(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, May 28, 2011

நாகூர் கிரசன்ட் பள்ளி மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களையும் பிடித்தது.



காரைக்காலில் ..

எஸ்,எஸ்.எல்,சி : அரபிக் பாடத்தில் நாகூர் மாணவி மாநில அளவில் முதலிடம்.

அல்ஹம்துலில்லாஹ்

முதலிடம் பெற்ற மாணவி ஆயிஷா மர்லியாவிற்கு  நாகூர் மக்கள் சார்பாகவும், நாகூர் ப்ளாஷ் இணையத்தின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Friday, May 27, 2011

கூத்தாடிக்கு ஏன் இவ்வளவு முக்கியதுவம் ? யார் இந்த ரஜினி.

(ஜசாகல்லாஹ் : சிந்திக்கவும் இணையதளம் மற்றும் சகோதரி : பாத்திமா நஸ்ரின்(facebook))  .

யார் இந்த ரஜினிகாந்த்? - ஏன் இந்த முக்கியத்துவம் செய்திதாள்களில்?

செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகிறது செய்திகள்.

 யார்? இந்த ரஜினிகாந்த் இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன? ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன்? மொத்த தமிழகமும் பட வேண்டும்.

அவர் ஒரு சிறந்த நடிகர், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிகணக்கில் பணம் வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கிறீர்கள். இதுதானே அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதாஎங்களுக்கு புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் எங்களுக்கு விளக்கலாம். .
  
அப்படி என்ன? இவர் பெரும் சமூக போராளியா? ஒரு சமூகத்தின் விடுதலைக்காக பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா?
  

செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா? பகத் சிங்கா அல்லது நேதாஜியா!! யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!! அவரும் ஒரு சாதாரண இந்திய குடிமகன். ஏன்? இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்.

 ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, குஜராத்தில் மோடியால் ஒரு இன அழிப்பு நடந்த போது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்.

 இவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா?

 உங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள் தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள்.

 உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களை போயி பார்த்தவர்கள் எத்தனை பேர்? இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள். முதியவர்கள், அனாதைகள் இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்.
  
அவர்கள் நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள்.

எழுதுங்கள் அதைவிட்டு விட்டு ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர் குணமாகி வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை, அவரை நான் பார்த்தேன் பேசினேன், இப்படி அறிக்கைகள் பறக்கின்றது ஒரு புறம், மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு பூஜைகள் இப்படி போகிறது.

ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ, அமெரிக்காவிலோ கொண்டு போயி பார்ப்பார்கள். அவரிடம் வருமானத்த்திற்கு அதிகமான அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன. உங்கள் தெருவில் உள்ள குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை பார்க்க முறையான வசதியோடு கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட ஒழுங்கா இல்லை.


இதை பற்றி எழுதுங்கள், கவலை படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று ஒரு வேற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை என்று மாறும். நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது. இந்த ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில் வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.

இந்த பத்திரிக்கைகள்தான் ஆதிக்க சக்திகளின் கைகளில் போகி விட்டது என்று பார்த்தால். மீதம் இருக்கும் இந்த வலைத்தலங்கலாவது உருப்படியாக மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசும் என்றால்? இவர்களும் சினிமாவிற்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நல்ல பதிவர்கள் கூட சினிமா செய்திகளை போட்டால்தான் நம் இணைய தளத்தையும், நாம் போடும் போஸ்ட்களையும் முன்னுரிமை தருவார்கள் என்ற மனநிலைமைக்கு தள்ளப்பட்டு விடுவார்களோ என்ற அச்சமும், கவலையும் ஏற்படுகிறது.

!எந்திர! தனமின்றி இயல்பாய் சிந்திப்போம்.

இதை நான் சினிமா பைத்தியகாரர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்..

( இதுல தர்காவில் வேறு ரஜினிக்கு பிரார்த்திக்கிறார்கள் என்னத்த சொல்ல?)


Tuesday, May 24, 2011

சமரசம் நகரில் பள்ளிவாசல் கட்டும்பணிக்கு வாரி வழங்குங்கள்



பள்ளிவாசல் மாதிரி :

தற்போதைய நிலவரம் : 


இந்த சிறுவனுக்கு உதவி நன்மையை கொள்ளை அடித்து கொள்ளுங்கள்.

திருநெல்வேலி மாவட்டம் மேலபாளயத்தை சார்ந்த சகோதரர்.எஸ்.ஜாகிர் ஹுசைன் அவர்களின் ஆறு வயது மகன் ஜெ.இஜாஸ் அஹமது பிறவியிலேயே வாய் பேசமுடியாத காது கேட்காத குறையுள்ளவன்.

மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள சகோ.ஜாகிர் ஹுசைன் தனது மகனை எப்படியும் குணபடுத்திட தொடர்ந்து தனது சக்திக்கும்மீறி முயற்சித்து வருகிறார்இறுதியாக சென்னை KKR மருத்துவமனையில் சோதித்த மருத்துவர்கள் நவீன சிகிச்சையின் மூலமாக இன்ஷாஅல்லாஹ் சிறுவன் இஜாஸ் அகமதுவின் குறையை நீக்கிவிடலாம் என உறுதியளித்துள்ளனர்.சிகிச்சைக்கு சுமார் ரூபாய் 7.5 லட்சம் வரை தேவைபடுகிறது.

ஏழ்மையின் இயல்புநிலையில் இருக்கும் சகோ.ஜாகிர் ஹுசைன் கருணையுள்ளம் கொண்ட சமூக சகோதரர்களின் உதவியை நாடுகிறார். கடந்த மாதமே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய சிகிச்சை பொருளாதார சூழ்நிலையால் முடியவில்லை. எனவே சில வாரம் தவணை கேட்டிருக்கிறார் மருத்துவர்களிடம்.

ஆகையால் அந்த ஏழை சிறுவனின் எதிர்காலம் சிறப்பாக அமைந்திட அல்லாஹுவின் அன்பிற்காக சிறுவன் ஜெ.இஜாஸ் அஹமதுவின் சிகிச்சைக்கு தங்களாலான பொருளாதார உதவியை விரைந்து வழங்கிடுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்... இன்ஷாஅல்லாஹ் ஏக இறையவன் சிறுவன் இஜாஸ் அஹம்துவிற்க்கு சிகிசையின்மூலமாக ஊனத்தை நீக்கிவைப்பனாக... பூரண ஆரோக்கியத்தை அளிதிடுவானாக... அவனது சிகிச்சைக்கு பொருளாதார உதவிகளை வழங்கிடும் அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் அல்லாஹ் ஈருலக வாழ்க்கையிலும் சிறப்பை தருவானாக...

மேல் விபரங்கள் மற்றும் பொருளாதார உதவி அளித்திட சிறுவன் ஜெ.இஜாஸ் அகமதுவின் தகப்பனார் சகோ.எஸ்.ஜாகிர் ஹுசைன் அவர்களை +919095573103 என்ற அலைபேசியில் தொடர்புகொள்ளவும்...

இந்த சிறுவனின் மருத்துவச்சான்று மற்றும் சிறுவனின் தந்தையின் வங்கி கணக்கு விபரம் இணைக்கப்பட்டுள்ளது.




Saturday, May 21, 2011

சி.பி.ஐ : சிரிப்புப் போலீஸ் ஆப் இந்தியா !

சி.பி.ஐ என்றழைக்கப்படும் மத்தியப் புலனாய்வுத் துறை பற்றி நீங்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது. ஊர் நாட்டில் ஓட்டுக் கட்சித் தலைவர்கள் வீட்டிலிருந்து காணாமல் போன ஜிம்மியில்  ஆரம்பித்து லோக்கல் போலீசால் ‘கண்டு’ பிடிக்க முடியாத கோழி களவாணி வரை துப்புத் துலக்கிக் கண்டு பிடிக்கும் சூராதி சூரர்களாக இவர்களை ஊடகங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம். கருணாநிதி வீட்டில் சி.பி.ஐ விசாரணை ரெய்டு என்றும் ஏதோ இந்த சூரப்புலிகளைப் பார்த்து கருணாநிதி குடும்பமே நடுநடுங்கி வீட்டின் மூலையில் குந்த வைத்து உட்கார்ந்திருப்பது போல தினமலர் அடிக்கடி குதூகலிப்பதையும் கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

