(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, April 29, 2010

தர்கா - ஜியாரத் - உதவி - பரிந்துரை- நல்லடியார்கள் > ஓர் பார்வை















அவமானத்தால் நொறுங்கியவர்களா நீங்கள் ?? - உங்களுக்காக

அவமானம் என்பது அனைவருக்கும் ஒரு பொதுவான விஷயம், அவமானம் என்ற வார்த்தையில் சம்பந்தப்படாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஏதாவது ஒரு வகையில், ஒரு விசயத்தில் இதை நாம் சிறிதளவேனும் சந்தித்து இருப்போம் அல்லது சம்பந்தப்பட்டு இருப்போம்.

அந்த சமயத்தில் நமக்கு ஏற்படும் மன உளைச்சல்கள் சொல்லி மாளாது, எதையுமே பிடிக்காது வாழ்க்கையே வெறுத்து போய் இருப்போம் கொஞ்ச நாட்களுக்கு,..

.பொதுவாக கிண்டலடிப்பவர்களை பற்றியோ நம்மை பற்றி அவதூறு கூறுபவர்களை பற்றியோ கண்டுகொள்ள கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. நாம் தவறு செய்து இருந்தால் நம் தவறை சரிபடுத்திக்கொள்ள கிடைத்த வாய்ப்பாக அதை கருதுங்கள்.

நம்மை கிண்டலடித்தவர்கள் அல்லது அவமானபடுத்தியவர்கள் முன்பு நம்மை நிரூபித்து காட்ட கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவே இதை கருத வேண்டும்.

நம்மை கிண்டலடிக்கும் போதோ அல்லது வெறுப்பேற்றும் போதோ அமைதி காப்பதே நல்லது, நாம் நம் கட்டுப்பாட்டை இழக்கும் போது புது வகையான சிக்கல்களில் வலிய போய் நாமே சிக்கி கொள்கிறோம்.

நாம் எதையும் கண்டுகொள்ளவில்லை என்றால் அவ்வாறு செய்தவர்கள் வெறுத்து போய் அமைதியாக இருந்து விடுவார்கள். நம் செயல் நேர்மையாக நியாயமாக நம் மனசாட்சிக்கு சரியாக இருந்தால் போதுமானது யாரை பற்றியும் எதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. இதை உறுதியாக நம்புங்கள்.


இதோ சில அனுபவ கருத்துகள் :

"நம்மைக் கேலி செய்து மகிழ்கிறவர்கள் உண்டு. இவர்களைப் பெருந்தன்மையோடு விட்டுவிடலாம்.

ஆனால் நம்மை அவமானப்படுத்துகிறவர்களை என்ன செய்வது என்றே தெரியாதவர்கள் உண்டு.நறநற என்று பல்லைக் கடிப்பவர்கள்; உனக்கு வச்சிருக்கேன்,
இரு, வரட்டும் என்று பதிலுக்குச் சந்தர்ப்பம் தேடுகிறவர்கள்;

இந்த அவமானத்தை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை என்று அழுகிறவர்கள் ஆகியோர் அவமானங்களைக் கையாளத் தெரியாதவர்களே!

அவமானப்படுத்துகிறவர்கள் இந்த மூன்று செயல்களையும் கண்டு முன்னிலும் மகிழ்கிறார்கள். நறநற என்று கடிக்கிறவர்களைப் பார்த்தும், அழுகிறவர்களைப் பார்த்தும் அட நம் முயற்சிக்கு நல்ல பலன் என்று பூரிக்கிறார்கள். பதிலுக்கு அவமானப்படுத்த முன்வந்தாலோ, முன்னிலும் தீவிரமான அவமானப்படுத்தல்களுக்குக் களங்களை உருவாக்குகிறார்கள்.

இதற்கு ஈடுகொடுக்கக்கூடிய ஆற்றல் எத்தனை பேருக்கு இருக்கிறது? இவர்கள் எடுக்கும் வீரிய ஆயுதங்களுக்கு தாக்குப் பிடிக்க முடியாதவர்கள் எதற்காக அடுத்த கட்டத்திற்குப் போகவேண்டும்?

அப்படியானால் இவர்கள் செய்வதையெல்லாம் பொறுத்துக்கொண்டு போகச் சொல்கிறீர்களா? என்கிற கேள்வி எழுகிறது. நியாயமான கேள்வி.

அவமானப்படுத்துகிறவர்களைச் சக்கையாக ஏமாற்றவும்; அடங்கிப் போகவும்; இது வீண் வேலை என்று ஒதுங்கிப்போகவும் செய்ய ஒரே வழி. இவர்கள் தரும் அவமானங்களை ஏற்றுக்கொண்டு சற்றும் பிரதிபலிக்காமலும் பொருட்படுத்தாமலும் அலட்சியப்படுத்தியும் நடந்து கொண்டால், சே! இது வீண் வேலை என்று வெறுத்துப் போகிறார்கள்.


“ வீசிய பந்தைத் திருப்பி அடித்தால்தானே எதிராளி மறுபடி வீசுவான்?"


THANKS TO: லேனா தமிழ்வாணன்

Saturday, April 24, 2010

போலி கவுரவம் பொல்லாதது !! - எதார்த்த உண்மைகள்...

பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

கணவரும், மனைவியும் தாங்கள் வளர்த்து வந்த கழுதையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.


"யாராவது ஒருவர் கழுதை மீது அமர்ந்து செல்லலாமே'' என்றார் அவ்வழியே சென்ற ஒருவர். அதனால் கணவர் கழுதை மீது ஏறி உட்கார்ந்தார்.


"கொடுமைக்கார புருஷனாக இருப்பார் போலும். தான் மட்டும் சுகமாக அமர்ந்து கொண்டு மனைவியை நடக்க விடுகிறார்'' என்றார் இன்னொருவர். இப்போது மனைவியை அமரவைத்து கணவர் நடக்க ஆரம்பித்தார்.


"புருஷனை மதிக்காதவள். திமிராக கழுதை மீது அமர்ந்து செல்கிறாள்'' என்ற மற்றொருவரின் கமென்ட்டைத் தொடர்ந்து கணவரையும் தன்னுடன் ஏற்றிக் கொண்டாள் மனைவி.


"கொஞ்சமாவது ஈவு, இரக்கம் இருந்தால் பாவம் இந்த கழுதையை இப்படி கஷ்டப்படுத்துவார்களா?'' என்றார் வேறொருவர்.

இறுதியில் கணவர் மனைவி இடையே சண்டை வந்து விட்டது. "உங்களால்தான் இந்த அவமானம்'' என்றார் மனைவி. "உன்னால் என் கவுரவமே போச்சு'' என்றார், கணவர்.

நம் வாழ்வில் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடுத்தவர்கள் சொல்வதை கேட்பதும், போலி கவுரவவுமே முக்கியக் காரணம்.

போலி கவுரவம் மனிதனுக்கு குழந்தைப் பருவத்திலே தானாகவே ஏற்பட்டு விடுகிறது. ஓடிக் கொண்டிருக்கும் சிறுவன் கால்தடுக்கி விழுகிறான். யாராவது பார்த்து விட்டார்களா என இங்குமங்கும் பார்க்கிறான். யாரும் பார்க்க வில்லையென்றால் எழுந்து, துடைத்துக் கொண்டு தொடர்ந்து ஓடுகிறான். யாராவது பார்த்து விட்டால், அதுவும் சிரித்து விட்டால் போச்சு. அசிங்கம், அவமானம்! கண்ணீர் ஆறாய் ஓடுகிறது. தடுக்கி விழுவது கூட பெருங்குற்றம் என பிஞ்சு மனம் நம்புகிறது.

உலகில், போலி கவுரவத்தின் தலைமையகம் அமெரிக்காதான் என்றால் அது மிகையல்ல. அடுத்த பத்தாண்டுகளுக்கு கிடைக்கக் கூடிய எல்லா கடன் சலுகைகளையும் இப்போதே பெற்று நீயா, நானா என்று போட்டி போட்டு கவுரவம் பார்ப்பதில் அமெரிக்கர்கள் கில்லாடிகள். கிடைக்கிறது என்பதற்காக சக்தியை மீறி வாங்கிய வீட்டுக்கடன்களில் திவாலாகி, "அமெரிக்காவில் வீடு வேண்டுமா? ரொம்ப சீப்'' என்று இங்கு டீக்கடை முன்பு நில புரோக்கர்கள் கிண்டலாக கேட்கும் அளவுக்கு கடந்த ஆண்டு அங்கு பெரும் நெருக்கடி.

"என்னை அடியுங்கள், உதையுங்கள், சாகடியுங்கள்; ஆனால் மற்றவர் முன் அவமானப்படுத்தாதீர்கள்'' என்ற வேண்டுகோள் நம் சமூகத்தில் பிரபலம். விசாரணையின்றி, பொறுமையின்றி மிருகத்தனமாக நடந்துகொள்ள குடும்பத்தினருக்கு அனுமதி உண்டு. ஆனால் அதை மற்றவர்கள் பார்க்க மட்டும் கூடாது என்ற 'கவுரவ நிலைப்பாடு' இங்கு வேரூன்றி விட்டது.

இந்த போலி கவுரவம் படித்தவர்களையும் வாட்டி எடுக்கும் சக்தி கொண்டது.

"சக மாணவர்கள் முன் ஆசிரியர் என்னை திட்டி விட்டார்; அதனால் எனக்கு அவமானமாக இருந்தது'' என்று அம்மாவிடம் பையன் புலம்பினால் அது போலி கவுரவத்தின் அறியாப்பருவம். "இன்னொரு டீச்சர் முன்பு என்னைக் குறை சொல்லாதீங்க சார். என் கவுரவம் என்னாவது?'' என்று ஒரு டீச்சரே தலைமையாசிரியரிடம் குறைபட்டுக் கொள்வது போலி கவுரவத்தின் விபரீத வளர்ச்சி. தவறு தவறுதான். அதை யார் சொன்னால் என்ன? எங்கு சொன்னால் என்ன? அதற்கும் கவுரவத்திற்கும் என்ன சம்பந்தம்?

நாம் கவுரவமானவர்கள் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் நாம் அணியும் செருப்புக்கு எப்படி தெரியும்? பலர் மத்தியில் செருப்பு ரிப்பேராகிறபோது அதை தூக்கிப் போட்டு விட்டு வெறுங்காலோடு நடந்தால் சுமார் கவுரவம்; விலை உயர்ந்தது, சரி செய்து விடலாம் என அச்செருப்பை கையில் ஏந்தியபடி, தலைநிமிர்ந்து நடந்தால் சூப்பர் கவுரவம். இதை விடுத்து, பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக காலை தரையில் தேய்த்தபடி நடந்து வந்து வண்டியில் ஏறினால், அது போலி கவுரவம்.

