற்றுள்ளார்.பத்து பாடங்களிலும் 95 சதவீதத்திற்கு மேல் பெற்றுள்ளதால் இவருக்கு 'ஏ ஸ்டார்'(A-Star) என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.

Friday, July 2, 2010

பிரபல இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டன் தடை வலுக்கும் எதிர்ப்பு! கொந்தளித்தது மும்பை!

பிரபல இஸ்லாமிய அறி ஞரும் சர்வதேச சொற்பொழி வாளருமான ஜாகிர் நாயக் பிரிட்டனுக்கு வர அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டனில் மூன்று இடங்களில் நடக்கவிருந்த இஸ்லாம் தொடர் பான கருத்தரங்குகளில் கலந்து கொள்ள ஜாகிர் நாயக் கடந்த வாரம் பிரிட்டன் செல்லவிருந்த நேரத்தில் அவரது விசா தடை செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் உள்துறைச் செயலாளர் தெரசா மே அறிவித்தார். ஜாகிர் நாயக்கின் பேச்சுகள் பொது ஒழுங்குக்கு ஏற்றதல்ல என்றும் அவர் குறிப் பிட்டார்.


ஜாகிர் நாயக் தீவிரவாதத்தை வளர்க்க உதவி செய்வதாக ஒரு கடுமையான, மேம்போக்கான குற்றச்சாட்டையும் பிரிட்டன் உள் துறை, ஜாகிர் நாயக் மீது சுமத்தி யுள்ளது.


இதைக் கடுமையாக மறுத்துள்ள ஜாகிர் நாயக், தான் இதற்கு முன் பல தடவை பிரிட்டனுக்கு வந்துள்ளதாகவும், தான் இம் முறை கலந்துகொள்ள இருக்கும் கூட்டங்கள் குறித்த விளம்பரங் கள் அதிக அளவில் பிரபலமடை ந்துள்ளதால் தனக்கு எதிரான பொய்ப் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும், இதனாலேயே புதிதாகத் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரிட்டிஷ் அரசு தன்னை வெளியேற்ற ஆணை பிறப் பித்துள்ளதாகவும் கூறினார்.


ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டன் விதித்துள்ள தடைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டன த்தைத் தெரிவித்து வருகின்றனர். மும்பை ஆசாத் மைதானம் அருகே பல்வேறு முஸ்லிம் அமை ப்புகளைச் சேர்ந்தவர்களும் திர ண்டு ஜாகிர் நாயக்கிற்கு எதிரா னத் தடையைக் கண்டித்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மும்பையில் நடந்த ஆர்ப்பாட் டத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி, ஜம்மியத்துல் உலமா ஹிந்த் உள் ளிட்ட 40 அமைப்புகள் பங் கேற்றது மஹாராஷ்டிராவில் திருப் புமுனையை ஏற்படுத்தியுள்ளது. சமுதாய ஒற்றுமைக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமைந் திருப்பதாக முஸ்லிம்கள் மகிழ்ச் சியடைந்துள்ளார்கள்.


இதுதொடர்பாக ஜாகிர் நாயக் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பும் மும்பையில் நடைபெற் றது. அதில் பேட்டியளித்த ஜாகிர் நாயக், சட்டரீதியாகத் தான் இந்தத் தடையை சமாளிக்கும் அதேநேரத்தில் இந்திய வெளியு றவுத்துறை அமைச்சகமும் இதில் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தனது பேச்சை தவ றாகப் புரிந்துகொண்டுள்ளனர் என்ற நாயக், 2008&ம் ஆண்டு பிரிட்டன் தனக்கு ஐந்து வருட விசா வழங்கி உள்ளதையும் குறிப்பிட்டார். இது சட்டரீதியாக எடுக்கப்பட்ட முடிவல்ல, அரசி யல் ரீதியாக எடுக்கப்பட்ட ஒன்று என்றும், இந்தத் தடைக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.


"எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் நிகழ்ச்சிக்கு ஒருநாள் முன்பு ஜாகிர் நாயக்கிற்கு விதிக் கப்பட்ட தடை நியாயமற்ற ஒன்று. இதுவும் ஒருவகையான தீவிர வாதம்தான்" என்கிறார் மும்பையின் பிரபல வழக்கறிஞர் மஜீத் மேமன்.


ஜாகிர் நாயக்கிற்கு தடை விதித் து தன் மீது களங்கத்தை ஏற் படுத்திக் கொண்டுள்ளது பிரிட்டிஷ் அரசு. உடனடியாக இத்தடையை நீக்கி இஸ்லாமியப் பிரச்சாரகரும் மனித நேயவாதியுமான ஜாகிர் நாயக்கை பிரிட்டனுக்குள் அனுமதிக்க வேண்டும். நாகரீக பண்பு உள் ளவர்களாகக் கூறப்படும் பிரிட்டிஷ் மக்கள் இதற்கு குரல்கொடுக்க வேண்டும்.

-இப்பி பக்கீர்
thanks 2 tmmk.
Related Posts Plugin for WordPress, Blogger...