(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, December 25, 2010

இந்திய வங்கிகளில் முஸ்லிம்கள் நிராகரித்த 75 ஆயிரம் கோடி வட்டிப் பணம்

ஒரு அரசு சட்டங்கள் இயற்றும் போதும் திட்டங்கள் தீட்டும் போதும் எந்த மக்களின் நலனிற்காக இவற்றை இயற்றுகிறதோ அந்த மக்களின் இயல்போடு ஒத்துப் போகின்ற வகையில் அந்த சட்டங்களும், திட்டங்களும் இயற்றினால் தான் அது வெற்றி பெறும். இல்லையென்றால் அது வெற்றி பெறாது என்பதற்கு நமது நாட்டில் பல உதாரணங்கள் இருக்கின்றன. அதுவும் இந்தியாவைப் போல மத ரீதியாக, சாதி ரீதியாக, இன ரீதியாக, மாநில ரீதியாக, மொழி ரீதியாக, கொள்கை ரீதியாக வேறுபாடுகளை அதிகம் கொண்டுள்ள மக்கள் வாழும் நாட்டில் சட்டங்களும் திட்டங்களும் மிகவும் கவனமாக பல ஆய்வுகளின் அடிப்படையில்   தீட்டப்பட்டு நடைமுறைப்படுத்தினால் மட்டும் தான் அது வெற்றி பெறும்.

கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவில் சிறுபான்மை மக்களில் பெரும்பான்மையாக வாழும் மதச்சிறுபான்மை மக்களான முஸ்லிம்களின் இயல்போடு ஒத்துவராத, அந்த மக்களோடு ஒன்றிப்போக இயலாதவங்கியியல் பரிவர்த்தனை இந்தியாவில் நடைமுறையில் இருந்தகாரணத்தால் வேண்டா வெறுப்பாக வேறு வழியில்லாமல் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் வங்கிகளோடு பண பரிவர்த்தனை செய்ததின் காரணமாக இந்தியா முழுவதும் ஏறக்குறைய 75 ஆயிரம் கோடி ரூபாய் வட்டிப் பணம் கேட்பாரற்று, முஸ்லிம்களால் நிராகரிக்கப்பட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கிறது. கேரளாவில் மட்டும் 45,000 கோடி ரூபாய் முடங்கிக் கிடப்பதாக 2005ல் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட – RBI Legal News and Views என்ற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
2005ஆம் ஆண்டே 75 ஆயிரம் கோடி முடங்கிக் கிடந்தது என்றால், கேரளாவில் மட்டும் 45,000 கோடி ரூபாய் முடங்கி கிடந்தது என்றால் இப்போது இந்த தொகையின் அளவு என்னவாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஆக, முஸ்லிம்களின் மார்க்கம் மிகக் கடுமையாக தடை செய்துள்ள, பெரும்பாவங்களில் ஒன்று என்று எச்சரிக்கை செய்துள்ள, வட்டி அடிப்படையிலான இந்திய வங்கியியல் நடைமுறைதான் இவ்வளவு பெரிய தொகையை முஸ்லிம் சமூகம் நிராகரித்ததற்கான அடிப்படைக் காரணம்.

வட்டி வாங்குவது, வட்டி கொடுப்பது, வட்டி கணக்கு எழுதுவது, அதற்கு சாட்சியாக கையெழுத்திடுவது அனைத்தும் பெரும் பாவம் என்று இஸ்லாமிய மார்க்கம் தெள்ளத் தெளிவாக்குகிறது. முழுவதும் வட்டி அடிப்படையிலான வங்கியியல் நடைமுறை காரணமாக முஸ்லிம்கள் வங்கிகளில் கணக்கு தொடங்குவதில் கூட பிற எல்லா சமூகங்களைக் காட்டிலும் மிகவும் பின்னுக்கு இருக்கிறார்கள். இதனால் இந்த சமூகம் பொருளாதார ரீதியாகமுன்னேறிய சமூகமாக மாறுவதற்கு, முஸ்லிம் சமூகத்தவர் பெரிய பெரிய தொழிற்சாலை தொடங்குவதற்கு, பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு, பங்குகள் மூலம் பெரிய அளவிலான நிதியைத் திரட்டி பெரும்தொழில் செய்வதற்கு,  ஏழைமாணவர்கள் கல்வி கடன் பெறுவதற்கு என்று பிற சமூகங்களைப் போல  நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தங்கு தடையின்றி செயல்பட இயலாத நிலையில் உள்ளது. மொத்தத்தில் இந்திய முஸ்லிம்களின் பொருளாதார பின்னடைவிற்கு இன்றைய வங்கியியல் நடைமுறையும் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.

முஸ்லிம்களின் சமூக – பொருளாதார – கல்வி நிலையைப் பற்றி ஆய்வு செய்த நீதியரசர் ராஜிந்தர் சச்சார் அவர்களின் அறிக்கையில் வங்கி பரிவர்த்தனையில் முஸ்லிம்களின் பங்களிப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை படம் பிடித்துக் காட்டியுள்ளார். நாட்டில் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களில் வெறும் 12 விழுக்காடு தான் முஸ்லிம்கள். மக்கள் தொகையில் 6 விழுக்காடு உள்ள ஏனைய சிறுபான்மை மக்கள் 8 விழுக்காடு அளவிற்கு வங்கி பரிவர்த்தனை செய்கின்றனர். நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில் உள்ள வங்கிகளின் கிளைகளை ஙிலிகிசிரி லிமிஷிஜிணிஞி கிளைகளாக அந்த வங்கிகளின் தலைமையகம் வைத்துள்ளது.

முஸ்லிம்கள் இன்றைய வங்கிகளோடு நெருங்கி பரிவர்த்தனை செய்யாதது தான் இதற்குக் காரணம் என்று நீதியரசர் ராஜிந்தர் சச்சர் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முன்னேற்றம் என்பது நாட்டு மக்கள் அனைவரது சமூக – பொருளாதார – கல்வி முன்னேற்றத்தில் தான் அடங்கியுள்ளது. 110 கோடி இந்திய மக்களில் ஏறக்குறைய 25 கோடிமக்களை புறக்கணித்து விட்டுஅல்லது அவர்களின் முன்னேற்றத்தை கவனத்தில் கொள்ளாமல் நாட்டின் முன்னேற்றம் என்பது சாத்தியமில்லை.

இதைஉணர்ந்த டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இன்றைய வங்கியியல் நடைமுறைக்கு மாற்றாக இருக்கக்கூடிய வட்டியில்லா – வங்கியின் நடைமுறை குறித்து ஆய்வு செய்திட மத்திய ரிசர்வ் வங்கியை கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் ஆனந்த் சின்ஹா அவர்களது தலைமையில் ஒரு குழுவை அமைத்தது ரிசர்வ் வங்கி. இந்தக் குழு 2006ல் தந்த அறிக்கையில் இன்றைய சூழலில் தற்போதைய ரிசர்வ் வங்கியின் சட்டதிட்டங்களுக்குட்பட்ட வட்டியில்லா வங்கி இந்தியாவில் அமைப்பது சாத்தியமில்லை என்று அறிக்கை தந்தது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் அறிஞர் பெருமக்களும் பொதுவுடமை கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் சமூகஇயக்கங்களின் இடைவிடாத பெரும் முயற்சியின் காரணமாக இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் இதில் சிறப்புக் கவனம் எடுத்துள்ளார்கள்.