பாழாய்ப்போன டூவீலர் என்ஜின் திடீரென எக்குத்தப்பாகி பெட்ரோலைக் குடித்து விடுகிறது. வண்டி பாதி வழியில் நின்று விடுகிறது. மனைவி ஒரு பக்கம், மற்றவர் ஒரு பக்கம், அவ்வளவுதான். போயே விட்டது நாம் கட்டிக்காத்த கவுரவம்! அருகில் உள்ள பெட்ரோல் 'பங்க்'குக்கு வண்டியைத் தள்ளிச் சென்றால் உடலுக்கு கவுரவம்தான். ஆனால் உள்ளத்துக்கும், உடன்வரும் செல்லத்துக்கும் அது கவுரவக் குறைச்சல் ஆயிற்றே. "என்ன ஆச்சு?'' என்று ஏதோ வண்டியில் குண்டு வெடித்த மாதிரி சிலர் கேட்பார்களே அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று நினைத்தால், அது போலி கவுரவம். வண்டி பிரச்சினைக்கும், வாழ்க்கை கவுரவத்திற்கும் என்ன தொடர்பு? - யோசித்துப் பாருங்கள்.

சாப்பிடாவிட்டால் கூட சிலரின் உடல் வஞ்சனை இன்றி வளர்ந்து விடுகிறது. இதற்காக உடலின் அளவைக் குறைக்க முயற்சி எடுக்க வேண்டுமேயன்றி, 'எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள்' என்று கவுரவம் பார்த்து வெளியில் வருவதைக் குறைக்கக் கூடாது. வீட்டுக்கு போலீஸ் வருவது பாஸ்போர்ட் விண்ணப்பம் தொடர்பாகத்தானே. இதில் 'மற்றவர்கள் வேறுமாதிரி நினைத்து விடப்போகிறார்கள்' என பயப்படுவது ஏன்?

இப்படி எங்கும் எதிலும், எப்போதும் பெரியவர்கள் கூட கவுரவம் பார்ப்பதால் இளைய தலைமுறையும் இதையே பின்பற்றி, தன் திறமையை வெளிக்கொண்டு வர தயங்குகிறது. 'உனக்கு தெரிந்ததைப் பேசு' என்று ஒரு நிகழ்ச்சியில் சொன்னால் 'சரியாகப் பேசவில்லையென்றால் எல்லோரும் தவறாக நினைப்பார்கள்' என்று சிறுவர்கள் பயப்படுகின்றனர். 'யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. முடிந்தவரை முயற்சி செய்' என்று அவர்களை ஊக்கப்படுத்தினால்தான் நாளைய இன்டர்விïக்களை அவர்கள் வெல்ல முடியும். 'ஊக்குவிப்பார் யாரும் இல்லையெனினும், குறைசொல்வோருக்கு குறைவில்லை'' எனும் நிலை ஆபத்தானது.

பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.
தன்னுடைய முக்கியமான வாடிக்கையாளர்களுக்காக 'பபே' விருந்துக்கு ஏற்பாடு செய்தது ஒரு வங்கி. ஒரு கையில் தட்டு; மறுகையில் இரண்டு ஸ்பூன்கள். சப்பாத்தி, சிக்கன் என போர்க் ஸ்பூனுக்குள் சிக்காத அயிட்டங்கள். பலமாகக் கொத்தினால் போட்டிருக்கும் கோட்டுக்குள் குழம்பு சீறி சிதறும் ஆபத்து. அதில் ஒரே ஒருவர் மட்டும் ஆரம்பத்தில் இருந்தே அசத்தினார். ஆம், ஸ்பூன்களை வீசிவிட்டு கையால் எடுத்து, கடித்து, மென்று சாப்பிட்டு 'எங்கேப்பா ஐஸ்கிரீம்' என்று கேட்டபடி நகர்ந்தார்! மற்றவர்கள் முகம் சுளித்தனர். ஆனால், பிறர் மத்தியிலும் தனக்காக சாப்பிட்டவர் அவர் ஒருவர்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

குறை சொல்வது, பொறாமைப்படுவது, அவசரப்பட்டு பேசுவது, ஒரு விஷயத்தை கேள்விப்பட்ட உடன் அப்படியே நம்பி விடுவது போன்றவை மனிதனின் பலவீனங்கள். நம் பண்புகளையும், உழைப்பையும், வெற்றியையும் அவ்வளவு சீக்கிரம் சக மனிதர்கள் நம்பி ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைவதில்லை. 'மற்றவர்' என்று நாம் கருதும் அந்த மனிதர்களுக்கும் இது பொருந்தும். இந்நிலையில் பிறர் பார்வைக்கும், சொல்லுக்கும் நாம் மதிப்பளித்து அவர்கள் பார்க்கிறார்களே, அவர்கள் முன் திட்டு வாங்குகிறோமே என்றெல்லாம் சங்கடப்படத் தேவையில்லை.

உடைக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் கல் சிலையாவதில்லை; உருக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் தங்கம் நகையாவதில்லை, பிசையப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் மண் பாத்திரமாவதில்லை; அடித்து, துவைக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் துணி சுத்தமாவதில்லை; நம் குறைகள் நம்மிடமிருந்து நீங்க, நமக்கு வேண்டியவர்கள் நம்மை கையாளும் போதுதான் நம் அறிவு முழுமையாகிறது. இதை யார் பார்த்தால் என்ன? எங்கு பார்த்தால் என்ன? நம் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஒரு விஷயம் நிஜ கவுரவமா அல்லது போலி கவுரவமா என்பதுதான் கேள்வி.

போலிக் கவுரவம் பொல்லாதது. அதை அறவே விட்டொழிப்போம். பிறர் மத்தியில் சுட்டிக் காட்டப்படும் தவறுகள் அவமானமல்ல; திருத்திக் கொள்வதே பரிகாரம். உண்மையில்லாத பட்சத்தில், நம்மை நோக்கி வந்து விழுகிற பழிச்சொற்கள் அசிங்கமல்ல; அதை பிறர் பார்த்தால் ஏற்படுகிற அவமானமும் நமக்கல்ல!!


NAGOREFLASH :நன்றி : Yahya Zackriya (மின்னஜ்சலில் )

Friday, April 23, 2010

இவரெல்லாம் சிலருக்குத் தெரியமாட்டார்கள் - இவர் முஸ்லிம் என்பதால் !!

"ஓர் உண்மையான முஸ்லிமாகிய என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது"

"As a devout Muslim I could not accept it"


இது, நியூயார்க்கைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநரான சகோதரர் முஹம்மது முகுல் அவர்கள், தன் டாக்சியில் ஒருவர் விட்டுச்சென்ற மிகப்பெரிய தொகையைத் திருப்பி கொடுத்தபோது, அதனைப் பாராட்டி ஒரு குறிப்பிட்ட தொகையை, அந்தப் பணத்தைத் தொலைத்தவர், பரிசாகக் கொடுக்க முன்வந்தபோது சொன்ன வார்த்தைகள்.

சுமார் நான்கு மாதங்கள் காலம் கடந்த செய்தி என்றாலும் இவருடைய செயல் நமக்கு ஒரு முன்னுதாரணமாய் இருப்பதால் இங்கே பிரசுரிக்கப்படுகிறது.

அது சென்ற ஆண்டு கிறிஸ்துமஸ் நேரம். சகோதரர் முஹம்மது முகுல் அஸதுஸ் ஸமான் (Muhammed Mukul Asaduz Zaman) அவர்கள் நியூயார்கில் மருத்துவம் பயின்று வருகிறார். பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த இவர் பகுதிநேர வேலையாக டாக்சி ஒட்டி வந்தார்.

கிறிஸ்துமசுக்கு முதல்நாள் அவருடைய காரில் பயணம் செய்த இத்தாலியைச் சேர்ந்த பிளிசியா என்பவரும் அவரது குடும்பத்தினரும் சுமார் 21,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்களை விட்டுச் சென்று விட்டனர்.

தாம் பணத்தைத் தொலைத்து விட்டதை உணர்ந்த பிளிசியா, காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது குடும்பத்தினரோ "இது நியூயார்க், இங்குத் தொலைத்த பணம் நிச்சயமாகக் கிடைக்காது" என்று கூறினார்கள்.

இங்கே தன் காரில் ஒரு பையைக் கண்ட முஹம்மதுக்கு அதிர்ச்சி. பையைத் திறந்தார். அதில் இரண்டு கட்டு யூரோக்கள். ஆனால் அவர் தேடியதோ தொலைத்தவருடைய விலாசம், மொபைல் நம்பர் என்று ஏதாவது ஒன்றை. ஒரு விலாசத்தைக் கண்டெடுத்தார். அந்த விலாசம் அவர் இருக்கும் இடத்திலிருந்து சுமார் அறுபது மைல்கள் தூரம்.

தன் நண்பருடன் அந்த இடத்திற்குச் சென்ற அவர் கண்டது பூட்டிய வீட்டை. அந்த வீட்டின் வெளியே ஒரு காகிதத்தில் தன் மொபைல் நம்பரையும் ஒரு வாசகத்தையும் எழுதி வைத்தார். அது:

"வருத்தப்படாதீர்கள், உங்கள் பணம் பாதுகாப்பாய் இருக்கிறது"

பின்னர் தன் வீட்டிற்குத் திரும்பினார். அவரது கைப்பேசி ஒலித்தது. ஆம் அது பிளிசியா அவர்கள். மறுபடியும் நீண்ட தூரம் பயணம் செய்து அந்த இடத்தை அடைந்தார். பணம் மற்றும் பொருட்களை ஒப்படைத்தார். அப்போது அந்த குடும்பத்தினர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இனி அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை அமைதியான முறையில் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.

அந்த மகிழ்ச்சியில் சகோதரர் முஹம்மதுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து ஒரு பெரும் தொகையை அவர்கள் கொடுத்தபோது, அதை வாங்க மறுத்து, சகோதரர் முஹம்மது சொன்ன வார்த்தைகள்,

"ஓர் உண்மையான முஸ்லிமாகிய என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது"

இந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்க மட்டும் சுமார் 240 மைல்கள் பயணம் செய்திருக்கிறார் அவர்.


