(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Showing posts with label இல்லறம். Show all posts
Showing posts with label இல்லறம். Show all posts

Tuesday, August 3, 2010

கணவரை மகிழ்விப்பது எப்படி?

கணவரை மகிழ்விப்பது எப்படி?

(அல்குர்ஆன், நபிமொழிகளின் ஒளியில்)

மனைவியின் அழகிய வரவேற்பு

பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது அவரை நல்ல வார்த்தைகள் கூறி வாழ்த்துக்களுடன் வரவேற்று உபசரியுங்கள்.

முகமலர்ச்சியுடன் கணவரை எதிர்கொள்ளுங்கள்.

உங்களை அழகுபடுத்தி, உங்கள் கணவருக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்ளுங்கள்.

சந்தோஷமான செய்தியை முதலில் தெரிவியுங்கள், கவலையான செய்தி ஏதேனும் இருந்தால் உங்கள் கணவர் அமைதி அடையும்வரை பிற்படுத்தி வையுங்கள்.

அன்பான, அரவணைப்பான வார்த்தைகளை உங்கள் கணவரிடத்தில் பயன்படுத்துங்கள் (வேலையிலோ அல்லது வரும் வழியிலோ ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்திருக்கலாம்).

கணவருக்காக அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட உணவை, சரியான நேரத்திற்குள் பரிமாறுங்கள் (கணவருடன் சேர்ந்து உண்ணும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்).

இனிய குரலும் தேவையான கனிவும்

உங்கள் கணவரிடம் மென்மையான குரலில் அழகாக, அன்பாகப் பேசுங்கள். கணவரைத் தவிர வேறு எந்த ஆணிடமும் - குறிப்பாக - மஹரம் அல்லாத ஆண்களுக்கு முன்னால் குழைந்து பேசக்கூடாது என்பதை மறந்துவிடவேண்டாம். உங்கள் கணவரிடத்தில் "உம்!! இல்லை!!" என்று அரைகுறையாகப் பேசி, அவரின் பேச்சை உதாசீனப்படுத்தாதீர்கள்

நறுமணமும் அலங்கரிப்பும்

உடலை அழகு-ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சிரத்தையுடன் முயற்சி செய்யுங்கள். (வீட்டு வேலைகளை வேலைக்காரியோ அல்லது இயந்திரங்களின் உதவியோ இன்றி நாமே செய்ய முயற்சி செய்யவேண்டும். இதனால் உடல் ஆரோக்கியத்தையும் உடல் அழகையும் பேணுவதோடு பணச்செலவையும் குறைக்கலாம்).

உங்கள் கணவரோடு தனித்திருக்கும் வேளையில் மட்டும் மெல்லிய ஆடைகளைப் பயன்படுத்துங்கள்

தினமும் குளித்து உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் சுத்தமாக வைத்துக்கொள்ளுவதில் அதிகமாக அக்கறை செலுத்துங்கள்

வீட்டிற்கு கணவன் வருவதற்கு முன்னால் உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள். (அழுக்கான ஆடையுடன் முகத்தில் எண்ணெய் வடிந்திருக்கும் நிலையில் உங்கள் கணவரிடம் செல்லாதீர்கள்).

தடுக்கப்பட்ட முறையில் அதாவது ஹராமான முறையில் அலங்கரித்துக் கொள்ளக்கூடாது. (உதாரணமாக புருவத்தை மழித்துக் கொள்ளுதல், ஒட்டுமுடி வைத்துக் கொள்ளுதல்).

கணவனுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியம், கலர் துணிவகைகள் ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள்

முடி அலங்காரம், வாசனைத் திரவியங்கள், உடையின் வண்ணம் மற்றும் மாடல் ஆகியவற்றை கணவன் ரசிக்கும்படி அடிக்கடி மாற்றுங்கள். இவை அனைத்தும் மஹரம் இல்லாத ஆண்களுக்கு வெளிப்படுத்துவது ஹராம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: "அனைவரையும் விடச் சிறந்த பெண் (மனைவி) யார்?" அண்ணலார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: "எந்தப் பெண் தன் கணவன் தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாளோ, அவன் கட்டளையிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பாளோ, தன் விஷயத்திலும் தன்னுடைய பொருளிலும் தன் கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் மேற்கொள்ளமாட்டாளோ அத்தகையவளே, அனைவரையும் விடச்சிறந்தவள்" ( நஸயீ).

இனிய வாழ்வின் திறவுகோல் தாம்பத்தியமே

திருமணத்தில் இணையும் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்களது இயற்கையான உடல் தாகங்களை (அனுமதிக்கப்பட்ட முறையில்) செம்மையாகப் பகிர்ந்து கொள்வது இஸ்லாமியத் திருமணத்தின் முக்கிய குறிக்கோளாகும் என நபி (ஸல்) அவர்கள் உணர்த்தினார்கள் (புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ).

"கணவன் தாம்பத்தியத்திற்காக மனைவியை அழைத்து, அவள் காரணமின்றி மறுத்து, அதனால் கணவன் அவள்மீது கோபங்கொண்டு அவ்விரவைக் கழித்தால், விடியும்வரை வானவர்கள் அப்பெண்ணை சபித்துக்கொண்டே இருப்பார்கள்" என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள் (புகாரி, முஸ்லிம், அஹ்மத்).

