(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, June 27, 2011

ஆன்மீகத்தின் பெயரால் தொடர் கொள்ளை - திருந்த முடியாமல் தவிக்கும் மக்கள்.

(மாட்டிகொள்ளாத வரை சாமியார் மாட்டிகொண்டால் அவர் போலி சாமியார்)

இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்ற வெள்ளையர் லண்டனில் துறைமுக நடவடிக்கைகளை ஒழுங்கு செய்து தரும் ஒரு தரகு நிறுவனத்தை நடத்தி வந்தார். ஓரிரு வருடங்களாக தொழிலில் நட்டத்தைச் சந்தித்து வந்த வில்லியம்ஸ் அதிலிருந்து மீள தனது நண்பரொருவரின் ஆலோசனைப்படி கேரளாவிலிருக்கும் ஒரு சாமியாரைச் சந்திக்க முடிவு செய்கிறார். ஆலோசனை தந்தவர் இலண்டனில் வாழும் ஒரு என்.ஆர்.ஐ மலையாளி. கேரளாவின் கோட்டக்கல்லில் சிவா சிரிங்க ஆஸ்ரமத்தை நடத்தி வந்த ஞானசைதன்யா என்ற சாமியாரை வில்லியம்ஸ் குடும்பத்துடன் சந்திக்கிறார்.

வில்லியம்ஸின் தொழில் சிக்கலுக்கு ஞானசைதன்யாவின் ஆன்மீகத் தீர்வு என்ன? வில்லியம்ஸின் மகள் அமரந்தா முற்பிறப்பில் சைதன்யாவின் மனைவியாக இருந்தவளாம். இப்பிறப்பிலும் அந்த உறவு தொடர்ந்தால்தான் வில்லியம்ஸின் பிரச்சினை தீருமாம். இதை அந்த வெள்ளையர் ஏற்றுக்கொண்டு தனது மகளை சாமியாருக்கு மணமுடிக்கிறார். சீர் வரிசையாக பதினைந்து இலட்சம் பணமும், டாடா சஃபாரி காரும் கொடுக்கப்படுகிறது. நாலைந்து மாதம் குடும்பம் நடத்திய பிறகு சாமியாரின் சித்திரவதை தாங்காமல் அந்த வெள்ளைக்காரப் பெண்மணி ஆசிரமத்திலிருந்து தப்பித்து போலீசாரிடம் புகார் கொடுக்க தற்போது சாமியார் சிறையில்!

சாமியாரின் பூர்வாசிரமப் பெருமைகள் என்ன? சுதாகரன் என்ற பெயர் கொண்ட அந்தச் சாமியார் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று மூவரைக் கொன்ற ஒரு கொலை வழக்கில் பதினான்காண்டுகள் சிறையிலிருந்து பின்னர் ஆசிரமம் ஆரம்பித்து ஞானசைதன்யாவாக அவதாரம் எடுத்தவர்.

வில்லியம்ஸின் கதையை நம்ப முடிகிறதா? சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நாகரீக உலகில் வாழும் ஒரு பணக்கார வெள்ளையரது குடும்பம் ஒரு பக்கா கிரிமினலிடம் ஏமாந்ததை என்னவென்று சொல்ல? இதை வெறும் முட்டாள்தனம் என்று மட்டும் புரிந்து கொள்ளக்கூடாது.

மாறிவரும் வாழ்க்கைப் பிரச்சினைகளுடன், வாழ்க்கை குறித்து மக்கள் கொண்டிருக்கும் மாறாத மயக்கத்தை இணைத்து, “நான் சொல்லும் ஆன்மீகத்தை அண்டினால் உடனடிப் பயன் கிடைக்கும்என்று நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நம்பிக்கையூட்டும்படி மக்களிடம் உபதேசிப்பதுதான் காலத்திற்கேற்பப் புதுப்பிக்கப்படும் போலி ஆன்மீகத்தின் இரகசியம். மதத்தைச் சுரண்டல் லாட்டரி போல மாற்றியிருப்பதுதான் இன்றைய நவீன சாமியார்களின் மிக சமார்த்தியமான சாதனைகள்.