"நான் அந்தப் பணத்தைப் பார்த்தபோது, அதை, கஷ்டப்படும் எனக்கு இறைவன் கொடுத்ததாக நினைக்கவில்லை. ஆம், எனக்கு பணம் தேவைதான். ஆனால் நான் பேராசைக்காரன் அல்ல (Yes, I am needy but not greedy). என் தாய் சொல்லுவார், நீ நேர்மையாய் இரு, கடினமாக உழை, நிச்சயம் முன்னேறுவாய் என்று. அது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது"

எனக் கூறும் இவருடைய செயலில் நிச்சயம் மனிதகுலத்திற்கு ஒரு படிப்பினை இருக்கிறது. என் மார்க்கச் சகோதரன் என்ற பெருமையும் நமக்கு மிஞ்சுகிறது.

ஆனால் இந்தச் செய்தி பெரும்பாலான அமெரிக்க மக்களுக்குப் போய்ச் சேரவில்லை. இதைச் சொன்ன சில ஊடகங்களில் பலவும் இவரது பெயரின் 'முஹம்மது' எனும் முதல் வார்த்தையைத் தவிர்த்தன - AP wire service ஊடகத்தை தவிர. என்ன காரணமோ இறைவனே அறிவான். ஆனால் உண்மையை மறைக்கவும் முடியாது, அது நீண்ட காலத்திற்கு மறைந்திருக்கவும் செய்யாது.

பங்களாதேஷைச் சேர்ந்த ஒருவர் இப்படி செய்வது இது முதல் தடவையல்ல. 2007 ஆம் ஆண்டு சகோதரர் உஸ்மான் என்பவர் சுமார் ஐந்து லட்சம் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள வைரங்களைத் தன் காரில் தொலைத்தவரிடம் திருப்பிக் கொடுத்திருக்கிறார். அல்ஹம்துலில்லாஹ்...

சகோதரர் முஹம்மது போல, சகோதரர் உஸ்மான் போல எந்த ஒரு சூழ்நிலையிலும் இறைஅச்சம் உள்ள நல்லோராக இறைவன் நம்மை வைத்திருப்பானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

My Sincere Thanks to:

1. Br.Mahmoud El-Yousseph, Retired USAF veteran.



References:

1. The Muslim cabbie who saved christmas - Iviews, dated 20th January 2010.

2. Bangladeshi cabbie in Newyork returns cash left in Taxi - BBC, dated 13th January 2010.

3. NY cabbie drives 200 miles to return 13,000 euros left in taxi by tourist - The Telegraph, dated 12th January 2010.

நன்றி : satyamarkam.com

Thursday, April 22, 2010

மின்னஞ்சல் கடிதங்களுக்கான பத்து அன்புக் கட்டளைகள்

ஈமெயில் அனுப்புபவரா நீங்கள்?



இன்று வீட்டு முகவரி அலுவலக முகவரியை விடவும் முக்கியம் உங்கள் மின்னஞ்சல் முகவரி. ஒற்றை வரியில் உலகமே உங்களை அடையாளம் கண்டுகொள்கிறது. ஈமெயில் எனப்படும் இந்த மின்னஞ்சலில் உள்ள சிறப்பம்சங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள விருப்பமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு வேலை வாய்ப்பு கோரியோ, அல்லது அயல்நாட்டில் இருக்கும் நிறுவனத்திடம் வணிக வாய்ப்பு வேண்டியோ நீங்கள் அனுப்பும் ஈமெயில் சில நிமிடங்களிலேயே நேரடியாக அவர்கள் கணினியில் இறங்கிக் கண்சிமிட்டுகிறது.

இடையில் யாரும் பிரித்துப் பார்க்க வாய்ப்பில்லை. தபாலில் தவறாது. சில சமயங்களில் ஸ்பாம் (spam) பகுதியில் சென்று விழுவதைத்தவிர உரியவரைச் சென்று சேர்வதில் அதிகபட்ச உத்திரவாதம் கொண்டது ஆகிய சிறப்புகள் ஈமெயிலுக்கு உண்டு. ஆனால், அதனைத் திறந்து வாசிக்கிறபோதே உங்களைப் பற்றிய உடனடி அபிப்பிராயத்தை அவர்களுக்கு எது உருவாக்குகிறது தெரியுமா? நீங்கள் ஈமெயில் எழுதியுள்ள முறை.

நாம், அவர்கள் கவனத்தைக் கவர்வதாக நினைத்துக் கொண்டு எல்லாவற்றையும் பெரிய எழுத்துக்களில் (Capital Letters) அனுப்புவோம்.

மேலைநாடுகளைப் பொறுத்தவரை பெரிய எழுத்துக்களில் ஈமெயில் அனுப்பினால், நாம் ஏதோ கோபத்திலும் எரிச்சலிலும் இருப்பதாகவும், அதை வெளிப்படுத்துவதாகவும் நினைத்துக் கொள்வார்கள்.

எனவே உங்கள் விசைப்பலகையில் உள்ள ‘ஷிஃப்ட்’ விசையை சரியாகப் பயன் படுத்துவது அவசியம்.

ஈமெயிலில், பெரிய பெரிய வாசகங்களைச் சுருக்கி வார்த்தைகளாய் அடிப்பதன் மூலம், நாம் இயல்பான தகவல் தொடர்பை மேற்கொள்வதாக நினைக்கிறோம். குறிப்பாக, மொபைல் போன்களில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் இந்த மோசமான கலாச்சாரத்தைத் தொடங்கிவைத்தன. நண்பர்கள் மத்தியில் அது தவறாக எடுத்துக் கொள்ளப்படாது.

ஆனால், அலுவல் மற்றும் வணிகரீதியான ஈமெயில்களில் வாக்கியங்களை, வார்த்தைகளாக சுருக்குவது, அலட்சியத்தையும் அக்கறை இன்மையினையும் வெளிப் படுத்தக்கூடும்.

"Regards" என்ற சொல் ”Regds”என்கிற போது உயிரற்றதாக ‘கடனே’ என்று சொல்லப்படுவதாக ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது. உரிய இடங்களில் நிறுத்தக் குறிகள் (Punctuations) பயன்படுத்தாத ஈமெயில்களும் அலட்சியமாய் எழுதப் பட்டதாகவே கருதப்படக்கூடும்.

ஆனால் சிலரோ, தங்கள் ஈமெயில் முழுவதும் நிறுத்தக் குறிகளை, பாரி வள்ளல்போல் வாரி வழங்குவார்கள். How are you!!!! என்று தொடங்கும் ஈமெயில் உங்களைப் பற்றியும் உங்கள் நிறுவனம் பற்றியும் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும்.

இந்தியாவிலிருந்து இப்படிப்போன ஈமெயில் ஒன்றிற்கு அமெரிக்க நிறுவனம் பதிலளித்துவிட்டுப் பின் குறிப்பில் இப்படிக் கேட்டது.
P.N: May we know why your mail is shouting?
(பி.கு: உங்கள் மின்னஞ்சல் ஏன் இப்படி சத்தம் போடுகிறது என்று தெரிந்து கொள்ளலாமா?)

சீரான எழுத்தளவுகளில், இலக்கணப் பிழைகள் இல்லாமல், அனாவசியமான நிறுத்தக் குறிகளைப் பயன்படுத்தாமல் வெவ்வேறு வண்ணங்களைப் பயன்படுத்திக் கண்களை உறுத்தாமல், மிதமாகவும், இதமாகவும் உங்கள் ஈமெயிலின் மொழி நடையும் எழுத்துக்களும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

வரிகளுக்கிடையே சமச்சீராக இடைவெளிவிடுங்கள். புல்லட் பாய்ண்ட் அல்லது எண் வரிசையிட்டு முக்கியமான விஷயங்களை நிரல்படுத்துங்கள்.

உங்கள் கணினியிலோ, அல்லது உங்களுக்கு யாராவது அனுப்பிய ஈமெயிலிலோ வித்தியாசமான, வசீகரமான படங்கள் இருக்கக் கூடும். அவற்றை சம்பந்தமேயில்லாமல் உங்கள் மடலோடு இணைத்து அனுப்பாதீர்கள்.

Attachment உடன் வருகிற ஈமெயிலைக் கொஞ்சம் அச்சத்துடன்தான் யாரும் திறப்பார்கள்.

சம்பந்தமில்லாத படங்களையோ பொன் மொழிகளையோ அனுப்பினால், அவர்கள் எரிச்சலடைய வாய்ப்புகள் அதிகம். விசையைத் தட்டினால் சில விநாடிகளுக்குள் சென்று சேரப் போகிறது உங்கள் ஈமெயில். எனவே அவசரப்படாமல், ஒருமுறைக்குப் பலமுறை படித்து பிழைகள் இல்லாமல் ஈமெயில் அனுப்புங்கள்.

எல்லாவற்றையும் விட முக்கியம், உடனடி பதில் எதிர்பார்த்துத்தான் ஈமெயில் அனுப்பப் படுகிறது. எனவே, ஆற அமர பதில் எழுதாதீர்கள். “போனவாரம் நீங்கள் அனுப்பிய ஈமெயில் கிடைத்தது” என்று உங்கள் பதில் தொடங்கினால் உங்கள் “சுறுசுறுப்புக்கு” ஈடுகொடுக்க, பதில் கொடுக்க முடியாதென்று உங்களுடன் வணிகத் தொடர்பு வைத்துக் கொள்ளவே தயங்குவார்கள்.

மின்னஞ்சல் என்பது விஞ்ஞானம் தந்துள்ள வரங்களில் ஒன்று. அதை மிகச் சரியாகப் பயன்படுத்தி வளருங்கள்

மின்னஞ்சல் கடிதங்களுக்கான பத்து அன்புக் கட்டளைகள்.

மின்னஞ்சல் கடிதங்கள் இன்று ஒவ்வொருவர் வாழ்விலும் இன்றியமையாத தேவையாய் மாறிவிட்டன. வெளியூரில் விருந்தினர் அல்லது நண்பர்கள் வீட்டிற்குச் சென்றால் உபசரிப்பதற்காக கொஞ்சம் காபி தரட்டுமா? என்று கேட்பது போல "உங்கள் இமெயில் பார்க்கணும்னா இங்கேயே எங்க கம்ப்யூட்டர்ல செக் பண்ணிக்கிறீங்களா?என்று கேட்பது வாடிக்கையாகிவிட்டது.

அந்த அளவிற்கு அனைவருக்கும் அன்றாடம் இமெயில் பார்க்க வேண்டியது அவசியமாகிவிட்டது. கடிதங்களை பேப்பரில் எழுதி கவர் வாங்கி மூடி ஸ்டாம்ப் ஒட்டி தபால் அனுப்புவது இப்போது எவ்வளவோ குறைந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் நாம் அனுப்பும் இமெயில் கடிதங்கள் நம்முடைய பண்பையும் காட்டுவதாக அமைய வேண்டாமா?