தமிழ்த் திரையுலகின் தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் சூப்பர் கமாண்டோவான கேப்டன் விஜயகாந்த் பல படங்களில் டில்லி சி.பி.ஐ அதிகாரியாகத் தோன்றி பாகிஸ்தான் தீவிரவாதியிடம் தங்கத் தமிழில் லெச்சர் அடித்தே டயர்டாக்கி மடக்கிப் பிடிப்பதைப் பார்த்திருப்பீர்கள். மலையாளத் திரைப்படங்களிலும் கூட மம்மூட்டி மோகன்லால் வகையறாக்கள் சி.பி.ஐ அதிகாரிகளாகத் தோன்றி உள்ளூர் போலீசால் கண்டே பிடிக்கமுடியாத பல்வேறு சிக்கலான வழக்குகளைத் தீர்த்துக் கொடுத்திருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் ஏதோ கோழியோ ஆடோ களவு போன மேட்டரில் சி.பி.ஐ விசாரணை கோரி தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் “அட விடுங்கப்பா… இவங்க எத்தனை ஊர் பஞ்சாயத்தைத் தான் தீர்க்க முடியும்” என்று சி.பி.ஐயின் மேல் கருணையோடு ஒரு நீதிபதி தீர்ப்பு கூட வழங்கியிருந்தார்.
இப்படியாக சி.பி.ஐ பற்றிய ஒரு பயங்கரமான இமேஜும், அவர்களின் விசாரணையின் மேல் மக்களிடையே ஒரு நம்பிக்கையையும் பல ஆண்டுகளாகவே திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதுக்கு இத்தனை பில்டப் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. இப்படி ஊடகங்களாலும் சினிமா உலகத்தாலும் ஷெர்லக் ஹோம்சுக்கு இணையான துப்பறிவாளர்களாக ஜாக்கி வைத்து தூக்கிப் பிடிக்கப்பட்ட சி.பி.ஐ, சமீப நாட்களாக மக்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல் அல்லாமல் எதார்த்தத்தில் சீரியஸான காமெடி பீஸ்களாகத் தான் இருக்கிறார்கள் என்கிற உண்மை இப்போது அம்பலமாகியிருக்கிறது.

சமீபத்தில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட உடன், பாகிஸ்தானில் தான் உலகத்துத் தீவிரவாதிகளெல்லாம் இருப்பது போலவும் ஒரு சீன் போட்டது இந்திய வெளியுறவுத்துறை. இதற்காக பாகிஸ்தானில் பதுங்கிக் கிடக்கும் ‘அதிபயங்கரமான ஐம்பது தீவிரவாதிகள்’ பட்டியல் ஒன்றைத் தயாரித்த உள்துறை அமைச்சகம், அதைப் பாகிஸ்தான் அரசிடம் கொடுத்து இவர்களைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அதைத் தொடர்ந்து களத்திலிறங்கிய இந்திய முதலாளித்துவ ஊடகங்கள், தமது பஜனையை ஆரம்பித்து சிறப்பாக நடத்தி வந்தது.
இந்நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகச் சொல்லப்பட்ட மேற்படி தீவிரவாதிகள் பட்டியலில் இருக்கும் வாஜுல் காமர் கான் என்பவர், மும்பையின் அருகே உள்ள தானேவில் தான் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார் என்கிற உண்மை ஊடகங்களில் அம்பலமானது. உடனே இதற்கு விளக்கமளித்த மத்திய உள்துறை அமைச்சர் செட்டிநாட்டுச் சிதம்பரம், இது ஏதோ சின்னத் தவறு தான் என்றும், தெரியாமல் நடந்து விட்ட இத்தவறைப் பற்றி தீவிரமாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிப்பதாகவும், நடந்ததற்குத் தானே பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் அறிவித்தார்.

