(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, December 30, 2011

தானே புயல் கரையை கடந்தது : புதுவை - கடலூர் ஸ்தம்பித்தது


தமிழகம் மற்றும் புதுச்சேரியை தாக்கிய தானே புயலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. 
தமிழகம் மற்றும் புதுச்சேரியை மிரட்டி வந்த தானே புயல் இன்று காலை கரையைக் கடந்தது. 
இந்த புயலால் ஏற்பட்ட பலத்த சூறாவளி,மழை மற்றும் வீடு இடிபாடுகளில் சிக்கி தமிழகத்தில் 12 பேரும், புதுச்சேரியில் 7 பேர் என இதுவரை 19 பேர் பலியாகி உள்ளனர்.




புயல் கரையைக் கடந்தாலும் கனமழை பெய்து வருவதால் அரசு உஷார்நிலையில் இருந்து வருகிறது. இவ்விரு மாநிலங்களிலும் சேர்த்து 600 இடங்கள் அபாய நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.புயல் காரணமாக சில தொடர்வண்டிகள் தாமதமாக இயக்கப்படுகின்றன. மற்றும் சில தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.

கடலூரில் சாலைகள் மிகவும் மோசமடைந்துள்ளதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடலூர்- சிதம்பரம் சாலையில் 400-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்ததால் அச்சாலையில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாகபரங்கிப்பேட்டை பகுதியில் 125 கி.மீ வேகத்துக்கு காற்று வீசியதால்பெரும்மரங்களும் கூட வீழ்ந்துள்ளன. மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்னணு தொடர்புகளும் செயலிழந்துள்ளன.

கடலில் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையோர மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 சென்னையில் இருந்து குவைத் மற்றும் மலேசியாவுக்கு செல்ல வேண்டிய பன்னாட்டு விமானங்கள் கூட ரத்து செய்யப்பட்டன. தமிழகத்தின் வடக்கே உள்பகுதியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என்று வானிலை மையத் தகவல் தெரிவிக்கிறது

டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. 
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தை சேர்ந்த 10 குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமின்றி தேசிய பேரிடர் மீட்புப்பணிப் படையைச் சேர்ந்த 15,000 வீரர்கள் மீட்பு பணிகளில் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...