பேப்பரில் எழுதும்போது எத்தனை ஒழுக்க முறைகளைக் கடைப்பிடிக்கிறோம். சரியாக வரவில்லை என்றால் எத்தனை பேப்பரைக் கிழித்து எறிந்து விட்டு பின் எழுதுகிறோம். அதே போல இமெயில் கடிதங்களை அமைப்பதிலும் எழுதுவதிலும் பல நல்ல வழிகளைக் கடைப்பிடித்தால் நல்லது.

அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

1. ஒரே இமெயில் கடிதத்தினைப் பலருக்கும் அனுப்புகையில் பெறுபவர் முகவரியில் அனைத்து முகவரிகளையும் அமைக்க வேண்டாம். தங்களுடைய இமெயில் முகவரிகளைத் தேவையின்றி அடுத்தவர்கள் அறிவதனை யாரும் விரும்ப மாட்டார்கள். எனவே பெறுபவருக்கான இடத்தில் (To:) உங்கள் முகவரியினையும் BCC என்ற இடத்தில் அனைத்து முகவரிகளையும் அமைத்து அனுப்பவும். BCC என்பது Blind Carbon Copy ஆகும்.

அதாவது நீங்கள் யார் யாருக்கெல்லாம் இந்தக் கடிதத்தினை அனுப்பி உள்ளீர்கள் என்று யாருக்கும் தெரியாது. அதனைத் தெரிவிக்க வேண்டுமென்றால் அதனைக் கடிதத்திலேயே தெரிவித்து விடலாம். இதனால் நீங்கள் பலருக்கு அனுப்பி உள்ளது மட்டுமே அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் இமெயில் முகவரி மற்றவருக்குத் தெரிய வாய்ப்பில்லை அல்லவா!

2. கடிதத்தின் Subject என்ற பிரிவில் உங்கள் கடிதம் எதனைக் குறித்துள்ளது என ரத்தினச் சுருக்கமாகவும் அதே நேரத்தில் தெளிவாகவும் குறிப்பிடவும். இது கடிதங்களின் பட்டியலை உங்கள் நண்பர் பெறுகையில் கடிதம் எது குறித்து என்று அறிந்து அதற்கேற்ற வகையில் முக்கியத்துவம் தருவார். எனவே "Hi" or "Hello" or "Help" என்ற சொற்களை Subject பிரிவில் அமைப்பதனை அறவே தவிர்க்கவும்.

3. மிகப் பெரிய பைல்களை இணைப்பாகத் தருவதனைத் தவிர்க்கவும். இவற்றை இறக்கிட அதிக நேரம் எடுக்கும் என்பதாலும் அதற்கு இன்டர்நெட் இணைப்பிற்கான பணம் கூடுதலாகச் செலவழியும் என்பதாலும் உங்கள் நண்பர் எரிச்சல் பட்டு அதனைப் படிக்காமலேயே இருந்து விடுவார்.

எளிதாகச் செலவின்றி இறக்கம் செய்யக் கூடிய பிராட் பேன்ட் இன்டர்நெட் இணைப்பை எல்லாரும் வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். அப்படியும் ஒரு பெரிய பைலை இணைக்க வேண்டும் என்றால் இதற்கெனவே உள்ள Yousendit போன்ற தளங்களில் உங்கள் பைல்களை அமைத்து அதற்கான தொடர்பினை உங்கள் கடிதத்தில் தந்துவிடவும்.

4. ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை இணைப்பாகத் தர எண்ணினால் அவற்றை ஸிப் செய்து அனுப்பவும். அப்போது தான் கடிதத்தினைப் பெறுபவர் அனைத்து பைல்களையும் பெறுவது உறுதிப் படுத்தப்படும். இல்லை என்றால் ஒன்று கிடைத்து ஒன்று கிடைக்காமல் போகலாம்.

5. எந்த இமெயில் கடிதத்தினையும் ஒருவர் மீது கோபத்தில் இருக்கும்போதோ எழுத வேண்டாம். அப்படியே உங்கள் ஆத்திரத்தைத் தணித்துக் கொள்ள எழுதினாலும் உடனே அதனை அனுப்ப வேண்டாம். சிறிது காலம் கழித்து அனுப்ப அதனைத் திறந்து படித்துப் பார்க்கவும். நீங்களாகவே அந்த கடிதத்தினை மாற்றி எழுத முடிவு செய்வீர்கள்.

6. மின்னஞ்சல் கடிதத்தினைப் பெறுபவர் படித்துவிட்டார் என்ற சான்றினை நீங்கள் பெறும் வகையில் ஒரு கடிதத்தினை அனுப்பலாம். ஆனால் இது போன்ற பெற்றதற்கான அஞ்சல் ஒன்றைப் பெறும் வசதியைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. பெறுபவர் இது குறித்த ஆப்ஷன் விண்டோ ஒன்றைப் பெறுவார். பின் அதற்கு நேரம் ஒதுக்கி பதில் அளிக்க வேண்டும். எனவே அவர் அதனை விரும்ப மாட்டார்.

7. உங்களுக்கென தனிப்பட்ட முறையில் வரும் கடிதங்களுக்கு உடனடியாகப் பதில் கடிதம் ஒன்றை அனுப்பவும். ஏனென்றால் உங்களுக்கு கடிதத்தினை அனுப்பியவர் பதிலுக்குக் காத்திருப்பார்.

8. எப்போதும் மின்னஞ்சல் கடிதங்களை சுருக்கமாகவும் நேரடியாக விஷயத்தைத் தெரிவிப்பதாகவும் அமைத்திடுங்கள். இந்தக் கடிதத்தைப் படிக்கும் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நல்ல சுகத்துடன் இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன் என்று எழுதுவதெல்லாம் பேப்பரில் எழுதுவதற்குத்தான் சரி. மின்னஞ்சல் கடிதங்களில் இருக்கக் கூடாது.

9. கடித்ததை அனுப்ப பட்டனை அழுத்தும் முன் எப்போதும் கடிதத்தில் பிழைகள், இலக்கண தவறுகள் இருக்கிறதா என ஒரு முறை சோதித்த பின்னர் அனுப்பவும். தவறுகள் இருந்தால் நீங்கள் சீரியசாக அந்தக் கடிதத்தை எழுதவில்லை என்று உங்களைப் பற்றிய தவறான எண்ணத்தை அக்கடிதம் ஏற்படுத்திவிடும்.

10. நீங்கள் ஏதேனும் மெயிலிங் லிஸ்ட்டில் இருந்தால் உங்கள் முகவரி, மொபைல் போன் எண்கள் ஆகியவற்றை அனைவரும் அறியும் வண்ணம் தருவதனைத் தவிர்க்கவும். குறிப்பிட்ட நபர்களை உங்கள் தனி மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளச் சொல்லி பின் தெரிவிக்கவும். அல்லது அவர்களின் தனி மின்னஞ்சல் முகவரியினைப் பெற்று தொடர்பு கொள்ளவும். ஏனென்றால் மெயிலிங் லிஸ்ட்டில் உள்ள எல்லாரும் நல்லவர்கள் என்றும் உங்கள் நண்பர்கள் என்றும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது.


NAGOREFLASH// THANKS TO http://vanjoor-vanjoor.blogspot.com/2007/02/blog-post_27.html

Sunday, April 18, 2010

புகைபிடிப்பதால் ஆண்மைக்குறைவு ஏற்ப்படும்.

கடந்த நூற்றாண்டில்(1900-1999) புகைத்தல் நளினமானதாக நாகரிகத்தின் வெளிப்பாடாக சிலருக்கு ஒரு ஆண் தன்மையாக கூட தோன்றியது. திரைப்படம் விளம்பரங்கள், புதுமை, கவர்ச்சி, புகைவிடும் அழகு எல்லாமே கவர்ந்திழுக்க புகைக்கதொடங்கியவர்கள் தொட்டால் தொடருமாக விட முடியாது தவித்தார்கள்.


இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிகரட் கம்பனிகளாகிய பெரிய பணத்திமிலங்களினால் மூடிவைக்கப்பட்ட பல உண்மைகள் சட்ட ரீதியாக நிரூபிக்கப்பட்டன.அதில் முக்கியமானது புகைத்தல் அடிமையாக்கும் என்பது. சுவாச நோய்களை உருவாக்கும் என்பது நீண்ட காலமாக தெரிந்திருந்தாலும் அதன் மற்றைய தாக்கங்கள் பற்றிய தெளிவுவரவும் அதை சட்ட ரீதியாக்கவும் அண்மையில்தான் முடிந்திருகிறது. இதில் முக்கியாமானது புகைபிடிப்பது புகைபவரை காட்டிலும் சூழ இருப்பவரை கடுமையாக பாதிக்கும் என்பதுதான். அதனால் பொது இடத்தில் புகைத்தல் ஒரு சமூகவிரோதச் செயலாகிவிட்டது. அனேக நாடுகளில் அது சட்டவிரோதம் ஆக்கப்பட்டுவிட்டது.

ஒரு புள்ளிவிபரம் பிரித்தானியாவில் 120000 பேர் புகைபிடித்ததின் காரணமாக ஆண்மைக் குறைப்பாட்டுக்கு ஆளாகி உள்ளனர். இளவயதில் புகைக்கத்தொடங்கி நடுத்தர வயது வரும்போது ஆண்மைகுறைவால் ஆணுறுப்பு விறைக்காமை வந்துவிடுகிறது என்கிறது ஆய்வு.

nagoreflash //http://sinthikkavum.blogspot.com/2010/04/blog-post_6503.html

Wednesday, April 7, 2010

அறிவு இருக்கிறது ஒழுக்கமில்லையா? அல்லது அறிவே ஒழுக்கமிழந்து தவிக்கிறதா?

அறிவு இருக்கிறது ஒழுக்கமில்லையா? அல்லது அறிவே ஒழுக்கமிழந்து தவிக்கிறதா?

நற்குணங்கள். நல்லொழுக்கங்கள் இல்லாத கல்வி பயனற்றது என்று கூறுவார்கள். "கல்வியோடு ஒழுக்கம் தேவை" என்ற கோட்பாட்டைவிட கல்விக்கு சில ஒழுக்கங்கள் தேவைப்படுகின்றன என்ற உண்மையை நாம் பார்க்க விருக்கிறோம் இன்ஷாஅல்லாஹ்.