அவர் சொல்லி வாய் மூடவில்லை. அதற்குள் அதே பட்டியலில் இருக்கும் இன்னொரு தீவிரவாதியான பெரோஸ் அப்துல் ரஷீத் கானும் இந்தியாவில் தான் இருக்கிறார் என்கிற உண்மை அம்பலமாகிறது. முதல் நபராவது ஒளிந்து வாழும் நபர். இரண்டாவது நபரோ ஏற்கனவே இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்.
ஏற்கனவே கைதான பெரோஸ் கான் மீது சர்வதேச போலீஸில் சொல்லி ஒரு பிடி வாரண்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டு உலகமெல்லாம் தேடியலைந்துள்ளது சி.பி.ஐ. அது மட்டுமல்லாமல், இந்தியச் சிறையிலிருக்கும் இந்த நபர் பாகிஸ்தானில் ‘ஒளிந்து’ கொண்டிருப்பதாகவும், பாகிஸ்தான் அரசு இந்தத் தீவிரவாதியைப் பிடிக்க ஒத்துழைக்கவில்லை என்றும் எனவே பாகிஸ்தான் தீவிரவாத நாடு என்றும் தீவிரமாக பிரச்சாரமும் செய்து வந்தது.
தேடப்படுவது யார் பிடிபட்டது யார் என்கிற சாதாரண விவரத்தைக் கூட சரிபார்க்கத் துப்பில்லாத இந்த விசாரணை அமைப்பு தான் ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ் உள்ளிட்ட பல்வேறு ஊழல் முறைகேடுகளை விசாரித்து வருகிறது என்பதை வாசர்களுக்கு நினைவூட்டுகிறோம். தீவிரமான போலீஸ் பயிற்சி, ஒற்றறிவதிலும், உளவுத் தகவல்களைச் சேகரிப்பதிலும், விசாரணை முறைகளிலும் உலகத்தரமான பயிற்சி, என்று சகல வகைகளிலும் தேர்ச்சி பெற்ற தொழில் முறை நிறுவனமே இந்த லட்சணத்தில் இருக்கும் போது, அண்ணா ஹசாரே உருவாக்க நினைக்கும் ஜன் லோக்பால் விசாரணை அமைப்பு எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை வாசகர்கள் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.
சி.பி.ஐ, ஐ.பி, என்.ஐ.ஏ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளும் உளவுப் பிரிவும் உண்மையில் குற்றத்தடுப்பு, உண்மையைக் கண்டறிதல் என்கிற மக்கள் நல நோக்குக்காக இல்லாமல் வெறும் ஆளும் வர்க்க சேவைக்கென்றே வளர்த்தெடுக்கப்பட்டிருப்பதன் விளைவு தான் இப்போதைய இந்த அவமானங்களுக்குக் காரணம். ஃபோபார்ஸ் முதல் ரிலையன்சு வரை பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றவாளிகளையும், முதலாளிகளையும் காப்பாற்றிய நிறுவனம்தான் இந்த சி.பி.ஐ.
ஆட்சிக்கு எதிரானவர்களைக் கண்காணிப்பது, மிரட்டுவது என்பதற்காகவே பயன்படுத்தப்படும் இந்தக் கருவிகள், என்ன தான் பயிற்சியளிக்கப்பட்டாலும் கடைசியில் இப்படி காமெடிப் பீஸுகளாக சீரழிந்து போவது தவிர்க்க முடியாது என்பதே நிதர்சனம். லோக்கல் போலீசு சரியில்லை, சி.பி.ஐதான் உலகத்தரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மிடில்கிளாஸ் மாதவன்கள் இனியாவது உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளட்டும்.
நன்றி : வினவு

நாகூர் தர்கா பக்தர்கள் ரஜினி நலம்பெற சிறப்பு பூஜை..??!!






"செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்பீராக!இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர்.(அல்குர்ஆன் 18:103, 104)


நீ யாருக்கு பிரார்த்திக்கிறாய் என்று உனக்கு இன்னும் புரியவில்லையா சகோதரரா ?  

கூத்தாடி ரசிகர் மன்றம் கொடுக்கும் அற்ப காசுக்கும் , போட்டோ பொசுக்கும் உன் ஈமானை அடகுவைத்துவிட்டாயே  சகோதரா ? ... உன் தர்கா விசுவாசம் உன்னை எப்படியெல்லாம் கொண்டுசெல்கிறது பார்த்தாயா ... நல்லவேளை நம்மை கருவறுக்க நினைக்கும் கூடாரத்தின் விசுவாசியான இந்த கூத்தாடிக்காக  நீ அல்லாஹ்விடம் கையேந்தாமல் இருந்தியே அத நினைத்து சந்தோசபட்டு கொள்கிறோம்.

Friday, May 20, 2011

சகோ.சச்சா முபாரக் மவ்வுத்.




தமிழக தர்காக்கள் ஒருங்கிணைப்பு பேரவை மாநில தலைவரும், திமுக பிரமுகருமான சகோ.சச்சா முபாரக் உடல்நல குறைவு காரணமாக திடீர்  மரணம்.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அவருக்கு குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை இருந்ததாக தகவல்.

ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுகிக்க வேண்டியதாகவே இருக்கின்றது. (எனினும்) உங்கள் (செயல்களுக்கான) கூலிகளை நீங்கள் பூரணமாக அடைவதெல்லாம் மறுமைநாளில்தான். ஆகவே (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுவர்க்கத்தில் புகுத்தப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 3 : 185)

Tuesday, May 17, 2011

தமிழக முதல்வர் ஜெயலலித்தா அவர்களுக்கு - வாக்காளன் எழுதுவது

தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு.....,


தேர்தலின் போது மட்டுமே உங்களைப்போன்ற அரசியல்வாதிகளுக்கு மகேசனாக தெரியும் ஒரு சாதாரண வாக்காளன் எழுதிக்கொள்வது...
நீங்கள் நலமாக இருப்பீர்கள், ஆனால், நாங்கள் நலமாக இல்லை....

மூன்றாவது முறையாக முதல்வரானதிற்கு வாழ்த்துக்கள். தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் அசுர பலத்துடன் மீண்டும் இவ்வளவு பெரிய வெற்றியடைந்ததற்கு உங்களின் ராஜதந்திரமோ, கூட்டணி பலமோ, களப்பணியோ காரணமில்லை, முந்தைய ஆட்சியாளர்களின் இமாலய தவறுதான் என்று நீங்களும் உணர்ந்தே இருப்பீர்கள்.