தற்போதைய பொருளாதார சிக்கல்களிலும் உலகளவில் வட்டியில்லா வங்கிகளின் வெற்றியைத் தொடர்ந்து மத்தியரிசர்வ் வங்கியும் இந்த வட்டியில்லா – வங்கியை இந்தியாவில் தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளது. இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் தலைவர் வி.ஙி.ழி  ராவ் அவர்கள் “நாங்கள் வட்டியில்லா வங்கியின் செயல்பாட்டினை ஆய்வு செய்து வருகிறோம் ரிசர்வ் வங்கியின் வரைவு செயல் திட்டத்திற்காக காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

நேரடியாக இந்தியாவில் வட்டியில்லா வங்கிகளை அனுமதிப்பதா அல்லது தற்போதைய பொதுத்துறை வங்கிகளிலேயே ஒரு வட்டியில்லா வங்கி கவுண்டரை திறப்பதா என்ற விவாதங்கள் நடந்து வரும் வேளையில் மாநிலங்களவைத் துணைத்தலைவர் ரஹ்மான்கான் அவர்கள் ஒரு அருமையான திட்டத்தை பிரதமர் அவர்களிடம் அளித்துள்ளார்.

மலேசியாவில் 1963ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தாபுங் ஹாஜி என்ற நிறுவனம் மிகப் பெரிய அளவிற்கு வளர்ந்துள்ளது. அதாவது ஹஜ்ஜுக்கு செல்ல நிய்யத் செய்தோர் இந்த வங்கியில் பணம் சேமிப்பதற்கான திட்டம் இது முழுக்க ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.

மலேசியாவில் வெற்றிகரமாக செயல்படும் தாபுங் ஹஜ் என்ற இந்த நிறுவனம் ஹஜ் செல்வோர் சேமிக்கும் பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்கிறது. முழுக்க முழுக்க இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் இந்த தொழில் முதலீடு நடக்கிறது. மிகப்பெரிய நிறுவனமாக இன்று வளர்ந்துள்ளது. இதே போன்ற ஒரு நிறுவனத்தை இந்தியாவில் தொடங்கி முஸ்லிம்களின் பணத்தை சேமிப்பதற்கு அதை “லாப – நட்டத்தை பகிர்ந்து கொள்ளுதல்” என்ற அடிப்படையில் பல்வேறு தொழில்களில் ஷரியத் சட்டத்திற்குட்பட்டு முதலீடு செய்தால் மிகப்பெரிய பொருளாதார புரட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற ஆய்வறிக்கையை பிரதமரிடம் அளித்துள்ளார் ரஹ்மான்கான்.

பிரதமர் அவர்களும் அமைச்சரவைச் செயலாளரிடம் இந்தத் திட்டத்தை ஆய்வு செய்யுமாறு பணித்துள்ளார்.

இது குறித்து ரஹ்மான் கான் கூறுகின்ற போது “இந்த திட்டம் குறித்து பல அறிஞர்களிடமும் உலமாக்களிடமும் கலந்து பேசியதில் அனைவருமே ஆதரவு தெரிவிக்கின்றனர். இது போன்ற நிறுவனத்தை தொடங்கி சோதனை செய்த பிறகு முழுமையான இஸ்லாமிய வங்கியை தொடங்கலாம்” என்றார். அமெரிக்க வங்கிகளில் கோடிக்கணக்கான டாலர்களை போட்டு வைத்திருந்த அரபு நாடுகள், அந்த நாடுகளின் தொழிலதிபர்கள்; செப்.11 தாக்குதலுக்கு பிறகான அரசியல் போக்கின் காரணமாக பெருமளவு பணத்தை திருப்பி எடுத்ததும் அமெரிக்க வங்கிகளின் வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று.

இப்படி திருப்பி கொண்டு வரப்பட்ட டிரில்லியன் கணக்கான டாலர்களை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பைத் தேடி வருகின்றார்கள் என்ற செய்தி மத்திய கிழக்கிலிருந்து வரும் பத்திரிகைகள் மூலம் அறிய முடிகிறது. இந்த நேரத்தில் இந்தியா வட்டி இல்லாத வங்கியை தொடங்கினால் இந்த அன்னிய முதலீடு   பெருமளவு இந்தியாவில் முதலீடு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நமது ட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். கேரள மாநில அரசு இதற்கான வேலையைத் தொடங்கிவிட்டதை நாம் சென்ற இதழிலேயே செய்தி வெளியிட்டிருந்தோம். மனிதனுக்கு எது சரி எது தவறு எது நல்லது எது கெட்டது என்பதை மனிதனால் முடிவு செய்ய இயலாது. மனிதனை படைத்த இறைவனால் தான் முடியும்.

நன்றி : சமூகநீதி முரசு மாதஇதழ்  

Sunday, December 19, 2010

சிங்கப்பூர் இந்திய முஸ்லீம்களுக்கு நாகூர் ஷாகுல் ஹமீது வழிகாட்டியா ?

செய்தி : தினமலர் நாளிதழ்


சிங்கப்பூரில், நாகூர் தர்கா மாடலில் அமைக்கப்பட்டுள்ள கட்டடம்,தேசிய பாரம்பரிய மையமாக அறிவிக்கப்பட உள்ளது.

நாகூரில் உள்ள தர்கா, மகான் ஷாகுல் ஹமீத் அடக்கம் செய்யப்பட்ட இடம். 182 ஆண்டு பழமை வாய்ந்த இந்த தர்காவின் வடிவமைப்பில், சிங்கப்பூரில், தர்கா ஒன்று உள்ளது.

சிங்கப்பூரில் உள்ள இந்திய முஸ்லிம்கள் சார்பில் கட்டப்பட்ட இந்த தர்கா, இரண்டு கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது. அடுத்தாண்டு திறக்கப்பட உள்ள இந்த தர்கா தேசிய பாரம்பரிய மையமாக அறிவிக்கப்பட உள்ளது.

சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய முஸ்லிம்கள், மகான் ஷாகுல் ஹமீதை, வழிகாட்டியாக கருதுகின்றனர். இவர் மூலம் தான் இந்தியாவில் இஸ்லாம் பரவியதாக கருதப்படுகிறது என்று தினமலர் செய்தி வெளியிட்டு உள்ளது.

http://www.dinamalar.com/News_Detail.asp?id=147771

Saturday, December 18, 2010

கிரெடிட் கார்டு - வசூல் குண்டர்களை எதிர்கொள்ள சட்டரீதியான வழிமுறைகள்..!


கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களிடம் கடன் வசூல் முகவர்கள் பல தவறான செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. அதை எதிர்கொள்ள சில குறிப்புகள்...


நினைவில் நிறுத்துங்கள்


கிரெடிட் கார்டு மூலமோ அல்லது வேறெந்த வகையிலோ கடன் வாங்குவதும், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத நிலை என்பதும் கிரிமினல் குற்றம் அல்ல! (கடனுக்கு விதிக்கப்படும் அநியாய வட்டியும், பலவித கூடுதல் கட்டணங்களுமே, நேர்மையான பலரும் கடனை திரும்ப செலுத்த முடியாமல் போகும் நிலையை ஏற்படுத்துகிறது)


நீங்கள் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் மட்டுமே நீதிமன்ற உத்தரவு இல்லாமல் உங்களை கைது செய்ய முடியும். கட்டத்தவறிய கடனுக்காக எந்த விதமான நீதிமன்ற விசாரணையும் இல்லாமல் உங்களை யாரும் கைது செய்ய முடியாது. கடன் வசூல் நடவடிக்கை அனைத்தும் சிவில் சட்ட வழிமுறைகளின்படியே நடைபெற வேண்டும். எனவே காவல்துறையினருக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை.