01. ஒரு விஷயத்தை விளங்கும்போது அல்லது பிறருக்கு விளக்கும்போது குறித்த விஷயம் தொடர்பான விளக்கம் ஒர் ‘அமானிதம்’ என்ற உணர்வு இருக்க வேண்டும். அந்த அமானிதத்தைப் பெறுவதிலும் கொடுப்பதிலும் மிகுந்த பொறுப்புணர்வு இருக்க வேண்டும். அரைகுறையாகவோ, ஆதாரமின்றியோ, விஷயத்தை பற்றிய பின்னணிகள் இல்லாத நிலையிலோ அதனைப் பேச முற்படலாகாது.

இதுபற்றி அல்குர்ஆன் கூறுகையில்.“உங்களிடம் ஒரு கெட்டவன் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதனை ஆதாரத்தோடு விளங்கிக் கொள்ளுங்கள். (அவ்வாறு செய்யாதபோது அந்த செய்தியை நம்பி) நீங்கள் ஒரு சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுதிவிட்டுப் பின்னர் நீங்கள் செய்த காரியத்திற்காகக் கவலைப்படுவீர்கள்.” (அல்ஹுஜுராத்: 49)

”நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிவுடையோரிடம் கேட்டுப் பாருங்கள்”
(அல்நஹல்: 43) என்றும்;

“சொல்வதை தெளிவாக சொல்லுங்கள்” (அல்ஸஜதா: 70) என்றும்;“

உமக்கு அறிவு இல்லாத ஒரு விஷயத்தை நீர் பின்தொடராதீர். நிச்சயமாக கேள்வி, பார்வை, உள்ளம் என்பன விசாரணைக்குட்படுத்தப்படும்” (பனூஇஸ்ராயீல்: 36) என்றும் அல்குர்ஆன் பலவாறாகப் பேசுகின்றது.

ஈராக்கில் நாசகார ஆயுதங்கள் இருக்கின்றன என்ற செய்தியை நம்பி ஈராக் மக்களுக்கு அமெரிக்கா இழைத்த கொடுமைகள் முதல், ‘ஒரு சகோதரன் தன்னைப் பற்றிக் குறை கூறினான்’ என்ற செய்தியை நம்பி அவனுக்கு ‘ஸலாம்’ கூறாமல் இருப்பது வரையிலான அத்தனை அறிவுகெட்ட தீர்மானங்களும் அறிவுக்கு இழைக்கப்படும் அநீதிகளே!


ஒரு நபிமொழியை யாராவது கூறினால் அது எந்தக் கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது என்று ஆதாரம் கேட்பதுபோல எந்த ஒரு செய்தியாயினும் அதனை ஆதாரத்தோடு அறிந்து கொள்வதும் பேசுவதும் அறிவில் பேணவேண்டிய அமானிதங்களாகும். இந்த அமானிதத்தை ‘தாஇகள்’ பேணாதபோது அவர்கள் சமூகத்தை பிழையான திசைகளில் வழிநடத்துவார்கள்; நடத்திக் கொண்டும் இருக்கிறார்கள்.இதனை நாம் வெளிப்படையாகவே பார்க்கிறோம்.

02. அறிவோடு இணைந்திருக்க வேண்டிய அடுத்த பண்பொழுக்கம் ஆதாரப்பூர்வமாக ஒரு விஷயத்தை விளங்கிவிட்டால் அதனை ஏற்று, அங்கீகரித்து அதற்கேற்ப தனது நடத்தைகளை மாற்றியமைத்துக் கொள்வதாகும். அல்லாஹ் அதனை பின் வருமாறு கூறுகிறான்:

”அவர்கள் சொல்வதைக் கேட்டு சிறந்ததைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கு அல்லாஹ் வழிகாட்டிவிட்டான். அவர்களே அறிவுள்ளவர்களாவார்கள்.” (அஸ்ஸுமர்:18)

பிறர் சொல்வதையெல்லாம் செவிமடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் சிலபோது ஏற்பட்டாலும் அவற்றில் சிறந்ததை, ஆதாரபூர்வமானதை ஏற்று, ஏனையவற்றைப் புறந்தள்ளி, நல்லனவற்றின் அடிப்படையில் செயற்படுகின்றவர்களை அல்லாஹ் பாராட்டுகிறான். இது அறிவுடையோரின் பண்பு என்றும் இந்த வசனம் கூறுகின்றது. இன்று இந்தப் பண்பு மிகவும் அரிதாக இருப்பதையே பார்க்கிறோம்.


இன்று கேட்பதைக் கேட்டு, வேண்டாதவற்றைப் புறந்தள்ளுவது எப்படிப் போனாலும் கேட்காதவற்றையும் கேட்டதாகக் கூறும் ஷைத்தானியப் பண்புகளல்லவா மலிந்து கிடக்கின்றன!

ஒரு மனிதனுக்கோ அல்லது ஒரு குழுவுக்கோ எதிராக முன்வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களோடு பதில் கூறப்பட்ட பின்னரும், அவற்றை நன்கு செவிமடுத்தவர்கள் மீண்டும் மீண்டும் அதே குற்றச்சாட்டை முன்வைத்துப் பிரசாரம் செய்யும் கீழ்த்தரமான பண்பு இன்றைய தஃவா களத்தில் ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்க வேதனையாக இருக்கிறது.

அறிவே பண்பிழந்து போன கதைதான் இது.அறிவோடு சார்ந்த ஒழுக்கம், இத்தகைய பண்பை இயல்பிலேயே வெறுக்கிறது. அவ்வாறிருக்க, இந்தப் பண்பு தஃவாவில் ஆதிக்கம் செலுத்தினால் சத்தியத்திற்கு சான்றுபகர வேண்டியவர்கள் சத்தியத்தைக் கொலை செய்கின்றவர்களாகவல்லவா மாறுவார்கள்?

03. அறிவோடு இணைந்திருக்க வேண்டிய மற்றொரு பண்பு, பிறரிடம் இருக்கின்ற நல்லம்சங்களைத் தெரிந்து கொண்டால் அவற்றை அங்கீகரிப்பதும் தங்களிடம் இருக்கின்ற குறைகள் தெரிய வந்தால் அவற்றை ஒப்புக் கொள்வதுமாகும்.எனினும், இந்தப் பண்பு தலைகீழாக மாறி இருப்பதனையே களம் சுட்டிக்காட்டுகிறது.

பிறரிடம் இருக்கின்ற நல்லம்சம் அவர்களது பலவீனமாகவும்; தங்களிடம் இருக்கின்ற குறை அல்லது தவறு ஒர் உயர்ந்த பண்பு என்றும் நோக்கப்படுகின்ற நிலையை என்னவென்று கூறலாம்?!

உதாரணமாக, அடுத்த மனிதர்களை மதிக்கும் பண்பு ஒரு சிலரிடம் இருக்கிறது. அதனைக் ’கோழைத்தனம்’ என்று கருதும் சிலர், தங்களிடம் இருக்கும் ‘பிறரை மதிக்காமை’ என்ற பண்பை ‘வீரம்’ எனக் கருதுகின்றார்கள்.

அதேபோன்று பிறரிடமிருக்கும் ‘விட்டுக்கொடுத்தல்’ என்ற பண்பை அவர்களது பலவீனம் எனக் கருதுவோர், தங்களிடம் இருக்கும் ‘பிடிவாதத்தை’ ‘உறுதி’ என்று கருதுகிறார்கள். பிறரிடமிருக்கும் ‘அமைதியான பேச்சை’ நயவஞ்சகம் அல்லது ‘முகஸ்துதி’ என்று கருதுபவர்கள் தங்களிடம் இருக்கும் வீறாப்புப் பேச்சை ‘சத்திய முழக்கம்’ என்று கருதுகின்றனர். பிறர் ஒர் அறிஞரது கருத்தைக் கூறினால் அது ’கண்மூடித்தனம்’ என்று கூறுவோர், தாம் ஒர் அறிஞரது விளக்கத்தைக் கூறினால் அது ‘குர்ஆனும் ஸுன்னாவும்’ என்கிறார்கள்.

பிறரின் ‘வெளிப்படைத் தன்மை’யை ஏமாளித்தனம் எனக் கருதுபவகள், தங்களின் ‘தந்திரபுத்தி’யை தாங்கள் பெற்ற உளப் பண்பாட்டுப் பயிற்ச்சி எனக் கருதுகிறார்கள். பிறர் செய்யும் பொதுப் பணிகளை ‘விரயம்’ என்று நினைக்கின்றவர்கள் பிறருக்கு கிடைக்காமல் தடுப்பதையும் தங்களது கட்சிக்குள் முடக்கிவைத்து தாங்கள் மாத்திரம் பயன்பெருவதையும் ‘சீர்திருத்தப்பணி’ எனக் கருதுகின்றனர்.பிறரின் அறிவு சார்ந்த பேச்சை ‘வேதாந்தம்’ எனக் கூறுகின்றவர்கள், தங்களது அறிவு வாசமே இல்லாத பேச்சை ‘இதயத்தோடு பேசுகிறோம்’ என்கின்றனர்.

பிறரது சமூக மாற்றக் கருத்துக்களையும் செயற்திட்டங்களையும் லெளகீகம் என்று கருதுகின்றவர்கள் தங்களது ‘இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன?’ என்ற போக்கை ஆன்மீகம் என்று கூறுகின்றனர்.உண்மையில் அறிவு கிடைத்த பின்னர் பண்புகள் இல்லாமல் போய்விட்டன என்பதல்ல இதன் பொருள். அறிவே தனது பண்பாட்டை இழந்து தவிக்கிறது என்பதுதான் இந்த அவலத்தின் அர்த்தமாகும்.பிறரது நல்லம்சங்களை அங்கீகரிக்காதவனும் தனது பலவீனங்கள், தவறுகளை ஒப்புக் கொள்ளாதவனும் தனது அறிவை மழுங்கச் செய்கிறான்; அறிவின் வாசலை மூடி விடுகிறான்.

அறிவு தன்னிடம் இருக்கிறது என்ற நினைப்போடு அறியாமை இருளில் மூழ்கிப் போகிறான். இத்தகைய அறிவுக் குருடர்களை அவர்களது மயக்கத்திலிருந்து விழிப்படையச் செய்வது சிரமமாகும். நேரிய, சீரிய அறிவு கொண்ட ஒரு மனிதனுக்கு நல்லம்சங்கள் யாரிடமிருந்தாலும் அவை நல்லம்சங்களாகவே தோன்றும். தவறு தன்னிடமிருந்தாலும் அது அவனுக்கு தவறாகவே தென்படும். அறிவு கெட்டுப்போன பின் எத்தனை முறை பார்த்தாலும் அந்தப் பார்வைகளுக்கு இந்த உண்மைகள் விளங்கப் போவதில்லை.

