(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, November 26, 2012

நாகூர் தர்கா திருவிழாவுக்கு 40 சந்தனகட்டைகள் இலவசம் : தமிழக அரசு !!!


நாகூர் தர்கா சந்தனக்கூடு விழாவிற்காக ரூ. மூன்று இலட்சம் மதிப்பிலான 40 சந்தனக் கட்டைகளை இலவசமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்
தமிழக அரசின் செய்திக்குறிப்பு இத்தகவலைத் தெரிவிக்கிறது.

நாகூர் சந்தனக்கூடு விழாவுக்காக வாங்கப்படும் சந்தனக் கட்டைகளை மானியமாகvவழங்க வேண்டும் என்று நாகூர் தர்காவின் முன்னாள் தலைவரும், பரம்பரை ஆதினமுமாகிய  சையத் காமில் சாஹிப் காதிரி முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரது கோரிக்கையைப் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, சந்தனக்கூடு நாளன்று சமாதியில் பூசுவதற்காகத் தேவைப்படும் ரூ.3 லட்சம் மதிப்பிலான
சந்தனக் கட்டைகளை இலவசமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு  தன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.


இது நாட்டுக்கும் நம்ப ஊருக்கும் ரொம்ப முக்கியம்....??!!!!!!!!!


ரூம் போட்டு யோசிப்பாங்களோ ...


 நன்றி : இந்நேரம்.காம் 

Sunday, November 18, 2012

சொல்வதெல்லாம் உண்மை-அம்பலமாகும் அசிங்கங்கள்.!



கணவனை சந்தேகப்படும் மனைவி. மனைவி இருக்கும்போதே அடுத்த பெண்ணோடு தொடர்பு உள்ள கணவன். மாமியார் மருமகள் பிரச்சனை என குடும்ப சண்டையை ஊர் அறியச் செய்வதில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு பெரும் பங்குண்டு. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிர்மலா பெரியசாமி  இதற்காக கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார்.
இந்நிலையில்   இந்த நிகழ்ச்சிகள் குறித்து பதிலளிக்குமாறு, வழக்கொன்றில் மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட ஒருவர் தொடர்ந்த வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்த நபர் குறித்த பகுதியை ஒளிபரப்ப உடனடித் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.


மதுரை அய்யர்பங்களாவைச் சேர்ந்தவரும், மத்திய அரசின் முன்னாள் அலுவலருமான பெர்னாட்ஷான் (61 வயது) என்பவருக்கு ஜீ டிவி என்னும்  தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து அழைப்பொன்று வந்துள்ளது. 

அந்த அழைப்பில் அவருடைய மனைவி செல்வராணியிடம் பேசிய தொகா நிறுவனத்தார் 'சமையல் கலை' நிகழ்ச்சிக்கு வரும் படி அழைப்பு விடுத்துள்ளனர். அதன்பேரில் பெர்னாட்ஷான் தனது மனைவி செல்வராணியுடன் தொலைக்காட்சி அலுவலகம் சென்றுள்ளார்.  


படப்பிடிப்பு அரங்கில் கணவனை வெளியே அமரவைத்துவிட்டு, மனைவியிடம் பேட்டி கண்ட நிகழ்ச்சித் தொகுப்பாளர் நிர்மலா பெரியசாமி திடுமென்று பெர்னாட்ஷாவிடமும் குடும்ப வாழ்க்கை குறித்து தாறுமாறாகக் கேள்விகளைத் தொடுத்துள்ளார். இதனால் திகைப்படைந்த பெர்னாட்ஷாவுக்கு அப்போதுதான் இது சமையல்கலை நிகழ்ச்சி அல்ல வென்றும், 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி என்றும் தெரிய வந்துள்ளது.

ஊர் திரும்பியதும் உடனடியாக இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று  பெர்னாட்ஷான் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துவிட்டார்.

தனது மனுவில், "என்னை பற்றிய அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டாம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் கண்ணீர் விட்டு அழுதேன்.

அதற்கு ஒருங்கிணைப்பாளர்கள் மறுத்து விட்டனர். பிரச்சினைக்குரிய காட்சியை நீக்கி விட்டுதான் ஒளிபரப்புவோம் என்றும் கூறினர். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு சமரச தீர்வு ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் பொது இடத்தில் அடுத்தவரின் குடும்ப வாழ்க்கையை கேவலப்படுத்துகின்றனர். 