காவல் நிலையம், கமிஷனர் அலுவலகம், மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு (CCB) ஆகிய இடங்களிலிருந்து போன் பேசுவதாக கூறினால் நம்பாதீர்கள். அவர்களுக்கு வேறு முக்கிய வேலைகள் இருக்கின்றன. அவர்கள் அவ்வாறு உங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள மாட்டார்கள். (அவ்வாறு செய்தால் அது சட்டப்படி தவறு)


கடன் வசூல் செய்வதற்காக வழக்கறிஞர்கள் யாரும் உங்கள் வீடு தேடி வரமாட்டார்கள். தொலைபேசி மூலமாகவும் பேசமாட்டார்கள். அவ்வாறு கூறுபவர்கள் அனைவரும் பொய் பேசுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


கிரெடிட் கார்டு வசூல் நடைமுறை குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளை அனைத்து வங்கிகளும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். வங்கிகளின் வசூல் முகவர்களுக்கும் இந்த நெறிமுறைகள் பொருந்தும். வசூல் முகவர்கள் இந்த நெறிமுறைகளை பின்பற்றாமல் தவறுகளை செய்தால், அந்த முகவர்கள் மட்டும் அல்ல, அவர்களை கண்காணிக்காத வங்கிகளும் சட்டததின் முன் குற்றவாளிகளே!


நீதிமன்ற விசாரணைக்கு உங்களுக்கு முறையான அழைப்பு வரும். உங்கள் தரப்பு வாதத்தை எடுத்துக்கூற உங்களுக்கு போதுமான அவகாசம் வழங்கப்படும்.


வங்கிகள், அவற்றின் கடன் வசூல் முகவர்கள் ஆகிய எவரொருவரும் கடன் வசூல் நடவடிக்கைகளின்போது , கிரெடிட் கார்டு நுகர்வோர், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், மற்றவர்களை வாய்மொழியாகவோ, உடல் ரீதியாகவோ அச்சுறுத்தவோ, துன்புறுத்தவோ கூடாது. அதேபோல பொது இடத்தில் அவமானப்படுத்துதல், தனிமையை குலைத்தல், தொலைபேசி மூலம் அடையாளமற்று மிரட்டுதல், தவறான மற்றும் திசை திருப்பும் தகவல்களை அளித்தல் ஆகியவையும் செய்யக்கூடாது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கிகளின் கிரெடிட் கார்டு செயல்பாடுகள் குறித்த முதன்மை சுற்றறிக்கையின் பிரிவு 7 (ii) c திட்டவட்டமாக கூறுகிறது. இந்த நடவடிக்கைகள் இந்திய தண்டனை சட்டத்தின்படியும் குற்றமென கூறப்பட்டுள்ளது.


உங்கள் அனுமதியின்றி வீட்டில் நுழைவதே குற்றம்!


உங்கள் வீட்டில் வங்கிப்பணியாளர்களோ, வசூல் முகவர்களோ உங்கள் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்தால் இ.த.ச பிரிவு 441ன்படி குற்றம். வேறு ஒருவரின் உடமையில் இருக்கும் ஒரு சொத்தினுள், அதன் உரிமையாளரை மிரட்டும், அவமானப்படுத்தும் அல்லது தொந்தரவு செய்யும் அல்லது குற்றம் செய்யும் கருத்துடன் நுழைகிற, அல்லது இதற்காக அங்கேயே சட்ட விரோதமாக தங்கியிருக்கிற எவரொருவரும் “குற்றமுறு அத்துமீறல்” புரிந்ததாக கூறப்படுவார்.


இவ்வாறு குற்றமுறு அத்துமீறல் புரியும் எவரொருவருக்கும் மூன்று மாதம் வரை சிறைக்காவலோ அல்லது 500 ரூபாய் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும் என்று அதே சட்டத்தின் பிரிவு 447 கூறுகிறது. வீட்டினுள் அத்துமீறல் என்ற குற்றத்தை செய்ய உடல் உறுப்புகளில் எந்த பாகத்தையாவது வீட்டினுள் புகுத்தினாலே அத்துமீறல் குற்றத்தை செய்வதாகும். (பிரிவு 442) ஒருவருக்கு காயம் விளைவிப்பது, தாக்க முனைவது, முறையின்றி தடை செய்வது, இக்குற்றங்களை செய்வதற்கென்று வீடு புகுந்தால், அதற்கு ஏழாண்டுகாலம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். (பிரிவு 452)


அவதூறாக பேசுதல்!


உங்கள் நற்பெயரை கெடுக்கவேண்டும் என்ற உள்நோக்கத்துடனும், உங்களை அவமானப்படுத்தும் நோக்கத்துடனும் எவரேனும் செயல்பட்டால் அதுவும் சட்டப்படி குற்றமே. ஒருவருடைய நற்பெயரை பங்கப்படுத்தி கெடுக்கவேண்டும் என்ற கருத்துடன் அல்லது அத்தகைய கேடு ஏற்படும் என்று அறிந்திருந்து அல்லது நம்பக்காரணம் பெற்றிருந்து பேச்சால், எழுத்தால், அடையாளங்களால் அல்லது காட்சிப்பொருள்களால் அவரைப்பற்றி பழி சாட்டுதல் எதனையும் செய்கிற அல்லது வெளியிடுகிற எவரொருவரும், அவதூறு செய்ததாக சொல்லப்படுவார். (பிரிவு 499)


இன்னொருவருக்கு அவதூறு செய்கிற எவரொருவருக்கும் இரண்டாண்டுகள் வரை வெறுங்காவலோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக வழங்கப்படும். (பிரிவு 500)


அச்சுறுத்தல், நேரடியாக, தொலைபேசி, கடிதம் வழியாக மிரட்டுதல்!


கடனை வசூலிக்க முகவர்கள் என்ற பெயரில் செயல்படும் குண்டர்கள் அனைவரும் செய்யும் அனைத்து செய்கைகளும் குற்றச்செயல்களே. ஒருவருடைய அல்லது அவர் அக்கறை காட்டும் மற்றொருவருடைய உடலுக்கு, உடமைக்கு அல்லது நற்பெயருக்கு தீங்கிழைக்கப்படும் என்று அவருக்கு பீதியை உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது சட்டப்படி ஒரு செயலை செய்ய உரிமையற்று இருந்தபொழுது அதைச்செய்யவோ அல்லது சட்டப்படி ஒரு செயலைச் செய்யவோ உரிமை பெற்றிருந்தபொழுது அதைச் செய்யவிடாமல் விட்டுவிடும்படி வற்புறுத்த வேண்டும் என்ற கருத்துடன் ஒருவரை அந்த மிரட்டலுக்கு இணங்கி, அவர் செயல்படுமாறு செய்வதற்காக மிரட்டுவதை குற்றமுறு மிரட்டல் எனலாம். (பிரிவு 503)


குற்றமுறு மிரட்டல் செய்பவர்களுக்கு 2 வருடங்கள் சிறைக்காவலோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். பிரிவு 506 அநாமதேயக் கடிதத்தின் மூலம் அல்லது யார் மிரட்டுகிறார்கள், எங்கிருந்து மிரட்டுகிறார்கள் என்ற விவரம் மற்றவருக்கு தெரியாத வண்ணம், மறைந்திருந்து மிரட்டுவோருக்கு, முன்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனையுடன் இன்னும் இரண்டு ஆண்டுகள்வரை சிறைக்காவல் தண்டனை அதிகப்படியாக விதிக்கப்படும்.


பெண்களை அவமதித்தல்!


ஒரு பெண்ணின் கற்புநெறியை அவமதிக்கும் வண்ணம், அப்பெண் காணும்படி அல்லது கேட்கும்படி யாரேனும் ஏதேனும் ஒரு சொல்லைக் கூறுவதும், ஒலியெழுப்புவதும் சைகை காட்டுவதும், அல்லது அந்த பெண்ணின் அந்தரங்கத்தில் குறுக்கிடுவதும் குற்றமாகும். இதற்கு ஒரு ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக வழங்கப்படும். (பிரிவு 509)


அரசுப் பணியாளரை கடமையை செய்யவிடாமல் தடுத்தல்!