நபி (ஸல்) அவர்கள் தெளிவாக்கினார்கள்: "கணவன் ஊரிலிருக்கும்போது அவனது அனுமதியின்றி எந்தப் பெண்ணும் (நஃபிலான) நோன்பு நோற்பது கூடாது. மேலும் தனது வீட்டில் கணவன் அனுமதியின்றி எவரையும் அனுமதிக்கக் கூடாது" (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், தாரமி).

உங்கள் கணவனுக்குத் தாம்பத்திய உறவு அவசியம் தேவை என்கிற சூழ்நிலையில் அதனை முதன்மைப் படுத்துங்கள் (பிறர் தவறாக எண்ணுவார்கள் என்றோ ஏதாவது பேசுவார்கள் என்றோ தள்ளிப்போடாதீர்கள்).

உங்களுடைய உடலை சுத்தமாகவும் வாசனையாகவும் வைத்துக் கொள்ளுங்கள்

கணவருடன் இனிய மொழியில் காதலைப் பரிமாறிக் கொள்ளுங்கள். (குடும்பத்தின் பிரச்சினைகளை மறந்துகூட அப்பொழுது வெளிப்படுத்தாதீர்கள். இல்லையென்றால் சந்தோஷமான சூழ்நிலையை சங்கடமான சூழ்நிலையாக அது மாற்றிவிடக்கூடும்)

உங்கள் கணவர் திருப்தி அடையும்வரை ஒத்துழையுங்கள்

தோதான நல்ல சூழ்நிலைகளில் உங்கள் கணவரை தாம்பத்தியத்திற்கு ஊக்குவியுங்கள் (உதாரணமாக வெளியூர் பயணத்திலிருந்து திரும்பியபோது அல்லது கணவருக்கு அமைதி தேவை என்னும் பட்சத்தில்).

அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு திருப்தி கொள்வது

உங்களுடைய கணவன் ஏழையாகவோ சாதாரண வேலையிலோ இருந்தால் அதற்காக வாழ்க்கையை வெறுத்துவிடாதீர்கள். (பிறரின் கணவர்கள்போல் நீங்கள் இல்லையே என ஒப்புமையும் செய்யாதீர்கள். அது உங்கள் கணவருக்கு உங்கள்மீது வெறுப்பை உருவாக்கும்).

ஏழைகள், உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள், ஊனமுற்றோர்கள் போன்ற நம் நிலைக்குக் கீழாக உள்ளவர்களைப் பார்த்தேனும் இறைவன் நம்மை இந்த நிலைக்கு உயர்த்தி வைத்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.

தன்னம்பிக்கையும் கணவருக்கு நீங்கள் அளிக்கும் ஊக்கமும்தான் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

உலக விஷயத்திலேயே மூழ்கிவிடவேண்டாம்

இவ்வுலக வாழ்க்கை மட்டும்தான் நமக்கு நோக்கம் என்று இருந்திட வேண்டாம்.

இதன் அர்த்தம் அல்லாஹ் அனுமதித்த இன்பங்களை அனுபவிக்கக் கூடாது என்பதல்ல, மறுமையின் சுகவாழ்வுக்கு எதிரான விஷயங்களைக் கவனமாகத் தவிர்த்து வாழ வேண்டும் என்பதே.

உங்கள் கணவரின் செலவைக் குறைக்கச் சொல்லி அதனை தர்மம் செய்யவும், ஏழைகளுக்கும் தேவைப்படும் மக்களுக்கும் கொடுக்க ஆர்வம் ஊட்டுங்கள்

அவசியம் இல்லாத பொருள்களை வாங்கிக்கேட்டு கணவனை நச்சரிக்காதீர்கள். (உங்கள் பெற்றோர் வீட்டில் கிடைத்த மாதிரி கணவனிடம் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் கணவனின் வசதிக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்).

பொருட்செல்வமும் பிள்ளைச் செலவமும் இவ்வுலக வாழ்வின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும் எதிர்பார்க்கப் படுவதில் சிறந்ததுமாகும். (அல்குர்ஆன் 18:46).

கணவனின் உதவியை வரவேற்றல் நன்றி செலுத்துதல்

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: "பெரும்பான்மையான பெண்கள் கணவனின் உதவியை நிராகரித்ததன் காரணமாக அவர்களை நரகத்தில் பார்த்தேன்" என்பதாக. எனவே கணவன் செய்த உதவிகளை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்

உங்கள் கணவரின் உதவிகளுக்கு நன்றி செலுத்தும்போது உங்கள் கணவரை மேலும் உதவி செய்பவராகவும் உங்களைப் பலவழிகளில் சந்தோஷப் படுத்துபவராகவும் காண்பீர்கள்

உங்கள் கணவரின் நன்றியை மறக்கும்போது, உங்கள் கணவர் "இவளுக்குக் கூடுதலாக நல்லது செய்து என்ன பயன்?" தன்னைத்தானே நொந்து கொள்வார்"