இந்தியாவில் உலகமயமாக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இருபது ஆண்டுகளில் தரகு முதலாளிகள் மட்டும் செழிக்கவில்லை, பல பணக்காரச் சாமியார்களும் தலையெடுத்திருக்கிறார்கள். இவர்களின் வர்த்தக மதிப்பு நீங்கள் எதிர்பாராத அளவிலானது.

பெங்களூருக்கு அருகில் ஒரு மலையை அரசிடமிருந்து 99 வருட குத்தகைக்கு எடுத்து வாழும் கலையைக் கட்டணம் வாங்கிக்கொண்டு கற்றுக்கொடுக்கும் ஸ்ரீஸ்ரீ இரவிசங்கரின் வருடாந்திர வர்த்தக மதிப்பு 400 கோடி.

டெல்லியில் ஆசிரமம் வைத்து நடத்தும் ஆஸ்ரம் பாபுவின் ஆண்டு வர்த்தகம் 350 கோடி. நாடு முழுவதும் தியான நிலையங்களை நடத்திவரும் சுதன்ஷன் மகராஜூக்கு 300 கோடி.

பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் முதலானவற்றை வர்த்தக நோக்கில் நடத்திவரும் மாதா அமிர்தானந்த மாயியின் ஓராண்டு வரவு செலவு 400 கோடி.

வட இந்தியாவில் யோக சிகிச்சை மற்றும் மருந்துகளை விற்பனை செய்யும் பாபா ராம்தேவின் வணிகம் 400 கோடி.

பணக்காரர்களுக்காக மட்டும் சில ஆயிரங்களைக் கட்டணமாக வாங்கிக் கொண்டு அருளுரை கூட்டங்கள் நடத்தும் முராரி பாபுவுக்கு 150 கோடி.

இவையெல்லாம் ஓராண்டுக்குரிய வரவு செலவு மட்டும்தான். இவர்களின் சொத்து மதிப்பு இதனினும் பல மடங்கு அதிகம். எடுத்துக்காட்டாக அமிர்தானந்த மாயியின் சொத்து மதிப்பு மட்டும் 1200 கோடியைத் தாண்டுகிறது.

பங்காரு சாமியார் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், பல பினாமி தொழில்கள் போக, மேல்மருவத்தூர் எனும் நகரையே தனக்காக உருவாக்கிக் கொண்டவர். ஜெயந்திரனின் சங்கர மடம் மற்றும் சாயிபாபா ஆசிரமங்களின் மதிப்போ சில ஆயிரம் கோடிகளைத் தாண்டும் என்கிறார்கள். மகரிஷி மகேஷ் யோகி ஆழ்நிலை தியான மையங்கள், ரஜினீஷின் ஆசிரமம், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கிளைகள், வேதாத்திரி மகரிஷியின் குண்டலினி மையங்கள், ஜக்கி வாசுதேவ், பிரார்த்தனையிலேயே குணமாக்கிநற்செய்திக் கூட்டங்கள் நடத்தும் டி.ஜி.எஸ் தினகரன் முதலானோரும் மேற்கண்ட கோடீசுவர சாமியார்களின் பட்டியலில் உள்ளவர்கள்தான்.

அமெரிக்காவில் வெள்ளையர்களுக்கு ஆழ்நிலை தியானமும், யோகாசனமும் கற்றுத்தரும் தீபக் தாக்கூர், இந்தியாவின் ஆன்மீகப் பெருமையைமேற்குலகில் பல மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்து ஒரே நேரத்தில் ஆன்மீகவாதியாகவும், இளம் தலைமுறையின் தொழில் முனைவராகவும் விளங்குகிறார்.

ஹரித்வார் நகரில் பாபா ராம்தேவின் யோக மையத்தில் உறுப்பினராக்குவதற்கு கட்டணங்களை எழுதி மிகப்பெரிய விளம்பரப் பலகையை வைத்திருக்கிறார்கள். சாதாரண உறுப்பினர் கட்டணம் ரூபாய் 11,000, மதிப்பிற்குரிய உறுப்பினர் கட்டணம் ரூ. 21,000, சிறப்பு உறுப்பினர் கட்டணம் ரூ. 51,000, வாழ்நாள் உறுப்பினர் கட்டணம் ரூ. 1,00,000, முன்பதிவு உறுப்பினர் கட்டணம் 2.51 இலட்சம், நிறுவன உறுப்பினர் கட்டணம் 5 இலட்சம் என்று வெளிப்படையாக ஒரு நகைக்கடை விளம்பரம் போல் கூவி அழைக்கிறார்கள்.