அரசுப் பணியாளர்களை அவர்களது வேலை நேரத்தில் எவ்வாறு தொந்தரவு செய்தாலும் குற்றம்தான். அரசுப் பணியாளர் ஒருவரை அவரது பணியை செய்யவிடாமல் தடுக்கும் எவரொருவரும் குற்றவாளியே. அத்தகைய குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று மாதம் சிறை தண்டனையோ, 500 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 186)


ஆட்கடத்தல் மற்றும் அடைத்து வைத்தல்!


கிரெடிட் கார்டு கடனை வசூலிப்பதற்காக எவரையேனும் கடத்துவதும் இந்த சட்டத்தின்படி தவறுதான். ஒரு இடத்திலிருந்து செல்லும்படி ஒருவரை வன்முறையாலோ அல்லது வஞ்சனையான முறைகளாலோ கட்டாயப்படுத்துவது ஆட்கடத்தல் ஆகும். (பிரிவு 362)


ஒரு குறிப்பிட்ட திசையில் செல்ல உரிமை பெற்றுள்ள ஒரு நபரை அத்திசையில் செல்லவிடாமல் தன்னிச்சையாக தடுத்து நிறுத்துவது முறைகேடான தடுப்பு எனக் கூறப்படுகிறது (பிரிவு 339)


ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்ட எல்லையை மீறிச் செல்ல முடியாத வகையில், எவரையேனும் முறைகேடாக தடுப்பதை முறைகேடான சிறை வைத்தல் என்பர். (பிரிவு 340)


மறைவாகவும், முறைகேடாகவும் சிறைவைக்கும் கருத்துடன் ஆளைக்கவர்தலும், ஆளைக்கடத்தலும் குற்றமாகும். அதற்கு 7 ஆண்டுக்காலம் வரை சிறையும் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 365)


முறைகேடான தடுப்பு செய்பவருக்கு ஒரு மாதம் சிறையோ, அல்லது 500 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 341)


முறைகேடான சிறைவைத்தல் புரியும் எவரொருவருக்கும் ஒராண்டு வரை சிறைக்காவலோ அல்லது ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும் (பிரிவு 342)


தாக்குதல்!


கிரெடிட் கார்டு வசூல் என்ற பெயரில் தாக்க முயற்சிப்பதே தவறுதான். எந்த ஒருவரின் மீதாவது வன்முறையை கருத்துடன் பயன்படுத்துதல்; அத்தகு வன்முறை அந்நபரின் சம்மதமின்றி பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்; அத்தகு வன்முறை பின்வருவனவற்றிற்காக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்,


(i)ஒரு குற்றத்தை செய்வதற்காக, அல்லது (ii)அந்நபருக்கு கேடு அச்சம் அல்லது தொந்தரவு செய்ய வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அவை அநேகமாக விளையக்கூடும் என்று அறிந்திருந்து, அத்தகு வன்முறையை பயன்படுத்துதல் குற்றமுறு வன்முறை எனப்படும் (பிரிவு 350)


ஒருவர், தம் முன்னுள்ள மற்றொருவரின் மீது குற்றமுறு வன்முறையை பயன்படுத்தப் போவதாக அச்சுறுத்தும் கருத்துடன், ஒரு சைகையோ அல்லது ஒரு ஆயத்தமோ செய்தால், அது தாக்க முனைதல் ஆகும் (பிரிவு 351).


குற்றமுறு வன்முறையைப் பயன்படுத்தி தாக்கும் நபருக்கு மூன்று மாதங்கள் வரை சிறைக்காவலோ அல்லது ஐநூறு ரூபாய் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 352).


வங்கி அதிகாரிகளும் குற்றவாளிகளே!


வசூல் முகவர்கள் செய்யும் தவறுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று வங்கி அதிகாரிகள் தப்ப முடியாது. அவர்களும் குற்றவாளிகள் என்று சட்டம் கூறுகிறது.




குற்ற உடந்தை: ஒன்றினை செய்வதற்கு ஒருவர் எப்பொழுது உடந்தையாகி இருக்கிறாரென்றால், அவர்... முதலாவதாக : அச்செயலை செய்ய எவரையேனும் தூண்டுதல், அல்லது இரண்டாவதாக : அச்செயலைப் புரிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் சதியில் ஈடுபடுதல்: அச்சதியின் விளைவாக ஒரு செயலோ அல்லது சட்ட விரோதமான ஒரு செயல் தவிர்ப்போ நிகழ்த்தி அச்செயலைச் செய்தல் அல்லது மூன்றாவதாக : செய்கை அல்லது செயல் தவிர்க்கை ஏதேனுமென்றால் அந்தச் செயலை செய்வதற்கு கருத்துடன் உதவி செய்தல் - ஆகியோர் குற்ற உடந்தை புரிந்தோராக கருதப்படுவர். (பிரிவு 107)


எந்தக் குற்றம் நடைபெற உடந்தையாக இருக்கிறாரோ அந்தக் குற்றத்திற்கு தண்டனைத் தொகுப்பால் கூறப்பட்டுள்ள தண்டனையை குற்ற உடந்தையாளர் அடைய வேண்டும் என்று பிரிவு 109 கூறுகிறது.


தற்காப்புரிமை!


கிரெடிட் கார்டு கடன் வசூல் என்ற பெயரில் குண்டர்கள் அராஜகம் செய்யும்போது நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் உயிரையும் உடமைகளையும் பாதுகாக்க சட்டம் உங்களுக்கு பல உரிமைகளை அளிக்கிறது.


உடல் தற்காப்புரிமை - தற்காப்புரிமையை பயன்படுத்தும்பொழுது செய்யப்படும் எதுவும் குற்றமில்லை. (பிரிவு 96)


முதலாவதாக, தனது உடலையும், மற்றவர்கள் உடலையும், மனித உடலை பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் குற்றம் எதிலிருந்தும் காத்துத்கொள்ள உரிமை. இரண்டாவதாக, தன்னுடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை, அழிம்பு அல்லது அத்துமீறல் போன்ற குற்றச் செயல்களிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக்கொள்ள தற்காப்புரிமை ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. (பிரிவு 97)


உடலைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் எதிராளிக்கு விளைந்தாலோ, அது பின்வரும் சூழ்நிலைகளில் எனில் அதைக் குற்றமாக கருதமுடியாது. தற்காப்புரிமை இங்கு நீடிக்கும். அச்சூழ்நிலைகள் கீழ்வருவன.


1. நம்மை எதிரி தாக்கி மரணம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்கத் தக்கதான ஒரு தாக்குதலின்போது,


2. நம்மை எதிரி தாக்கி கொடுங்காயம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்கத்தக்கதான ஒரு தாக்குதலின்பொழுது,


3. வன்புணர்ச்சி செய்யும் கருத்துடன் தாக்கும்போது,


4. இயற்கைக்கு மாறான காம இச்சையைத் திருப்தி செய்துகொள்ளும் கருத்துடன் தாக்கும்போது,


5. ஆட்கவரும் அல்லது கடத்தும் கருத்துடன் தாக்கும்பொழுது,


6. சட்டபூர்வமான பொது அதிகாரிகளை அணுகி உதவி பெறமுடியாத நிலையில் ஒருவரை முறையின்றி அடைத்து வைக்கும் கருத்துடன் தாக்கும்போது,


மேலே குறிப்பிட்ட ஆறுவகைத் தாக்குதலில் ஏதேனும் ஒன்றிற்கு உள்ளானால், அவ்வாறு தாக்குபவரைக் கொல்லவும், அல்லது எவ்விதமான உடற்காயத்தையும் விளைவிக்கலாம்.