உறுதுணையும் உதவியும்


உங்கள் கணவருக்கு ஏதேனும் விபத்தின் காரணமாக ஊனம் ஏற்பட்டுவிட்டால் அல்லது வியாபாரத்தில் நஷ்டமடைந்துவிட்டால் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்ட சொந்தத் தொழில் மூலமாகவோ மற்றும் உங்கள் சொத்தின் மூலமாகவோ கணவனுக்குத் 'தோள்' கொடுங்கள்

கட்டுப்படுதல்

"ஒரு பெண் தனது ஐவேளைத் தொழுகையை(செம்மையாக)த் தொழுது (ரமழான்) மாதத்தில் நோன்பு நோற்று, தனது கற்பையும் காத்துக்கொண்டு (இறை ஆணைகளுக்கு மாற்றமில்லாத காரியங்களில்) தன் கணவனுக்குக் கட்டுப்பட்டும் நடந்து கொண்டால், 'நீ விரும்பும் எந்த வாயில் வழியாக வேண்டுமானாலும் சுவர்க்கத்தில் நுழையலாம்" என அவளிடம் (மறுமையில்) கூறப்படும்" என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (தப்ரானி, முஸ்னத் அஹ்மத்).

"ஒருவர் மற்றொருவருக்கு சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்யலாமென அனுமதி இருந்தால் மனைவியைக் கணவனுக்குத் தலை வணங்கி சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்ய ஆணையிட்டிருப்பேன்" என ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவூத், நஸயீ, திர்மி, இப்னுமாஜா, பைஹகி).

கணவனுடைய அத்தனை கட்டளைகளையும் நிறைவேற்றுங்கள் - அது இறைவனுக்கு மாற்றமாக இல்லாதபோது

ஓர் இஸ்லாமிய குடும்பத்தில் கணவன் தலைவன் என்பதையும் மனைவி கணவனுக்கு உதவி செய்பவள் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

அமைதிப்படுத்துங்கள் (கோபமாக இருக்கும் போது)

முதலாவதாக, கணவரை எது கோபப்படுத்துமோ அச்செயலை/பேச்சைத் தவிர்த்துவிடுங்கள். அப்படி தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சமாதானப் படுத்துங்கள்.

நீங்கள் பிழை செய்திருந்தால் மன்னிப்புக் கேளுங்கள். (கோபமான சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் வீசிக் கொள்ளும் உப்பு-சப்பு பெறாத வார்த்தைகள்தான் விவாகரத்தில் முடிகிறது என்பதை எல்லோருமே அறிவார்கள்).

கணவர் தவறு செய்திருந்தால் அதனை நல்ல சூழ்நிலை பார்த்து சொல்ல முயற்சி செய்யுங்கள். அல்லது அவருடைய கோபம் குறையும்வரை அமைதியாகக் காத்திருந்து சாந்தமான முறையில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.

குடும்பத்துக்கு அப்பாற்பட்ட விஷயத்தில் கணவர் கோபமுற்று இருந்தால், கோபம் குறையும்வரை காத்திருந்து பிறகு அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்யுங்கள். (உதாரணமாக வேலையில் பிரச்சினை, மற்றவர்களால் அவமானப் படுத்தப்பட்டிருத்தல்).

அவருடைய பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்தக் கோபமான நிலையிலேயே பற்பல கேள்விகளை எழுப்பி தொந்தரவு செய்யாதீர்கள்.

"என்ன நடந்தது? என்று நீங்கள் சொல்லித்தான் ஆகவேண்டும்" என்றோ "எது உங்களை கோபப்படுத்தியது? என்று எனக்கு தெரிந்துதான் ஆகவேண்டும்" என்றோ "நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள்! அதைத் தெரிந்து கொள்வதற்கு எனக்கு முழு உரிமை இருக்கின்றது!" என்றோ கேள்விக் கணைகளை எழுப்பி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றாதீர்கள்.

பாதுகாப்பது (கணவர் வீட்டில் இல்லாத போது)

"இன்னும், முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்;. தங்கள் அலங்காரத்தை அதினின்று (இயல்பாக வெளியில்) தெரியக் கூடிய(கைகள், முகத்)தைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்" (அல்குர்ஆன்: 24:31).

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: "நல்லொழுக்கமுள்ள மனைவியர் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடைமை, மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்)" (அல்குர்ஆன்: 4:34).

தடுக்கப்பட்ட நட்புகளைவிட்டும் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்

குடும்பத்தின் ரகசியங்களை மற்றவரிடம் சொல்லாதீர்கள். (முக்கியமாக தாம்பத்தியம் மற்றும் உங்கள் கணவர் பிறரிடம் சொல்ல விரும்பாத விஷயங்கள்).

வீட்டில் உள்ள பொருள்களையும் குழந்தைகளையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

கணவனுடைய பணத்தையும் சொத்துக்களையும் பாதுகாத்து வையுங்கள்.

கணவனுடைய அனுமதியின்றி வீட்டைவிட்டு வெளியேறாதீர்கள்.