“”எல்லாவற்றையும் இலவசமாக செய்வோமென்று நாங்கள் வாக்குறுதி ஏதும் தரவில்லை. அது சாத்தியமில்லை. வணிகரீதியில்தான் நாங்கள் இயங்க முடியும்என்று ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் ஒத்துக்கொள்கிறார் பாபா ராம்தேவ்.

 “”நாங்கள் ஒரு பன்னாட்டு நிறுவனம் போலத் தான் இயங்கமுடியும், எங்களை நாடி வரும் பக்தர்களுக்குரிய தரமான வசதிகளை நாங்கள் செய்ய வேண்டியிருக்கிறதுஎன்று வர்த்தகரீதியாகச் செயல்படுவதை நியாயப்படுத்துகிறார் ரவி சங்கர்.


ஆன்மீக குருஜீக்களின் ஆசிரமங்கள் பன்னாட்டு நிறுவனங்களைப் போல பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பது எப்படிச் சாத்தியமாயிற்று? பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்க்கையை மெல்லவும், விரைவாகவும், இடத்திற்கேற்ப அரித்தும் அழித்தும் வரும் புதிய பொருளாதாரக் கொள்கை நடுத்தர மக்களுக்கு சில வழிகளில் தற்காலிகமாகவேனும் முன்னேற்றத்தைக் காட்டி வருகிறது. ஆயினும் இது ஒரு பாதிதான். மறுபாதியில் அந்த முன்னேற்றம் வாழ்க்கையில் புதுப்புதுச் சிக்கல்களை அன்றாடம் உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.

செலவு பிடிக்கும் உயர் கல்வி, மருத்துவ மற்றும் காப்பீட்டுச் செலவுகள், வாழ்க்கைத்தரத்திற்காக வாங்க வேண்டிய வாகனக் கடன்கள் எல்லாம் சேர்ந்து அச்சுறுத்துகின்றன. ஒரு நாளில் நடைபெறும் பங்குச்சந்தையின் குறியீட்டெண் வீழ்ச்சியோ, ரியல் எஸ்டேட்டின் மதிப்புச் சரிவோ இலட்சக் கணக்கான நடுத்தர வர்க்கத்தினரின் சில ஆண்டு நிம்மதியைக் குலைக்க போதுமானது.

ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஏ.எஸ், மருத்துவபொறியியல் படிப்புகள் அரசு பதவிகள், வங்கி வேலைகள், தனியார் நிறுவன உயர் பதவிகள், அதி வருவாய் கிடைக்கும் கணினித் துறையின் முக்கியப் பதவிகள் முதலானவை எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லை. மனிதனின் உழைப்பு நேரத்தை மிச்சப்படுத்தி ஓய்வு தந்து அவனது ஆளுமை பரிணமிக்க உதவ வேண்டிய நவீனத் தொழில் நுட்பமோ எதிர்த்திசையில் பயன்படுகிறது. உழைப்பின் சுமையை சகிக்கவொண்ணாதவாறு கூட்டுகிறது.

நகர வாழ்க்கை, பரபரப்பு, வேகம், போட்டி, பொறாமை, சதி, வஞ்சகம்,வெறி, வக்கிரம், இயலாமை, பதட்டம், மன அழுத்தம், மனச்சிதைவு, இரத்த அழுத்தம், முதுமையில் வரவேண்டிய சர்க்கரை நோயும் மாரடைப்பும் இளமையையே காவு கேட்பது……