எனவே ஜீ டி.வியில் `சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை விதிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். மேலும் ஏற்கனவே படம் பிடிக்கப்பட்டுள்ள எனது குடும்ப வாழ்க்கை குறித்த நிகழ்ச்சியை ஒளிபரப்பவும் தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.



இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

மனுதாரர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விஷயத்தை ஒளிபரப்பினால் தனது மரியாதை பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். எனவே மனுதாரரின் குடும்ப வாழ்க்கை குறித்த விஷயத்தை ஜீ டி.வியில் ஒளிபரப்ப தடை விதிக்கப்படுகிறது," என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பிரச்சனை பெரும்பாலும் முடிவதில்லை மாறாக உசுப்பி விட்டு மேலும் கொழுந்து விட்டு எறிய வழிவகுகிறார்கள்.

அப்படி என்ன பெருசா இந்த நிகழ்ச்சியில் நடக்குது என்று யோசிப்பவர்களுக்கு ஒரு  சூடான SAMPLE EPISODE ... 


நம் சமுதாய மக்கள் குறிப்பாக பெண்கள் அதிலும் குறிப்பாக பள்ளியில் ,கல்லூரியில் படிக்கும் பெண்கள்  மார்க்க அறிவுமின்றி , உலக நடைமுறை அறிவுமின்றி எப்படி சீரழிகிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு ஒரு சான்று தேவையில்லை...


இது எங்கோ நடந்துவிட்ட நிகழ்வல்ல நம்மை சுற்றி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு... 


வயது வந்த பிள்ளைகளை எப்படி கையாள்வது என்பதை பெற்றோர்கள் தெரிந்திருக்க வேண்டும் .


வயதாகிவிட்ட பெற்றோர்கள் என்ன சொல்கிறார் ,எதுக்கு சொல்கிறார்கள் என்று பிள்ளைகளும் காது கொடுத்து கேட்க்க  வேண்டும்.


அப்பத்தான் நம் குடும்பம் உருப்படும்..... 




எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இந்த காதல்(?) ஜோடிகள்  வெகு சீக்கிரம் சீரழிவை சந்திக்கும் அதையும் சொல்வதெல்லாம் உண்மையில் பார்க்கலாம்.. பொறுத்திருங்கள்.


Friday, November 16, 2012

கூத்தாடி விஜய்யின் துப்பாக்கி படத்திற்கு நல்ல விளம்பரம்.


 முஸ்லீம்களை தீவிரவாதியாக சித்தரிப்பதில் ஹாலிவுட்டை மிஞ்சிவிடும் நமது தமிழக கூத்தாடிகளின் திரைப்படம் என்றால் அது மிகையாகாது.

தமிழ் சினிமாவில் முஸ்லிம்கள் என்றால் கறிக்கடை நடத்தும் பாய், சாம்பிராணி போடும் பாய் என்று தான் பழைய படங்களில் காட்டி வந்தனர். கதாநாயகர்களை சிறைக் கைதியாகக் காட்டினால் அவர்களது சிறை எண் 786 என்று நிறைய படங்களில் காட்டி முஸ்லீம் ரசிகர்களை குஷிப்படுத்துவார்கள் பழைய கூத்தாடிகள்..

பின்பு நாளடைவில் இயக்குனர் மணிரத்னம், கூத்தாடி விஜயகாந்த்,அர்ஜுன் போன்றவர்களின் படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க துவங்கினர்.

தமிழ் சினிமாவில் முஸ்லிம்களை இழிவு படுத்துவதென்பது புதிய விசயமல்ல; அது ஒரு தொடர் நிகழ்வு. பலர் திட்டமிட்டு இழிவு படுத்துகிறார்கள்; சிலர் பத்திரிக்கை செய்திகளை அடிப்படையாகக் கொண்டு படம் இயக்குகிறார்கள்.

எது எப்படியாயினும் அவர்கள் படம் எடுக்கும் இடத்திலும், நாம் அதை பார்க்கும் இடத்திலும் இருக்கின்றவரை தீர்வு பிறக்காது.சினிமா என்பது ஊடகம்; ஊடகம் என்பது ஆயுதம்; அந்த ஆயுதம் நம் எதிரிகளின் கைகளில் இருக்கும்வரை நாம் தாக்கப்பட்டுக் கொண்டே இருப்போம்!