அப்படியே உங்கள் கணவர் அனுமதித்தாலும் முழு ஹிஜாபுடனும் பாதுகாப்புடனும் வெளிச் செல்லுங்கள்.

உங்கள் கணவருக்குப் பிடிக்காதவர்களை வீட்டிற்குள் வர அனுமதிக்காதீர்கள்.

மஹரம் இல்லாத ஆண்களை நீங்கள் தனியாக இருக்கும் இடங்களில் அனுமதிக்காதீர்கள். (கணவனுடைய சகோதரர்கள், தாயின் சகோதரி மகன்கள், தந்தையின் சகோதரனின் மகன்கள் - போன்றவர்கள்தானே என்று அலட்சியமாக இருக்காதீர்கள்).

கணவருடைய பெற்றோர்களுடனும் உறவினர்களுடனும் நல்லபடியாக நடந்து கொள்ளுங்கள் - குறிப்பாக - கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில்.

பொறுமையும் பாதுகாப்பளித்தலும்

கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது பொறுமையுடன் இருங்கள்.

வாழ்க்கையில் இழப்புகள் சோதனைகள் (உங்களுக்கு, உங்கள் கணவருக்கு, குழந்தைகளுக்கு, உறவினர்களுக்கு, சொத்துக்களுக்கு...) ஏற்படும்போது இறைவனின் கூலியை எதிர்பார்த்து பொறுமை கொள்வது அவசியம் (உதாரணமாக : நோய், விபத்துகள், இறப்புகள்...).

அழைப்புப்பணியில் துன்பங்கள் ஏற்படும்போது (சிறைபிடிக்கப்படுதல், ஊனமாக்கப்படுதல் ...) பொறுமையுடன் இருந்து கணவரை மீண்டும் அல்லாஹ்வுடைய பாதையில் சுவர்க்கத்தை வேண்டி தியாகம் செய்ய உற்சாகப்படுத்துங்கள்.

உங்களிடம் உங்கள் கணவர் மோசமாக நடந்து கொள்ளும் வேளையிலும் அவரிடம் நீங்கள் நல்ல முறையாக நடந்து பாடம் புகட்டுங்கள். (இவள் நம்மீது இவ்வளவு அன்பு பொழியும்போது நாம் ஏன் இவளிடம் நல்ல முறையாக நடந்தக் கொள்ளக்கூடாது என்று நினைத்து வருந்தி தன் தவறுகளைத் திருத்திக் கொள்வார்).

இறைவனுக்கு அடிபணிவதிலும் அழைப்புப்பணி, தியாகம் ஆகியவற்றிலும் உதவியாக இருத்தல்

உங்கள் கணவருடன் ஒத்துழையுங்கள். கடமையான மற்றும் உபரியான வணக்கங்களை அவருக்கு நினைவுபடுத்துங்கள்.

இரவுத் தொழுகை தொழ அவருக்கு ஆர்வமூட்டுங்கள்.

அல்குர்ஆனை கேட்பதிலும் படிப்பதிலும் தனித்தும் கணவருடன் சேர்ந்தும் ஈடுபடுங்கள்.

இஸ்லாமிய பயான் கேஸட்டுகளைத் தனியாகவும் கணவருடனும் சேர்ந்தும் கேளுங்கள் (இருவரும் புரிந்து கொண்ட முக்கிய கருத்துகளை ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்து கொள்ளுங்கள்).

சுப்ஹுத் தொழுகைக்குப் பின்னரும், மஃரிப் தொழுகைக்கு முன்னரும் திக்ரு(இறைநினைவு)களில் ஈடுபடுங்கள்.

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் செய்யப்படும் அழைப்புப்பணிகளில் உங்களையும் உட்படுத்திக் கொள்ளுங்கள்.

இஸ்லாமிய சட்டங்களையும் பெண்களுக்குரிய நல்ல பண்புகளையும் கற்றுக் கொண்டு செயல்படுத்துங்கள்.

உங்களுடைய அன்புக் கணவருக்கு ஒத்தாசையாக இருந்து அவரை ஊக்கப்படுத்தி, அவருக்குத் தேவையான நல்ல கருத்துகளைச் சொல்லி அவரின் துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய பகுதி நேரத்தை ஒதுக்கி, கணவருடன் சேர்ந்து அழைப்பு பணிகளில் ஈடுபடுங்கள்.

அவசியமான நேரத்தில் அனைத்து தியாகங்களையும் செய்ய உங்கள் கணவருக்கு ஆர்வமூட்டி நீங்களும் உங்கள் குழந்தைகளும் அல்லாஹ்வுடைய பாதுகாப்பில் இருப்பதை நினைவுபடுத்துங்கள்.

அழகிய வீட்டுப் பராமரிப்பு

வீட்டை சுத்தமாகவும், அழகாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளுங்கள்

பொழுது போகாத நேரங்களில் வீட்டுப்பொருள்களை சீர்படுத்தி வையுங்கள். உங்கள் கைகளால் தயாரித்த அலங்காரப் பொருள்களைக் கொண்டு வீட்டை அழகுபடுத்துங்கள். (உங்கள் கணவர் மிக சந்தோஷம் அடைவார்).

தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான உணவுகளையும் புதிய வகையான உணவுகளையும் தயாரித்து உங்கள் கணவருக்கும் குழந்தைகளுக்கும் கொடுங்கள்.

அனைத்து வீட்டு வேலைகளையும் நேர்த்தியாகச் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

குழந்தைகளை எப்படி இஸ்லாமிய வழியில் வளர்ப்பது, பராமரிப்பது என்பதைக் கற்றுக்கொண்டு செயல்வடிவத்தில் வெளிப்படுத்துங்கள்.

குடும்பத்தையும் சொத்துக்களையும் பராமரித்தல்

கணவனுடைய பணத்தை, அவருடைய அனுமதி இல்லாமல் செலவழிக்காதீர்கள். (அது தர்மமாக இருந்தாலும் சரி. ஆனால், உங்கள் கணவர் உடன்படுவார் என்பது தெரிந்தால் செய்யலாம்).

வீடு, வாகனம் போன்றவற்ளை கணவன் வீட்டில் இல்லாத போது பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகளை சுத்தப்படுத்தி நல்ல ஆடைகளை அணிவித்து அழகூட்டுங்கள். குழந்தைகளுடைய பாதுகாப்பு மற்றும் கல்வி விஷயங்களில் பேணி நடந்து நல்ல பண்புகள், இஸ்லாமிய அறிவு, நபிமார்களின் சரித்திரங்கள் நபித்தோழர்களின் தியாகங்கள் ஆகியவற்றையும் போதியுங்கள்.

நல்ல மனைவி சுவர்க்கத்தின் துணைவி

நல்ல பெண்களுக்கு முன்மாதிரியாக நபித்தோழியர் கதீஜா, ஆயிஷா, உம்மு ஸலமா, உம்முசுலைம் (ரலி) போன்றவர்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

கெட்ட பெண்களை அல்லது நடிகைகளைப் பின்பற்றுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

கணவனுக்கு சமயோசித முடிவுகள் தேவையானபோது சொல்லிக் கொடுங்கள். (முதலில் அதற்கான அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்).

கணவனுடைய திருப்தியைப் பெற்ற நிலையில் எப்பொழுதுமே இருக்க முயற்சி செய்யுங்கள்.

"ஒரு பெண் தன் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்துவிட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள்" என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள் (திர்மிதி, இப்னுமாஜா).

மொழிபெயர்ப்பாளன் குறிப்பு :

இல்லறத்தைப் பற்றி எண்ணற்ற கட்டுரைகள் வெளிவந்துள்ள இவ்வேளையிலே, பல செய்திகளை சுருக்கி, குறிப்புகளாகக் கொடுத்திருப்பது தேவையான ஒன்றுதான். குர்ஆன் மற்றும் நபிமொழிகள் இந்தக் குறிப்புகள் முழுதிலும் மறைந்திருப்பது உள்ளங்கை நெல்லிக்கனியே. இருந்தாலும் அவசியமான குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் மட்டும் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தமிழ் பேசும் நம்மவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறேன். மொழிபெயர்ப்பை வரிக்கு வரி செய்யாமலும் தேவையானதைச் சேர்த்தும் இருப்பதால் இதனை ஒரு தொகுப்பாகவே பார்க்கவும்.

- சகோ. முஃப்தி

Tuesday, July 20, 2010

மனைவியை மகிழ்விப்பது எப்படி ? -இஸ்லாமிய குடும்பம்

(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில்,ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை)

அழகிய வரவேற்பு
வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.


மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி 'முஸாபஹா' செய்யலாம்.

வெளியில் சந்தித்த நல்ல செய்திகளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காகத் தள்ளி வையுங்கள்.

இனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும்
நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.

உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.
தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.
மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்.


நட்பும் இனிய நிகழ்வுகளை மீட்டுதலும்
மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.

நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நீங்களிருவரும் ஆனந்தமாகக் கழித்த அனுபவங்களை இருவரும் தனித்து இருக்கும்பொழுது மீட்டிப் பாருங்களேன்.

விளையாட்டும் கவன ஈர்ப்பும்
நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.

ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, பந்தயஙகளில் ஈடுபடுங்கள். அது விளையாட்டாகவோ, குர்ஆன், நபிமொழி, பொதுஅறிவு போன்ற கல்விகளைக் கற்பதிலோ அல்லது வேலை செய்வதிலோ இருக்கலாம்.

இஸ்லாம் அனுமதித்த விஷயங்களை (விளையாட்டுப் போட்டிகள் போன்றவை...) பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.

இஸ்லாம் அனுமதிக்காத 'பொழுது போக்கு" விஷயங்களில் (சினிமா, ஸீரியல்கள் போன்றவற்றில்) உள்ள தீங்குகளை எடுத்துச் சொல்லி அவற்றை மறக்கடியுங்கள்.

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவ
வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் நோயுற்றோ களைப்படைந்தோ இருந்தால்.

கடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப் படுத்துங்கள்.

இனியவளின் ஆலோசனை
குடும்ப விஷயங்களில் உங்கள் மனைவியுடன் கூடிஆலோசனை செய்யுங்கள்.