மஹரிஷி மகேஷ் யோகியின் சீடராக இருந்த ரவிசங்கர் பிரிந்து வந்து, “வாழும் கலைஎன்ற கவர்ச்சிகரமான கான்செப்ட்ஐ உருவாக்கி ஸ்ரீஸ்ரீ ரவி சங்கராக தனது பேரரசைப் பரவச்செய்தார். தியானம், யோகம், அறிவுத் திறன் வகுப்புக்கள் முதலானவற்றைக் கலந்து ஒரு புதிய கட்டமைப்பில் பன்னாட்டு நிறுவனங்கள் விளம்பரப்படுத்தும் புதிய சோப்புக்கட்டி போல அறிமுகப்படுத்தி வெற்றி பெற்றார். இவரது குருவான மரித்துப் போன மகேஷ் யோகி மேலை நாடுகளில் மணிக்கு சில ஆயிரங்கள் டாலர் கட்டணத்தில் ஆழ்நிலை தியானத்தைக் கற்றுக்கொடுத்து பிரபலமானார். இதே சரக்கை ஹாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவன நிர்வாகிகளுக்கு ஏற்ப விற்று, அவர்கள் மூலம் புகழ் பெற்றார் தீபக் தாக்கூர்.

ஒத்த பெயர் கொண்ட ஷிர்டி சாயி பாபாவின் மகிமையைப் பயன்படுத்திக்கொண்டு பஜனைகள் மூலமும், பல நூறு கோடி நன்கொடையின் சிறு பகுதியை தர்ம காரியங்கள் செய்தும், முக்கியமாக மாஜிக் வழியாக லிங்கங்கள், மோதிரங்கள், நகைகளை வினியோகித்தும் பெயர் பெற்றார் சாயி பாபா. இவரது சிறிய நகல்தான் பிரேமானந்தா.

சாயி பாபாவின் சத்ய நகர் ஆசிரமத்தில் சில ஆண்டுகள் தங்கி பின்பு கேரளாவில் தனி ஆசிரம் ஆரம்பித்தவர் அமிர்தானந்த மாயி. மற்ற குருமார்களைப் போல வாய் சாமர்த்தியம் இல்லாத மாயியை அம்மன் போல அலங்காரம் செய்து, பக்தர்களைக் கட்டிப் பிடிக்கும் டெக்னிக்கைப் (கட்டிப்பிடி வைத்தியம்) பயன்படுத்திப் பிரபலமடைய வைத்தார்கள். கடந்த 30 ஆண்டுகளில் மாயி அரவணைப்பால் ஆன்மீக ரீசார்ஜ்செய்யப்பட்ட பக்தர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியாம்.

வட இந்தியாவில் யோகாசனத்தையும், ஆயுர்வேத மருந்துகளையும் வைத்து எய்ட்ஸைக் கூட குணப்படுத்த முடியும் என்று பிரபலமானவர் பாபா ராம்தேவ். இதை அறிவியலும், மருத்துவர்களும் உண்மையல்ல என்று நிராகரித்து விட்டாலும் மக்களை புற்றீசல் போல இழுப்பதில் ராம்தேவ் தோல்வியடையவில்லை. ஆஸ்ரம் பாபு, சுதன்ஜி மகாராஜ், மற்றும் முராரி பாபு முதலானோர் டெல்லியின் பண்ணை வீடுகளில் பணக்காரர்களுக்கு மட்டும் தலைக்கு ரூபாய் 5,000 முதல் 10,000 ரூபாய் வரை கட்டணம் வாங்கிக்கொண்டு ஆன்மீக வகுப்பு நடத்துகிறார்கள். முடிந்தபின், இதே பண்ணை வீடுகளில் மேட்டுக்குடி குலக்கொழுந்துகள் கேளிக்கைக் கூத்துக்களை நடத்துவது வழக்கம்.


90ஆம் ஆண்டு இறந்து போன ரஜனீஷ் சாமியாரின் நிறுவனம் முன்பு போல் வீச்சாக இயங்கவில்லை என்றாலும் செக்ஸ் குரு என்று செல்லமாக அழைக்கப்பட்ட ரஜனீஷீன் புத்தகங்கள், ஒலிஒளிக் குறுந்தகடுகள் பல பத்து மொழிகளில் இன்றும் கிராக்கியுடன் விற்கப்படுகின்றன. செக்ஸ், நிர்வாணம், தியானம், யோகம் முதலியவற்றைக் கலந்து பிரபலமான ரஜனீஷின் பக்தர்களில் வெளிநாட்டவர் அதிகம். வாழ்வின் வற்றாத இன்பங்களைத் தேடி அலைந்த மேலைநாட்டவருக்கு இவர் வடிகாலாகத் திகழ்ந்தார்.