04. அறிவுடன் சார்ந்திருக்க வேண்டிய மற்றுமொரு பண்பு, கண்மூடித்தனமான பின்பற்றுதலுக்கும், தான் கூறுகின்ற கருத்தில் வெறித்தனம் கலந்து விடுவதற்கும் இடம் தராதிருத்தலாகும்.வெறித்தனம் கொண்டவர்களைத் தவிர உலகில் வாழ்ந்த அனைத்து அறிஞர்களும் ஆலிம்களும் தங்களது கருத்துக்களைப் போலவே பிறர் கருத்துக்களையும் மதித்திருக்கிறார்கள்.

அதன் பொருள் அவர்கள் தங்களது கருத்தில் உறுதியாக் இருக்கவில்லை என்பதல்ல. எனினும், இன்றைய சமூகத்தில் அதிலும் தாவாக் களத்தில் காணப்படுகின்ற கருத்து வெறிகள் காரணமாக எது ‘வெறி’ எது ‘உறுதி’ என்பதை வேறுபடுத்திப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.ஒருவர் தான் கொண்ட கருத்தை தனது வாழ்வில் கண்டிப்பாக கடைபிடிக்கிறார் என்பது பொருளாகும்.

அவர் தான் கொண்ட கருத்தை பிறரிடம் திணிக்க முற்படுகிறார் எனில், அவரிடம் ‘கருத்து வெறி’ இருக்கிறது என்ற பொருளாகும்.ஒருவர் தனது கருத்தை அறிவுபூர்வமாக் ஆதாரங்களுடன் விளக்கினால் அறிவுள்ளவர்கள் அதனை விளங்கி ஏற்றுக் கொள்வார்கள். திணிக்க முயல்வதற்குக் காரணம், தனது கருத்தில் இருக்கும் அறியாமையும் கண்மூடித்தனமும் வெளிப்பட்டு மக்களது அறிவுக்கு அவை வெளிச்சமாவதற்கு முன்னால் எப்படியாவது தனது கருத்தை பிறரது சிந்தனைக்குள் செலுத்திவிட வேண்டும் என்ற அவசரம்தான்.

எனவே வெறித்தனத்தோடு கண்மூடித்தனமும் எப்போதும் இணைந்திருக்கும். கண்மூடித்தனமாக ஒன்றை ஏற்றுக் கொண்டவர்கள்தாம் வெறித்தனமாக பிறரிடம் திணிக்க முயல்வார்கள். அறிவுபூர்வமாக ஒன்றை ஏற்றுக் கொண்டவர்கள் வெறித்தனமாக் அதனை பிறரிடம் திணிக்க முற்பட மாட்டார்கள்.

அவர்கள் அமைதியாக் அறிவுபூர்வமாகவே அதனை பிறரிடம் ஒப்புவிப்பார்கள்.எனவே, அவர்களுக்கு பிறரை சாடவேண்டிய, விமர்சிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படாது. பிறர் மீது வெறுப்புக் கொண்டு, அவதூறு பேசி, பழிசுமத்தி, சந்தேகங்கள் கிளப்பி, குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து, தந்திரங்கள் கையாண்டு, இரகசியம் ஒன்றாகவும், பரகசியம் வேறொன்றாகவும் நடந்து மக்கள் மத்தியில் கருத்தைப் பரப்பும் தேவை அவர்களுக்கிருக்க மாட்டாது.காரணம் அவர்கள் அறிவுபூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் ஒன்றை விளங்கியிருக்கிறார்கள்.

அதே பாணியில் அவர்கள் அமைதியாக அதனைப் பிறருக்கு விளக்குவார்கள், அப்போது கருத்து வாழ்வு பெறுகிறது. அறிவு போற்றப்படுகிறது.மாறாக வெறித்தனம் வெளிப்படும்போது அறிவு அசிங்கப்படுகிறது. கருத்து அஜிரணமாகிறது. பேச்சு விகாரமடைகிறது. மொத்தத்தில் பேசியவரிடமும் கேட்டவரிடமும் இஸ்லாம் உயிரிழ்ந்து போகிறது.

வெறித்தனங்கள் இஸ்லாத்தின் பெயரால் வாழ ஆரம்பிக்கின்றன. அதனால் இஸ்லாம் கொச்சைப்படுத்தப்படுகிறது.அறிவே ஒழுக்கமிழந்து போனதன் விளைவுகள்தாம் இவை. இவை மட்டுமல்ல, இன்னுமிருக்கின்றன. அறிவுள்ளவர்களுக்கு அந்த அவலங்கள் தென்படாமல் இருக்க மாட்டாது. அறிவு தம்மிடம் இருப்பதாக நினைப்பவர்களே அந்த அவலங்களை தங்களது சிறு சாகசத்தின் விளைவுகளாகவே பார்ப்பர்.
அப்போது வெளிச்சம் தரவேண்டிய அறிவு மங்கி மாசடைந்து போகிறது. வெளிச்சத்தின் வீடாக இருள் மாறுகிறது.

ஆக்கம் : உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜீல் அக்பர் நன்றி: அல் ஹஸனாத் ஜீலை 2009

NAGOREFLASH

Friday, April 2, 2010

ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்.

HEART ATTACK AND FIRST AIDS
ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்.
டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China) (Chinese Traditional Medicine).

ஹார்ட் அட்டாக் இந்த வார்த்தையே பயத்தை உண்டாக்கும், இதனால் ஏற்படும் பதட்டமோ பிரச்சனையை அதிகமாக்கும். நிதானமாக இக்கட்டுரையில் இருப்பது போல் செயல்பட்டால் ஹார்ட் அட்டாக்கிலிருந்து மிகவும் எளிதாக விடுபடலாம். (இன்ஷா அல்லாஹ்).

இதயம் இதன் அழகிய துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் விளக்கம். துடிப்புகளின் மவுனம் அதுதான் மரணம். இறைவன் நம்உடல் இயக்கத்திற்காக அளித்த ஓர் அற்புத தொழிற்சாலை. இதயம் அது தானாக இயங்குவதில்லை உடல் உறுப்புகள் பாதிப்பு அடையும் போது அவை தன் நிலையை மூளைக்கு தெரிவிக்க மூளை இதயத்திற்கு உத்திரவிடுகின்றது. இதயம் இரத்த ஓட்டம் மூலம் பாதிக்கப்பட்ட உறுப்புக்கு சக்திஅளித்து அதன் சக்தியை சமநிலைப்படுத்தி உறுப்பை சீராக இயங்க வைக்கின்றது.

பாதிப்படைந்த உறுப்பு அனுப்பும் தகவல் இதயத்திற்கு கிடைக்காமல் போனாலோ, இதயத்திற்கு தகவல் கிடைத்து இரத்தத்தை (சக்தியை) அனுப்பும்போது தடங்கல் ஏற்பட்டாலோ (இரத்த குழாய் அடைப்பு போன்ற காரணங்களால்) பல உறுப்புகள் பாதிப்படைந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு உறுப்புக்க போதுமான இரத்தத்தை அனுப்ப முடியாமல் போனாலே ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது.

ஆனால் நவீன மருத்துவத்தில் இதயம் தானாகவே இயங்குவதாக நினைத்து அதன் வேகத்தைக் குறைக்க மருந்து, மாத்திரைகள் கொடுத்து நன்றாக இருக்கும் இதயத்தை அநியாயமாக கெடுத்துவிடுகின்றனர்.

நுரையீரல், பெருங்குடல், வயிறு, மண்ணீரல், இதயம், சிறுகுடல், சிறுநீரகம் (கிட்னி), சிறுநீர் பை, பித்தப்பை மற்றும் கல்லீரல் போன்றவைகள் மிக மிக முக்கியமான உடல் உறுப்புகள். மற்றவை அனைத்தும் இந்த உறுப்புகளை சார்ந்தவையே. இந்த உறுப்புகள் எவ்வாறு இதயத்தோடு சம்பந்தப்படுகிறது என்பதையும் எந்தெந்த உறுப்பு பாதிப்படைந்தால் எந்தெந்த நேரத்தில் ஹார்ட் அட்டாக் வரும், எந்த சூழ்நிலைகள் மற்றும் சந்தற்பங்களில் வரும் இதற்கான முதல் உதவி முறைகள் என்ன? எப்படி செய்வது என்பதை இன்ஷா அல்லாஹ் இத்தொடரில் நாம் தெரிந்துகொள்வோம்.

கல்லீரல் (Liver) பித்தப்பை (Gall Bladder) சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்:
ஆரம்ப கால அறிகுறிகள்:
பித்தப்பை :
அதிகமாகக் கோபம் வரும், ஒரு பக்கத்தலைவலி, கண்களில் எரிச்சல், பித்தப்பையில் கல், வாய்ப்புண், வாந்தி, வாய் நாற்றம், காதுவலி, அடிக்கடி ஏற்படும் ஜுரம், தொடையில் வெளிப்பக்கத்தில் ஆரம்பித்து கால் சுண்டு விரல் வரை வரும் வலி அதனால் நடக்க இயலாமை, வாயில் கசப்புச் சுவை, கிறுகிறுப்பு, காது அடைத்தல், மசலா அதிகம் சாப்பிடுபவர்களுக்கு பித்தப்பை பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்புண்டு, உடம்பில் ஏற்படும் எரிச்சலோடு கூடிய வலி, துணி உடம்பில் பட்டால் கூட எரிச்சல் உண்டாகும். கால் கைகளை படுக்கைக்கு வெளியே நீட்டி விட்டுக் கொண்டு தூங்குவார்கள்.

கல்லீரல் :

கண் நோய்கள், பசியின்மை, தலைவலி, கோபம், மஞ்சள் காமாலை, வயிற்றுவலி, மலச்சிக்கல், குழந்தைகளின் வளர்ச்சி பாதித்தல், வாந்தி, மன அழுத்தம், முதுகுவலி, சிறுநீர் பிரியாமை, ஹெரனியா, அடிவயிற்று வலி, இரவு 1 மணிக்கு தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு பிறகு 3 மணிக்கு மீண்டும் தூங்க ஆரம்பித்தல், தூக்கத்தில் ஏற்படும் அரிப்பு, அலர்ஜி.

வரும் நேரம் : இரவு 11 மணியிலிருந்து 3 வரை.

மற்ற சூழ்நிலைகள் : குடிகாரர்களுக்கும், விடிய விடிய கண்விழிப்பவர்களுக்கும், ஓய்வில்லாமல் செயல்படுபவர்களுக்கும், மேற்குறிப்பிட்ட நேரம் இல்லாமல் மற்ற நேரத்திலும் வரும்.

அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம் : கை சுண்டு விரல் (small finger) நகத்தின் மேற்புறத்தில் உள் பக்க ஓரத்தில் ஆட்காட்டி விரலால் அழுத்தி லேசாக மசாஜ் செய்ய வேண்டும்

NAGOREFLASH// THANKS 2 http://naturecuredr.com/articles1.php

விடுதலைப் போரில் முஸ்லிம்கள் !! - திரு. வி.என். சாமி


இந்த நூலை ஒரு முஸ்லிம் எழுத்தாளர் எழுதியிருந்தால் அதில் வியப்பு ஒன்றும் இருக்காது. திரு. வி.என். சாமி இந்த நூலை எழுதியிருப்பது சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
நூல்: விடுதலைப் போரில் முஸ்லிம்கள்

ஆசிரியர்: வி.என். சாமி

விலை: ரூ. 500

பக்கங்கள்: 1112

வெளியீடு: பாவலர் பதிப்பகம்

37, குருபக்காரன் சாலை,

மதுரை: 625 009

தொலைபேசி: 04524512250


இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும், உயிர் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொலை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம் என்றார் மூத்த பத்திரிக்கையாளர் குஷ்வந்த் சிங். ஆனால் இன்றளவிலும் முஸ்லிம்களின் தியாக மற்றும் வீர வரலாறு மறைக்கப்பட்டே வந்திருக்கின்றது.


இந்நூலாசிரியர் முஸ்லிமாக இருந்தால் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்களுக்கு சாதகமாக எழுதியிருக்கிறார் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் இந்நூலாசிரியர் வி.என். சாமி அவர்கள் தினமணி நாளிதழின் மூத்த செய்தியாளராக பணியாற்றியவர், நூலாசிரியர் பத்திரிக்கையாளர் என்பதால் விடுதலைப் போரில் முஸ்லிம்களின் வீர வரலாற்றை விரிவாகவும், ஆழமாகவும் தகுந்த சான்றுகளுடனும் எழுதியிருக்கிறார்.


நூலில் இருந்து சில பகுதிகள்........


குஞ்சலி மரைக்காயர்


இந்திய விடுதலைப் போரின் முன்னோடியாக திகழ்ந்த கேரளத்து குஞ்சலி மரைக்காயர், ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கால் பதிப்பதற்கு முன்னர் வருகைப் புரிந்த போர்ச்சுகீசியரை விரட்ட, கடற்போரில் பல்வேறு சாகஸங்களைப் புரிந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில் சுதந்திர இந்தியாவின் போர்க் கப்பல் ஒன்றுக்கு குஞ்சலி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.


ஹைதர் அலி-திப்புசுல்தான்


ஒரு சிப்பாயாக வாழ்க்கையைத் தொடங்கி மைசூர் சுல்தானக உயர்ந்து பின்னர் இந்திய மண்ணிலிருந்து ஆங்கிலேயரை விரட்ட மிகுந்த துணிச்சலுடன் போரிட்டவர். ஆனால் மராத்தியரும், நிஜாமும், ஆற்காட்டு நவாபும் துரோகமிழைத்தால் ஹைதர் அலியின் நோக்கம் நிறைவேறாமல் போனது. ஹைதர் அலியின் மகனான திப்பு சுல்தான் தந்தை வழி நின்று தனது இறுதி மூச்சிறுக்கும் வரையிலும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியவர்.


மருதநாயகம் கான்சாகிப்


இந்திய மண்ணிலிருந்து வெள்ளையரை வெளியேற்ற வேண்டும் என்னும் உறுதியுடன் விடுதலைப் போரில் ஈடுபட்டு வரலாறு படைத்தவர் மருதநாயகம் கான்சாகிப். கான்சாகிப் மதுரையில் ஆங்கிலேயரின் கொடியை பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திர பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது சொந்த நாட்டு துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார்.

மதுரையை அடுத்த சம்மட்டிபுரம் என்னுமிடத்தில் 15-03-1764 அன்று கான்சாகிபை ஆங்கிலேயர் தூக்கிலிட்டனர். மூன்று நாள்கள் கழித்து அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி, தலையை திருச்சியில் புதைத்தனர். வெட்டி எடுத்த கை, கால்களைத் திருநெல்வேலி, திண்டுக்கல், நத்தம் ஆகிய ஊர்களில் புதைத்தனர். கை, கால்கள் இல்லாத உடல் மதுரையில் சம்மட்டிபுரத்தில் புதைக்கப்பட்டது.


மாப்பிள்ளைமார் கிளர்ச்சி


மாப்பிள்ளைமார்கள் செய்த புரட்சி மகத்தானதாகும். இது நாடு தழுவிய போராட்ட இல்லாவிடினும் கூட, 1857ல் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சிக்குப் பின் நடந்த மிகப் பெரிய புரட்சியாகும். கேரளத்தில் எறநாடு, வள்ளுவநாடு முதலிய மலபார் தாலுக்காகளில் இப்புரட்சி நடைபெற்றது.


இந்த கிளர்ச்சியின் போது நூற்றுக்கணக்கான மாப்பிள்ளைமார்கள் கூட்ஸ் வண்டியில் அடைக்கப்பட்டு கோவைக்கு அனுப்பப்பட்டனர். கூட்ஸ் வண்டியின் கதவுகள் இறுக்கமாக பூட்டப்பட்டதால் காற்றோட்டமும், வெளிச்சமும் இல்லாத நிலையில் தாகத்தாலும் மூச்சுத் திணறலாலும் சித்திரவதைப்பட்டு ஏராளமான மாப்பிள்ளைமார்கள் இறந்தனர்.


பெண் போராளிகள்


இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியப் பெண்களும் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர்.

அயோத்தி மன்னர் வஸீர் அலிஷாவிடமிருந்து ஆங்கிலேயர் அயோத்தியைக் கைப்பற்றினர். அப்போது மன்னரின் மனைவி பேகம் ஹசரத் மஹல் லக்னோவில் தங்கியிருந்தார். அயோத்தியை ஆங்கிலேயர் கைப்பற்றியதை எதிர்த்து மக்களைத் திரட்டி அவர் புரட்சியில் ஈடுபட்டார். ஒன்பது மாத காலம் புரட்சியாளர்கள் பேகம் ஹசரத் மஹல் தலைமையில் ஆங்கிலேயப் படையை எதிர்த்துப் போர் புரிந்தனர்.

இறுதியில் ஆங்கிலேய இராணுவத்தின் கை ஓங்கியது. பேகம் ஹசரத் மஹல் தனது மகன் பிரிஜிஸ் காதிருடன் நேபாளத்திற்குத் தப்பிச் சென்றார். நேபாள எல்லையில் ஆங்கிலேயர்களால் அவரும் அவரது மகனும் கொல்லப்பட்டனர்.


அபுல் கலாம் ஆசாத் மீது ஆங்கிலேய அரசு 1922ம் ஆண்டு ராஜ நிந்தனை குற்றம் சாட்டி கைது செய்தது. அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் ஒரு வருடக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.. இத்தண்டனை பற்றி ஆசாத்தின் மனைவி ஸுலைஹா பேகம் கீழ்க்கண்டவாறு காந்திஜிக்கு தந்தி அனுப்பினார்.


ஷஎன் கணவர் அபுல் கலாம் ஆசாத்திற்க நீதி மன்றம் ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. இந்தத் தண்டனை நாங்கள் எதிர் பார்த்ததை விடக் குறைவு. தேசத் தொண்டுக்கு வழங்கப்படும் பரிசு சிறைத் தண்டனை என்றால் இப்போது வழங்கப்பட்டுள்ள ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை மிகவும் அற்பமான பரிசு|.


வள்ளல் ஹபீப்


மியான்மரில் (அன்றைய பர்மா) ஹபீப் பெரும் வணிகராகத் திகழ்ந்தவர்.பெரும் கோடீஸ்வரர். நேதாஜி, மியான்மர் சென்ற போது அவர் தம் சொத்துக்கள் அனைத்தையும் இந்திய நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்தார். அதைக் கண்டு நேதாஜி பிரமித்து விட்டார். இதன் பின் கிழக்காசியாவில் நேதாஜி பயணம் செய்த இடங்களிலெல்லாம் ஹபீபின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். நாட்டைப் பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப் மருந்து தேவை| என்று அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்லலானார்.


மேலும் மரண தண்டனை பெற்ற முஸ்லிம் வீரர்கள், முஸ்லிம் பக்கிரிகள் உயர்த்திய போர்கொடி, சிப்பாய் புரட்சியில் இன்னுயிர் ஈந்தவர்கள், ஜாலியன் வாலாபாக்கில் உயிரிழந்த முஸ்லிம்கள், விடுதலைப் போரில் அலிகர் பல்கலைக் கழக மாணவர்கள், இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு இன்னுயிர் ஈந்த முஹம்மது ஹபீப், உலமாக்களின் விடுதலை வேட்க்கை, விடுதலைப் போரில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்கள், கவிஞர்களும் கலைஞர்களும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளில் பல்வேறு புதிய தகவல்களையும் நூலாசிரியர் இணைத்திருக்கிறார்.

நூலில் முத்தாய்ப்பாக சிறை சென்ற தியாகிகளின் ஊர்வாரியான விவரங்கள் மற்றும் நூலின் பிற்பகுதியில்விரிவான பெயர் மற்றும் பொருட் குறிப்பகராதியும் உண்டு. கெட்டி மேப்லித்தோ தாளில் இந்நூல் அச்சிடப்பட்டுள்ளது. கட்டுரைகளுக்கேற்ப பல்வேறு கோட்டோவியங்களும் நூலில் உண்டு.


இந்நூலுக்கு மதிப்புரை எழுதியுள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், '80 வயதை கடந்தப் பின்பும் அவர் இன்னும் எழுதிக் கொண்டிருப்பது அவரது அற்பணிப்பு மனப்பான்மையின் வெளிப்பாடு தான். இந்த நூலை வெளியிட அவர் பட்ட சிரமங்கள் சாதாரணமானவை அல்ல. இந்த நூலை ஒரு முஸ்லிம் எழுத்தாளர் எழுதியிருந்தால் அதில் வியப்பு ஒன்றும் இருக்காது.

