(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, February 1, 2013

விஸ்வரூப விவகாரம் - முதல்வர் பேசியதின் முழு விபரம்


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன் 

விஸ்வரூபம் படம் தொடர்பாக ஊடகங்களில் நிலவிவரும் பல்வேறு கருத்துக்களுக்கு விடையளிக்குமாறு இருந்தது முதல்வர் ஜெயலலிதாவின் இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பு. ஆங்கிலத்தில் அமைந்த அந்த உரையின் தமிழாக்கம் பின்வருகின்றது. 




"விஸ்வரூபம் படத்தை கண்ட முஸ்லிம் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இது தொடர்பான மனுவை தலைமை செயலரிடம் கொடுத்தார்கள். கூட்டமைப்பு சார்பாகவும், கூட்டமைப்பில் இல்லாத சில அமைப்புகள் சார்பாகவும், படம் வெளிவந்தால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. உளவுத்துறையின் அறிக்கையும் இதையே பிரதிபலித்தது. இந்நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவேண்டியது என் கடமையாகின்றது. 

படம் வெளிவர வேண்டும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று வாதாடப்படுகின்றது. ஆனால் உண்மை நிலையை அறிந்துக்கொண்டால் இதுப்போன்ற கருத்துக்களுக்கு இடம் இருக்காது. 

தமிழகத்தில் மட்டும் சுமார் 524 தியேட்டர்களில் விஸ்வரூபம் வெளியாகவிருந்தது. தமிழகத்தில் உள்ள மொத்த போலீசாரின் எண்ணிக்கை (காலியிடங்களை தவிர்த்து) 91,807 ஆகும். இதில் பல்வேறு பணிகளுக்கும் போக மீதமுள்ள போலீசாரின் எண்ணிக்கை 9,226 மட்டுமே. மூன்று ஷிப்ட்களில் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென்றால் அதற்கு 56,440 போலீசார் தேவைப்படுவர். இது சாத்தியப்படாத சூழ்நிலையாகும். 

அதுமட்டுமல்லாமல், அரசாங்கத்தின் கடமை என்பது, மாநிலத்தில் அசம்பாவிதம் ஏற்பட்ட பிறகு தடுப்பது அல்ல. சூழ்நிலைகளின் தன்மைகளை புரிந்துக்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஆகும். 

தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தை தடை செய்வதற்கு மாநில அரசாங்கத்திற்கு உரிமை இல்லை என்று கூறப்படுவதில் உண்மை இல்லை. தமிழ்நாடு சினிமா சட்டம் 1955-ல், 7-ஆம் பிரிவில் இதற்கான அனுமதி உண்டு. டேம் 999 படம் இந்த சட்டபிரிவை பயன்படுத்தியே தடை செய்யப்பட்டது. விஸ்வரூபம் விவகாரத்தில் இந்த பிரிவை கூட தமிழக அரசாங்கம் பயன்படுத்தவில்லை என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். பிரச்சனையின் வீரியத்தை குறைக்க, சற்றே ஆறப்போட 144 தடையுத்தரவு மட்டுமே கொண்டுவரப்பட்டது.        

கமல் மீது எனக்கு எந்தவிதமான அதிருப்தியும் இல்லை. இந்த விவகாரத்தில் எனக்கு தனிப்பட்ட ஆதாயம் இருப்பதாக பல்வேறு ஊடகங்களும் கருத்து தெரிவித்திருக்கின்றன. அதில் அவர்கள் குறிப்பிடுவது, ஜெயா டிவியில் விஸ்வரூபம் திரைப்படத்தை குறைந்த விலைக்கு கேட்டதாகவும், கமல் கொடுக்க மறுத்ததால் தமிழக அரசு இப்படியாக செயல்படுவதாகவும் விமர்சிக்கப்படுகின்றது. ஜெயா டிவி அதிமுகவை ஆதரிக்கின்றது. இதை தவிர்த்து எனக்கோ, என் கட்சிக்கோ ஜெயா தொலைக்காட்சியுடன் தொடர்பில்லை. இப்படியான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இது தொடர்பாக பொய் குற்றச்சாட்டு சுமத்தியவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும், இன்னொரு விமர்சனத்தையும் கூறுகின்றார்கள். வெள்ளை வேட்டி கட்டிய தமிழர் பிரதமராக வர வேண்டும் என்று கமல் கூறியதற்காக நான் இப்படி செயல்படுகின்றேன் என்கின்றார்கள். தன்னுடைய அரசியல் ரீதியான கருத்தை கூற கமலுக்கு உரிமை உண்டு. இதில் எனக்கு ஏன் கோபம் வரவேண்டும்? முப்பது வருடங்களாக அரசியலில் இருக்கின்றேன். கமல் கூறியதால் மட்டும் ஒருவர் பிரதமராக வந்துவிட முடியாது என்பதை நான் அறியமாட்டேனா? அப்படி தனி மனித விரோதம் தான் காரணம் என்றால் கருணாநிதியின் குடும்பத்தினர் எடுக்கும் படங்களுக்கு நான் பல தடங்கல்களை கொடுத்திருக்க வேண்டுமே? அவர்களுடைய படங்கள் வெளியாகிக்கொண்டு தானே இருக்கின்றன? 

1980-களில், கமலை பற்றி எம்.ஜி.ஆரிடம் கடிதம் வழியாக நான் புகார் செய்ததாக கருணாநிதி அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார். 1980-களில் நாம் அதிமுக-வின் எம்.பியாவும், கொள்கைப்பரப்பு செயலாளராகவும் இருந்தேன். தினமும் எம்.ஜி.ஆரை சந்திப்பேன். தினமும் சந்திக்கும் போது கடிதம் எழுத வேண்டிய அவசியம் ஏன் வந்தது? 