நடனம், பஜனை, கிருஷ்ண வழிபாடு மற்றும் ஆச்சாரமான பார்ப்பன பண்பாட்டை முன்னிறுத்திய ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம் 80,90களில் உச்சத்தை அடைந்தது. இவர்களுக்கும் உலகெங்கும் கிளைகள் உண்டு. இயற்கை வாழ்வு, யோகம், தியானம் முதலானவற்றை முன்னிறுத்தி ஈஷா யோக மையத்தை நடத்தி புகழ் பெற்றவர் ஜக்கி வாசுதேவ். வாழ்க வளமுடன்என்ற முத்திரையுடன் பிரபலமானவர் வேதாத்ரி மகரிஷி.

மேல் மருவத்தூரின் பங்காரு சாதரணமக்களை ஈர்க்கும் வண்ணம் சிவப்பாடை, பெண்கள் பூசை, ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம், வருடம் முழுக்க சடங்குகள் என்று வளர்ந்திருக்கிறார். மேல் மருவத்தூர் சென்றால் நோய் தீரும், திருமணம் நடக்கும், வியாபாரம் செழிக்கும் என்று பல கதைகளை பக்தர்களே இலவசமாய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

வசதியான தனிநபர்களின் மன அமைதி, மகிழ்ச்சி, கலைத் தவங்கள் என்று பிரபலமானது பாண்டிச்சேரி அரவிந்த் ஆசிரமம். சங்கர மடம் பற்றி அதிகம் விளக்கத் தேவையில்லை. கல்லூரிகள், மருத்துவமனைகள் போக அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம், முதலாளிகள் முதலான மேல்மட்டத்தின் பிரச்சினைகளைத் தேர்ந்த தரகன் போல தீர்த்து வைத்து தனி சாம்ராச்சியத்தையே உருவாக்கியவர் ஜெயந்திரர்.

நற்செய்திக் கூட்டங்களில் முடவர்கள் நடக்கிறார்கள், குருடர்கள் பார்க்கிறார்கள்என்று சாட்சியங்களை சொல்ல வைத்து, பெரும் மக்கள் கூட்டத்தை நம்பவைத்து பெயரெடுத்தவர் டி.ஜி.எஸ் தினகரன். தொலை பேசி எண்ணில் பிரச்சினைகளைச் சொல்லி கட்டணத்தை அனுப்பி வைத்தால் பிரார்த்தனை செய்து தீர்ப்பதற்கென்றே ஒரு பெரும் அலுவலகத்தை நடத்தி வருகிறார். பரிசுத்த ஆவியை எழுப்பி, அதை வைத்து ஒரு பல்கலைக் கழகத்தையும் சேர்த்து எழுப்பியிருக்கிறார்.

இந்தியாவில் பள்ளிக்கூடங்களை விட கோவில்களும் சாமியார்களும் அதிகம். எனவே, பட்டியலை இம்மட்டோடு நிறுத்திக் கொள்வோம். சாமியார்களில் பழைய பாணி சாமியார்களை விட நவீன பாணி சாமியார்களுக்கு மவுசு அதிகம். இருப்பினும் இரண்டு பாணிகளும் சொல்வது ஒரே மாதிரியான விசயங்களைத்தான்.

“”குரங்கு போல தவ்விச் செல்லும் மனதை கட்டுப்படுத்துங்கள், அதற்கு தியானம் செய்யுங்கள், மனதை வழிக்குக் கொண்டு வர உடலைக் கட்டுப்படுத்துங்கள், அதற்கு யோகாசனம் செய்யுங்கள், பேராசைப் படாதீர்கள், கிடைத்ததைக் கொண்டு வாழுங்கள், சைவ உணவு உண்டு, இயற்கையோடு ஒன்றி வாழுங்கள், வருவாயில் சிறு பகுதியையாவது தர்மம் செய்யுங்கள், பொறாமை, அகங்காரம், கோபம் முதலியவற்றை விட்டொழியுங்கள், செய்யும் தொழிலை ஈடுபாட்டுடன் செய்யுங்கள், உலகுடன் அன்பு எளிமை அழகுடன் உறவு கொள்ளுங்கள்”, முதலான பொத்தாம் பொதுவான விசயங்களைத்தான் அனைத்து குருமார்களும் ஓதுகின்றனர். இது போக சாமியார்களின் மகிமைகளை பக்தர்களே கண் காது மூக்கு வைத்து ஊதிப்பெருக்கிப் பிரச்சாரம் செய்வதும் இயல்பாக நடக்கிறது.