இந்தச் சூழ்நிலைகளில் தாக்குபவருக்கு மரணத்தை விளைவிப்பதோ, உடற்காயங்களை விளைவிப்பதோ குற்றமாவதில்லை என்று பிரிவு 101 கூறுகிறது. எனினும், பாதுகாப்பிற்கு தேவையான அளவிற்கே தற்காப்புரிமையை பயன்படுத்த வேண்டும் என்றும், அதைவிட அதிகமாகக்கேடு விளைவிக்கும் வகையில் தற்காப்புரிமையை பயன்படுத்தக்கூடாது என்றும் பிரிவு 99 உட்பிரிவு 3 எச்சரிக்கிறது.


கிரெடிட் கார்டு வசூல் என்ற பெயரில் குண்டர்கள் மிரட்டினால் என்ன செய்வது?


கிரெடிட் கார்டு பிரசினைக்காகவோ, அல்லது வேறு எந்த கடன் பிரசினைக்காகவோ உங்களை யாராவது இழிவாக பேசினாலோ, மிரட்டினாலோ, வேறெந்த வகையிலாவது தொந்தரவு செய்தாலோ உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள். அந்தப் புகாரில் வசூல் முகவர்களுடன் மற்றும் வங்கி அதிகாரிகளையும் எதிர் தரப்பினராக சேருங்கள். வங்கி அதிகாரிகள் நேரில் வராவிட்டாலும், அவர்களின் உத்தரவின்படிதான் வசூல் முகவர்கள் செயல்படுகின்றனர். எனவே வசூல் முகவர்(குண்டர்)களின் செயல்களுக்கு வங்கி அதிகாரிகளும் பொறுப்பாவர்.


காவல் நிலையத்தில் உங்கள் புகாரை ஏற்றுக்கொண்டதற்காக ரசீது ஒன்றை அளிப்பார்கள். அதை பெற்றுக்கொள்ளுங்கள். அந்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறதா என்பதை கண்காணியுங்கள். காவல் நிலையத்தில் உங்கள் புகாரை பதிவு செய்து விசாரிக்க மறுத்தால், காவல்துறை ஆணையர் போன்ற உயரதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள்.


அப்போதும் புகார் பதிவு செய்யப்படவில்லை என்றால் அப்பகுதியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உங்கள் புகாரை பதிவு செய்யவும், உங்களை தற்காத்துக் கொள்ளவும் முடியும். நீங்கள் அரசு அல்லது அரசு சார் துறைகளில் பணியாற்றுபவர் என்றால், அலுவல் நேரத்தில் உங்கள் பணிக்கு இடையூறு விளைவிப்பது சட்டப்படி குற்றம். எனவே உடனடியாக காவல்துறையில் புகார் அளியுங்கள்.


மிரட்டல், அச்சுறுத்தல், அவமானப்படுத்துதல் மூலம் உங்களிடமிருந்து பணம் வசூல் செய்யமுடியாது என்பதை வசூல் முகவர்களுக்கு உணர்த்துங்கள். சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கடன் வசூலுக்கு வரும் குண்டர்களிடம் உறுதிபட தெரிவியுங்கள். கடன் வசூல் முகவர்களிடம் எந்த ஆவணங்களிலும் கையெழுத்திட வேண்டிய அவசியம் இல்லை.


கடன் வசூல் குண்டர்களால் உங்கள் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து நேரும் காலத்தில், உங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை சட்டப்படி உங்களுக்கு உள்ளது. அதற்காக நீங்கள் (தற்காப்பு) தாக்குதலிலும் ஈடுபடலாம்.


(கிரெடிட் கார்டு குறித்த நுகர்வோர் பாதுகாப்பு தகவல்களுக்கு http://www.creditcardwatch.org/ என்ற இணையதளத்தை பார்வையிடவும்)






- சுந்தரராஜன் ( sundararajan@lawyer.com)


(நன்றி: http://pallivaasal.com/law.asp#a6)

Friday, December 17, 2010

குடும்ப அட்டைகளில் புதிய பக்கங்கள் சேர்க்கப்படும்

தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ள ஒரு கோடியே 96 லட்சம் குடும்ப அட்டைகளில் 20 லட்சம் போலி அட்டைகள் நீக்கப்பட்டுள்ளதோடு அடுத்த வருடம் 2011 டிசம்பர் வரை பயன்படுத்தும் வகையில் புதிய பக்கங்கள் சேர்க்கப்படும் என்று உணவு, கூட்டுறவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் சுவரண்சிங் தெரிவித்துள்ளார்.


தற்போதுள்ள குடும்ப அட்டைகளில் இணைக்கப்பட்டுள்ள பக்கங்கள் 2010 டிசம்பர் மாதத்துடன் முடிவடைகின்றன. ஏற்கனவே உள்ள ரேஷன் கார்டுகளே 2011 டிசம்பர்வரை தொடர்ந்து நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தற்போதுள்ள குடும்ப அட்டைகள் அடுத்தவருடம் டிசம்பர் 31-ந்தேதி வரை செல்லுபடியாகும். அட்டைகளில் உள்ள பக்கங்கள் தீர்ந்து விட்டால் கூடுதலாக சேர்த்துக் கொள்ளும்வகையில் புதிய பக்கங்கள் தாள்கள் அச்சிட்டு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

Wednesday, December 15, 2010

நாகூர் மக்களை வெக்கி தலைகுனிய வைக்கும் தர்கா விசுவாசிகள் ..


இன்னும் என்னவெல்லாம் செய்ய போறீங்க தர்காவின் பெயரால் ?


“செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்பீராக! இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர். அல்குர்ஆன் 18:103, 104


Monday, December 13, 2010

இந்திய இறையாண்மைக்கு எதிரான பள்ளிகள்

நாடுமுழுவதும் ஆங்காங்கே இந்து மகாசபை மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவாத அமைப்புகள், சரஸ்வதி சிசு மந்திர் மற்றும் வித்யா பாரதி போன்ற பள்ளிகளை நடத்தி வருகின்றன. இவைகளைப் பற்றி முன்பு நான் அதிகமாகக் கவனம் செலுத்தியதில்லை. துவக்கத்தில் நுற்றுக்கணக்கில் இந்தப் பள்ளிகளில் பணிபுரிந்தவர்களின் எண்ணிக்கை தற்போது ஆயிரக் கணக்கிற்கு உயர்ந்துவிட்டன. இங்கே பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் கூட இலட்சக் கணக்கில் வளர்ந்து விட்டன.

அவர்களுக்கு வேண்டிய பாடத்திட்டங்களை அந்த அமைப்புக்களே தயாரித்துக் கொள்கின்றன. நமது நாட்டில் பள்ளிகளின் தேவைகளையும் பாடப் புத்தகங்களையும் அவர்களே அச்சிட்டுக் கொடுக்கிறார்களே என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆயினும் அந்த மகிழ்ச்சி என்னிடம் நீடிக்கவில்லை.

ஏனெனில், அந்தப் பள்ளிகளையும் அங்கு நடத்தப்படும் பாடத் திட்டங்களையும் நேரில் கண்டுபிடித்தபோது அதிர்ச்சி மட்டுமல்ல, பெரும் வேதனையும் அடைந்தேன். நமது கடந்த கால வரலாற்றையும் கலாச்சாரத்தையும் திரித்து எழுதியும் குறிப்பாக முஸ்-ம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது துவேசத்தையும் வெறுப்பையும் விரோதத்தையும் ஊட்டும் வகையிலும் அந்தப் பாடத்திட்டங்கள் அமைந்திருந்ததைக் கண்டதும்தான் என் மனம் நிலைகுலையும்படி ஆகிவிட்டது.