திரு. வி.என். சாமி இந்த நூலை எழுதியிருப்பது சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு பெரும்பாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டு வரும் வேளையில் திரு. வி.என். சாமி அவர்களின் இந்த அற்புதமான ஆய்வு நூலை இளைய தமிழகத் தலைமுறை மக்களுக்கு ஓர் ஒளி விளக்காக அமைந்துள்ளது. சமூக நல்லிணக்கம் தழைத்தோங்க விரும்பும் தமிழக மக்கள் என்னென்றும் திரு.வி.என். சாமிக்கு நன்றிக் கடன் பட்டுள்ளார்கள். இந்த நன்றிக் கடனின் அறிகுறியாக இந்த நூல் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பரவ வேண்டும். இது பாடநூலாக அமைவதற்கு அரசு முன்வர வேண்டும்.


இந்நூல் முஸ்லிம்களின் இல்லங்கள் ஒவ்வொன்றிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்று.

-ராமேஸ்வரம் ராஃபி

நன்றி : tmmk.in

Thursday, April 1, 2010

இஸ்லாத்தின் பார்வையில் மூடர் தினம்!

இறைவனின் நேரிய வழிகாட்டுதல்களோ அறிவுப்பூர்வமான எந்தவிதக் கொள்கையோ இல்லாமல் தங்களின் மனோ இச்சைகளையே கொள்கைகளாகவும் வாழ்க்கை நெறியாகவும் கடவுளாகவும் பின்பற்றி வாழக்கூடியவர்களின் கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான் குறிப்பிட்ட தினங்களை முக்கியப்படுத்தி, அவற்றுக்கு முக்கியத்துவம் தந்து, அந்த நாட்களைக் கொண்டாடுவது ஆகும்.

இவ்வகையான கொண்டாட்டங்களில் காதலர் தினம், மனைவியர் தினம், அன்னையர் தினம், மூடர் தினம் என அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வகையான தினங்களைக் கொண்டாடுவோர் எந்த விதமான காரணங்களைச் சொன்னாலும் முஸ்லிம்களாகிய நாம் நமக்கு வழிகாட்டியாக வந்தக் குர்ஆனையும் ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு, "தின"ங்களில் வெளிப்படும் தீமைகளைப் பற்றி அறிந்து, அதிலிருந்து விலகவும் நேர்வழி பெறவும் முயல வேண்டும்.



பொய்யை, பரிகாசத்தை, ஏமாற்றுவதை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த "மூடர் தினம்". மக்களில் பலர் மற்றவர்களை ஏப்ரல் ஃபூல்(முட்டாள்) ஆக்குவதற்காகப் பொய் பேசுகின்றார்கள். பிறரைப் பரிகாசப்படுத்திப் பார்க்கும் இவ்விஷயம், மக்களுக்கு மத்தியில் சாதாரணமாகத் தெரிந்தாலும் இஸ்லாமியப் பார்வையில் பெருங்குற்றம் ஆகும்.


பொய் கூறுதலையும் பரிகாசத்தையும் பற்றி இஸ்லாம்


பொய்யுரைப்பவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள்:
அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக, பொய்யை இட்டுக் கட்டுபவர்களெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள்தாம். இன்னும் அவர்கள்தாம் பொய்யர்கள் - அல் குர்ஆன் 16:105.




முனாஃபிக்கின் (நயவஞ்சகனின்) அடையாளங்களில் ஒன்று பொய்யுரைப்பது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும்: அவன் பேசினால் பொய்யுரைப்பான்; அவனிடம் எதையாவது நம்பி ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான் - அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரீ.

எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும் அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான் - அல் குர்ஆன் 9:77.


பொய் பேசுவது நரகத்திற்கு வழிவகுக்கும்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உண்மை (பேசுவது), நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும்; நன்மையானது நிச்சயமாக சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒருவர் உண்மை பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் வாய்மையாளர் (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகி விடுவார். பொய் (கூறல்) நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழி வகுக்கும். ஒருவர் பொய் பேசிக்கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் "பெரும் பொய்யர்" எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார் - அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), ஆதாரம்: புகாரீ.


பரிகசிப்பது, கேலி செய்வது அறிவீனர்களின் செயல்:
இன்னும் (இதையும் நினைவு கூருங்கள்:) மூஸா தம் சமூகத்தாரிடம், "நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்" என்று சொன்னபோது, அவர்கள்; "(மூஸாவே!) எங்களைப் பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?" என்று கேட்டனர். (அப்பொழுது) அவர், "(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறினார் - அல் குர்ஆன் 2:67.

பொய் பேசுபவனுக்கான தண்டனைகள்:
ஸமுரா இப்னு ஜுன்தப் (ரலி) அறிவித்தார்கள் : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம், "உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?" என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் நாடியவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள்.) ஒரு(நாள்) அதிகாலை நேர (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:

இன்றிரவு (கனவில்) இரு(வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, "நடங்கள்" என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் நாங்கள் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒரு பக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரிவரை கிழித்தார். அதேபோல், அவரது மூக்கின் ஒரு துவாரத்தையும் ஒரு கண்ணையும் பிடரிவரை பிளந்தார். பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிக்கும்போது அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காகி விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், "அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யாவர்?" என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், "செல்லுங்கள், சென்றுவிடுங்கள்" என்றனர்.

நான் அவ்விருவரிடமும் "நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட அவைதாம் என்ன?" என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், "(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை உங்களுக்கு) நாங்கள் தெரிவிக்கிறோம்:
தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவை பிடரிவரை கிழிக்கப்பட்டுக் கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அவன் அதிகாலையில் தன் வீட்டிலிருந்து புறப்பட்டுப் போய் ஒருவரிடம் ஒரு பொய்யைச் சொல்ல, அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேருமே, அவன்தான் - ஆதாரம்: புகாரீ ( நீண்ட ஹதீஸின் சுருக்கம்).

விளையாட்டுக்காகக்கூடப் பொய்ப் பேசக் கூடாது:
முஆவியா இப்னு ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "மக்களைச் சிரிக்க வைப்பதற்காக பேசுபவனுக்கும் பொய் சொல்பவனுக்கும் கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக!" என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் - ஆதாரம்: திர்மிதீ.

இஸ்லாத்தில் விளையாட்டாகப் பொய்ப் பேசுவதுகூடத் தடுக்கப்பட்டுள்ளது. அதுபோலப் பிறரை மகிழ்விப்பதற்காகவும் பொய்ப் பேசக் கூடாது.



பொய் சாட்சி கூறல்:
ஏப்ரல் மாதத்தில் பிற மக்களை முட்டாளாக்க ஒருவன் முயற்சியில் இருக்கும்போது அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் சிலர் அந்தப் பொய்யனுக்கு ஆதரவு அளித்து, உதவி செய்யும் முகமாகப் பொய் சாட்சி பகர்கின்றனர். இதுவும் பெரும்பாவமான காரியமாகும்.

அபூபக்ரா(ரலி) கூறியதாவது: "பெரும்பாவங்களிலேயே மிகப்பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். "அறிவியுங்கள், அல்லாஹ்வின் தூதரே!" என்று நபித் தோழர்கள் வேண்டினர். "அல்லாஹ்விற்கு இணை வைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும்தான்" என்று நபி(ஸல்) கூறினார்கள். சாய்ந்து கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் பிறகு எழுந்து அமர்ந்து, "அறிந்து கொள்ளுங்கள்! பொய்ப் பேசுவதும், பொய்ச் சாட்சியமும் (பெரும் பாவம்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (பெரும் பாவம்)" என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருந்தார்கள் - நூல்: புகாரீ, முஸ்லிம்.

ஹோலி கலாச்சாரம்:
பொதுவாக மாணவர்கள் ஏப்ரல் மாதத்தில் பிறருடைய மேலாடைகள் மீது மையைத் தெளித்து அசிங்கப்படுத்துகின்றார்கள். இதை ஏப்ரல் ஃபூலின் ஓர் அடையாளமாக நினைத்துச் செய்கின்றனர். மையைத் தெளிக்கும் இந்த நடைமுறையானது ஹோலிப் பண்டிகையின்போது நிறங்களை பரஸ்பரம் வீசிக் கொள்ளும் இந்துக்களின் ஒரு பிரிவினருடைய கலாச்சாரத்துடன் ஒத்துப் போகின்றது. எனவே, மாற்று மதக் கலாச்சாரம் என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் இதைக் கைவிட வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தின் மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகின்றானோ அவனும் அவர்களைச் சார்ந்தவனே! - நூல்: அபூதாவூத்.

இழிவாகக் கருதுவது:
பிறரை ஏப்ரல் ஃபூல்(முட்டாள்) ஆக்கியவர்கள் ஏன் அவர்களைப் பார்த்து, கைகொட்டி ஏளனமாக சிரிக்கின்றார்கள்? ஏன் கேலி, கிண்டல் செய்து அற்ப சந்தோஷம் அடைகின்றார்கள் என்று சிந்தித்தால் ஓர் உண்மை விளங்கும். அதாவது அவர்கள் தம்மைப் புத்திசாலியாகவும் உயர்ந்தவர்களாகவும் கற்பனை செய்து கொள்கின்றார்கள். எனவே ஆணவம் தலைக்கேறிய பிறகு மற்றவர்களைத் தம்மை விட அறிவில் குறைந்தவர்கள், இழிவானவர்கள் என்று முடிவு செய்வதன் காரணத்தால்தான் அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தாமல், அலட்சியமாகக் கருதி, கேவலமாக நடத்தி, இழிவுபடுத்துகின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முழுமையான முஸ்லிம் யாரென்றால், எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்று இருக்கின்றார்களோ அவர்தான் - நூல்: புகாரீ.

எனவே, சகோதர-சகோதரிகளே!

இஸ்லாம் கடுமையாக எச்சரித்திருக்கும் இத்தகைய தீய செயல்களான பொய் பேசுதல், பிறரைத் துன்புறுத்திப் பார்த்து மகிழ்தல், ஏமாற்றுதல் ஆகியவற்றை முழுமூச்சாக செயல்படுத்தும் மிக மோசமான மூடர்களின் மூடர் தினத்தை விட்டும் முஸ்லிம்களாகிய நாம் தவிர்ந்திருப்பதோடு அல்லாமல் பிறருக்கும் இதனுடைய தீமைகளை எடுத்துக்கூறி இதனை நமது தமிழ்ச்சமூக மக்களிடமிருந்து களைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அல்லாஹ் அதற்குரிய ஆற்றலையும் மனவலிமையையும் தந்தருள்வானாக!

NAGOREFLASH //நன்றி : சத்தியமார்க்கம் . காம்

எல்லாம் விதிபடியா ? அப்போ தீமைகள் ?





NAGOREFLASH
Related Posts Plugin for WordPress, Blogger...