(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, February 8, 2010

மார்க்க சகோதரர்களே அல்லாஹ்வுக்காக! தங்கள் வளைத்தள வதந்திகள் தவிர்த்திடுங்களேன்

ஒருவரையொருவர் அவதூறு பரப்பாதீர்கள்?

அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே மார்க்க விஷயத்தை அறிந்துக்கொள்ள நாம் இணையதளங்களை நாடுகிறோம் ஒருபக்கம் நசாராக்கள் இஸ்லாத்தின் பெயரால் அவதூறு பரப்புகிறார்கள் மறுபக்கம் மாற்றுமதத்தவர்கள் இஸ்லாத்தை பற்றி அவதூறு பரப்புகிறார்கள் அவர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன என்பதே தெரியாமல் இருக்கிறார்கள் எனவே நாம் அவர்களை அல்லாஹ் பார்த்துக்கொள்வான் என்று விட்டுவிடுகிறோம்

ஆனால் நம்முடைய கண்ணியமிக்க இஸ்லாத்தை பரப்பும் மார்க்க இணையதளங்களை பார்வை யிட்டால் அங்கே மார்க்க அறிஞர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி வசை பாடிக்கொண்டும், கிண்டல் அடித்துக்கொண்டும் கேவலமான ஒரு சமுதாய சிந்தனையை தூண்டுகிறார்களே இது நபிகளார் காட்டித்தந்த முறையா? இதற்காகத்தான் இவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து மார்க்க கல்வி போதிக்கப்பட்டதா?


ஏதோ ஒரு மார்க்க சகோதரனோ அல்லது அவனது தோழர்களோ தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் உண்மையை உரைக்கிறார்கள் தவறை எதிர்த்து குரள்கொடுக்கிறார்கள் அவர்கள் கூறுவது தவறாக இருந்தால் நேரடியாக அவர்களை அணுகி தகுந்த ஆதாரங்களுடன் அழகிய முறையில் விவாதம் நடத்தாலாம் ஆனால் வாதியோ பிரதிவாதியோ நேரடியாக விவாதத்திற்கு வர மறுத்தாலோ அல்லது காலம் தாழ்த்தினாலே தங்கள் மீது சுமத்தப்பட்ட கலங்கத்தை மக்களுக்கு எடுத்துக்கூறுவதில் தவறில்லை

ஆனால் அதை தங்களுடைய இணையதளங்களில் கண்ணியமற்ற முறையில் அசிங்கமான ஏன்? நாக்கு கூசும் விதமாக கேடுகெட்டவன், பொய்யன், புரோகித மவ்லவி, புத்திதடுமாறிடிச்சி, நினைவு திரும்பிடிச்சி, கிறுக்குப் பையன், மடையன் என்று ஈனத்தனமான வார்த்தைகள் பிரயோகம் எதற்கு? இப்படிப்பட்ட வார்த்தைகள்தான் 7 ஆண்டுகள் பயிலும் ஆலிம்கல்வியல் போதிக்கப்படுகிறதா? இதையெல்லாம் கூறுவது மார்க்க சிந்தனைவாதிகளுக்கும், ஏகத்துவவாதிகளுக்கும் கூடுமா? மாற்றுமதத்தவர்க்ள நம்முடைய கூத்துக்களை கண்டால் ஆனந்தமாக ரசிப்பார்களே என்று கூட நினைவுக்கு வருவதில்லையே இவர்களுக்கு நினைவு திரும்பவில்லையா?! சாதாரண மனிதன் குர்ஆன்-ஹதீஸ்களை படித்தாலேயே பிறரை திட்டக்கூடாது வசைபாடக்கூடாது என்பதை உணர்கிறானே ஆனால் இந்த மார்க்க அறிஞர்களுக்கு மட்டும் புரியாமல் போவது ஏன்?

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அல்குர்ஆன் 104-1)

இதோ அவதூறு பரப்புவது பற்றி அல்லாஹ்வின் எச்சரிக்கைகள்

ஈமான் கொண்டவர்களே! மூஸாவை(ப் பற்றி அவதூறு கூறி) நோவினை செய்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஆனால் அவர்கள் கூறியதை விட்டு அல்லாஹ் அவரைப் பரிசுத்தமானவராக்கி விட்டான்; மேலும் அவர் அல்லாஹ்விடத்தில் கண்ணிய மிக்கவராகவே இருந்தார். (அல்குர்ஆன் 33-69)


அவதூறு பரப்புபவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம்

இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). (அல்குர்ஆன் 4-156)


புறம்பேசி மனிதனின் மாமிசத்தை சாப்பிட வேண்டாமே!

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புதம்முடையவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்குர்ஆன் 49-12)


என் கண்ணியமிக்க மார்க்க சகோதரர்களே நபிகளார் (ஸல்) சஹாபாக்களுடன் செய்துக்கொண்ட அழகான ஒப்பந்தத்தை பாருங்களேன்!

‘அல்லாஹ்விற்கு இணையாக எதனையும் கருதுவதில்லை; திருடுவதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; உங்கள் குழந்தைகளைக் கொல்வதில்லை; நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் (யார் மீதும்) அவதூறு கூறுவதில்லை; எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்வதில்லை என்று என்னிடம் ஒப்பந்தம் செய்யுங்கள். உங்களில், (அவற்றை) நிறைவேற்றுகிறவரின் நற்கூலி அல்லாஹ்விடம் உள்ளது.

மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையாவது ஒருவர் செய்து, (அதற்காக) இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால் அது அவருக்குப் பரிகாரமாம் விடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையாவது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்’ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றித் தோழர்களில் ஒரு குழு அமர்ந்திருக்கும்போது கூறினார்கள். (புகாரி பாகம் 1, அத்தியாயம் 2, எண் 18)


முடிவுரை

கண்ணியமிக்க என் மார்க்க அறிஞர்களே! இனியாவது திருந்திக் கொள்ளுங்கள் மார்க்க அறிவுள்ள உங்களுக்க மார்க்க அறிவற்ற மக்கள் அறிவுரை கூறும் விதமாக நடந்துக் கொள்ளாதீர்கள், உங்கள் உரிமைக்குரளை வெளிப்படுத்தவும் உங்கள் மீது கூறப்பட்ட அவதூறுகளையும் எடுத்துக்கூற எந்தவித தடையுமில்லை ஆனால் தடையை மீறி வார்த்தைப் பிரயோகம் செய்யாதீர்கள் உங்கள் எழுத்துக்களால் உங்கள் சுவனத்தின் பாதைகளை அடைத்துக்கொள்ளாதீர்கள் இதே ஒரு அழகிய நபிமொழியின் மூலம் இந்த கட்டுரையை முடித்துக்கொள்கிறேன்!


நான் அபூ வாயிலிடம் முர்ஜிஆ பற்றிக் கேட்டபோது, ‘ஒரு முஸ்லிமை ஏசுவது பாவம்; அவனுடன் போரிடுவது, கொலை செய்வது இறை நிராகரிப்பாகும்‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்‘ என அப்துல்லாஹ் வழியாக என்னிடம் கூறினார்” என ஜுபைத் அறிவித்தார்.

(குறிப்பு) இறை நம்பிக்கையாளர் செய்யும் எந்தப் பாவத்திற்கும் தண்டனை கிடையாது என்று சொல்லும் வழி கெட்ட பிரிவினர் முர்ஜிஆ எனப்படுவர். (புகாரி பாகம் 1, அத்தியாயம் 2, எண் 48)

அல்லாஹ் மிக அறிந்தவன்!

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!

NAGOREFLASH// thanks 2 http://islamicparadise.wordpress.com

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...