ஒரு கட்சி இப்படி அசுர பலத்துடன் ஆட்சிக்கு வருவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல....
                         இடிப்பார் இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பார் இல்லாமல் கெடும்.
என்பது  வள்ளுவரின் குறள்.

இடித்து சொல்லவும், எடுத்துசொல்லவும் வாய்ப்பே இல்லாமல் உங்கள் கூட்டணி கட்சியே எதிர்கட்சியாகவும் மாறிவிட்டது.
(தொடர்ந்து விஜயகாந்த் உங்கள கூட்டணியில் இருப்பாராவென்று சந்தேகமே...கூட்டணியிலிருந்து உங்களால் விரட்டப்படலாம், அல்லது அவரே விலக நேரிடலாம் ஆனால் அதுவரை....உங்கள் தவறுகளை எடுத்து சொல்ல யார் இருக்கிறார்கள்?)

பரவாயில்லை, இதுதான் மக்களின் தீர்ப்பு என்னும் போது விமர்சிக்க யாரால் முடியும்? (ஆனால், தோற்கும் ஒவ்வொரு முறையும் மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்காமல் வாக்குப்பதிவு மிசினையும், தேர்தல் ஆணையத்தையும்  குறைசொல்லும் உங்கள் தைரியம் இங்கு யாருக்குமில்லை என்பதையும் இங்கு சொல்லித்தான் ஆகணும்.

நல்லவேளை உங்கள் கட்சி தோற்ற மற்ற இடங்களில் வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு என்று சொல்லாமல் விட்டீர்களே....அந்த அளவுக்காவது சந்தோஷ பட்டுக்கொள்ள வேண்டியதுதான்).
பிடிக்காத அரசு  ஊழியர்களை, காவல்துறையினர்களை பழி வாங்குவது, பந்தாடுவது, பிடிக்காதவர்களை அடித்து உதைப்பது, கஞ்சா கேஸ் போடுவது, எஸ்மா, டெஸ்மா, போடா சட்டங்கள் மூலம் சிறைக்கு அனுப்புவது, மதமாற்ற தடை சட்டம் கொண்டுவருவது, கோவில்களில் ஆடு, மாடு, கோழி வெட்டக்கூடாது என்று தடைபோடுவது பத்திரிகைகளின் குரல்வளையை நெறிப்பது போன்ற  கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யாமல் ஒரு நல்லாட்சியை தாருங்கள்.

 குறிப்பாக சசிகலா  வகையறாக்களை கட்சியிலும், ஆட்சியிலும் தலையிட விடாமல் தள்ளியே வையுங்கள். உங்களின் கடந்த கால ஆட்சியில் அவரால்தான் உங்களுக்கு கெட்டபெயர். கலைஞருக்கு அவரின் குடும்பம் என்றால் உங்களுக்கு சசியின் குடும்பம்.

கடந்த 1991-ஆம் ஆண்டு ஆட்சியில் சபாநாயகராக இருந்த சேடப்பட்டி முத்தையாவை சபாநாயகர் இருக்கையிலிருந்து எழ வைத்துவிட்டு அந்த இருக்கையில் சசிகலாவை அமர வைத்து உங்கள் நட்பின் தீவிரத்தை காட்டி, சட்டசபை மரபையே கேலிக்குரியதாக்கினீர்கள். இப்போதும் அப்படி செய்து விடாதீர்கள். சபாநாயகர் இருக்கையில் சபாநாயகரை மட்டும் அமர வையுங்கள்.

கலைஞரால் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக புதிய சட்டமன்ற கட்டிடம் பாண்டிச்சேரி போலீசின்  தொப்பி போல இருக்கிறது என்று கிண்டல் செய்து, இந்த சட்டசபை வளாகத்தில் காலடியே எடுத்து வைக்க மாட்டேன் என்று சபதமேற்று இப்போது முதல்வரானதும் பழைய கோட்டையிலேயே நுழைகிறீர்கள். அதற்கான மராமத்து  பணிக்காக எடுத்த எடுப்பிலேயே மக்களின் வரிப்பணத்தில் 50 கோடி ரூபாய்களை சிலவிடுகிறீர்கள்.