அங்கு நடத்தப்படும் பாடங்களின் தொடக்கமே பாரத்வர்சாவை அதாவது ஆரியத்தை, பச்சையாகச் சொன்னால் பார்ப்பனியத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. நம் நாட்டின் தென் பகுதியில் ஆரியர்களின் வருகைக்கு முன்பே இந்தியாவில் பூர்வீகக் குடிமக்களாக திராவிடர்கள்தான் இருந்துள்ளனர் என்ற வரலாற்று உண்மை அங்கே மறைக்கப்பட்டிருந்தது. மேலும் யூதர்கள் மற்றும் ஜிப்சிகளை இலட்சக்கணக்கில் கொன்று குவித்த சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரைத் தங்களுடைய ஆதர்ச தலைவனாகச் சித்தரித்திருக்கிறார்கள். ஆரிய ஜெர்மனியில் பிற இனத்தவர்கள் இருக்கக் கூடாது என்று உயிரோடு அழித்த கொடுங்கோல் பேய்தான் ஹிட்லர் என்றும் அவரைப் பற்றிப் பேசுவதே வெட்கக்கேடானது என்றும் தற்காலத்தில் வரலாறும் மக்களும் பேசும்போது, ஆர்.எஸ்.எஸ். மற்றும் சிவசேனையைச் சேர்ந்தவர்கள் ஹிட்லரைத் தங்களின் தலைவராக எண்ணி வழிபாடு நடத்துவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.



அதுமட்டுமல்ல; புத்த மதத்தை மிகப் பெரிய அளவில் பரப்பியவரான பேரரசர் அசோகர் போதித்த அஹிம்சைக் கொள்கைகளை எல்லாம் கோழைத்தனமான செயல்கள்; முஸ்-ம்களை இராணுவத்தில் சேர்க்கக் கூடாது; ஏனெனில் அவர்கள் ஒரு கையில் கத்தியையும் மற்றொரு கையில் குர்ஆனையும் ஏந்துபவர்கள் என்றும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனரான கே.பி.ஹெட்கேவர் கூறிய வாசகங்கள் அந்தப் பாடப் புத்தகங்களில் இருந்ததைக் கண்டபோது ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகள் பிஞ்சு மாணவர்களை எப்படி எல்லாம் மூளைச் சலவை செய்து வரலாற்றையே மாற்றுகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது.


அந்தப் பாடங்களில் காணப்படும் விஷமத்தனமான விஷயங்களில் மேலும் சிலவற்றைப் பார்ப்போம். மக்காவில் கருங்கல்லால் செய்து நிறுவப்பட்ட சிவ-ங்கத்தை முஸ்-ம்கள் பெரிதும் போற்றி வழிபடுகிறார்கள் என்றும் டெல்-யில் உள்ள குதுப் மினாரை பேரரசர் சமுத்திரகுப்தர் கட்டி, பின்னர் அது விஷ்ணு ஸ்டம்பர் என்று அழைக்கப்படலாயிற்று என்றும் தாறுமாறான வரலாற்றுப் புரட்டல்களைப் புகுத்தியுள்ளனர். (இதற்கான ஆதாரங்கள் இருப்பதாக குர்ஆனில் ஒரு சொல்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.)


மேலும் பாபரி மஸ்ஜித் எப்போதுமே மசூதியாகக் கருதப்படவில்லை; ஏனெனில் அங்கே தொழுகை நடத்தப்படவே இல்லை (பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன் உள்ள புகைப்படத்தில் மூன்று உயர் கோபுரங்களும் சுவர்களும் மெக்காவை நோக்கி இருப்பதாகவும் காட்டப்பட்டுள்ளது.) 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தற்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவரான கே.எஸ். சுதர்சன் வெளியிட்ட அறிக்கையில் பிரபல வரலாற்று அறிஞர்களை எல்லாம் இந்துக்களின் விரோதி என்றும் அவர்கள் ஐரோப்பிய – இந்தியர்கள் என்றும் சொல்- அவர்களை எல்லாம் இழிவுபடுத்தினார்.

பழங்கால இந்தியாவில் இருந்த நம்முடைய இந்து மதத்தின் முன்னோர்கள் அணுசக்தி குறித்து நன்கு அறிந்திருந்தார்கள் என்றும் பரத்வாஜா மற்றும் ராஜா போன்ற முனிவர்கள் விமானங்களை கட்டுமானம் செய்வது பற்றி விளக்கியதோடு நில்லாமல் எந்த விதமான விமானம் எந்த அளவு உயரத்தில் பறக்கும் என்றும் விவரித்திருக்கிறார்கள் என்றெல்லாம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கதை அளந்திருக்கிறார். இவர் சொல்வதைப் பற்றி நாம் ஆச்சர்யப்படத் தேவையில்லை.


ஆனால், ஏ.பி. வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி. அரசில் கல்வி அமைச்சராகப் பதவி வகித்த முரளி மனோகர் ஜோஷி இதனை ஆதரித்ததுதான் ஆச்சரியம்! மேலும் சோதிடக் கலையைப் பல்கலைக்கழகங்களில் பாடத் திட்டமாக வைக்க வேண்டும் என்றும் ஜோஷி கூறினார். அவரைப் பொறுத்த வரையில் சோதிடம் வென்றுவிட்டது. ஆம்! அவரது எம்.பி., பதவியை அவரிடமிருந்து பறித்து மக்களிடம் இருந்த செல்வாக்கை இழக்கச் செய்துவிட்டது.


இப்படிப்பட்ட பள்ளிகளில் வரலாற்றையே திரித்தும் மறைத்தும் மாணவர்களிடம் போதிக்கும் செயலானது காந்தியக் கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைப்பதற்கு ஒப்பானதாகும். அதே நேரம் சாவர்க்கர் போன்றோரைத் தாங்கிப் பிடிக்கும் செயலுமாகும். மகாத்மா காந்தியைக் கொலை செய்ததில் சதித்திட்டம் தீட்டிக் கொடுத்து பின்னணியில் இருந்து செயல்பட்டவர்தான் இந்த சாவர்க்கர் என்பதை நீதிபதி கபூர் கமிஷன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு குற்றவாளியின் உருவப் படத்தை பி.ஜே.பி. அரசு தனது

ஆட்சியின் போது நாடாளுமன்ற மண்டபத்தில் திறந்து வைத்தது. என்னை ஆர்.எஸ்.எஸ்.க்கும் பி.ஜே.பி.க்கும் எதிரானவன் என்று குற்றம் சாட்டுவதற்கு முன்னால் கீழே குறிப்பிடப்படும் ஒரு சிறிய புத்தகத்தைப் படித்துப் பாருங்கள்.

“ஆர்.எஸ்.எஸ்., பள்ளிப் பாடம் மற்றும் மகாத்மா காந்தி கொலை” என்ற தலைப்பில் பிரபல வரலாற்றுப் பேராசிரியர்கள் ஆதித்யா முகர்ஜி, மிருதுளா முகர்ஜி மற்றும் சுசீதா மஹாஜன் ஆகியோர் எழுதியுள்ள அந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள மேற்கோள்கள் எல்லாம் அவர்களுடைய உண்மையான உணர்வுகளை நிரூபிக்கின்றன. இவ்வளவுக்கும் அந்தப் புத்தகம் 80 பக்கங்கள்தான்.