இந்நிலையில் வேலாயுதம் படத்தை தொடர்ந்து.. கடந்த தீபாவளிக்கு வெளிவந்தது கூத்தாடி விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படம். படம் முழுக்க முஸ்லிம்கள் என்றாலே வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள் என்பதை படம் பார்க்கும் ஒவ்வொருவர் மனதிலும் பதியவைக்கும் விதமாக துப்பாக்கி திரைப்படம் அமைந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இத்திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி கூத்தாடி விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இதில் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள், அவர்களுக்கு மூளையாக செயல்படுபவர், ராணுவ பாதுகாப்பு அதிகாரி என அனைவரும் முஸ்லிம்களாக சித்தரித்துள்ளனர்.


இந்தப் படத்திலிருந்து இவர்கள் தரும் செய்தி, நாடெங்கும் ஸ்லீப்பிங் செல்களாக முஸ்லிம்கள் செயல்பட்டு வருகின்றனர். அண்டை நாட்டு (பாகிஸ்தான்) தீவிரவாத கும்பலின் உத்தரவுப்படி செயல்படக் கூடியவர்களாக நாடெங்கும் இவர்கள் உள்ளனர். ராணுவ பாதுகாப்புத் துறையிலிருக்கும் முஸ்லிம்களும் தீவிரவாத கும்பலுக்கு உதவி செய்கின்றனர். இதுதான் இப்படித்தின் மெசேஜ்.

இப்படத்தின் இயக்குனர் ஒரு பேட்டியில் “ நான் எடுக்கும் படங்களில் சமூக கருத்தை வைத்து தான் படம் எடுப்பேன் என்று பேசி இருந்தார் “ இப்போது தான் தெரிகிறது அவரின் சமூக கருத்து என்ன வென்று..
இது போன்று முஸ்லிம்களை தீவிரவாதியாக திட்டமிட்டு சித்தரிக்கும் படங்கள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது ... 

அதை பார்த்து ரசிப்பதும் அதை பற்றி பேசி நேரத்தை வீனடிப்பதும் , ரசிகர்மன்றம் வைத்து கூத்தடிப்பதும் நம் மக்கள் தான் என்பது வேதனையான உண்மை.
முதலில் மாற்றம் வர வேண்டியது நம்மிடம் தான். நாம் செய்ய வேண்டியது சினிமாவை, சீரியலை நாம் ஒவ்வொருவரும் முழுமையாக புறக்கணிக்க வேண்டும்..

காதல் ,காமம் இதை தாண்டி உலகில் எவ்வளவோ உலக மக்கள் பார்க்க வேண்டிய , சிந்திக்க வேண்டிய விசயங்கள் இருக்கிறது அதை இஸ்லாமிய வரம்பிற்குள் நின்று காட்சிபடுத்தி மாற்றத்தை முஸ்லீம்கள் கொண்டு வர வேண்டும் ...

அடுத்து அநீதிக்கு எதிராக வீதியில் போராடுவதோடு நில்லாமல் ..சட்டரீதியாக எதையும் சந்திக்க நம் சமுதாயம் எப்போதும் தயாராக இருக்க முன்வர வேண்டும் ....

இப்போது விஜய் வீடு முற்றுகை செய்தோம் .. என்ன ஆனது ?!! .. முன்பே காவல்துறை கூத்தாடி வீட்டிற்கு காவலுக்கு நின்று, முற்றுகைக்கு போனவர்களை கைதுசெய்து விடுவித்தது. பொதுவாக இது உப்பு சப்பு இல்லாமல் போயிருக்க வேண்டிய விஷயம் ஆனால் நபிகள் நாயகத்தை அவமதித்த ஹாலிவுட் பட விவகாரத்தில் நம் இஸ்லாமிய அமைப்புகள் சில மாதங்களுக்கு முன் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை நகரையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. 

இதே நிலை துப்பாக்கி படத்துக்கு நேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்துபோன துப்பாக்கி தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ விஜய் ஆகியோர், அதிரடியாக சரண்டர் ஆகி மன்னிப்பு கேட்டுக்கொண்டு சில காட்சியை நீக்குவதாக உறுதிஅளித்துள்ளனர்.