தன்னுடைய சொத்துக்களை விற்று படம் எடுத்ததாக கமல் கூறுகின்றார். அவர் அறுபது வயதை நெருங்கிக்கொண்டிருக்கின்றார். விவரம் அறியாதவரல்ல அவர். இப்படியான ரிஸ்க்கை எடுப்பதால் வரக்கூடிய பிரச்சனைகள் குறித்து அவர் அறிந்திருக்க வேண்டும். இதற்கு இந்த அரசாங்கம் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது. 

நடந்துள்ள பிரச்சனைகளுக்கு கமலே பொறுப்பு. படம் வெளியாவதற்கு பல நாட்களுக்கு முன்பே, படத்தை தங்களுக்கு திரையிட்டுகாட்ட வேண்டும் என்று கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்த போது, அரசின் உதவியுடன் கமலின் இல்லத்தில் படம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போதே படம் திரையிடப்பட்டிருந்தால் இந்த பிரச்சனை முன்னமே முடிந்திருக்கும். ஆனால் கமலோ, படத்தின் தேதி தள்ளிபோவதாக கூறி கூட்டமைப்பினர் படம் பார்ப்பதை தள்ளிவைத்து விட்டார். படம் வெளியாகும் நேரம் இந்த படத்தை கூட்டமைப்பினர் பார்த்ததால் பிரச்சனை வெகுவாக வளர்ந்து விட்டது. 

படம் வெளியான பின்பும் கூட அரசை அணுகி கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தைக்கு கமல் சம்மத்தித்து இருந்தால் இந்த விவகாரம் விரைவாக முடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கமலோ, படத்தில் மாற்றங்கள் செய்வதை ஏற்றுக்கொள்ளாமல் நீதிமன்றத்திற்கு சென்றதால் விவகாரம் உச்சத்திற்கு சென்றுவிட்டது. 

இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒவ்வொரு அமைப்பிலும் லட்சக்கணக்கான உறுப்பினர்கள் உள்ளனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தில் மட்டுமே 7.5 லட்சம் உறுப்பினர்கள் உண்டு. இப்படியான சமுதாய குரலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. 

தமிழக அரசு மட்டுமே தடை செய்தது போல விமர்சனங்கள் வருவது தவறு. சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, அமீரகம், கத்தார் போன்ற நாடுகளிலும், கர்நாடகம் புதுச்சேரி ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் தடை செய்யப்பட்டது கவனிக்கப்பட வேண்டியது. அங்கெல்லாம் என்னுடைய அரசா நடக்கின்றது?

சில இஸ்லாமிய அமைப்புகள் நேற்று கமலை சந்தித்ததாகவும், படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கமல் ஒப்புக்கொண்டதாகவும் எனக்கு செய்திகள் வருகின்றன. இஸ்லாமிய தலைவர்களும், கமலும் கலந்து பேசி சமரசத்திற்கு முன்வர வேண்டும். இதற்கு தமிழக அரசு தேவையான உதவிகளை செய்யும். இஸ்லாமிய தலைவர்களின் ஒப்புதலுக்கு பிறகு படம் வெளியாகும்."

இவ்வாறு முதல்வரின் பேட்டி அமைந்திருந்தது. 

இது தொடர்பாக இயக்குனர் அமீர் சமரச முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக தெரிகின்றது. இன்று மாலை இஸ்லாமிய கூட்டமைப்பை சேர்ந்தவர்களுடன் அமீர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று செய்திகள் வருகின்றன. 

சிறு கூட்டம் என்றும், கலாச்சார தீவிரவாதிகள் என்றும் கூறிய கமல் பேச்சுவார்த்தைக்கு முன்வந்திருப்பது மகிழ்ச்சி. தன்னுடைய கருத்துக்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று முகப்பக்கத்தில் கருத்துகளை காண முடிந்தது. அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, இதுப்போன்ற படங்களை எடுத்து எதிர்காலத்தில் எங்களை மேலும் காயப்படுத்த வேண்டாம் என்பதை மட்டும் அவரும் அவர் சார்ந்த திரைப்பட துறையினரும் உணர்ந்தால் போதும். 

இந்த விஸ்வரூப விவகாரம் எந்த முடிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றதோ அதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் பிரச்சனைகள் அடிப்படையிலாவது அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற என்னுடைய/பலருடைய நீண்ட நாளைய விருப்பம் இன்று நிறைவேறி உள்ளதற்கு இறைவனுக்கு நன்றி சொல்கின்றேன். பிஜே அவர்கள் இஸ்லாமிய கூட்டமைப்பின் முடிவுகளுக்கு கட்டுபடுவோம் என்று அறிவித்தது மிகுந்த மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுப்போன்ற நம்பிக்கை மற்றும் ஒற்றுமை எதிர்காலத்தில் நிலைத்திருக்க இறைவனிடம் அதிகம் அதிகம் பிரார்த்திக்கின்றேன். 

விஸ்வரூபம் இந்த பார்வையை ஏற்படுத்தியது தான் அது செய்த பெரிய சாதனை.
எல்லாம் வல்ல இறைவன் கமல் போன்றவர்களுக்கு முஸ்லிம்களின் உள்ளத்தை புரிந்துக்கொள்ளும் தன்மையை கொடுக்கட்டும். இறைவன் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

குறிப்பு: 

வார்த்தைக்கு வார்த்தையான மொழிப்பெயர்ப்பு அல்ல. தவறான வார்த்தை பயன்பாடுகள் மற்றும் விடுபட்டவைகள் குறித்து பின்னூட்டத்தில் தெரியப்படுத்தினால் திருத்திக்கொள்கின்றேன்..

ஜசாகல்லாஹ் : ஆஷிக் அஹமத் அ

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...