இறுதியாக, உங்களைக் கேட்கிறேன். இளம் பிஞ்சுகளின் இதயங்களில் வெறுப்பையும் துவேசத்தையும் ஏற்படுத்தி மூளைச் சலவை செய்துவருவது இந்த நாட்டு நலனுக்கு நல்லதா? சுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக அனைத்து உரிமைகளையும் பெற்று வாழலாம் என்று நாம் கண்டுவரும் இனிய கனவை திசை திருப்பிவிடாதா? ஆர்.எஸ்.எஸ். மதாஹியர்களின் கல்வி நிறுவனங்கள் பிஞ்சுகளின் நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கலாமா?

(ஆதாரம்: தி ஹிந்துஸ்தான் டைம்ஸ், நவ.7, 2008)

தமிழில்: அறந்தை அழகர்.
நன்றி : http://www.samooganeethi.org/?p=572

ஆஷுரா நோன்பு

"நபி (ஸல்) அவர்கள் மதினா வந்த போது யூதர்கள் ஆஷுரா நோன்பு நோர்ப்பதைக்கண்டார்கள். இது என்ன நாள்? என்று கேட்டார்கள். இது மூசா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றிய நாள். கொடியவன் பிர் அவுன் கடலில் மூழ்கடிக்கப்பட்ட நாள். அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு நோன்பு நோற்கிறோம், என்று பதிலளித்தார்கள்.

(உங்களை விட) நான் மூஸாவுக்கு அதிகம் நெருக்கமானவன், என்று கூறி விட்டு, அந்நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களையும் நோன்பு நோற்கும் படி கட்டளையிட்டார்கள்.""

நூல் : புஹாரி

(மற்றொரு அறிவிப்பில், ஆஷுரா நோன்பை விரும்பியவர்கள் நோற்கலாம், விரும்பியவர்கள் விட்டு விடலாம், என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகவே இது சுன்னத் தான். கட்டாயம் இல்லை என்பதை அறியலாம்)ரசூல் (ஸல்) அவர்கள் நோன்பு வைத்தது முஹர்ரம் பத்தாம் நாளில் என்றாலும், ஒரு அறிவிப்பில், அடுத்த ஆண்டு நான் உயிரோடு இருந்தால், ஒன்பதாவது நாளிலும் நோன்பு வைத்து யூதர்களுக்கு மாறு செய்வேன், என்று கூறியுள்ளார்கள்.

அந்த அடிப்படையில் இரு தினங்களுமே சுன்னத்தான நோன்பை வைப்பதற்கான நாள் தான் என்பதை அறியலாம்.

ஆதாரம் : புஹாரி 1917

ஆஷுரா நோன்பு வைப்பது கடந்த ஆண்டின் பாவங்களுக்கு பரிகாரமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

 
நூல் : முஸ்லிம் 1977

Sunday, December 12, 2010

நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள்..!

மகளின் தயவில் தாய் :




ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777, 50



*பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்*

'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று'' என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777

ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டார்கள். நூல்: புகாரி 50

*குடிசைகள் கோபுரமாகும்*

இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர். இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். நூல் : புகாரி 7121

*விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்*

யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231

*தகுதியற்றவர்களிடம் பொறுப்பு*

'நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறிய போது 'எவ்வாறு பாழ்படுத்தப்படும்?'' என்று ஒருவர்

கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று விடையளித்தார்கள். நூல் : புகாரி 59, 6496

*பாலை வனம் சோலை வனமாகும்*

செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது நூல் : முஸ்லிம் 1681

*காலம் சுருங்குதல்*

காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும்.

(இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம். நூல் : திர்மிதீ 2254)



*கொலைகள் பெருகுதல்*

கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.நூல் : புகாரி 85, 1036, 6037, 7061



*நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்*

பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். நூல்: புகாரி 1036, 7121

*பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது*

மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016, 12079, 12925, 13509.

*நெருக்கமான கடை வீதிகள்*

கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: அஹ்மத் 10306.

*பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்*

பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: புகாரி 81, 5231, 5577, 6808



*ஆடை அணிந்தும் நிர்வாணம்*

ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல் தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும். நூல் : முஸ்லிம் 3971, 5098



*உயிரற்ற பொருட்கள் பேசுவது*

விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. நூல்: அஹ்மத் 11365



*பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்*

தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர்கள் தோன்றும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. நூல்: அஹ்மத் 1511



*தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்*

தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: ஹாகிம் 4/493

*பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்*

பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: ஹாகிம் 4/493

*சாவதற்கு ஆசைப்படுதல்*

இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல் செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.நூல்: புகாரி 7115, 7121



*இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்*

ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. நூல்: புகாரி 3609, 7121

*முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்*

'உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

'அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது யூதர்களையும், கிறித்தவர்களையுமா?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேறு யாரை (நான் குறிப்பிடுகிறேன்)'' என்று கூறினார்கள். நூல்: புகாரி 3456, 7319



*யூதர்களுடன் மாபெரும் யுத்தம்*

யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த யுத்தத்தின் போது 'முஸ்லிமே இதோ எனக்குப் பின்னால் யூதன் ஒருவன் ஒளிந்திருக்கிறான்'' என்று பாறைகள் கூறும்.நூல்: புகாரி 2926



*கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்*

கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் 'கால்கள் சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்'' என்பது நபிமொழி.நூல் : புகாரி 5179

*யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்*

யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி. நூல் : புகாரி 7119

*கஹ்தான் இன மன்னரின் ஆட்சி*

(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால் மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி. நூல் : புகாரி 3517, 7117

*அல்ஜஹ்ஜாஹ் மன்னர்*

ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது நபிமொழி. நூல் : முஸ்லிம் 5183

*எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்*

கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப் பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி. நூல் : முஸ்லிம் 5191

*செல்வம் பெருகும்*

செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி. நூல் : புகாரி 1036, 1412, 7121

ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக் கொடுப்பார். 'நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று

எனக்குத் தேவையில்லை'' என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி. நூல் : புகாரி 1424



*மாபெரும் யுத்தம்*


இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள்.

நூல் : புகாரி 3609, 7121, 6936



*பைத்துல் முகத்தஸ் வெற்றி*

யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!

1. எனது மரணம்

2. பைத்துல் முகத்தஸ் வெற்றி

3. கொத்து கொத்தாக மரணம்

4.நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில் திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு

5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்

6.மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம். அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12 ஆயிரம் பேர் இருப்பார்கள். நூல் : புகாரி 3176



*மதீனா தூய்மையடைதல்*

துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம் தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது என்பது நபிமொழி.நூல் : முஸ்லிம் 2451

*அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை*

யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம் இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.நூல் : முஸ்லிம் 3546



*மாபெரும் பத்து அடையாளங்கள்*

இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.

1 - புகை மூட்டம்

2 - தஜ்ஜால்

3 - (அதிசயப்) பிராணி

4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது

5 - ஈஸா (அலை) இறங்கி வருவது

6 - யஃஜுஜ், மஃஜுஜ்

7 - கிழக்கே ஒரு பூகம்பம்

8 - மேற்கே ஒரு பூகம்பம்

9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்

10 - இறுதியாக ஏமனிலிருந்து புறப்படும் தீப்பிழம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்

ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), நூல்: முஸ்லிம் 5162.

*புகை மூட்டம்*

வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக! அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும், இது கடுமையான வேதனையாக

அமைந்திருக்கும். (அல்குர்ஆன் 44:10,11)

உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல் பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது

செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி. மூன்றாவது தஜ்ஜால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூமாலிக்(ரலி) நூல்: தப்ரானி



*யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை*

இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள். (அல்குர்ஆன் 21:96)



*ஈஸா(அலை) அவர்களின் வருகை*

நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம்

கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும். (அல்குர்ஆன் 43:61)



*மூன்று பூகம்பங்கள்*

(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை

யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்: முஸ்லிம்.