அவளிடம் ஆலோசனை செய்யப்பட வேண்டும் என அவள் எதிர்பார்க்கும் சிறப்புத் தருணங்களில் அவளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் (பிள்ளைகளின் திருமண விஷயங்கள் போன்றவை)

மனைவியின் கருத்துக்களை துச்சமாக நினைக்காமல் கவனமாகப் பரிசோதியுங்கள்.

மனைவின் கருத்து சிறந்ததாக இருந்தால் (உங்கள் கருத்தை புறந்தள்ளிவிட்டு) அவளின் கருத்தைத் தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டாதீர்கள்.
ஆலோசனை தந்து உதவியதற்காக அவளுக்கு நன்றி கூறலாம்.


பிறரைக் காணச் செல்லும்பொழுதுமார்க்கத்தில்/பழக்கத்தில் உயர்ந்த பெண்களுடன் தோழமை வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும் உறவினர்களைப் பார்க்கச் செல்வதால் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துங்கள் (பார்க்கச் சென்றவர்களிடம் வீணான பேச்சுக்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்கினால் கண்டியுங்கள்).

அங்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பேணப்படுகின்றனவா என கவனித்துக் கொள்ளுங்கள்.

அவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்துவது நல்லதல்ல.

உங்களின் வெளியூர் பயணத்தின்பொழுது
மனைவிக்குத் தேவையான நல்ல அறிவுரைகளைக் கூறிவிட்டு அழகான முறையில் விடைபெறுங்கள்.
உங்களுக்காக இறைவனிடம் துஆ செய்யச் சொல்லுங்கள்.

நீங்கள் வீட்டில் இல்லாதபொழுது இரத்தபந்த உறவினர்களிடம் அவளுக்குத் தேவையான அவசியமான உதவிகளைச் செய்து தரும்படி கேட்டுக்கொள்ளலாம்.

குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்துச் செல்லுங்கள்.

நீங்கள் வெளியூரில் இருக்கும் நாட்களில் டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக மனைவியுடன் தொடர்பு கொள்ளுங்கள் (பிரிவின்பொழுதுதான் இருவருக்குமே ஒவ்வொருவரின் அருமையும் முழுமையாகப் புரியும். அப்பொழுது இவற்றின் மூலமாக நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வு, உங்களின் பரஸ்பர அன்பை வளர்க்கும்).

முடிந்தவரை சீக்கிரம் ஊர் திரும்ப முயற்சி செய்யுங்கள்.

திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பரிசுப் பொருள்களை வாங்கி வரலாம்.

எதிர்பாராத நேரத்திலோ இரவு நேரத்திலோ வீடு திரும்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (உங்களுக்காக அலங்கரித்துக் கொள்ளாமல் இருப்பது அவளுக்கு சங்டத்தை ஏற்படுத்தும்).

பிரச்சினைகள் எதுவும் வராது என எண்ணினால் மனைவியையும் உடன் அழைத்துச் செல்லலாம்.


பொருளாதார உதவி

கணவன் என்பவன் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்பவனாக இருத்தல் வேண்டும்; மாறாக, கஞ்சத்தனம் செய்யக் கூடாது. (வீண் விரயமும் செய்யக் கூடாது).

அவளுக்கு ஊட்டிவிடும் உணவு முதல் அவளுக்காகச் செய்யும் அவசியச் செலவுகள்வரை அனைத்திற்கும் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

அவசியத் தேவைக்கான பணத்தை உங்களிடம் கேட்பதற்கு முன்னரே கொடுப்பதுதான் சிறந்தது.

அழகும் நறுமணமும்
நபிவழியின்படி அக்குள்முடி மற்றும் மறைவான பகுதியில் உள்ள முடிகளை நீக்கிவிடுவது.

எப்பொழுதும் நேர்த்தியாக அழகுபடுத்திக் கொண்டு சுத்தமாக இருப்பது.

அவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள்.

தாம்பத்யம்
மனைவிக்கு தாம்பத்ய சுகம் கொடுக்க வேண்டியது கணவனின் கடமை என்பதை நினைவில் வையுங்கள் (இருவரில் ஒருவரின் உடல்நலக்குறைவு காரணமாகத் தள்ளிப் போட்டுக் கொள்ளலாம்).

பிஸ்மில்லாஹ் (இறைவனின் திருநாமத்தால்) என்று சொல்லி ஆதாரப்பூர்வமான பிரார்த்தனையைச் (ஷைத்தானின் தீங்கைவிட்டு இறைவனிடம் பிரார்த்தனை) செய்தவாறு ஆரம்பியுங்கள்.

இறைவன் படைத்திருக்கும் இன உறுப்பைத் தவிர்த்து வேறு வகைகளில் இல்லறச் சுகம் அனுபவிக்கக் கூடாது (மலப்பாதையின் வழியாக ஈடுபடுவது ஹராம்).

காதல் வார்த்தைகளுடன் முன்விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.

அவளை திருப்திப்படுத்தும் வரை தொடருங்கள்.

அமைதிக்குப் பிறகு நகைச்சுவையால் அவ்விடத்தைக் கலகலப்பாக்குங்கள்.