இப்படி செய்யும் நீங்கள்தான் கடந்தமுறை ஆட்சியில் இருந்தபோது ஜார்ஜ் கோட்டையில் இடவசதி போதவில்லை என்று புதிய சட்டமன்றம் கட்ட ராணி மேரி கல்லூரியை தேர்வு செய்து கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அதை கைவிட்டீர். இப்போது இதை விட வசதியாக இருக்கும் சட்டசபையை மறுத்துவிட்டு மீண்டும் கோட்டைக்கே திரும்பியிருக்கிறீர்கள். நீங்கள் மறுப்பதற்கு கலைஞர் கட்டிய கட்டிடம் என்ற காரணம் தானே தவிர வேறு என்ன இருக்க முடியும்?
யார் வெட்டிய கிணறாக இருந்தால்

 என்ன தண்ணீர் நன்றாக இருந்தால் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதுதானே?...
இதை மறுக்கும் நீங்கள்.....இன்று சென்னையில் பெருமளவு போக்குவரத்து நெரிசலை குறைக்க காரணமாக விளங்கும் மேம்பாலங்களில் அதிக மேம்பாலங்கள் கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டதுதான்....அப்படி கலைஞரால்  கட்டப்பட்ட மேம்பாலங்கள் வழியில் நான் பயணிக்க மாட்டேன் என்று அவற்றையெல்லாம் இடித்து விட்டு புதிதாக கட்டுகிறேன் என்று மக்கள் வரிப்பணத்தை வீணடித்து விடாதீர்கள்.
அடுத்து, மத்திய அரசின் திட்டங்களாக இருந்தாலும்...தமிழ்நாட்டில் கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ், வீட்டுவசதி திட்டம் போன்றவற்றை நீக்கி விடாதீர்கள்.

இன்று பெருமளவு உயிர் சேதத்தை தடுக்க 108 ஆம்புலன்ஸ் பெரிதும் காரணியாக விளங்குகிறது. குறிப்பாக கலைஞர் காப்பீடு திட்டம். ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த மருத்துவ வசதி இந்த திட்டத்தால் தான் கிடைத்திருக்கிறது. வேண்டுமானால் கலைஞர் காப்பீடு திட்டம் என்பதை உங்கள் ஆசான் எம்.ஜி.ஆர். காப்பீடு திட்டம் என்றோ, ஜெயலலிதா காப்பீடு திட்டம் என்றோ...இல்லாவிட்டால் உங்கள் தாயார் பேரில் சந்தியா காப்பீடு திட்டம் என்றோ பெயரை மாற்றி கொள்ளுங்கள். ஆனால் இந்த திட்டத்தை மட்டும் தயவு செய்து நீக்கிவிடாதீர்கள்.

அடுத்து, இலவசங்கள்....
மக்கள் விரும்புவது இலவசங்களை அல்ல....அப்படி இலவசம் தான் முக்கியமென்றால் அதையெல்லாம் கொடுத்த கலைஞரையே மீண்டும் தேர்வு செய்திருப்பார்கள். ஆனால், அவர்கள் உங்களை தேர்வு செய்திருக்கிறார்கள் என்றால் அதற்கு நீங்கள் கொடுப்பேன் என்று சொன்ன இலவசங்களால் அல்ல....தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உங்களை விட கலைஞரே நம்பகத்தன்மை உள்ளவர் என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது வேறு ஒன்றைத்தான்...

அதாவது மக்கள் விரும்புவது நல்ல வாழ்க்கை தரத்தைதான். மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து விட்டால் அவர்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்து அவர்களின் தேவைகளை அவர்களே பூர்த்தி செய்து கொள்வார்கள். பின்னர் யாரிடமும் எதற்காகவும் இலவசங்களுக்காக கையேந்த மாட்டார்கள். அதற்காக அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு திட்டம் தீட்டுங்கள்.


அடுத்து மின்சாரம்,
இன்று மின்தடையால் ஜெனரேட்டர், இன்வர்டர், UPS விற்பவர்களை தவிர மற்ற அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிறுதொழில், பெருந்தொழில் என்று பாரபட்சமில்லாமல் நீக்கமற அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தொழில் துறையே நலிந்து நசிந்து போய் விட்டது. மின்சாரம் தடையின்றி  கிடைக்க திட்டமிடுங்கள். இன்று இலவச மின்சாரங்கள் மூலம் பெருமளவு மின்சாரம் வீணடிக்கப்படுகிறது. இன்று இலவச மின்சார பயனாளிகளில் பலர் ஏக்கர் கணக்கில் சொத்து வைத்திருப்பவர்கள்தான். ஏழைகளுக்கு இலவச மின்சாரம் என்ற நோக்கமே அடிபட்டு விட்டது. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல்  சொத்து வைத்திருப்பவர்களுக்கு இலவச மின்சாரம் ரத்து என்று அறிவித்து முறைபடுத்துங்கள். அதுபோல...ஆங்காங்கே கொக்கிகள் போட்டு மின்சாரம் திருடுபவர்களை பிடித்து கடுமையான தண்டனை தாருங்கள்.