யோகா போன்ற முறைகளால் நோயைக் குணப்படுத்தமுடியும் என்பதுதான் மூட நம்பிக்கையே தவிர தன்னளவில் அவை ஒரு உடற்பயிற்சிக்குரிய நன்மையைக் கொண்டிருக்கின்றன. உடற்பயிற்சியால் ஒரு மனிதனின் உடல் நலம் பொதுவில் ஆரோக்கியமாக இருக்கும் என்பது உண்மைதான். இருப்பினும் இந்த ஆரோக்கியம் வெறும் உடற்பயிற்சியால் மட்டும் வந்து விடுவதில்லை. அது ஊட்டச் சத்து, சுகாதாரம், போதுமான ஓய்வு, உறக்கம் போன்றவையுடன் தொடர்புள்ளது. சுருக்கமாகச் சொன்னால் வசதி அல்லது வர்க்கம் சம்பந்தப்பட்டது.

அடுத்து, தியானம் என்பது மனம், அதாவது மூளையின் ஒரு பகுதிக்கு அல்லது செயல்பாட்டிற்குச் செய்யப்படும் பயிற்சியாகும். தியானத்தின் மூலம் மட்டுமல்ல, ஒரு குழந்தையைக் கொஞ்சுவதிலோ, இயற்கைக் காட்சியுடன் ஒன்றுவதிலோ கூட மனம் பயிற்சியையும் ஓய்வையும் பெறமுடியும். இவை ஒவ்வொருவரின் விருப்பம், இரசனை, பண்பு, வாழ்க்கையைப் பொறுத்தது. ஆயினும் அழுத்திச் செல்லும் வாழ்க்கையின் இடைவெளிகளில் பலருக்கு இவை சாத்தியப்படுவதில்லை. அதனால் பிரச்சினை வரும்போது ஓய்வு பெறாத மனம் விரைவில் துவண்டு விடுகிறது.

மனதிற்கு அப்படிச் சிறப்பாகப் பயிற்சியையும், ஓய்வையும் தந்திருப்பவர்களுக்குக் கூட வாழ்க்கைப் பிரச்சினைகளால் மனது பாதிக்கப்படுவது நடக்கும்.

அதேபோல, மனதைச் சிதைத்து வதைக்கும் வாழ்க்கைப் பிரச்சினைகளால் நோயுற்ற ஒரு மனிதனை எல்லா உளவியல் மருத்துவர்களாலும் குணமாக்கி விட முடியாது. நான்எனப்படும் தன்னிலையை வைத்து வாழும் மனிதனின் அடிப்படை, உண்மையில் நாம்எனும் சமூக மையத்தில்தான் சுழல்கிறது. அந்த மையம் மனிதர்களது விருப்பு, வெறுப்பின்படி அமைந்ததல்ல; அது சமூக உறவுகளால் பின்னப்பட்ட ஒரு நிர்ப்பந்தம். இந்த நிர்ப்பந்தத்தின் அழுத்தம் பல இன்னல்களை ஏற்படுத்துகிறது. இதனைப் புரிந்துகொள்ளும் சமூக அறிவியல் கண்ணோட்டம் கொண்ட ஒரு உளவியல் மருத்துவரால்தான் இந்த நோயின் காரணத்தையே புரிந்து கொள்ள இயலும்.

தங்களுக்கு வரும் கோடிக்கணக்கான நன்கொடைப் பணம் எத்தகைய வழிகளில் சம்பாதிக்கப்பட்டது என்பது குறித்து அவர்களுக்குக் கவலையில்லை. ஒருவேளை, “”நேர்மையற்ற முறையில் வரும் பணத்தையும், கருப்புப் பணத்தையும் ஏற்கமாட்டோம்என்று அவர்கள் அறிவித்தால் அடுத்த கணமே தெருவுக்கு வந்துவிடுவார்கள். ஆன்மீக நிறுவனங்கள் உயிர்வாழ்வதன் அச்சாணியே இதுதானென்றால் தனி மனிதனின் நன்னடத்தைக்கும், நிம்மதிக்கும் எப்படி வழிகாட்ட முடியும்?