மாதவிடாய்க் காலத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடுவது ஹராம் (தடுக்கப்பட்டது).

பெண் என்பவள் அதிகம் வெட்கப்படுபவள். எனவே அவளின் கூச்சத்தை நீக்குவதில் எல்லை கடந்துவிடாதீர்கள்.

மனைவிக்கு விருப்பமற்ற, கஷ்டமான கோணங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.

அவளின் நோய் மற்றும் களைப்படைந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுங்கள்.

இரகசியங்களைப் பாதுகாத்தல்
படுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சினைகள் போன்றவற்றை பிறரிடம் எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தாதீர்கள்.

இறைவனுக்கு கட்டுப்படும் விஷயங்களில் உதவியாக இருப்பது
தஹஜ்ஜத் (இரவு) தொழுகைக்காக இரவின் கடைசிப்பகுதியில் எழுப்புங்கள்.

உங்களுக்குத் தெரிந்த திருக்குர்ஆன் அறிவை அவளுக்கும் போதியுங்கள்.


காலை-மாலை நேரங்களில் ஓதக்கூடிய திக்ரு (இறைநினைவுகளை - நபியவர்கள் காட்டித் தந்தவைகளை மட்டும்) அவளுக்கு போதியுங்கள்.

இறைவனின் பாதையில் செலவு செய்வதற்கு ஆர்வமூட்டுங்கள்.


ஹஜ்/உம்ராவிற்கு (பணம் மற்றும் உடல்) சக்தி பெற்றிருந்தால் அழைத்துச் செல்லுங்கள்.

மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மரியாதை செய்யுங்கள்.

அவளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க அழைத்துச் செல்லுங்கள்.


உங்களின் வீட்டுக்குவர அவர்களுக்கு அழைப்புக் கொடுங்கள். அப்படி வரும்பொழுது அன்புடன் வரவேற்று உபசரியுங்கள்.

அவசியமான தருணங்களில் அவர்களுக்கு ஒத்தாசையாக இருங்கள்.

பொருளாதாரம் மற்றும் உங்களின் சக்திக்குட்பட்ட உதவிகளைச் செய்யுங்கள்.


உங்களுக்கு முன் மனைவி மரணித்துவிட்டால் நபியவர்களின் வழிமுறையைப் பேணி மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மனைவி (உயிருடன் இருக்கும்பொழுது) உதவி செய்ததுபோல் செய்து அன்பு பாராட்டுங்கள்.


இஸ்லாமியப் பயிற்சி
கீழே கொடுக்கப்பட்டவைகளை அறிந்து கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது :

இஸ்லாத்தின் அடிப்படை
அவளின் பணிகள் மற்றும் உரிமைகள்
படித்தல் மற்றும் எழுதுதல்
இஸ்லாமியப் பாடங்களை மற்றும் அதன் நுணுக்கங்களை படிப்பதற்காக ஆர்வமூட்டுவது
பெண்கள் சம்பந்தமான இஸ்லாமிய சட்டங்கள்
வீட்டின் இஸ்லாமிய நூலகத்திற்காக புத்தகங்கள் மற்றும் கேஸட்டுகள் வாங்குவது.

மேன்மையான அக்கறை
வெளியில் போகும்பொழுது இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிந்திருக்கின்றாளா எனக் கவனித்துக் கொள்வது.


மஹரம் அல்லாத ஆண்களின் மத்தியில் கலந்திருப்பதைக் கண்டிப்பது. (அவளின் சிறிய மற்றும் பெரிய தந்தை மகன்களாக இருந்தாலும் சின்னம்மா பெரியம்மா மகன்களாக இருந்தாலும் உங்களின் தம்பியாக இருந்தாலும் தவறுதான்).

அதிகப்படியாகத் துருவி ஆராய்தலைத் தவிர்ந்து கொள்வது
உதாரணமாக, அவளின் ஒவ்வொரு பேச்சிலும் குற்றங்குறைகளை ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள். மனப்பூர்வமாக இல்லாமல் வாய் தவறிக்கூட பிழையாகப் பேசியிருக்கலாம்.

அவசர விஷயத்திற்காக அண்மையில் உள்ள இடங்களுக்குப் போவதைத் தடுக்காதீர்கள். (ஆனால் ஹிஜாப் பேணப்பட வேண்டும்)

தொலைப்பேசிக்கு (நீங்கள் அருகில் இல்லையென்றால்) பதில் அளிப்பதைக் கண்டிக்காதீர்கள். (குழைந்து பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்யுங்கள்)


பொறுமையும் சாந்தமும்

மணவாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் வருவது சாதாரண விஷயம்தான் (வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதுபோல ஒவ்வொரு வீட்டிலும் இவை ஒவ்வொரு உருவத்தில் உலாவருகின்றன). அதிகப்படியான பொறுப்புகளில் உட்படுத்துவதும் சிறிய விஷயங்களைப் பெரிதாக்குவதும் போன்றவைதாம் திருமண பந்தத்தை முறித்துவிடும் அளவுக்குச் சென்று விடுகிறது.