*பெரு நெருப்பு*

எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால் விரட்டிச் செல்லும், அதுவரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்: முஸ்லிம்.

இன்ஷாஅல்லாஹ் நேரம் கிடைக்கும் போது இதனையும் கேளுங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த கியாம நாள் வரையிலான முன் அறிவிப்புகள். உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

இங்கே சொடுக்கவும் - >

http://onlinepj.com/bayan-video/thotar_uraikal/nabika_nayakathin_munnarivippukal/

நன்றி : இஸ்லாம் தமிழில்

த.நா. உளவுத்துறையின் முஸ்லிம் விரோதப்போக்கு

 

குமரி மாவட்டம் சூரங்குடியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஜஃபர் சாதிக் தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) 2008ஆம் ஆண்டு நடத்திய ஜெயில் வார்டன் கிரேடு II பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றார். ஜஃபர் சாதிக்குடன் தேர்ச்சி பெற்ற அனைவரும் பணியில் அமர்த்தப்பட்டனர்.

ஆனால் இவருக்கு மட்டும் பணியாணை வழங்கப்படவில்லை. அதிர்ச்சியடைந்த ஜஃபர் தேர்வாணையத்தை அணுகுகின்றார். "நீங்கள் ஒரு மத அமைப்பில் உறுப்பினராக இருப்பதாகவும் விடியல் வெள்ளி பத்திரி்கையின் ஏஜண்டாக இருப்பதாகவும் குமரி மாவட்ட உளவுத்துறை(எஸ்.பி.சி.ஐ.டி) இன்ஸ்பெக்டர் அறிக்கை தந்துள்ளார். ஆதலால் உங்களுக்கு அரசுப்பணி வழங்கவியலாது” எனப் பொட்டிலடித்தாற்போல் கூறியது தேவாணையம். தான் எந்தவொரு மத அமைப்பிலும் உறுப்பினராக இல்லை என ஜஃபர் எவ்வளவோ வாதிட்டும் அது விழலுக்கு இறைத்த நீராகவே போனது.



முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காவே உளவுத்துறையால் அநீதி இழைக்கப்பட்ட ஜஃபர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையை நாடுகிறார். "ஒருவர் மதஅமைப்புகளில் வெறுமனே உறுப்பினராக இருப்பதோ ஏதேனும் ஒரு பொறுப்பு வகிப்பதோ அவர் அரசு வேலையைப் பெறுவதில் எந்தவிதத் தடையையும் ஏற்படுத்த முடியாது. அவருக்கு அரசுப் பணி மறுப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுள் ஒன்றான ஷரத்து 14 வழங்கும் சம உரிமையை(Right to Equality) மறுப்பதாகும். ஆதலால் உடனடியாக அவருக்குப் பணி நியமன ஆணையை வழங்கிட வேண்டும்" என நீதிமன்றம் உத்தரவிட்டது.


ஆனால் உளவுத்துறை தனது திருவிளையாடல்களை நிறுத்திக் கொள்ளவில்லை. உளவு என்ற பெயரில் ஜஃபர் பற்றித் தொடர்ந்து தவறான தகவல்களைத் தேர்வாணையத்திற்கு வழங்கி நெருக்கடி நிலையை ஏற்படுத்தவே, தமிழக அரசின் சார்பாக மேற்கண்ட உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தேர்வாணையம் மேல்முறையீடு செய்தது.


வாதப்பிரதி வாதங்களின்போது தேர்வாணையத்தின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், "உடனடியாகப் பணி வழங்குமாறு" மீண்டும் உத்தரவிட்டது. ஆயினும் பணியை வழங்கிடாமல் தேர்வாணையம் காலம் தாழ்த்தவே அதே நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார் ஜஃபர்.

இதற்குக் கட்டுப்படாத தேர்வாணையம், உளவுத்துறை தந்த கடும் அழுத்தம் காரணமாக தமிழக அரசின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. எஸ்.எல்.பி என்ற இந்தச் சிறப்பு விடுமுறை மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகால தொடர் போராட்டத்திற்குப் பிறகே கடந்த மாத இறுதியில் பணி நியமன ஆணையைத் தேர்வாணையம் ஜஃபருக்கு வழங்கியுள்ளது.

சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் பழங்குடியின மக்களைவிடக் கீழான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கல்வி, அரசு வேலைவாய்ப்புகள் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. தங்கள் சதவிகிதத்தைவிட மிக மிகக் குறைந்த சொற்பமான அளவே அவர்களுக்குக் கல்வி கிடைக்கின்றது


இந்நிலையில், ஒரு முஸ்லிம் இளைஞன் இத்துணை தடை கற்களையும் தாண்டி, படித்து அரசு வேலைக்கான போட்டித் தேர்விலும் வெற்றிபெற்றதும், "இவன் தீவிரவாதி; இவன் பயங்கரவாதி; இவன் அந்த இயக்கத்தில் இருக்கின்றான்; இந்த இயக்கத்தில் இருக்கின்றான்; முஸ்லிம் பத்திரி்கையின் ஏஜண்டாக இருக்கின்றான்; வழக்கே இல்லாவிட்டாலும் இவன் மீது கிரிமினல் வழக்கு இருக்கின்றது" எனக் குற்றம் சுமத்தி சதிச் செயல்களிலும் முஸ்லிம் விரோதப் போக்கிலும் ஈடுபட்டு வருகின்றது தமிழக உளவுத்துறை. ஜஃபர் சாதிக்கின் வழக்கே இதற்கு நிதர்சனமான எடுத்துக்காட்டு.
இந்த ஜஃபர் சாதிக்கோடு நின்றுவிடவில்லை; உளவுத்துறை தனது சேவை(!)யைத் தொடர்ந்து கொண்டு்தான் இருக்கின்றது என்பதற்கு மற்றுமோர் நிதர்சனம்தான் தென்காசி ஹாஜா ஷரிஃப். இவரும் காவலர் பணிக்குத் தேர்ச்சி பெற்று, உளவுத்துறையின் சதிச் செயல் காரணமாக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இவர்மீதும் வழக்கம் போலவே உளவுத்துறை அவதூறுகளை அள்ளி வீசியிருக்கின்றது.

சிறுபான்மையினரின் பாதுகாவலன் எனக் கூறிக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் அவர்களே! முஸ்லிம் இளைஞர்களை அரசுப் பணிக்குச் செல்லவிடாமல் தடுப்பதுதான் தங்கள் அரசு உளவுத்துறைக்கு இட்ட கட்டளையா?

இப்படி ஒவ்வொரு முஸ்லிம் இளைஞனும் நீதிமன்றப் படியேறித்தான் போலீஸ் வேலைக்கும் சிறைத்துறை பணிக்கும் நியமன ஆணையைப் பெறவேண்டுமென்றால், பிறகு எப்படி சமூக முன்னேற்றம் ஏற்படும்?
முஸ்லிம்களுக்குத் தமிழகத்தில் 3.5 சதவீத இடஒதுக்கீடு எதற்கு?

தமிழக முதல்வர் அவர்களே! உங்கள் மவுனத்தைக் கலையுங்கள்.


உளவுத்துறையின் முஸ்லிம் விரோதப் போக்கைத் தடுத்து நிறுத்துங்கள்!

நன்றி : விடியல் வெள்ளி 11:10 தலையங்கம் (அக்டோபர் 2010)


Related Posts Plugin for WordPress, Blogger...