அடுத்து....மந்திரிகளை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்காதீர்கள்...
அது உங்கள் உரிமை என்றாலும் கூட அப்படி செய்வது  நிர்வாக சிக்கலுக்கு வழிவகுக்கும். ஒருவரை  ஒரு குறிப்பிட்ட துறைக்கு மந்திரியாக நியமிக்கிறீர்கள் என்றால்..

அவர் அந்த துறையை பற்றி தெரிந்து(புரிந்து) கொள்ளவே சிலகாலம் எடுக்கும். அப்படி அவர் அந்த துறையை பற்றி தெரிந்து கொண்டிருக்கும்போதே அவரை மாற்றிவிட்டு இன்னொருவரை, பின்னர் அவரை மாற்றிவிட்டு வேறொருவரை நியமிப்பதால் தமிழ்நாட்டிற்கு ஒரு பயனுமில்லை. இதனால்   உங்கள் கட்சி MLA-க்கள் அனைவரும் சுழற்சி முறையில் மந்திரியாகிவிடுவார்கள் என்பதை தவிர.....

இன்னும் நிறைய இருக்கிறது எழுத...ஆனால் வெளியில் ஆட்டோ வரும் சப்தம் கேட்பதால்  இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
இறுதியாக ஒன்று,இந்த முறையாவது நீங்கள் நல்லாட்சி கொடுங்கள்....இல்லாவிட்டால் கலைஞரின் தவறுகள் மூலம் நோகாமல் நீங்கள் ஆட்சிக்கு வந்ததுபோல...அடுத்தமுறை தி.மு.க. வருவதற்கு உங்கள் தவறே காரணமாகிவிடும் என்று கூறி விடை பெறுகிறேன்.

இப்படிக்கு
எதிர்பார்ப்புடன்...
வாக்காளன்

நன்றி : மின்னஜ்சலில் அனுப்பியவர் : sheik alaudeen - alaudeen_ska@yahoo.com

Saturday, May 14, 2011

சகோ.ஷேக்தாவூத்க்கு கிடைத்த உண்மையான வெற்றி.


நாகை சட்டமன்ற தொகுதியில் திமுக சின்னத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக போட்டியிட்ட வேட்ப்பாளர் சகோ .ஷேக் தாவூத்க்கும் அதிமுக வேட்ப்பாளர் ஜெயபாளுவிற்கும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து கடும் போட்டி நிலவியது.

நாகை தொகுதியில் வாக்களித்தவர்களின் நிலவரம் : 
ஆண்கள் 57864   
பெண்கள் 62424  
மொத்தம் 120288 + தபால் ஓட்டுக்கள் 452 = 120738
வாக்கு சதவீதம் 79.24 %

இதில் ஜெயபால்  61870 வாக்குகளையும் 
ஷேக் தாவூத் 56127 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதில் ஜெயபாலுவின் வெற்றியை உறுதி செய்தது துல்லியமாக 5743 வாக்குகளாகும்..

முதல் ஆறு சுற்றுவரை முன்னணியில் இருந்த ஷேக்தாவூத் பிறகு பின்தங்கி இறுதியில் சுமார் 5743 வாக்குகள்  வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என்று அறிவிக்கப்பட்டது .

இந்த தொகுதியில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வாக்குகள் 5000 வாக்குகள் என்ற வித்தியாசத்தில் தான் இருக்கும் என்றும், குறிப்பாக
சுமார் 40000/-  திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களை கொண்ட நாகை தொகுதியில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வாக்குகள் முஸ்லீம்கள் கையில் தான் இருக்கிறது என்றும் முன்னர் கூறியிருந்தோம்.

அதை அப்படியே நாகை தொகுதியின் முடிவுகளில் பிரதிபலித்துள்ளது
சகோ. ஷேக் தாவூத்தை வீழ்த்திய 5000 வாக்குகளும். நம் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் தான் என்பது தெளிவாக தெரிகிறது.
முஸ்லீம்கள் வாக்குகள் ஜெயபாளுவிற்கு விழுந்தது தெளிவாக தெரிகிறது.
நமக்கு ஆப்பு வைக்க வேற யாரும் வேணா நம்மாளுங்கலே போதும்

 
ஜெயபால் வெற்றிபெற்றதற்கு மமக வினருக்கு தான் நாம் முதலில் வாழ்த்து சொல்லவேண்டும். அயராமல் ஜெயபால் வெற்றிக்காக உழைத்தார்கள். மமக தொண்டர்களுக்கு வாழ்த்துக்கள்.
சென்ற தேர்தலில் வெற்றிபெற்ற M.L.A மாரிமுத்து இருக்குற இடம் தெரியாமல் போனகதைத்தான் ஜெயபாளுவிற்க்கும்.. ஒரு வேலை நாகை தொகுதி MLA வை யாருக்கும் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அதற்கு முதலில் தமுமுக அலுவலகத்திற்கு சென்றால் அவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வார்கள் என்று நம்புகிறோம்.
என்ன தமுமுக மமக தொண்டர்களே செய்வீர்களா..?