இறைவன் விதித்த வரம்புகளை மீறும்போது கோபம் காட்டப்பட வேண்டும். உதாரணமாக தொழுகையைத் தாமதப்படுத்துதல், புறம் பேசுதல், தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களை டி.வியில் பார்த்தல் இது போன்றவை.

உங்களின் விஷயங்களில் செய்த தவறுகளை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடுங்கள்.

தவறுகளைத் திருத்துதல்
முதலில் (முழுமனதோடு) நல்லுபதேசம் செய்யுங்கள்.


அதிலும் திருந்தாவிட்டால், தாம்பத்யத்தில் ஈடுபடாது கட்டிலில் திரும்பிப் படுத்துக் கொள்ளுங்கள். (உங்களின் கோப உணர்வை இவ்வாறு வெளிப்படுத்துவது) அதற்காக, படுக்கையறையை விட்டு வெளியேறுவதோ, வீட்டைவிட்டு வெளியில் சென்றுவிடுவதோ அல்லது அவளிடம் பேசாமல் இருப்பதோ அல்ல.


அதிலும் திருந்தாவிட்டால், கடைசி முயற்சியாக காயம் ஏற்படாமல் இலேசாக அடிக்கலாம் (அதற்கு அவள் தகுதியானவளாக இருந்தால் மட்டும்).


மனைவியை அடிப்பது நபிவழியில் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்றும் நபியவர்கள் மனைவியை அடிப்பவர்களாக இருக்கவில்லை என்பதையும் ஒவ்வொரு கணவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மனைவி (எந்தக் காரணமும் இன்றி தாம்பத்தியத்திற்கு மறுத்தல், தொடர்ந்து தொழுகையை அதன் நேரத்தில் தொழாமல் இருத்தல், கணவனின் அனுமதியின்றி வீட்டைவிட்டு அதிக நேரத்திற்கு வெளியில் செல்லுதல் அல்லது எங்கே சென்றிருந்தாள் என்பதைக் கணவனுக்குச் சொல்ல மறுத்தல் இது போன்ற விஷயங்களில்) கட்டுப்பட மறுத்தால் கணவர் இந்த அனுமதியைப் பயன்படுத்தலாம்.

குர்ஆனில் (4வது அத்தியாயம் 34-ம் வசனத்தில்) கூறப்பட்டதுபோல் அவளுக்கு நல்லுபதேசம் செய்து படுக்கையிலிருந்து விலக்கி அதில் திருந்தாவிட்டால்தான் அடிக்கும் அனுமதியை கணவர் பயன்படுத்தலாம்.

காயம் உண்டாகும்படியோ முகத்திலோ மற்றும் மென்மையான பகுதியிலோ அடிக்கக் கூடாது.


செருப்பினால் அடிப்பது போன்ற மானபங்கப்படுத்தும் செயல்களில் ஒருக்காலும் ஈடுபடக் கூடாது.

மன்னிப்பும் கண்டிப்பும்
பெரிய தவறுகளை மட்டும் கணக்கில் எடுங்கள்.

உங்களின் விஷயத்தில் தவறு செய்தால் மன்னித்துவிடுங்கள். இறைவனின் விஷயங்களில் தவறு செய்தால் கண்டிக்கத் தவறாதீர்கள்.

தவறு செய்யக்கூடிய நேரங்களில் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மற்றும் அவளின் நற்பண்புகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் (உங்களின் கோபம் குறையலாம்).


எல்லா மனிதர்களும் தவறு செய்யக்கூடியவர்கள்தாம். எனவே மன்னிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். (மனச்சோர்வு, களைப்பு, மாதவிடாய் போன்றவற்றின் மன-உடல் உளைச்சல்களினால் தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு).

சமையல் சரியில்லை என்ற காரணத்திற்காக மனைவியைக் கடிந்து கொள்ளாதீர்கள். நபியவர்கள் சமையல் விஷயத்திற்காக மனைவியைக் கண்டித்ததே இல்லை. பிடித்தால் சாப்பிடுவார்கள், பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் இருந்துவிடுவார்கள்; தவிர எந்த விமர்சனமும் செய்ய மாட்டார்கள்.

தவறுகளை நேரிடையாக அவளிடம் வெளிப்படுத்துவதற்குமுன் வேறுவழியில் நயமாகச் சுட்டிக்காட்டுங்கள். ஏனென்றால் சில நேரத்தில் இது பயனுள்ளதாக இருக்கும்.

அவமரியாதை செய்யக்கூடிய வகையில் மனைவியைத் திட்டுவதைத் தவிர்ந்துக் கொள்ளுங்கள்.

பிரச்சினை பேசி தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்தால், தனிமை கிடைக்கும்வரை பொருத்திருங்கள்.

மனைவிமீது கோபம் ஏற்பட்டால், உங்களை சரியான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவற்காக கோபம் குறையும்வரை சற்றுப் பொறுமை கொள்ளுங்கள்.

உங்கள் இல்லறம் இனிமையாத் தொடர நல்வாழ்த்துகள்!


நன்றி :சகோதரி புதைனா.
Related Posts Plugin for WordPress, Blogger...