பங்குச் சந்தையில் சில சமயம் இலாபமடையும் நடுத்தர வர்க்கம், பல நேரங்களில் இந்தச் சூதாட்டத்தில் சில இலட்சங்களையும் கூடவே நிம்மதியையும் இழக்கிறது. இவர்களுக்கு சாமியார்கள் என்ன தீர்வு தர முடியும்? “”பங்குச் சந்தை என்பது சூதாட்டம், அதில் முதலீடு செய்யாதீர்கள் என்று சாமியார்கள் கூறுவதில்லையே!” “”பேராசைப் படாதீர்கள், சிறிய அளவு இலாபத்துடன் திருப்தி அடையுங்கள், முதலீடு செய்யும் போது சற்று எச்சரிக்ககையாக இருங்கள்என்றுதானே உபதேசிக்கிறார்கள்?

நடிகைகளின்  பாலியல் லீலைகளை பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக நாறடிக்கின்றன. இது போன்ற விளம்பர உலகில் இருக்கும் பெண்களுக்கு சாமியார்கள் என்ன நிம்மதியைத் தந்துவிட முடியும்? துகிலுரித்து தோலைக் காண்பிப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கும் இவர்கள் இத்தொழிலை தலைமுழுகினால் மட்டுமே நிம்மதி பெற முடியும் என சாமியார்கள் வழிகாட்டுவதில்லை. மாறாக, பல திரை உலக நடிகர்களைப் பக்தர்களாகப் பெற்று தமது விளம்பரத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்கள் மற்ற பிரிவினரைவிட ஊதியம் அதிகம் பெறுவதோடு ஊக்கத்தொகையாக பிரச்சினைகளையும் கணிசமாகப் பெறுகின்றனர். இரவுப் பணி, முடிவற்ற வேலைப் பளு, இரக்கமற்ற பணியிறக்கம், வேலை நீக்கம், பண்பாட்டுச் சீர்கேடுகள், நுகர்வு வெறி, தனிநபர் வாதம், வாழ்க்கை உறவுகள் நசித்துப் போதல், முதலியனவற்றால் அல்லலுறும் இவர்களுக்குத் தேவைப்படும் தீர்வென்ன.??

அதனால் சாமியார்கள் எவ்வளவுதான் அம்பலப்பட்டுப் போனாலும் ஆளும் வர்க்கம் அவர்களைக் கைவிடுவதில்லை. ஜெயேந்திரனின் வண்டவாளங்கள் சந்தி சிரித்த பின்னும் ஊடகங்கள் அவரை சங்கராச்சாரியார் என்று மரியாதையுடன்தான் அழைக்கின்றன. சீடர்களை பாலியல் உறவு கொள்ளச் சொல்லி ரசித்துப் பார்ப்பதைப் பொழுதுபோக்காகக் கொண்ட ரஜனீஷ் அமெரிக்கா சென்று ரோல்ஸ்ராய்ஸ் காரில் சென்றால் சமாதி நிலை அடைவதாக 96 கார்களை வாங்கிக் குவித்தார். வரி ஏய்ப்பு, இதர மோசடிகளுக்காக அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு மீண்டும் இந்தியா வந்து செத்துப்போன ரஜனீஷின் அருளுரைகள் இன்றும் தமிழில் வெற்றிகரமாக விற்கப்படுகின்றன.

சாயிபாபா குழந்தைகளையும், இளைஞர்களையும் பாலியல் உறவுக்குப் பயன்படுத்தும் வக்கிரம் கொண்டவர் என்பதை இங்கிலாந்தின் டெய்லி டெலிகிராப் பத்திரிக்கையும், ஒரு ஆவணப்படத்தின் மூலம் டென்மார்க் அரசுத் தொலைக்காட்சியும் அம்பலப்படுத்தியிருக்கின்றன.ஆனாலும் சாயிபாபா இந்திய ஊடகங்களால் இன்றும் பூஜிக்கப்படுகிறார். முன்னாள் அரசவைக் கோமாளி அப்துல் கலாம் பாபாவின் பிறந்த நாளில் கலந்து கொள்கிறார். ஐ.நா.செயலர் பதவிக்குப் போட்டியிட்ட சசி தரூர் பாபாவின் மாஜிக் மோசடிகளை அற்புதங்கள் என்று புகழ்கிறார். கருணாநிதி தன் மனைவியை பாபாவின் காலில் விழச்செய்கிறார்.


