(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, November 23, 2009

பாபர் மசூதி இடிப்பில் வாஜ்பாய்-அத்வானி -ஜோஷிக்கு தொடர்பு: லிபரான் கமிஷன்

டெல்லி: பாபர் மசூதி இடிப்பில் வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக அது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி லிபரான் கமிஷன் கூறியுள்ளது.


நாடாளுமன்றம் கூடியுள்ள நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கப் பயணத்தில் இருக்கும் நிலையில் இந்தக் கமிஷனின் அறிக்கையின் சில பகுதிகள் 'லீக்' ஆகியுள்ளன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு திடீரென உணர்ச்சி வேகத்தில் நடந்துவிடவில்லை. அது மிகவும் திட்டமிட்ட சதி.

இந்தச் சதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு நிச்சயமான தொடர்பு உண்டு.

இவர்களுக்குத் தெரியாமல் இந்த சம்பவம் நடந்ததாகவோ அல்லது இவர்கள் குற்றமற்றவர்கள் என்றோ கூற முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி லிபரான் சமர்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரிலேயே இந்த அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று கூறப்பட்ட நிலையில், எந்த நாளில் தாக்கலாகும் என்பது குறித்து அரசு திட்டவட்டமாக எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வந்தது.

இந் நிலையில் இந்தப் பகுதிகள் 'லீக்' செய்யப்பட்டுள்ளன. இதை மத்திய அரசே கசிய விட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.


நாடாளுமன்றத்தில் அமளி:


லிபரான் கமிஷன் அறிக்கையின் குறிப்பிட்ட தகவல்கள் வெளியானது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக அமளியில் ஈடுபட்டது.

அறிக்கையின் ஒரு சில பகுதிகள் மட்டும் வெளியானதற்கு காரணம் என்ன, தகவல்கள் எப்படி கசிந்தது என்று மக்களவையில் எதிர்கட்சித் தலைவர் அத்வானி கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

உள்துறை லீக் செய்யவில்லை-சிதம்பரம் :


இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், லிபரான் கமிஷன் அறிக்கையும், பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையும் மக்களவைத் கூட்டத்தொடர் முடியும்போது டிசம்பர் 21ம் தேதி தாக்கல் செய்யப்படும்.

லிபரான் கமிஷன் அறிக்கையின் ஒரே ஒரு நகல்தான் எங்களிடம் உள்ளது. அதை பத்திரமாக வைத்துள்ளோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது. இந்த அறிக்கையில் உள்ள விவரம் பற்றி உள்துறையில் இருந்து யாரும் பத்திரிகைகளிடம் சொல்லவில்லை என்றார்.



நாடாளுமன்றம் ஒத்திவைப்பு:

அமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து பாஜக எம்பிக்கள் கூச்சலிட்டதால் அவையில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

அதே போல ராஜ்சபாவிலும் பாஜக எம்பிக்கள் கூச்சலிட்டு குழப்பம் ஏற்படுத்தியதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அறிக்கையை நான் கசியவிடவில்லை-லிபரான்:

இந் நிலையில் நீதிபதி லிபரான், அறிக்கையின் எந்த ஒரு அம்சத்தையும் தான் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கசியவிட்டது காங்கிரஸ் தான்-பாஜக:

பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறுகையில், லிபரான் கமிஷன் அறிக்கையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வேண்டும் என்றே வெளியே கசிய விட்டுள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடப்பதால் அதில் ஆதாயம் தேடும் நோக்கத்துடன் காங்கிரஸ் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

விசாரணை அறிக்கைகளை நாடாளுமன்றம் கூடும் முதல் நாளிலேயே தாக்கல் செய்வது வழக்கம். இப்போது மட்டும் அறிக்கையை தாமதமாக தாக்கல் செய்ய முடிவெடுத்ததில் ஏதோ மர்மம் உள்ளது.

அறிக்கை எப்படி வெளியானது என்பது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். யாரும் குறை சொல்ல முடியாத வாஜ்பாய் பெயருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்துள்ளனர் என்றார்

நாளையே தாக்கல் செய்யனும்..லாலு-முலாயம்:

இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்டிரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், நாளையே நாடாளுமன்றத்தில் லிபரான் கமிஷன் முழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறுகையில், இந்த அறிக்கையை உடனே தாக்கல் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அவையை நடத்த விட மாட்டோம் என்றார்.

வாஜ்பாய் பெயர் இல்லை...

இந் நிலையில் லிபரான் கமிஷனி்ல் இடம் பெற்றிருந்த மூத்த அதிகாரியான் அனுபம் குப்தா கூறுகையில், கமிஷனின் அறிக்கையில் வாஜ்பாயின் பெயர் இருப்பதாக எப்படி தவறான தகவல் வெளியானது என்று தெரியவில்லை.

பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் தொடர்பே இல்லாத ஒரே மூத்த பாஜக தலைவர் வாஜ்பாய் தான். அயோத்தி இயக்கத்திலும் அவர் தீவிரமாக இருந்ததில்லை. கமிஷன் கூட வாஜ்பாயை விசாரித்ததில்லை. இந் நிலையில் அவரது பெயர் எப்படி அறிக்கையில் உள்ளதாக தவறான தகவல் வெளியானதோ தெரியவில்லை என்றார்.

சோனியா தீவிர ஆலோசனை:

இந்த அறிக்கை விவகாரம் குறித்தும், அதை எப்போது தாக்கல் செய்வது என்பது குறித்தும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது இல்லத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் இன்று தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் டிசம்பர் 21ம் தேதிக்கு முன்பே, பிரதமர் நாடு திரும்பியபின் இந்த அறிக்கை தாக்கலாகலாம் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...