(ஒற்றுமையுடன் ஒருமுறை ஒன்றினைந்தோம் எப்படி அலறுகிறார்கள் பார்த்தீர்களா !!!)

உடனே நம் மக்கள் ஏதோ படத்தை தடை செய்தது போல் மகிழ்ச்சியில் திளைகிறார்கள். ஆனால் உண்மையில் நாம் இப்பொழுதும் ஏமாற்றபட்டிருக்கிறோம். படம் முழுக்க தீவிரவாதிகளை பிடிக்கும் சமாசாரம் தான். முஸ்லீம்கள் இல்லாமல் எப்படி விஜய் தீவிரவாதிகளை பிடிப்பார்.?? சும்மா பேருக்கு இரண்டு சீன்களை கட்செய்வார்கள்,படம் ஓடிக்கொண்டு தான் இருக்கும் ...

ஒருவேளை நாம் இந்த படத்தை சட்டரீதியாக எதிர்த்தால் ,நீதி மன்ற தடை உத்தரவை கூட வாங்க முடியும் ...
உண்மையை சொல்லணும் என்றால் தற்போது இந்த படத்திற்கு விளம்பரமே முஸ்லீம்களான நாம் தான்.

அந்த அளவிற்கு என்ன முஸ்லிம்களை பற்றி தவறாக எடுத்திருக்காங்க என்று முஸ்லிம்களே படத்தை பார்க்க ஆவலாக இருப்பது பரவலாக தெரிகிறது – வேலகிங்டும் போங்க...

(துப்பாக்கி இதுவரை உலக அளவில் ரூ.10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம்.)

இதில் நன்மை என்றால் ஒன்றை மட்டும் சொல்லலாம் இனி வரும் படங்களில் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்க இயக்குனர்கள் கண்டிப்பாக யோசிப்பார்கள்.

அடுத்து விஸ்வரூபம் வர காத்திருக்கிறது ... என்ன செய்ய போகிறோம் ...
யோசித்து வச்சுங்க பா...

துணுக்கு  : துப்பாக்கி படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் இயக்குனர் முருகதாஸை செல்போனில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். உங்கள் துப்பாக்கி படத்தை 2 தடவை பாத்தேன். அருமையாக உள்ளது. நல்ல படம் என்றாராம்.. ??!! நம்மாளுங்க.. இவன போய் தலைவன் சொல்லிகிட்டு அலையுதுங்க 

Tuesday, November 6, 2012

வி.சி கட்சி பிரமுகர் நாகூரில் வெட்டி கொலை ..!


நாகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர்
நாகூர் அமிர்தானந்தமயி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவருடைய மகன் சத்தியமூர்த்தி (வயது35). இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகூர் நகர பொறுப்பாளராக உள்ளார். நேற்று மாலை சத்தியமூர்த்தி தனது நண்பருடன் நாகைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் இரவு 7 மணி அளவில் நாகையில் இருந்து நாகூருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிச் சென்றார்.
நாகை கலெக்டர் அலுவலகத்தை அடுத்துள்ள நாகூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே அவர் சென்றபோது சத்தியமூர்த்தியை ஒரு மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. உடனே சுதாரித்துக் கொண்ட சத்தியமூர்த்தி தப்பி ஓட முயன்று, அங்குள்ள ஒரு சிறிய சந்துக்குள் சென்றார். ஆனால் அந்த மர்ம கும்பல் அவரை விடாமல் பின் தொடர்ந்து அவரை சுற்றி வளைத்து, அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
கொலை வெறி தாக்குதல்
இதில் கழுத்து உள்ளிட்ட உடலின் பல்வேறு பாகங்களில் வெட்டுப்பட்டு, ரத்தம் சொட்டச்சொட்ட கீழே விழுந்த சத்தியமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதன்பின் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.இது குறித்து தகவல் அறிந்த நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பழனி, தியாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
கடைகள் அடைப்பு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. நாகையில் இருந்து நாகூருக்குச் சென்று கொண்டிருந்த ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை சத்தியமூர்த்தியின் ஆதரவாளர்கள் சிலர் தாக்கினர். 
இதனால் நாகை– காரைக்கால் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்த கொலை குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கொலை செய்யப்பட்ட சத்தியமூர்த்தியின் தம்பி ரெங்கையன் கடந்த ஜனவரி மாதம் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Posts Plugin for WordPress, Blogger...