 
மருத்துவக் கல்லூரி சீட்டுக்கு தலா 40 இலட்சம் வாங்கும் அமிர்தானந்த மாயியின் காலில் அத்வானியும், மத்திய அமைச்சர் அந்தோணியும் விழுகிறார்கள். மாயியின் வருமான வரி ஏய்ப்புக்கு அரசே வழி செய்கிறது. வேறெங்கும் வரிசையில் நிற்க விரும்பாத பணக்காரர்கள் மாயியின் கட்டிப்பிடிஆன்மிகத்திற்காக நீண்ட வரிசையில் நிற்கிறார்கள்.

அயோத்திப் பிரச்சினையில் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் இணைந்து நின்ற ராம்விலாஸ் வேதாந்தி, பைலட்பாபா, கீர்த்தி மஹாராஜ் முதலான சாமியார்கள் கமிஷன் வாங்கிக் கொண்டு, பலகோடி ரூபாய் கருப்புப் பணத்தைக் வெள்ளைப் பணமாக மாற்றித் தரும் மோசடியை சி.என்.என்-ஐ.பி.என். தொலைக்காட்சி கையும் களவுமாக அம்பலப்படுத்தியது. ஆயினும் இச்சாமியார்களைக் யாரும் கைவிடவில்லை..

உலக பற்றில் மூழ்கியிருப்பவர்களைப் பேராசை, பொறாமை போன்ற தீமையிலிருந்து விடுபட வைத்து உலக பற்றற்றவர்களாக மாற்றுவது தான் உண்மையில் ஆன்மிகவாதிகள் செய்ய வேண்டிய காரியம்.

ஆனால் நிலைமை என்னவென்றால், பக்தர்களை உலக பற்றிலிருந்து  விடுபட்டு எளிய வாழ்க்கை வாழச் சொல்லும் சாமியார்கள் உலகின் மிகப் பெரும் கோடீஸ்வரர்களாய் மாறியுள்ளார்கள். பிரம்மச்சார்யமே முக்தி பெற சிறந்த வழி என்று உபதேசிப்பவர்கள் சாதாரண சம்சாரியையும் விஞ்சி தன் பக்தர்களையும் அடுத்தவர்களின் மனைவிகளையும் தன் ஆசை நாயகிகளாக அந்தப்புர தோழிகளாக மாற்றி கொள்ளும் நிலைமையையும் சர்வசாதாரணமாக பார்க்கின்றோம்..

அம்பலமாகும் சாமியார்கள் அவ்வளவு சீக்கிரம் நீர்த்துப் போவதில்லை. ஒருவேளை இவர்கள் செல்வாக்கிழந்தாலும் புதிய சாமியார்கள் களமிறக்கப்படுவார்கள். எல்லா இன்பங்களையும் காசு கொடுத்துத் துய்க்கும் நடுத்தர வர்க்கம் ஆன்மீகத்தையும் அப்படி நுகர்வதற்குப் பழக்கி விடப்பட்டிருப்பதால் அருளாசி வழங்க நமட்டுச் சிரிப்புடன் எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் நவீன சாமியார்கள்.

பெரும்பான்மையான மக்களை பொருத்தவரை  ஆன்மிகம் என்றால் பெரிய தாடியுடன் , ஒரு காவி உடையுடன் புன்னகையோடு கையை உயர்த்தி இங்கும் அங்கும் அசைத்தால் போதும் ... அந்த சாமியாருக்கு கைவலி வருவதற்குள் இவர்களுக்கு பக்தி பரவசம் உச்சத்தை எட்டிவிடும்...

படைத்த இறைவனை விட்டுவிட்டு படைப்பினங்களுக்கு பின்னால் சென்று நிம்மதியை தேடுவதாக நினைத்து கொண்டு இருக்கும் நிம்மதியையும் இழக்கிறது இன்றைய உலகம்...!!!???

இதற்க்கு ஒரே தீர்வு இப்பிரபஞ்சத்தை படைத்த இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட  மார்க்கம் இஸ்லாத்தை பின்பற்றுவதே....


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...