முதலில் நீங்கள் இனி அதிமுகவுடன் இருப்பதே  சந்தேகமாசே ?

இப்போது அதிமுக தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கிறது
கூட்டணி ஆட்சியிலயே அம்மா பிறகட்சிகளை மதித்தது கிடையாது இப்ப  தனி ஆட்சி வேற ... உங்க நிலைமையை பொறுத்திருந்து பார்போம்.

சகோ.ஷேக்தாவூத் அவர்களுக்கு சொல்லிகொள்கிறோம்..

நீங்கள் அரசியலில் இறங்கியதை பெரும்பாலான ஊர் மக்கள் விரும்பவில்லை . நீங்கள் அரசியலில் இறங்குவதாக எடுத்த முடிவு தவறான முடிவு.

உழைத்து தொழில் செய்து முன்னேறிய நீங்கள், மக்கள் பணத்தை பறித்து வயிருவலக்கும் அரசியல்வாதிகளின் குட்டையில் விழுந்தது துரதிஷ்டமானது.

கோடிகணக்கில் பணத்தை செலவழித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றபிறகு வட்டியும் முதலுமாக கோடிகணக்கில் மக்கள் பணத்தை சுருட்டிக்கொண்டு சென்றுவிடுவார்கள். நீங்கள் அதற்குத்தான் தேர்தலுக்கு போனீர்களா ? கண்டிப்பாக இல்லை என்பது உங்களை பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும்.

உங்களுக்கு தேர்தலில் சீட்டு கொடுத்ததுக்கு காரணம் உங்களிடம் பணம் இருக்கிறது என்பதற்காக தான். அதை கட்சி மேலிடம் உத்தரவுப்படி வாரி இறைத்துவிட்டீர்கள்.. நீங்கள் வாரி இறைத்த கோடிக்கணக்கான பணத்திற்கு எந்த புண்ணியத்தையும் நீங்கள் பெற முடியாது.

முஸ்லிம் ஒருவர் அதுவும் நம் ஊரை சார்ந்த சகோதர் என்ற காரணத்திற்காக உங்களுக்கு தேர்தலில் வாக்களித்தோம் வாக்களிக்க சொன்னோம். யாரோ ஒருவருக்கு வாக்களிப்பதைவிட  உங்களுக்கு வாக்களிப்பது ஊருக்கு நல்லது என்பதற்காக தான்.

நீங்கள் வெற்றிபெற்று இருந்தால் எங்களுக்கு நல்லது தான்.
ஆனால் உங்களுக்கு அது நல்லதாக இருக்காது.

எங்களை பொருத்தவரை நீங்கள் தோற்றது ஒரு வகையில்....
இல்லை இல்லை பலவகையில் உங்களுக்கு நல்லது தான்.

அல்லாஹ் உங்களுக்கு நன்மையை நாடி இருக்கிறான் என்று நினையிங்கள்.

இனி நீங்கள் யாருக்கும் கை கூப்பி வணக்கம் சொல்ல தேவையில்லை.

இனி எந்த சிலைக்கும் மாலை போட தேவையில்லை..

இனி எந்த கட்சி தொண்டரின் மரணத்திற்கும் மலர்வளையம் வைக்க தேவையில்லை..

இனி எந்த கோவிலிலும் நின்று பரிவட்டம் கட்ட தேவையில்லை..

இனி எவனுக்கு பணத்தை இறைக்க தேவையில்லை..  

இனி எவனது தவறையும் நியாயப்படுத்த, ஜால்ரா அடிக்க தேவையில்லை.

இதுதான் உங்களுக்கு கிடைத்த உண்மையான  வெற்றியாக இருக்க முடியும். 

இந்த தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதால் ஒருவேலை நீங்கள் வெற்றி பெற்று இருந்தாலும். நீங்கள் எதிர்கட்சி என்பதால் பெரிய அளவில் எதையும் செய்ய முடியாது  அல்லது செய்யவிடமாட்டார்கள். அந்த வகையில் தோல்வியை நன்மையை நாடி சகித்துகொள்ளலாம்.

அத்தோடு இந்த அரசியல் முகத்தை தூக்கிஎறிந்துவிட்டு உங்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்புங்கள் என்பதே நாகூர் வாழ் மக்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்க முடியும்.இன்ஷாஅல்லாஹ்.
Related Posts Plugin for WordPress, Blogger...